February 08, 2012

முதல் முதலில் படித்த இந்துமதி சுஜாதா

கடைசியாய் நானும் ஒரு கதை படித்து விட்டேன். பார்டியோ பார்டி என்று சென்ற மாதம் பார்டி கொண்டாடி விட்டு, என் சொந்த ஊரான சேலத்தில், சொந்த வேலை விஷயமாய் என் மாமா வீட்டில் தங்கியிருந்தேன்.

அவர் ஒரு சுஜாதா வெறியர் என்று முன்பே தெரிந்திருந்தாலும், அப்பொழுதெல்லாம் எனக்கு தமிழில் கிறுக்கும் ஆர்வம் இல்லை. வெறும் வாரப் பத்திரிகைகளை மேய்ந்து விட்டு அவசரமாய் அடுத்த வேலையில் என்னை அமிழ்த்திக் கொள்வேன்.

இம்முறை, இலக்கிய கூட்டத்தில் அலசு அலசு என்று பலர் அலசி காய வைத்து, புது சாயம் பூசி, ஒரு வழி பண்ணிவிட்டனர். நான் மட்டும் பாவப்பட்ட ஜந்துவைப் போல் இலக்கியம் பேசும் இலக்கியவாதிகளின் நடுவே, சுருதி சேராது கூடக் கூவும் கோரஸ் பாடகியைப் போல், சம்மந்தமில்லாது அவ்வப்பொழுது எதையோ உளறிக்கொண்டிருந்தேன். இல்லாவிடில், இறுக்கி வாயை மூடிக்கொண்டிருந்தேன். ஏன்? ஒரு அரையணாப் பெறக்கூடிய ஒரு நாவலைக் கூட இது வரை படித்தறியாத பாமரத்தனத்தினால். இந்த உண்மை என்னை மிகவும் சுடவே, என் மாமா வீட்டின் புத்தக அலமாரியை  குடைந்து சுஜாதாவின் குட்டிக் குட்டிக் கதைகள் இரண்டைப் படித்தேன்.

1. குருப்ப்ரசாதின் கடைசி தினம்
2. தேடாதே
3. இறுதிப் புன்னகை


இவையெல்லாம் ஒரே புத்தகத்தில் இருந்ததால் என் கண்களிடமிருந்து தப்ப முடியவில்லை. எல்லாக் கதையும் வெகுவாய் ரசித்தேன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை. நன்றாய் இருந்தது.

குருப்ப்ரசாத் இறப்பு தெரிந்தே அவனுடன் பயணிக்கிறோம். நடுநடுவே தெரிந்தோ தெரியாமலோ, கிளுகிளுப்பு என்ற பெயரில், அரைகுறை மார்புடன் உலாவரும் பெண்கள் வர்ணிக்கப் படுகின்றனர். தேவையா என்பதெல்லாம் யோசிக்க அவகாசம் இல்லை. ஏனெனில் குருபிரசாத் பாவம் இறக்கப் போகிறான், இன்னும் சிறிதே நேர அவகாசம் தான். மார்பகத்தை ரசித்து விட்டுப் போகட்டுமே என்ற பச்சாதாபமாய் இருக்கலாம். அவன் மனைவியுடன் புணர்ந்ததை இன்னும் அழகாய் கூறவே முடியாது. கல்யாணம் ஆகாத எந்தப் பெண்ணும் அதைப் படித்தால் இனி திருமணம் வேண்டாம் என்று கூறும் அளவு இருந்தது அந்த விவரிப்பு. புசுபுசுவென்று புகைவிடும் எஞ்சின்களை இனி யாரும் ரசிக்க முடியாது. குருபிரசாத் இறந்ததும் கதையில் பிடிப்பு வருகிறது. அதற்குள் கதையும் முடிந்து போகிறது.

'இறுதிப் புன்னகை' நெஞ்சில் ரொம்ப பதிந்தது என்று சொல்ல முடியாது.

