February 27, 2011

நீதிக் கதைகள் (எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)

அவரவர் வாழ்வில் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களும் சூழ்நிலைகளும் ஏராளும். எப்படிப் பட்ட சூழ்நிலையிலும் திடமாகவும் புத்திசாலித்தனமாகவும் அணுகுவதையொட்டியே தனி மனிதனின் வெற்றி தோல்வி அமைகிறது. நீதிக் கதைகளை போதிப்பதன் மூலமாக மனிதனுக்கு உணர்த்தப்பட்ட படிப்பினை அனேகம். இன்றும் "moral stories" உணர்த்தும் ஏராளமான கதைகளை, புத்தகங்களை சிறுவர் சிறுமியர்கள் படித்து பயன் பெறுகிறார்கள். புத்தகங்கள் இல்லாத காலங்களிலும் வழிவழியாக இக்கதைகள் பறிமாறப்பட்டு வந்திருக்கின்றன.

பஞ்சதந்திர கதைகள் விஷ்ணு ஷர்மா என்பவரால், அமரஷக்தி என்ற அரசனின் புதல்வர்களுக்கு புகட்டப்பட்ட நீதிக் கதைகள். இதில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் மிருகங்களும் பக்ஷிகளுமே என்றாலும் ஊடே போதிக்கப்பட்ட நீதி மனிதனின் தனி வாழ்வுக்கு உகந்தது. விக்ரமாதித்தனின் வேதாளக் கதைகளைப் போலவே கதைக்குள் கிளைக்கதைகள் பலவற்றை புகுத்தி, கையாளப் பட்டிருக்கிறது. அதே போல் ஹிதோபதேசத்தில் சொல்லப்பட்டுள்ள கதைகளும் நீதி போதிப்பவையாக இருந்தாலும், இது பெரும்பாலும் ராஜ நீதியை வலியுறுத்தும் கதைகளாக அமைகிறது. இவை நாராயணர் என்பவர் தவள(dhavala)சந்திரன் என்ற அரசனுக்கு கூறப்பட்ட கதைகள். ஹிதம் என்றால் இதமானது (ஹிதமானது) என்று பொருள் கொள்ளலாம். இக்கதைகள் இருநூறுக்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகளில், மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வழங்கி வருகிறது. மேலும் மஹாபாரதத்தில், பீஷ்மர் தருமருக்கு கதைகள் மூலமாகவே ராஜநீதி போதித்துள்ளார்.

இப்படிப்பட்ட கதைகள் கேட்கத் திகட்டாதவை. ராஜநீதி என்றில்லாமல், அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நபர்களையொட்டி அமைகின்ற படியால் இதன் படிப்பினை பண்டிதனுக்கும் பாமரனுக்கும் பொருந்தக்கூடியவை.

விசுவாசிக்கு உதாரணமாகக் கொண்ட ஹிதோபதேசக் கதையில், சூத்ரகன் என்ற அரசனின் கீழ் வீரவான் என்ற வேலையாள் மிகுந்த விசுவாசியாக உழைத்து வருகிறான். தர்ம சிந்தனையுடையவனாகவும் திகழும் அவன் தனக்கென கால் பங்கு தனத்தை வைத்துக் கொண்டு மீதத்தை தானம் செய்து மேன்மையான வாழ்வு வாழ்ந்து வருகிறான். அரசனுக்கு விதி முடிந்து மரணம் நேரப்போகிறதை அறிந்ததும் தன் மகனையே பலி கொடுக்க தயாராகிறான். இதனை விசுவாசத்தின் எடுத்துக்கட்டாக மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ராஜ-விசுவாசிகள் அதிகம் இருப்பது ராஜ்ஜியத்தின் பலத்தை கூட்டுகிறது. இவர்களை சரியாக அடையாளம் கண்டு கொள்வதே அரசனின் சிறப்பும் புத்திகூர்மையும்.

