February 01, 2017

வேடிக்கை மனிதர்கள்





இருவரின் சம்பாஷணை  மூன்றாம் மனிதர்  பார்வைக்கு சுவாரஸ்யம். வெறும் பார்வையாளனாக ரசிக்கும் வரையில் சத்தம் கூட இனிமை தான்.

அன்றாடம் நடைபழகும் பூங்காவில் விதவிதமான சட்டை சுமந்த மனிதர்கள்.
சட்டையினுள்  ஒளிந்திருக்கும் மனித இயல்புகள் இன்னும் விசித்திரமானவை.

பெசியபடியே நடைபயின்று கொண்டிருந்த இருவரில் ஒருவர் மட்டும் நாட்டு நடப்பு, பொருளாதாரம், சமூகம் தொடங்கி ட்ரம்ப் முதல் சசிகலா  வரை அலசிக் கொண்டிருந்தார். மற்றொருவர் தலை நிமிராமல்  நடை தொடர்ந்து  கொண்டிருந்தார்.

"என்ன சார் சொல்லறீங்க, நான் சொல்றது சரி தானே" - அதிரவைக்கும் உயர் தொனியில் கேள்வி எழுப்பியவருக்கு பதிலுக்கு காத்திருக்க விருப்பமில்லை. "இல்லை! தவறு" எனச் சொல்வதற்கான சுதந்திரம் அளிக்க முன்வரவில்லை. சொல்லியிருந்தால் ஏற்கும் பக்குவத்திலும் இல்லை. தன் கருத்தை மற்றவர் அங்கீகரித்தாரா என கவனிக்கவுமில்லை.  மற்ற நண்பருக்கு இந்த விவாதத்தில் கருத்து வேறுபாடு இருந்தது  எளிதில் கணிக்க முடிந்தது.

பெண்கள் பகிரும் அலுவலக பிரச்சனைகள், மாமியார் மருமகள் அண்ணி ஒரகத்தி வேறுபாடுகள் எல்லாமே ஏறக்குறைய இதே வகை உரையாடல். ஒருவர் உணர்ச்சி மிகுதியில் பேசுவதும் மற்றொருவர் மௌனமாக தொடர்வதும் காலை நேர (காட்சிப்பிழைகள்) சுவாரஸ்யங்கள்.  

குறைந்த பட்சம் மற்றவர் கருத்தை காதில் வாங்கவும் பொறுமை, விருப்பம் இல்லாத வேடிக்கை மனிதர்கள்.