'தேடாதே' ரசிக்கும்படி இருந்தது. கடைசிவரை யார் என்று சொல்லாமல் நாளை பேப்பரை பார்த்து தெரிந்துக் கொள்ள சொல்கிறார். நானும் மூன்று நாளாய் பேப்பர் பார்க்கிறேன். இன்னும் புரியவில்லை. 

எல்லாக் கதைகளிலும் ஒரு குட்டி சம்பவத்தை வைத்து, எத்தனை அழகாய் கதை வளர்க்கலாம் என்று ஆரம்ப கால எழுத்தாளர்கள் கற்றுக் கொள்ள முடிகிறது. கதை முழுதும் பேச்சுகளால் நிரப்பப்பட்டிருந்தாலும்,  ஒரு தேர்ந்த எழுத்து என்பது என்ன என்று கற்றுக்கொள்ள முடிகிறது. கதை விறுவிறுப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது என்று சொல்ல இயலாது. ரசிக்கலாம். ரசித்தேன்.
_____

சுஜாதா கதைகள் படிப்பதற்கு முந்தைய நாள், மூன்றே மணி நேரத்தில் புத்தகத்தை கீழே வைக்க முடியாமல்,  கதையில் மூழ்கி, பாத்திரத்தோடு ஒன்றி, அழுது, சிரித்து மாய்ந்து போய் படித்து முடித்த பிறகும், முதன் முறையாய் நான் படித்த சில ஆங்கிலக் கதைகளுக்கு ஈடாய் என்னை வெகு நேரம் பாதித்தது என்று இந்துமதியின் "தரையில் இறங்கும் விமானங்கள்" கதையைச் சொல்வேன். நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கும் விச்வம், பரசு சிரிக்கின்றனர். அழுகின்றனர். கனவுகள் தொலைக்கின்றனர், பின் அதுவே வாழ்க்கையாகிப் பழகிப் போய், இருக்கும் வாழ்வில் இன்பம் தேடும் வழியில் திணிக்கப்  படுகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் விச்வம் பரசுவாகும் வரையில் நடக்கும் கதைகள். இம்மி பிசகாமல்  எடுத்துக்கூறுகிறார்.  ஒரு வரியில் கூட சலிப்பு தட்டவில்லை. வரிக்கு வரி, உங்கள் வாழ்க்கையை, என் வாழ்க்கையை படம் பிடித்துள்ள இந்துமதிக்கு மனம்கனிந்த பாராட்டுகள்.

விச்வம், ருக்மணி உறவு அழகான நட்புறவு. ஒருவேளை ருக்மணி பரசுவுக்கு மனைவியாய் வந்திராவிட்டால்,  இவனுக்கே நல்ல தோழியாய், பின் வாய்ப்பிருந்தால் காதலியாய் மனைவியாய் வாய்த்திருக்கக் கூடும் என்று பல இடங்களில் தோன்றுகிறது. கொச்சைப் படுத்தப் படாத நட்புறவு. யாரேனும் இக்கதை படிக்கவில்லையெனில் ஒரு முறையேனும் வாசித்துப் பாருங்கள். நம்முள் இருக்கும்  விசுவம் இங்கு பாத்திரமாய் பேசுவது புரியும்.

______

நிற்க. ஏறக்குறைய ஆறு வருடங்களுக்கு முன் மரத்தடியில் பதிவிட்ட மீள் பதிவு. 

February 07, 2012

liebster விருது - நன்றி ராஜி.


சென்ற மாத காலம் முழுவதும், இமயமலைச்சாரலில் வாழ்ந்த துறவியாக என்னை நானே எண்ணிக்கொண்டு (கொஞ்சம் ஓவர் தான்) அதிகம் எழுதுவதில் ஈடுபடாத மனநிலையில் இருந்துவந்தேன். என்னடாவென்றால் இரண்டு விருதுகள். சில வருடங்களுக்கு முன் குதூகலித்து மகிழ்ந்திருப்பேன். தற்போது பண்பட்டுவிட்டதாக நானே என்னை நினைத்துக்கொள்கிறேன் (இதுவும் ஓவர்...பொறுத்துக்கோங்க) அதனால் மனம் தெளிந்து அமைதி கலந்த மகிழ்ச்சியிலும் நிதானத்திலும் திளைத்தது.