February 23, 2011

நம்பினார் கைவிடப்படார் (சோ-வின் எங்கே பிராமணன் பகுதியிலிருந்து தொகுக்கப்பட்டது)

ஐம்பத்தி ஒன்பது வயது பூர்த்தியாகி அறுபது துவங்கும் போது போது சஷ்டி-அப்த-பூர்த்தி செய்யப்படுகிறது. சாந்தி பூஜை செய்து ஹோமம் வளர்பது வழக்கம். அறுபது வயது துவங்கும் பொழுது, கிரஹ நிலைகள் ஏறக்குறைய பிறக்கும் பொழுது இருப்பது போல் இருக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், ஷாந்தி செய்து கொள்வது விசேஷம் என கருதப்படுகிறது. ஹிந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ள சம்ஸ்காரங்களில் இது பற்றிய குறிப்பு இல்லாவிட்டாலும், ஷாந்தி, ஹோமம், பூஜை முதலியவை செய்யப்பட வேண்டிய விசேஷ தருணமாக சஷ்டி அப்த பூர்த்தி கருதப்படுகிறது. தற்போது திருக்கடையூர் என்ற ஸ்தலத்தில் சஷ்டியப்த பூர்த்தியை க்ரமப்படி செய்து கொள்ளும் தம்பதியர் பலர் உண்ட ஐம்பத்தி ஒன்பது வயது பூர்த்தியாகும் பொழுது "உக்ர ரத சாந்தி" செய்வதும், அறுபது முடியும் பொழுது "சஷ்டி அப்த பூர்த்தியும் செய்யப்படுவ தாவும் குறிப்பு இருக்கிறது. காலன் உக்ர ரதமேறி வருவதாகவும், அவனை சாந்தி செய்து குளிர்விப்பதாக ஐதீகம்.

இவற்றையெல்லாம் செய்தால் யமன் திருப்தி அடைவானா? இதெல்லாம் பகட்டுக்கென செய்யப்படும் அனாவசியங்கள் என்று அபிப்ராயம் இருந்தால் அதற்கேற்ற பலனே கிட்டும். எந்த ஒரு செயலின் விளைவு அதன் பால் உள்ள ஈடுபாட்டை பொருத்து அமையும். பக்தியும் நம்பிக்கையும் செயலின் ஊடே பின்னியிருந்தால் அந்த செயலின் மகத்துவம் தனித்து மிளிரும்.

யமனை வென்றவர்கள் ஒருவரும் இல்லை, குறைந்த பட்சம் மரண பயத்தை வென்றவர்களைக் கூட விரல் விட்டு எண்ணிவிடலாம். மரணத்தை வெல்ல முடியாவிட்டாலும், தர்ம தேவனான யமனிடம் போராடி வெற்றி பெற்றவர்களுள் மார்கண்டேயனும் ஒருவன். பதினாறே வயது நிரம்பியவனிடம் எத்தனை நம்பிக்கை / பக்தி இருந்தால், இறைவனே கதியென்று லிங்கத்தைக் கட்டிக்கொண்டிருப்பார்! அப்படிப்பட்ட பக்தி எத்தனை தூய்மையானதாக இருந்தால் சிவனும் லிங்கதினின்று தோன்றி யமனையே வதம் செய்திருப்பார்! மார்கண்டேயன் சிவபக்தனாக மட்டுமே இல்லாமல், இறையையின் அருவத்தை, தத்துவத்தை எல்லா உருவிலும் உணர்ந்த ஞானியாக திகழ்கிறான். விஷ்ணு பக்தனாய் விஷ்ணுவைப் போற்றுகிறான். விஷ்ணுவின் யோக மஹிமையைக் காண்கிறான். ப்ரளய காலத்தைக் காண்கிறான். காணுதற்கறிய பலவற்றை தன் யோகத்தாலும் பக்தியாலும் காண்கிறான். சிவனும் பார்வதியும் அவனுக்கு ப்ரளய காலத்தில் தரிசனம் தர,

"சத்துவ குணம் பொருந்தியவன் நீ
உலகை காத்து சுகமுறச் செய்கிறாய்
ரஜோ குணம் பொருந்தியவன் நீ
உலகத்தை படைபதற்காக அதைக் கொண்டவன் ஆகிறாய்
தமோ குணம் பொருந்தியவன் நீ
உலகத்தை அழிப்பதற்காக அதைக் கொள்கிறாய்"
என்று துதிக்கிறான்.

