December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (யார் பிராமணன்?)

யார் பிராமணன்? பூணூல் போட்டால் அவன் பிராமணனா? பிராமண வகுப்பில் பிறந்ததால் மட்டும் அவன் பிராமணனா? பூணூல் என்பது அக்காலத்தில் மூன்று வர்ணத்தவரும் அணிந்து வந்தனர். மந்திரங்கள் மூன்று வகுப்பு மக்களும் சொல்லி வந்தனர்.

பிரமணீயம் பிறப்பாலல்ல நடத்தையால் பெறப்படுவது. பிராமணீயம் என்பது ஜாதி அல்ல அது இறைவனை அறிந்தவனின் நிலை. பூணல் போட்டால் பிராமண நிலை வந்துவிடுமா? அவ்வளவு எளிதான நிலையா அது?! எத்தனைப் பக்குவம் பெற்றிருக்கவேண்டும் பிராமணனாக வாழ்வதற்கு! பூணல் போட்டதாலும், ஜாதியினால் பிராமணக் குலத்தில் தோன்றியதாலும் ஒருவன் பிராமணன் ஆகின்றான் என்றால் இப்புவியில் தர்மமும், மகிழ்ச்சியும் நிரம்பி, பூவுலகே தேவலோகமாகிவிடாதா?! அப்படிப்பட்டவனை, அப்படிப்பட்டவர்களை உலகமே கொண்டாடுமே! அப்படிப்பட்ட உயர்ந்த வாழ்கையா வாழ்கிறான் இக்காலத்தில் பிராமணனாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ஜாதி-பிராமணனும்?!?

தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும், புராணங்களிலும் நகைச்சுவைப் பாத்திரமாகவோ கலகம் மூட்டுபவராகவோ மட்டுமே சித்தரிக்கப்படும் நாரதர் அதி மேதாவி. பல சாஸ்திரங்கள், கல்விகளைக் கற்றுணர்ந்தவர். ஞானி. அவருக்கு தெரியாதது கிடையாது. எனினும், தனக்கு தெரியாததை உபதேசம் பெற எண்ணினார். ஸ்கந்தனின் அம்சமான சநத்குமாரரை அணுகுகிறார்.

"தங்களுக்கு என்னென்ன தெரியும்" என வினவுகிறார் சநத்குமாரர்.

"எனக்கு வேதங்களும், புராணங்களும், இதிஹாசங்களும், இலக்கணங்களும், சகுன சாஸ்திரங்களும், இன்னும் எண்ணற்ற ஏனைய பல சாஸ்திரங்களும் தெரியும்."

"இத்தனை பெயர்களைக் கூறுகிறீர்களே, இவையெல்லாம் ஞானமா? இவையா அறிவு? உண்மை அறிவுன் முன், ஞானத்தின் முன் இவையெல்லாம் வெறும் பெயரளவுச் சொற்கள்" என்கிறார் சநத்குமாரர்.

அவருக்கே அப்படிப்பட்ட நிலைமை என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்? எனக்கு சகலமும் தெரியும்" என்ற மமதை கொள்ள எள்ளளவும் அருகதையற்றவர்கள். உண்மையான அறிவாளி இருப்பதே கடினம், அப்படியே இருந்தால் என்றால், அவன் தன்னை அறிவாளி என பறைசாற்றிக்கொள்வதில்லை.

சத்யகாமன் என்பவனின் தாய் ஜபலா. அவள் பல இடங்களில் பலபேர்களின் சம்பந்தம் வைத்திருந்ததால், சத்யகாமன் யாருக்கு பிறந்தவன் என்று அவளால் கூற முடியவில்லை. சத்யகாமன் கௌதம முனிவரிடம் பாடம் பயில சென்ற போது அவன் பிறப்பைக் கேட்டு மற்ற மாணாக்கர்கள் எள்ளி நகையாடினர். ஆனால் கௌதமரோ "நீ உண்மையை பேசினாய். நீயே பிராமணன்" என்றார். பிராமணத்துவம் ஒரு தகுதி. தங்களின் நடத்தையால் எவரும் அதைப் பெறலாம்.

ஒரு முனிவன் தவத்திலிருக்கும் போது பறவை அவன் மேல் எச்சமிட்டுவிட்டது. அதனை கண்ணாலேயே சுட்டெரித்தார். அதன் பின் பிட்சைக்கு சென்ற இடத்தில், அவ்வீட்டுப்பெண்மணி, கணவனுக்கு பணிவிடை செய்த பின், பிட்சை இட்டாள். இவர் மீண்டும் முறைக்க "என்னையும் பறவை என்று நினைத்தாயோ" என்றாள் அவள் ("கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா") இதைக் கேட்டதும் ஆச்சரியமுற்று அவன் உங்களுக்கு எப்படி இவ்வளவு ஞானம் என்றான். என் கணவனுக்கு பணிவிடை செய்வதே என் கடமை. நான் பத்தினி தர்மத்தை கடைபிடிக்கிறேன் என்றாள். தனக்கும் உபதேசம் செய்விக்க அவர் வேண்டுகோள்விடுக்க. "இன்ன ஊரில் ஒரு கசாப்பு கடைக்காரன் இருக்கிறான் அவனிடம் போய் பாடம் பெற்றுக்கொள்ளுங்கள்" என்கிறாள்.

அவன் பெயர் தர்மவியாசன். "ஒஹொ அந்த பெண் அனுப்பினாளா" என்று வந்த விஷயத்தை முன்னமே உணர்கிறான் அக்கடைக்காரன். எப்படி இந்த ஞானம் என முனிவன் கேட்க. "என் பெற்றோர்க்கு பணிவிடை செய்வதே சிறந்த தர்மம் என நான் கொண்டிருக்கிறேன்" என்கிறான். உடனே முனிவன் "நீ தான் பிராமணன்" என்று தெளிந்து அவனடியில் பாடம் பெறுகிறான்.

No comments:

Post a Comment