அடிக்கடி கோபித்துக் கொண்டு பிறந்தகம் செல்லும் பெண்டாட்டி போல், துறவுநிலைக்கு மனம் சென்றுவிடக் கூடிய அபாயம் வரும் போது இப்படி நண்பர்கள் விருதுகள் வழங்கியிருப்பதால், அடடா இதற்காகவானும் இரண்டு நல்ல எழுத்து எழுதவேண்டுமே என்ற கடமை என்னுள் நிறைகிறது. முடிந்த போதெல்லாம் நிச்சயம் எழுதுவேன்.





வி.கோபாலக்ருஷ்ணன் விருது வழங்கி முடித்த தருணத்தில், தோழி  ராஜி அவர்கள் என் பதிவுகளுக்காக "liebster blog award" வழங்கியுள்ளார். மிக்க மகிழ்ச்சி தோழி. பிடித்த ப்ளாக் என்ற பதவி எனக்கு எவ்வகையில் பொருந்துமோ தெரியவில்லை. ஜனரஞ்சகமாக எழுதும் மனநிலை குறைந்து கொண்டிருக்கிறதோ எனத் தோன்றுகிறது. அடிக்கடி ஆன்மீகம், வேதாந்த விஷயங்களை மட்டுமே பதிவில் எழுதாமல் வேறு சில பதிவுகளும் பதிவிட எத்தனிக்கிறேன். மிக்க மகிழ்ச்சி ராஜி.


நானும் படிக்கும் சில வலைப்புக்களில் யாருக்கு வழங்குவேன். ஏறக்குறைய முன்பு குறிப்பிட்டது போல் சிலர் பிரபலங்கள். சிலர் எழுதுவதை வெகுவாக குறைத்துக் கொண்டு விட்டனர். நான் படிக்கும் ஏறக்குறைய எல்லா வலைப்பூக்களும் மிகவும் பிடிக்கும். அதில் ஐந்து குறிப்பிட்டு சொல்ல கடினமாக இருக்கிறது.


liebster விருதினை நான் ரசிக்கும் கீழிருக்கும் தோழர்களுக்கு வழங்க பிரியப்படுகிறேன்.



D.R.Ashok: அற்புதமான புதுக்கவிதைகள். தற்பொழுது எழுதுவது வெகுவாக குறைந்துவிட்டதே :(



ஷைலஜா:  இவரின் நகைச்சுவை, பல்சுவை...சகலகலா பதிவுகளுக்கும் நான் விசிறி.



R. gopi: சுவாரஸ்யமான பதிவுகள் பிடிக்கும். இப்பொழுது ஒரு தொடர்கதை ஆரம்பித்திருக்கிறார். விரைவில் அடுத்த பகுதி வெளியிடக் காத்திருக்கிறோம்.



தமிழ்விரும்பி: பதிவுகள் தான் என்றில்லை, அவர் எழுதும் ஒவ்வொரு மறுமொழியும், வாக்கியமும் ஆழமான அர்த்தங்கள் பொதிந்தவை. சிரத்தையுடன் கூடிய நல்லெழுத்து.



Analyst: இவரது பதிவுகளில் அறிவியல் சார்ந்த விஷயங்களை  ஆர்வமாக படிப்பேன். பொதுவான இவர் எழுத்தின் அணுகுமுறையும் அறிவுபூர்வமாக இருக்கும்.



ஆர். கோபி. அஷோக், இவ்விருது, மிகுந்த நேரநெருக்கடியிலும் வலைப்பூவில் எங்களைப் போன்ற ரசிகர்களுக்காக நீங்கள் மேலும் எழுத சிறு ஊந்துகோலாக இருக்குமென மிகவும் ஆசைப்படுகிறேன்.

liebster விருது பெற்றவர்கள் தங்களுக்குப் பிடித்த ஐந்து பதிவாளர்களுக்கு வழங்கித் தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.