எல்லாபொருளிலும் எல்லா வடிவிலும், தன்னிலும் பிறவிலும் கூட 'ஒன்றை'யே காணும் பக்குவம் பெற்றாவனாகிய மார்கண்டேயன் தமக்கு பிரியமானவன் என்று அருளிச்செல்கிறார்.

நம்பிக்கையின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசப்படும் பிரபலக் கதை ஒன்று இதற்கு சாலப் பொருத்தமாக அமையும்.

கங்கையில் முங்கி எழுந்தால் கர்மம் (பாபம்) தொலையும் என்று நம்பியே அனைத்து மக்களும் புனித நதி நீராடுகின்றனர். ஒரு சமயம் பரமசிவன்-பார்வதி இடையே சம்பாஷணை நடந்தது. "கங்கையில் ஸ்னானம் செய்தால் பாபங்கள் கரைந்து போகுமே, ஏன் பூவுலக மக்களின் பாபங்கள் தீர்ந்ததாகவே தெரியவில்லை" என்று பார்வதி வினவ அதற்கு "நம்பிக்கையுடன் ஒருவனும் இங்கு ஸ்னானம் செய்தான் இல்லை" என்கிறார் இறைவன். அதனை நிரூபிக்க திருவிளையாடல் புரிகின்றார். வயோதிக வேடத்தில் சிவனும் இளைய மனைவியின் வேடத்தில் பார்வதியும் கங்கையில் நீராடுகின்றனர். முதியவரை கங்கை அடித்துச் செல்கிறது. என் புருஷனைக் காப்பாற்றுவார் இல்லையா என்று புலம்புகிறாள் அந்தப் பெண். அவ்வளவு சீக்கிரம் உதவவும் யாரும் முன்வரவில்லை. கடைசியில் சிலர் முன் வந்த போது "பாபமற்ற இவரை கரைசேர்ப்பவனும் பாபமற்றவனாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அவர்கள் சாம்பலாகி விடுவார்கள் " என்று நிபந்தனை விதிக்கிறாள் இளம் பெண். அனைவரும் தயங்கி வந்த வழியே சென்று விட, ஒருவர் கூட தூக்கி விட முன்வரவில்லை. இறுதியில் ஒரு இளைஞன் kகாப்பாற்றுகிறான். "நீ பாபமற்றவனா" என்ற கேள்விக்கு "அதிலென்ன சந்தேகம், கங்கையில் நீராடிய நிமித்தம் என் பாபங்கள் எல்லாம் கரைந்து விடுகின்றன, ஆகவே நான் பாபமற்றவன்" என்கிறான். இறைவனும் இறைவியும் அவனுக்கு அருள் புரிந்து விட்டு, "நம்பிக்கையோடு ஸ்னானம் செய்தால் மட்டுமே பாபங்கள் விலகும்" என்று திருவாய்மொழிவதாகக் கதை.

