November 21, 2010

சின்ன பெண்ணின் புத்திமதி (ஆசிரியர்கள் பகுதி -4)


எத்தனையோ முறை தலை கசக்கி யோசித்தாகிவிட்டது. சில நேரம் நான் மூன்றாம் வகுப்பு படிக்காமலேயே நான்காம் வகுப்பு போயிக்கிறேனோ என்று தோன்றும் (அப்பொழுதெல்லாம் டபுள் ப்ரமோஷன் என்கிற கான்செப்ட் உண்டு). மூன்றாம் வகுப்பின் முகப்பு, வகுப்பு, ஆசிரியைகள், நான் அமர்ந்த இடம், அதை ஒட்டிய எதுவுமே செலெக்டிவ் அம்னீஷியா போல் மறந்தே விட்டது.


ஒரு பெரிய ஹாலில் தடுப்பு உயர பலகைகள் போட்டு நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புக்கள் இருக்கும். ஷாந்தி மிஸ் வகுப்பே எடுத்ததில்லை. பின் எதற்கு வகுப்பருகே சுற்றிக்கொண்டிருப்பார்கள் என்ற புதிருக்கு நெடு நாள் கழித்துதான் விடை தெரிந்தது. ·ப்ராக் ரேஸ், லெமன் அண்ட் ஸ்பூன், என பல போட்டிகள் இருந்தாலும் எதிலும் நான் முதலாவதாக வந்ததாய் சரித்திரமே இல்லை. எனக்கும் விளையாட்டிற்கும் காத தூரம். ஷாந்தி மிஸ் ப்ளே க்ரவுண்டில் விசில் ஊதுவதும், பின் போட்டி ஆரம்பிப்பதுமாய் ஸ்போர்ட்ஸ் டேக்கு பயிற்சியில் தீவிரமாய் ஈடுபடுவார். 'ரன்னிங் ரேஸ்' மட்டும் எனக்குப் பிடிக்கும். 'எல்லாரும் எனக்குப் பின்னால் தான் இருக்க வேண்டும்' என்று கண்மூடித்தனமான வெறியுடன் ஓடுவேன். பல நேரம் நான் முதல் மூன்று இடங்களைப் பிடித்ததில்லை. என்றாவது ஒரு நாள் இரண்டாவதாகவோ மூன்றாவதாகவோ வந்தால் கலர் கொடி பிடித்து ரேங்க் பலகைகளில் நிற்க வைப்பது பெருமையாய் இருக்கும். ஒரே ஒரு முறை முதலாய் வந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இல்லை மூன்றாவதாகவும் இருக்கலாம். கலர் கொடி பிடித்து நின்றது பெருமையாய் இருந்தது. இதுவெல்லாம் பயிற்சியின் பொழுது தான். ஸ்போர்ட்ஸ் டேயின் பொழுது, நான் வேகமாக ஓடுவதாய் எனக்குத் தோன்றினாலும், எனக்கு முன் நான்கு பேர் ஓடினார்கள், என்று அவர்கள் வெற்றி பெறும் பொழுது தான் தெரியவரும்.

'போட்டேட்டோ ரேஸ்' என ஒரு விளையாட்டு உண்டு. 'பொட்டேட்டோ கேதரிங்' என்றும் கூறுவர். அந்த ரேஸ் எனக்குப் பிடிக்காத ஒன்று. எத்தனை வேகமாய் ஓடினாலும், என்னிடம் இருக்கும் உருளைக்கிழங்கு அப்படியே இருக்கும். பத்து பேர் ஓடினால் நான்கு அல்லது ஐந்தாவதாய்த் தான் வந்திருக்கிறேன். என் கிழங்கை எடுக்கையில் நைசாக, அடுத்தவர்கள் எத்தனை எடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்பதிலேயே நேரத்தை கோட்டை விட்டு விடுவேன். ஒரு வேளை ஷாந்தி மிஸ் சதி செய்து எனக்கு இரண்டு கிழங்கு அதிகம் வைத்திருப்பார்கள் என நானே வழியின்றி என்னைத் தேற்றிக் கொள்வேன்.