February 06, 2012

விருதுகள்... அன்பின் அங்கீகாரம்.

நேற்றைய தினம் "Versatile blogger award" என் பதிவுகளுக்கு திரு.வி.கோபாலக்ருஷ்ணன் அவர்களால் கொடுக்கப்பட்டது.




என் எழுத்தின் மீது தாங்கள் கொண்டுள்ள பிரியத்துக்கு மிகுந்த நன்றி சார்.



வெர்ஸடைல் என்பதன் விளக்கத்தை ரத்தின சுருக்கமாகக் தம் பதிவில் கூறியிருந்தார். நானும் விருதை பகிர்ந்து ஐந்து பேருக்கு என்ன ஐநூறு பேருக்கு கொடுத்து மகிழ விரும்புகிறேன்.

ஆனால், நான் வாசிக்கும் வலைதளங்கள் மிகவும் குறைவு.  என் மனதில் நிற்கும் சில தளங்களுக்கு அடிக்கடி சென்று வருவதுண்டு. அவர்களில் ஏறக்குறைய பலரும் பிரபல பதிவர்கள். விருதுகளை  முன்னமே வாங்கியிருக்கக்கூடும்.

இருப்பினும் எனது பார்வையில் "versatile" என்று கருதும் ஐவருக்கு, இவ்விருதினை அளிப்பதில் நான் பெருமையடைகிறேன். முன்னமே வாங்கியிருந்தாலும், என் அங்கீகாரத்தை ஏற்றுக்கொண்டு என்னை மகிழ்விக்கக் கோருகிறேன்.


கீழ்கண்ட எழுத்தாளர்களுக்கு இவ்விருதை வழங்குவதில் பெருமையும் பெருமகிழ்ச்சியும் அடைகிறேன்.  உங்கள் எழுத்தின் மேல் நான் கொண்ட பிரியத்தின் சிறு அடையாளமாக இதைக் கருதுமாறு அன்புடன் விண்ணப்பிக்கிறேன்.



1. ஜீவி அவர்களின் விசிறி நான் என்றால் மிகையாகாது. பார்வை என்ற ஒரு கதையிலேயே, பல கருவை உள்ளடக்கி, பல்வேறு விஷயங்களைப் பற்றி பகிரும் அவர் திறமைக்கும், ' சுயத்தேடலில்'  நான் கண்டெடுத்த முத்துக்களின் நினைவாகவும் என்னால் முடிந்த சிறு அங்கீகாரமாக பணிவான வணக்கங்களுடன் இவ்விருதை வழங்குகிறேன்.



2. ஜி.எம்.பி அவர்கள், பல விஷயங்களைப் பற்றி குட்டி குட்டி பதிவு சுவையாய் கூறுவதில் வல்லவர். கவிதை,  கதைகள், நாடகம், சின்ன சின்ன விஷயங்களை பகிர்தல்,  சிறுவயது நினைவலைகள், சிந்தனை தூண்டும் பதிவுகள்   என எதையும் விட்டுவைப்பதில்லை.  பல் திறமை பொதிந்திள்ள அவருக்கு  விருது வழங்குவதில் மிகுந்த பெருமையடைகிறேன்.


3. சகோதரர் வி.ராதாக்ருஷ்ணன் அணு முதல், ரஜினி வரை கோபம் முதல் கோள்கள் வரை சுவாரஸ்யமாகப் பேசுபவர். இவ்விருது இவருக்கு வழங்குவதில் மிகவும் மகிழ்கிறேன்.


4. தோழர் மின்னல் வரிகள் கணேஷ் பற்றி நான் சொல்லவே வேண்டாம். மிக்ஸர் என்ற தலைப்பில் அவர் வழங்கும்  காரசாரமான அருமை கலவையே அவரின் பன்முக எழுத்துத் திறமையை பறைசாற்றுகிறது. இவருக்கு விருது வழங்குவது எனக்கு பெருமையாய் இருக்கிறது.