இந்து மதத்தில் சில நதிகளை புண்ய நதிகளாகக் கருதி தாய் வடிவில் உருவகப்படுத்தி வணங்கி வருகின்றனர். அங்கு நீராடுதல் அனைத்து பாபங்களையும் போக்க வல்லதாகவும் நம்பிக்கை நிலவுகிறது. முக்கியமானதாக எழு நதிகளை குறிப்பிடுவதுண்டு. கங்கை, யமுனை, ப்ரஹ்மபுத்ரா, நர்மதா, கோதாவரி, காவிரி, சரஸ்வதி ஆகிய ஏழும் சிறப்புற்றது. கங்கை நீராடுவதன் முக்கியத்துவத்தை நான் நிறைய கேட்டிருக்கிறோம். ஆனால் பலரும் அறியாத பெரும்சிறப்பு காவிரிக்கும் உள்ளது. நரகாசுரனை வதம் செய்த கண்ணனுக்கு வீர-ஹத்தி (வீரனை கொன்ற பாபம்) தோஷம் பீடித்தது. அதற்கு பரிகாரமாக காவிரியில் நீராடி பாபத்தை தொலைத்தாராம். துலா மாதத்தில் விடியல் நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரிஅ, காவிரியில் அனைத்து புனித நதிகளும் சங்கமம் ஆகின்றன எனவே துலா ஸ்னானம் காவிரியில் செய்வது மிக உத்தமம். கங்கையில் மூன்று நாள் குளித்தால் கதி மோக்ஷம், யமுனையில் ஐந்து நாள் நீராட வேண்டும். காவிரியில் துலா ஸ்னானம் செய்தல், உடனே விஷ்ணு லோகத்திற்கு இட்டு செல்ல வல்லது என்று காவீரியின் மகிமையை எடுத்துரைக்கின்றனர் சான்றோர். அதுவும் துலா /ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறைக் காவிரியில் நீராடுவது மிக்க சிறப்பு.

மயிலாடுதுறை என்ற மாயவரத்தில் மயூரநாதர் கோவில் ஸ்தல வரலாறு நாதசர்மா-அனவித்யா தம்பதிகள் இங்கு மோக்ஷம் அடைந்ததை நமக்கு எடுத்துறைக்கிறது. ஒரு சமயம் துலா மாதத்தின் கடைசி நாளிலும் காவிரியில் நீராட முடியாமல் போகவே நாதசர்மா-அனவித்யா தம்பதியர் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகின்றனர். அன்று கனவில் தோன்றிய சிவன், மறுநாள் காலை சூரிய உதயம் முன்பு நீராடினாலும் பாபம் நீங்கி மொக்ஷம் கிட்டும் என்று அருள்கிறார். அதன் படியே அதிகாலை நீராடி அத்தம்பதியர் ஈசனுடன் ஐக்கியம் ஆகின்றனர். இத்தம்பதிகளுக்காக வழக்கமான நேரத்தை முடக்கி வைத்ததால் இதனை "முடவன் முடக்கு" என்றும் வழங்குகின்றனர். இக்கோவிலில் இறைவியின் சன்னிதானத்திற்கு பக்கத்தில் அனவித்யாம்பிகை என்ற பெயரில் ஒரு சன்னிதி காணப்படுகிறது. நாதசர்மா ஐக்கியம் ஆன லிங்கம் அவரின் பெயரிலேயே இருக்கின்றது. இவையெல்லாம் நடந்ததற்கு தகுந்த சான்றாக, காசியில் இருக்கும் ஒரு கல்வெட்டில் கூட இத்தம்பதியைப் பற்றிய குறிப்பு இருக்கிறது.

February 21, 2011

சில பழக்கங்கள் வழக்கங்கள் (சோ-வின் எங்கே பிராமணன் பகுதியை ஒட்டி அமைந்தது)


ஏன் என்று தெரியாமலே சில பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்ளுதல் முந்தைய தலைமுறையோடு போயிற்று. இப்பொழுதெல்லாம் பகுத்து அறிவதனால் சில மூட நம்பிக்கைகளை தூக்கி எறிந்து தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும் செய்கிறோம். அதே நேரத்தில் தேவையான, அறிய, நல்ல விஷயங்களை கோட்டையும் விட்டு விடுகிறோம். அதைப் பற்றி அறிந்து கொள்ளவும் எத்தனிக்காமல், எல்லாவற்றையும் "பத்தாம்பசலித் தனம் அல்லது மூட நம்பிக்கை" என்று ஒதுக்குகிறோம். எந்த விஷயத்தையும் சொல்லப்பட்ட நோக்கம் தெரிந்து கடைபிடித்தால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்.

