September 16, 2012

நன்றி ஜெயமோகன் ... ஆனால்...!




ஜெயமோகன் அவர்கள் "நகைச்சுவையும் தமிழ்சினிமாவும்" என்ற தலைப்பில் தமிழர்களின் நகைச்சுவை உணர்வைப் பற்றிய தன் கண்ணோட்டத்தை எழுதியுள்ளார்.



இவர் சொல்வதில் ஏறக்குறைய பல விஷயங்களுடன் நான் ஒத்துப்போகிறேன். இவ்வளவு கோர்வையாக, தெளிவாக, சரியான மேற்கொள்களைக் காட்டி  அழ்கான வார்த்தை பிரயோகத்துடன் இத்தனைச் சிறப்பாக என்னால்  சொல்லியிருக்க முடியாது. அதனால் தான் அவர் ஜெயமோகன்...நான் வெறும் "மின்மினிப்பூச்சி"


நான் சொல்ல வந்ததை, என் போன்ற சிலர் (பலர்) சொல்ல வந்ததை எங்கள் சார்ப்பில் சொல்லியிருக்கிறார். நன்றி...... ஜெ.மோ. சார்.. ஆனால், தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு ஒட்டுமொத்தமாக இல்லை  என்பதை என்னால் ஏனோ ஒத்துக்கொள்ள முடிவதில்லை.

'நக்கல்' , கேலி வகை நகைச்சுவையைத் தாண்டி, மொழிப்பகடிகளை தமிழர்கள் அன்றாட வாழ்வில் நிறையவே ரசித்து சொல்லாடி வருகிறார்கள். நகைச்சுவையை இயல்பாய், பேசும் வாக்கிலேயே உதிர்த்தும் வருவதுண்டு.  (cliche வகை காப்பியடிக்கும் சொற்களையும் தாண்டி)


சிரிப்புகென தனி "ட்ராக்" தேவைப்படும் திரைப்படகளில் மட்டுமே ஜெ.மோ அவர்கள் சொல்வது போல், நகைச்சுவைக்கென  அஷ்டகோணல் முகமோ, நடையோ, உடையோ, பாவனையோ, பெரும்பாலும் அவசியமாகிப் போகிறது.  நகைச்சுவை "ட்ராக்" என்கிற பாணியைத் தாண்டி, முழு நீள நகைச்சுவை படங்கள் ரசிக்கத்தக்கவையாகவே இருக்கிறது. பாமா விஜயம் , வீட்டுக்கு வீடு வாசப்படி, மணல்கயிறு இப்படி அடுக்கிக்கொண்டே பொகலாம்

உலக நாயகன் கமலஹாசன் போன்றவர்கள்   தனக்கென அருமையான பாணியை கொடுத்துள்ளார். நீங்கள் குறிப்பிட்டிருந்த "மைக்கேல் மதன காமராஜன்"   நான் ரசித்த மிகச் சிறந்த நகைச்சுவை படமாக முதலிடத்தில் உள்ளது. க்ரேஸி மோகனின் வசனங்களில் பூடக நகைச்சுவையும் மொழிப்பகடிகளின் வகையும் பின்னிப் பிணைந்திருக்கும். பாலச்சந்தரின் சில நகைச்சுவை படங்களும் விதிவிலக்காக இயல்பான நகைச்சுவையுடன் மிளிர்பவை.


எஸ்.வி.சேகர்,  ஒய்.ஜி. மகேந்திரன் , மௌலி முதலியோரும் இயல்பான நகைச்சுவைகளை அள்ளி வழங்கியிருப்பவர்கள். ஜெ.மோ அவர்கள் ஒட்டுமொத்தமாக நகைச்சுவை சினிமாக்களில் இல்லை என்று கூறும் அளவு குறைந்து விடவில்லை என்பது என் எண்ணம்.

ஜெ.மோ சார்...எங்களைப் போன்ற பலரின் எண்ணத்தை மிக அழகாக பிரதிபலித்த உங்களுக்கு கோடி நன்றி. ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படி வெகு சிலதே இருக்கின்றன என்பதால் அவற்றை புறந்தள்ளிவிட்டீர்கள் போலும்.

சினிமாக்களைத் தாண்டி நாடகமேடைகளில் பல நகைச்சுவை மேதைகள் மிளிர்ந்திருக்கிறார்கள். இன்னும் மின்னிக்கொண்டிருக்கிறார்கள்.  எழுத்தாளர்கள் தேவன், பாக்கியம் ராமசாமி, அகஸ்தியன் போன்ற பலரின் ரசிக்கவைக்கும் எழுத்துக்கள் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளன.  சுஜாதா போன்ற  பன்முக எழுத்தாளர்களின்  கதைகளிலும்  ஊடே இயல்பான நகைச்சுவை ஒளிந்திருக்கும்.  அவற்றையெல்லாம் தமிழக மக்களாகிய நாம் தான் ரசித்து அங்கீகரிக்கிறோம்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டேனும் ஒட்டுமொத்தமாக "தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு" என்ற பொது அவதானிப்பை பரிசீலித்திருக்கலாம் :)