5. அன்புத் தோழி கீதாவுக்கு குழந்தைகள் பக்கங்கள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள் அனைத்திலும் தனி முத்திரை பதிக்கிறார். அவர் எழுத்து ஆத்மார்த்தமாக இருப்பதால் எனக்கு மிகுந்த பிரியமானது. அவருக்கு இவ்விருது வழங்கி நான் பெருமையடைகிறேன்.



வாழ்த்துக்கள் நண்பர்களே!



வை.கோ அவர்கள் எழுதிய பதிவின் சிறு பகுதியை இங்கு இடுகிறேன்.



VERSATILE என்றால்






(1)ஒரு விஷயத்திலிருந்து வேறு விஷயத்திற்கு சுலபமாக மாறுகிற [கவனிக்கிற] [Capable of turning easily from one thing or subject to another]
(2) எந்த வேலையையும் செய்யும் திறமை வாய்ந்த
[Applying oneself readily to any task.]
(3) பலவிதத் திறமைகளுள்ள [many-sided]
(4) பல கலைகளில் வல்லமையுள்ள [Example: Versatile Author]



என்று தெரிய வருகிறது.



இந்த விருதைப் பெற்றவர் தனக்கு ஆர்வமுள்ள ஏதாவது ஏழு விஷயங்களைப்பற்றி சுருக்கமாகக் கூறிவிட்டு, தான் மிகவும் விரும்பும் தகுதி வாய்ந்த வேறு ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதை தன் மூலம் PASS ON செய்ய வேண்டுமாம். அப்போது தான் இந்த விருதை அவர் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாம். தொடர்பதிவுகள் போல இது ஒரு தொடர் விருதாக அமையப்போவது நிச்சயம்


===========================================


 பிடித்த எழு விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டு மேலும் ஐந்து பேருக்கு விருதை பகிர்ந்து வலைப்பதிவாளர்கள் மத்தியில் நல்லூக்கம் வளர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


ஹ்ம்ம்...அப்புறம் எனக்குப் பிடித்த ஏழு விஷயங்கள்  கீழே பகிர்ந்துள்ளேன்.

1. என் கண்ணன் (கீதை உபதேசித்தவன்) ...அவனை நினைப்பது, சிந்திப்பது,  என்றேனும் அவனையே என் மணவாளனாக ஏற்பதே என் இலக்கு. அதற்கான தவமே என் பிறப்பு என நினைத்துள்ளேன்.

2. வானவியல். (astrnomy), அறிவியல் சார்ந்த விஷயங்கள் படித்தல்,  ஆராய்தல்.

3. பாடுவது, பாடல்கள்  கேட்பது

4. ஆங்கிலம்/தமிழ் நாவல்கள், புத்தகங்கள் படிப்பது

5.  எழுதுவது,

6. கணினி விளையாட்டுக்கள்,  நெருங்கிய நண்பர்கள்

7.   என் கணவர் மற்றும் மகளுடன் தனியே இருக்கும் பொழுதுகள்,
என் அம்மா அப்பாவுடன் தனியே இருக்கும் பொழுதுகள்.

February 02, 2012

ஆசையால் வரும் கேடு





தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் - ஆறாதே
நாவினால் சுட்ட வடு



என்றார் திருவள்ளுவர். எனக்கு மிகவும் பிடித்த குறளில் இதுவும் ஒன்று. உதிர்த்த மலர்கள் மரம் சேராதது போல உதிர்த்த வார்த்தைகளை பெற முடியாது. அதன் இலக்குக்குறிய நபரை தாக்கவோ மகிழ்விக்கவோ செய்த பின் வெளி வந்த வார்த்தைக்குறிய பணி முற்றுபெறுகிறது. கோபத்தில் வெளி வந்த சொற்களை திரும்ப அள்ள முடிவதில்லை.