'வீட்டில் மஹாபாரதம் ஓதினால் அல்லது படித்தால் வீட்டிற்கு ஆகாது' என்ற கூறுவதுண்டு. ஆனால் மாஹாபாரத்திலேயே அதனை படித்தல் புண்ய காரியம் என்று வியாசர் குறிப்பிட்டிருக்கிறார். இக்கதையை சிரத்தையுடன் கேட்பவன், படிப்பவனுக்கு ப்ரஹ்மஹத்தி தோஷம் உட்பட பலகோடி தோஷங்களும் இல்லாதொழியும் என்று குறிப்பிடுகிறார். அறம் வளர்க்கும் நல்ல பிராமணனுக்கு பசு தானம் செய்வதை விட, மஹாபாரதம் படித்தல் புண்ய காரியம் என்கிறது பாரதம். இத்தனை விளக்கங்கள் வியாக்கியானங்கள் தாண்டியும் பலரும் பாரதத்தை வீட்டில் படிப்பதில்லை.

ராமாயணம் புனித நூல் என்றால் மஹாபாராதம் ஏன் வீட்டிற்கு ஆகாது? கிருஷ்ணின் கீதோபதேசம் படம் மனையில் இருத்தல் சுபீக்ஷம் என்றால், ஏன் மஹாபாரதம் படித்தல் உகந்ததாக கருதப்படவில்லை? எந்த ஒரு செயலுக்கும் சம்பிரதாயத்திற்கும் மனையிலும், சுற்றுப்புறத்திலும், நல்லிணக்கமும், நல்லெண்ணம், பரிவு, தயை, நன்னடத்தை முதலியன புகட்டுவதே நோக்கமாக இருக்கும். மஹாபாரதக் கதைகள் த்ரேதாயுகத்தின் முடிவில் நடை பெற்றதால், தர்மத்திற்கு புறம்பான கதைகள் நிறையவே நடைபெற்றுள்ளன. சூதாட்டமும், மனையாளை பணயமாக வைத்து சூதாடுவதும், பல கதாபாத்திரங்களின் குணங்களும், நடத்தையும், பொதுவாக மனிதன் தன்னை உயர்த்திக் கொள்ள வழிவகுக்கும்படியாய் அமையவில்லை. வஸ்த்ரபரணமும், ஜெயிப்பதை மட்டுமே குறியாகக் கொண்டதால் சில நேரங்களில் யுத்த நீதிகளும் கூட மீறப்பட்டிருக்கிறது. இவற்றை எல்லாம் படிக்கும் சாமான்யன் மனதில் குழப்பமும், நேர்மைக்கு புறம்பான கதைகளும் மனதில் பதியுமே அல்லாது தர்ம நியாயங்கள் முரண்பட்டு நிற்பதால் அவனுக்கு நன்மை அதிகம் விளையும் வாய்ப்பில்லை. இராமாயணத்தில் பக்தி, பொறுமை, தயை, ஒழுக்கம் முதலியன அதிகம் காணப்படுவதால் அதனைப் மிகப் புனித நூலாக போற்றுகிறோம்.

இதனைப் போலவே வைஷ்ணவ தர்மத்தை கடை பிடிப்பவர்கள் சிவன் கோவிலுக்கு செல்வதோ அல்லது சிவனைத் துதிப்பதோ கூடாது என்னும் கருத்தும் சம்பிரதாயங்கள் விதிமுறைப்படியே நடக்கிறது என்கின்றனர். ஒரே ரூபம் அல்லது தத்துவத்தின் பால் முழுமையான தீவிரமான பக்தி செலுத்துவது பக்தியின் மேன்மைக்கு வழி வகுக்கும். இறைவன் ஒருவன் என்ற எண்ணத்தை வலியுறுத்தவே, எந்த வடிவத்தை துதித்து போற்றுகிறோமோ அதனின் பால் பக்தியும் அன்பும் செலுத்தி அதனைத் தவிர வேறொன்றை வேறொரு தத்துவத்தை நினையாத பக்தி முக்திக்கு வழி என்பது நம்பிக்கை. இதனாலேயே ஆகமவிதிப்படி கட்டப்பட்ட சிவன் கோவில்களில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுதல் அதே போல் விஷ்ணு கோவில்களில் மீனாக்ஷி திருக்கல்யாணம் நடைபெறுவதும் இல்லை.