ஷாந்தி மிஸ் மேல் தாங்க முடியாத ஒரு பயபக்தி இருந்தது. ஸ்போர்ட்ஸ் டேக்கு ஓடி ஓடி உழைக்கும் ஒரே மிஸ் என்பதால் இருக்கலாம். பள்ளியில் ஐந்தே வகுப்புகள் இருந்ததால், இன்னும் இரண்டு வருடத்தில் படிப்பு முடிந்து விடும் அதன் பின் நாமும் ஷாந்தி மிஸ் போல் ஆகிவிடலாம் என்று நினைப்பேன். ஷாந்தி மிஸ் அட்டைக்கரி கலர். சிரிப்பும் முகமும் படு வசீகரம். அடிக்கடி நாலாம் வகுப்பு மீனாட்சி மிஸ்ஸிடமோ இல்லை வேறு யாராவது டீச்சரிடம் அரட்டை அடித்து கொண்டிருப்பார்கள். ஷாந்தி மிஸ்ஸுக்கு கல்யாணம் என்று அரசல் புரசலாய் பேச்சும் இருந்தது. ஐந்தாம் வகுப்பு முடித்ததும் நானும் ஷாந்தி மிஸ்ஸைப் போல் அழகாகி விடுவேன், அப்புறம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கற்பனைக் கோட்டை கட்டியிருந்தேன். ஷாந்தி மிஸ் -நான் முதன் முதலில் ஹீரோயின் வர்ஷிப் செய்த பெண்.

ரேகா என்று ஒரு வகுப்புத் தோழி இருந்தாள். ரொம்ப நெருங்கிய தோழியெல்லாம் கிடையாது. சுமாரான நட்பு. நன்றாகப் படிப்பாள். அவளும் நானும் சில நேரம் ஒன்றாக மதிய உணவு உண்போம். இன்னாருடன் இன்னார் தான் மதிய உணவு உண்ணவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. யாருடன் யார் வேண்டுமானாலும் செட் சேர்ந்து கொள்வோம். ரேகாவும் நானும் சில நாள் ஒன்றாய் உணவு சாப்பிடுவோம். 'அம்மா நான் வளர்கிறேனே, எனவே பள்ளிக்கு உணவு கொண்டு வந்து மானத்தை வாங்காதே ' என்று கட்டளை இட்டதால், அம்மா பள்ளி வருவது நின்றுவிட்டது.


ரேகா எனக்கு நிறைய அறிவுரைகள் வழங்குவாள். சொன்னால் நம்ப மாட்டீர்கள். எனக்கு அறிவுரை வழங்கவே உலகில் பலர் உருவெடுத்துப் பிறந்திருக்கிறார்கள். சின்ன வயதிலிருந்து, இன்றுவரை நண்பர்கள், உறவினர்கள், பால்காரி, தயிர்காரி என இன்னாரென்று இல்லாமல் எல்லாருமே அவரவர் பங்குக்கு அறிவுரை வழங்கிச் செல்வர். திரும்ப எதிர்த்துப் பேசாமல், முப்பத்திரண்டு பல்லையும் காட்டி சிரித்திருப்பதாலேயே எல்லோருக்குமே எனக்கு அறிவுரை வழங்குவது பிடிக்கும்.

'நீ கணக்கு நன்றாய் போட வேண்டும்' (கணக்கு, பிணக்கு, ஆமணக்கு... கட்சி நான்) என்பதில் துவங்கி, 'கௌஷிக், ஷ்யாம் எல்லாம் கெட்ட பசங்க.. அவாளோட சேராத, எதுக்கு பாய்ஸோடலாம் பேசற?' வரை எல்லாம் எனக்கு சொல்லித் தெளிய வைப்பாள்!

இப்படி இருக்கும் ஒரு காலகட்டத்தில் தான் பள்ளி விழா (annual day) வந்தது. அப்பொழுது எல்லார் வாயிலும் முணுமுணுத்தபடி இருந்த பாட்டு

"கடலின கரெ போனோரே
காணா பொன்னென போனோரே
போய் வரும்போ எந்த கொண்டுவரு
கை நிறைய....."