ஏன் கோபப்படுகிறோம்? முதல் காரணம் அஹங்காரம். அது தோன்றியதால் தோன்றுவது ஆசை. பொருளின் மேல், நபரின் மேல் உள்ள ஆசை, அது பரிபோய்விடக்கூடாதே என்ற ஆசை, அல்லது தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம், அதனால் வரும் பொறாமை.



மதியிழந்து, பொருட்களை விலைபேசி சூதாடியதைத் தாண்டி, உயிர்களையும் விலைபேசி அடிமைப்படுத்தி தன் ஆசையை தீர்த்துக் கொள்ள எண்ணுகிறான் துரியோதனன். சூதாட்ட மயக்கத்தில் இன்னது தான் செய்கிறோம் என்று அறிந்தும் அறியாமல் தவறிழைக்கிறான் தருமன். கோபமும் பொறாமையும் அஹங்காரமும் கொழுந்துவிட்டெரியும் துரியோதனன் மனது இப்போது பழி தீர்க்க எண்ணுகிறது.  தன்னை நகையாடியவளை, தனக்கு கிடைக்காதவளை, அசிங்கப்படுத்துவது நோக்கம். அறிவுடையவன் மற்றவனுக்கு துன்பம் தரும் சொற்களை பேசமாட்டான். அகத்தே இருள் சூழ்ந்து அறிவற்ற செயல் செய்கிறான் துரியோதனன்.

இழுத்து வரச் சொல்கிறான் திரௌபதியை. எப்படிப்பட்ட தீஞ்சொற்கள்!


"அகத்தே இருளுடையான், ஆரியரின் வேறானோன்,

துரியோதனனும் சுறுக்கெனவே தான்திரும்பி
அரியோன் விதுர னவனுக் குரைசெய்வான்:-


‘செல்வாய்,விதுரா!நீ சக்தித் திருப்பதேன்?
வில்வா ணுதலினாள்,மிக்க எழி லுடையாள்,
முன்னே பாஞ்சாலர் முடி வேந்தன் ஆவிமகள்,
இன்னேநாம் சூதில் எடுத்த விலைமகள்பால்
சென்றுவிளை வெல்லாஞ் செவ்வனே தானுணர்த்தி,

“மன்றினிடை யுள்ளான்நின் மைத்துனன்நின் ஓர் தலைவன்
நின்னை அழைக்கிறான் நீள்மனையில் ஏவலுக்கே”
என்ன உரைத்தவளை இங்கு கொணர் வாய்’
-பாஞ்சாலி சப்தம்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் மேல் ஆசை. ஆசையில்லாத மனம் ஞானியின் மனம் மட்டுமே. இறைவனுக்கு பணி செய்ய வேண்டும் என்றோ அல்லது அவனுடன் ஒன்றற கலக்க வேண்டும் என்றோ பக்தனுக்கு ஆசை உண்டு. "மனிதன் ஆசைப்படக் கூடாது" என்று புத்தர் ஆசைப்பட்டாராம். ஆசை யாரையும் விடுவதில்லை. ஆசைகளின் தரம் மட்டுமே மனிதனின் வாழ்வு தாழ்வை நிர்ணயிக்கிறது.

தனக்கென உரிய ராஜ்ஜியத்தை திரும்ப வெல்வது தர்மத்துக்கு உட்பட்ட ஆசை. ஆனால் துரியோதனின் ஆசை, தர்மத்துக்கு புறம்பானது. இதை விளக்கி துரியோதனனை எச்சரிக்கிறார் விதுரர்.


நெஞ்சஞ் சுடவுரைத்தல் நேர்மைஎனக் கொண்டாயோ?

மஞ்சனே,அச்சொல் மருமத்தே பாய்வதன்றோ?
கெட்டார்தம் வாயில் எளிதே கிளைத்து விடும்;
பட்டார்தம் நெஞ்சில் பலநாள் அகலாது
வெந்நரகு சேர்த்துவிடும்,வித்தை தடுத்துவிடும்,
மன்னவனே,நொந்தார் மனஞ்சுடவே சொல்லுஞ்சொல்.
- பாஞ்சாலி சபதம்.