அதே போல் பெருமாள் கோவில்களில் சடாரி சாத்துவதும் சிறப்பு. சடாரியின் மேல் இறைவனின் திருவடிபொறிக்கப்பட்டிருக்கும். இதனால் இறைவன் நம்மை ஆள்கிறான் என்ற பவ்யமும் குடிகொள்ளும். அஹங்காரமும் மட்டுப்படும். நம்மாழ்வார் பெருமாள் திருவடிகளை அடைந்தவர் அவரே குருவாக இறைவனின் பாதத்தை நம்மிடம் சேர்பித்து நம்மை உய்விக்கிறார் என்று நம்பிக்கை. நம்மாழ்வாருக்கும் சடகோபன் என்று பெயர். சடாரிக்கும் சடகோபம் என்று வழங்குகிறார்கள். 'சடை' என்ற தேவையற்ற விஷயங்களை விலக்குவது, தீர்ப்பது என்று பொருள். பெருமாளுக்கு ஆதிசேஷனை பாதரக்ஷையாக பார்ப்பதால் இதை ஆதிசேஷம் என்றும் சொல்வார்கள்.

பொய்கையாழ்வார் பாசுரத்தில்

"சென்றால் குடையாம்
இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம்
நீள்கடலுள்-என்றும் புணையாம்
மணிவிளக்காம் பூம்பட்டாம்
புல்கும்அணையாம் திருமாற்கு அரவு"

நடந்தால் குடையாகி, இருக்கும் பொழுது சிங்காசனமாகவும், நின்றால் பாதரக்ஷையாகவும், சமுத்திரத்தில் படுத்து மணிவிளக்காக பட்டாகவெல்லாம் அரவு(ஆதிசேஷன்) அலங்கரிப்பதாக கூறுகிறார்.

திருமால் கோவிலில் இராமாஜருக்கென்று சன்நிதி உண்டு, அதை உடையவர் சன்னிதி என்கின்றனர். அங்கு வழங்கப்படும் சடாஅரி 'முதலியாண்டான்' சடாரி என்று குறிப்பாகிறது.

சடாரியைப் பற்றி குறிப்பெடுக்கும் பொழுது கீழ்கண்ட சுட்டியில் மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தன.

http://verygoodmorning.blogspot.com/2007_11_01_archive.html

சடாரி அல்லது சடகோபம்; அதைக் கொஞ்சம் கூர்ந்து பாருங்க; ஏதோ ஒரு கிரீடம் போல இருக்கும். அதன் மேலே இரு பாதங்கள்! இறைவனின் திருப்பாதங்களை நாம் தேடிப் போகா விட்டாலும் கூட, அவை நம்மைத் தேடி வருகின்றன! நம்மைக் கடைத்தேற்ற! கோவிலுக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, இந்த சடாரி கூடவே பயணிக்கும்! அறியாத சீடன், குருவை மட்டும் எப்படித் தனியாக அறிந்து விட முடியும்? அவன் குருவை நோக்கிச் செல்ல வேண்டியதில்லை! சீடனை நோக்கிக் குரு தானே வருவார், சீடன் கற்க விழையும் போது! அது போல் ஒரு குரு வருகிறார் நம்மைத் தேடி! நம்மாழ்வாரின் இயற்பெயர் மாறன் சடகோபன்! சடாரிக்குப் பெயரும் சடகோபம் தான்! வைணவ மரபில் அவர் தான் ஆதி குரு! அவர் தான் சடாரியாக வருகிறார் நம்மிடம்! அவரே இறைவனின் சடாரியாக இருந்து, அவன் பாதங்களை, நம்மை நோக்கிக் கொண்டு வந்து கொடுத்து, நம்மை உய்விக்கிறார்! - இதுவே சடாரியின் தத்துவம்! சரி, அதற்கு ஏன் கிரீடம் போல ஒரு அமைப்பு?

