January 14, 2017

கோழியின் புலம்பல்




ஏர் உழும் மாட்டுக்கு
பொட்டும் பூவும் வச்சு
பொங்கல் படைச்சு
மறு நாள் பாலுக்கு
விட்டு வச்ச மனுசன்
முட்டையை முழுங்கியதும்
மிச்சமிருக்கும் எங்கள
கூறு போட்டு  பிரியாணியாக்கும்
வன்முறையிலிருந்து மீளவாவது
குட்டியிட்டு பால் சுரந்திருக்கலாம்.





மாரீசம்
________

உழவுக்கு பெயரளவில் வந்தனை செய்து
ஊரெங்கும் குப்பைக்கூளங்களை தூவி
விலையுயர்ந்த 'மால்களில்'
இடைத்தரகர்ளின் பணப்பை நிரப்பி
அரிசிப் பருப்பை அலுங்காமல் அள்ளி செல்லும் நமக்கு
கடைநிலை  விவசாயியைப் பற்றி
கவலை  கொள்ள நேரமில்லை.
()
ஜல்லிக்கட்டின் பாரம்பரியத்தை காப்பாற்ற துடித்தாலும்
குடும்பத்துடன் கிராமத்துக்கு குடிபெயர
கிடிக்கிப்பிடியாய் பல பிரச்சனைகள்.
()
பொங்கலிடும் ஒரு நாள் கூத்திற்கு
தெய்வமாய் பரிமளிக்கும் மாக்கள்.
()
இயற்கை உரமூற்றி
சோறும் நீரும் அள்ளி வழங்கும் ஆதவனுக்கு
நன்றி கூறும் பாசாங்கில்
பட்டையும் பகட்டையும் பறைசாற்றி
பொங்கிய அரிசியுடன் வெல்லம் திணித்து
நெய்வழிய பதமாய் உண்டு
செல்ஃபியுடன் கும்மியடிக்கும் மற்றுமொரு நாளை.....
நட்புறவுகளுடன் நேசங்கள் பரிமாறி
அளவளாவும் ஆறுதலுக்காக பொங்கி மகிழ்வோம்