சொல்பவன் சுடுசொல் பாய்ச்சுவதில் கிடைத்த திருப்தியோடு முடிந்ததாக எண்ணிவிடுகிறான். பலநாள் அகலாது நிற்கும் பட்டவனின் வலியோ சொன்னவனின் அழிவையே தர வல்லது. உன்னுடைய இந்த ஆசை ஆபத்தை விளைவிக்கும். பாண்டவர்களின் கோபத்துக்கும், சாபத்துக்கும், ஆளாக நேர்ந்து, அதனால் அழிவு ஏற்படும் என்று எடுத்துரைக்கிறார். மலைத்தேனின் ஆசையால், தேன் எடுக்கப்போகிறவன், கீழே விழுந்தால் துர்மரணம் ஏற்படுமே என அஞ்சுவதில்லை. தேனின் மேல் உள்ள ஆசையால் கீழுள்ள ஆபத்து தெரியாமல் செயலில் ஈடுபடுகிறான். இந்த ஆசை, பேராசையாக போகும் பொழுது, கீழே விழுந்து அழிகிறான் என புத்திபுகட்ட முயல்கிறார் விதுரர்.


"மலையிடைத் தேனில்
மிக்க மோகத்தி னாலொரு வேடன்
பாத மாங்கு நழுவிட மாயும்
படும லைச்சரி வுள்ளது காணான்."

-பாஞ்சாலி சபதம்.

துரியோதனனின் பொறாமை, க்ரோதம், பின்னாளில் போரில் கொண்டர்ந்துவிட்டு, ஒட்டு மொத்த சாம்ராஜ்யத்தையே அழித்தது.

மலையிடைத் தேனின் மோகம் தான்  சாமன்யன் நிலைமையும்.  ஆசை அஞ்ஞானத்தால் உருவாகிறது. அதிருப்தியே அதனை வளர்க்கும் தீ. உண்மையான பிராமணனுக்கு பிரம்மத்தின் சிந்தனையில் லயித்திருப்பதே சுவபாவம். அவனுக்கு அதிருப்தி இருப்பதே சாத்தியமற்று போகிறது.  உண்மையான அந்தணனுக்கு அதிருப்தி இருக்காது. அவரவர்க்கு வெவ்வேறு நியாயங்கள்.  உடலின்பத்தை வழங்குபவளுக்கு லஜ்ஜை இருத்தல் சரியல்ல. குடும்ப ஸ்த்ரீ லஜ்ஜையில்லாவிட்டால் கேடு. ஒரு அரசனுக்கு நாட்டின் நலம், சுபீக்ஷத்தில் போதும் என்ற திருப்தி வரக் கூடாது. திருப்தியில்லாத அந்தணன் தன் அழிவை தேடிக் கொள்கிறான்.


நட்பைப் பாராட்டிய கர்ணன் அவன் வழியில் தர்மத்தை கடைபிடித்தான்.
அண்ணன் என்றும் பாராமல் தர்மத்துக்கு செயல்பட்டான் விபீஷணன். அண்ணன் தவறே ஆனாலும் அவனுடன் இருப்பதே தர்மமெனக் கருதினான் கும்பகர்ணன்.


ஆசை என்பதும் சரியா தவறா, தர்மத்துக்கு உட்பட்டதா என்பதெல்லாம் அவரவர் சந்தர்ப்ப சூழல், குணம், கர்மா இவற்றைப் பொருத்து மாறுபடுகிறது. ஆசைப்பட்டாலும் அதனால் வரும் க்ரோதம், பொறாமையை தவிர்த்து தர்மத்துக்கு புறம்பான செயல்களை ஆசையின் விளைவாக்காமல் இருப்பது நலம்.

(சோ-வின் எங்கே பிராமணனைத் தழுவியது)