நம்மைச் சிறப்பித்து, நமக்கு்த் தலையில் சூட்டினா, உச்சி குளிர்ந்து விடாதா? வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும், உள்ளே கொஞ்சமாச்சும் புளகாங்கிதம் அடைவோம் அல்லவா? :-) "தலை" மேல தூக்கி வச்சிக்கிட்டு ஆடுறான், "தலை" கால் தெரியலை அப்படி-ன்னு பேச்சு வழக்கில் கூட, எண்சாண் உடம்புக்கு "தலையே" பிரதானம்! என்னா "தல", செளக்கியமா-ன்னு தான் நாமளும் கேக்கறோம்! "தலை"யாய ஒன்றுன்னு தானே இலக்கியங்களும் சொல்கின்றன! இப்படிப்பட்ட மனிதனின் தலைக்கு அணிகலனாகத் தான் அந்தக் கிரீடம்!

இப்படிப்பட்ட மனிதனின் தலைக்கு அணிகலனாகத் தான் அந்தக் கிரீடம்!ஆனா கிரீடம் தான் உண்மையான அணிகலனா? இல்லை! - அதுக்கு மேலேயும் ஒன்னு இருக்கு! உலகத்தில், தலை மேல் வைத்துக் கொண்டாட வேண்டிய ஒரே பொருள் எது? - இறைவனின் திருப்பாதங்கள் தான்! - எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்பது தான் வள்ளுவம்! அவன் மலரடிகளைச் சூட்டிக் கொள்வதை விட பெரும்பெருமை வேறெதுவும் இல்லை!

அருமை! மிக்க நன்றி:

February 02, 2011

யார் உண்மையான துறவி? (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)

கால நேரத்திற்கு அப்பாற்பட்டு ஊழல்கிறது பொய்மையும் கபடமும். இரட்டைகளான துக்கம் சுகம், புகழ்ச்சி, இகழ்வு என்பதைப் போல், சத்தியத்தின் இரட்டையான பொய்மையும் தன் பணியைத் தொடர்ந்தவண்ணமிருக்கிறது. பிறரை ஏமாற்றி தன் ஜீவனத்தை நடத்தும் இழி நிலைக்கு பாபச் சுமை அதிகம். அதிலும் புனிதனைப் போல் வேடமிட்டு ஏய்ப்பது மிகப் பெரிய பாபம். ஜடை முடி தரித்தலும், காவியுடையும் பெரும் நம்பிக்கைக்கும் மதிப்பிற்கும் பாத்திரமானவை. அவற்றை தவறாக பயன்படுத்துபவன் மூடன். அந்த பாபத்தின் வீர்யம் அறியாதவன். இவர்களைப் பற்றி ஆதிஷங்கரர் பஜகோவிந்தத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.


" ஜடிலோ முண்டி லுஞ்சித கெஷ:
காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:
பஷ்யன்னபி ச ந பஷ்யதி மூடோ
ஹூதர நிமிதம் பஹுக்ருத வேஷ: "
-பஜகோவிந்தம்

சடை முடி வளர்ப்பதும், மொட்டையடிப்பதும், காவியுடை அணிவதுமாய் பல வித வேடம் அணிந்து மூடர்கள் வயிற்றை வளர்க்கிறார்கள். அவர்கள் கண் இருந்தும் குருடர்கள்.

வேடமணிந்த சிலரோ சித்து வேலைகள் செய்தும் பெருவாரியான மக்களின் கவனத்தை தம் பக்கம் ஈர்கின்றனர். சாமான்யர்களால் எப்படி சித்து வேலை செய்ய முடியும்? அப்படியெனில் அவர்கள் சித்தர்களின் பாதையில் பயணிப்பவர்களாகத் தான் இருக்க வேண்டும். "சித்தி" அடைந்தவுடன் மோக்ஷமோ, முக்தியோ கிடைப்பதில்லை. அவர்கள் முற்றும் துறந்த சன்யாசி, ஞானி ஆகிவிடுவது இல்லை. உண்மையான சித்தர்களும் யோகிகளும் சித்தி அடைவதை தன் இலக்காக கொள்ளுவதில்லை. அது ஒரு நிலை மட்டுமே. அதைத் தாண்டி தம் பயணத்தை தொடர்ந்த வண்ணமிருப்பர். அவர்கள் ஒழுக்கம் தவம் மூலம் பல ஷக்திகளைப் பெறுகின்றனர்.

சித்தி பெற்றதும் கூட அஹம் மட்டுப்படாமல் அந்த ஷக்திகளைக் கொண்டு ஏய்க்கும் வேலையில் ஈடுபட்டால் அவர்கள் தம் பாதையினின்று வழுவி விழுந்து விடுகின்றனர். அதைத் தாண்டி செல்பவனே உண்மையான யோகி. பெயர் பெற்ற பதிணென் சித்தர்களைத் தவிரவும் நிறைய சித்தர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். அஷ்ட மஹா சித்திகள் எனும் எட்டு சித்திகள் கை வரப் பெறுபவன் சித்த நிலையில் இருப்பவனாக கருதப்படுகிறான். அணிமா, மஹிமா, லஹிமா, கரிமா, ப்ரபத்தி, ப்ரகாமீயம், ஈசாத்வம், வசித்வம் என்பன அவை.

அணிமா: அணுவை விட சிறிய உருவம் எடுப்பது / ஆக்குவது
மஹிமா: மலையைக் காட்டிலும் பெரிய உருவம் கொள்வது / ஆக்குவது
லஹிமா: காற்றை விட மென்மை ஆகுவது / ஆக்குவது
கரிமா: மெல்லிய ஆனால் சுமக்க முடியாத கனமான உருவம் கொள்வது /ஆக்குவது
ப்ராப்தி: எண்ணிய பொருள் கையில் வரவழைப்பது
ப்ராகாமீயம்: எந்த வடிவமும் எடுப்பது
ஈசாத்வம்: தேவர்களும் வணங்கக் கூடிய தன்மையை பெறுவது.
வசித்வம்: கிரஹங்கள் நக்ஷத்திரங்கள் முதலியவற்றை அடக்கும் ஷக்தி கைவரப் பெறுவது.

இவற்றையெல்லாம் அடைந்த ஒருவன் அகங்காரத்தை கட்டுப்படுத்தாமல், ஆசைகள் கொண்டு திரிந்தால் அவன் முயற்சி அனைத்தும் வீண். ஆசைகளை அடக்குவதே யோகத்தின் உயரிய நிலை. அஹத்தை மட்டுப்படுத்துதலே ஞானத்தின் முதல் கட்ட நிலை.
"அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தசன விஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபின முஞ்சதி ஆஷா பிண்டம்"
-பஜகோவிந்தம்

உடல் தளர்ந்து விட்டது, பல் விழுந்து, முடி நரைத்து, கையில் கோலின் துணையின்றி இருக்கும் ஒருவனுக்கும் ஆசை விட்டபாடில்லை.

ஆண் / பெண், முதியவன் / இளையவன், சில சித்தர்கள் / சாமான்யர்கள் என பலரையும் ஆட்டுவிக்கிறது ஆசை!
ஆசைகளால் கட்டுப்படுத்தப் படாதவன் துறவி.