ஷாந்தி மிஸ் இந்தப் பாட்டுக்கு டான்ஸ் செய்ய என்னைத் தான் முதல் சாய்ஸாகத் தேர்ந்தெடுத்தார். 'இவளுக்கு இந்த ட்ரெஸ் போட்டு ஆட வெச்சா ஜோரா இருக்கும்' என்று ஐஸ் வைத்து, முதலில் க்ரூப் டான்ஸில் நடு ஆளாய் ஆட, எனக்கு ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்தார். ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள்... ம்ஹூம்! உடம்போ கையோ வளையவே இல்லை. முக பாவம் மட்டும் ரொம்ப நன்றாய் செய்தேன். இருந்தும் சளைக்காமல் ஷாந்தி மிஸ் டான்ஸிலிருந்து நீக்காமல், என்னை கும்பலோடு சைட் டான்ஸ் பண்ணவதற்கு அடுத்து தயார் செய்தார். இன்னும் மூன்று நாள் வேஸ்டானது. எனக்கு நடனம் வரவில்லை என்பது என்னை விட ஷாந்தி மிஸ்ஸுக்கு வருத்தமாய் இருந்தது. மற்ற மிஸ்ஸையெல்லாம் கூப்பிட்டு என்னை ஆடச் சொல்லி காண்பித்தார். எல்லோரும் பரிதாபமாய்ப் பார்த்தனர். ஆங்கில நாவல்களில் "if the earth could open up and swallow me NOW..." என்று வரும். அது போல் இருந்தது என் மன நிலையும்.

'ப்ரபாக்கு டான்ஸ் வராது போல ஷாந்தி. அவளை டான்ஸிலிருந்து எடுத்துடு' என்று ஏகோபித்த வோட் பெற்று, கடைசியில் துரத்தப் பட்டேன். ஷாந்தி மிஸ்ஸுக்கு எப்படியானும் ஒரு டான்ஸில் நான் இருந்தே ஆகவேண்டும் என்ற தீரா ஆசையில், முகபாவம் (பாவம்!!) நன்றாக இருப்பதாய் மீண்டும் வோட்டெடுத்து, அஷ்டலக்ஷ்மி டான்ஸிக்கு, குழந்தையை மடியில் வைத்து உட்கார்ந்திருக்கும் 'சந்தான லக்ஷ்மி' வேடம் தந்தார்கள். ஏதோ வந்ததே லாபம் என்று கடைசியில் புன்னகைத்தபடி சந்தான லக்ஷ்மியாக டான்ஸ் ஏதும் செய்யாமல் பொம்மை போல் வலம் வந்தேன். கடைசியில் மலர் மழை என் மேல் பொழியும். இவ்வளவு அவமானப்பட்டதற்கு இதாவது கிடைத்ததே என்ற சந்தோஷம். மலர் சொரிந்தால் எவ்வளவு இன்பம் என்பது நிஜமாகவே அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.

பள்ளி தினத்தன்று சந்தோஷமாகவே சந்தான லக்ஷ்மியாய் இருந்தேன். என் மடியில் உமா மிஸ்ஸின் மூன்று வயதுக் குழந்தை. அலுங்காமல் அவனும், சிரித்தபடி நானும். நன்றாய் இருந்ததாய் பாராட்டும் கிடைத்தது. உமா மிஸ் கூட தன் பையனை மடியில் அமர்த்தியதற்கு சினேகப் புன்னகை பூத்தார்கள்.

கடலினக்கரே விட இது பெட்டர் என்ற 'சீச்சீ இந்த பழம்' தத்துவம் கடை பிடித்தேன் என்றாலும் உள்ளூர ரொம்ப வருத்தமாய் இருந்தது நிஜம். எனக்கு ஏன் நடனம் வரவில்லை என்று நொந்து போயிருந்தேன். சொல் பேச்சு கேட்டு வளையும் படி உடம்பு வைக்காமல் நடனம் ஆடும் ஆசையை மட்டும் வைத்துக்கொண்டு தவியாய் தவித்தேன்.

பிறிதொரு நாள் மீண்டும் நானும் ரேகாவும். "இதுக்கெல்லாம் ஏண்டி வருத்தபடற.. இப்போ நானோ ரவியோ இதமாதிரி மேடைல அழகா பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணி நிக்க முடியுமா?" என்றாள்.

ரவியும் ரேகாவும் ஒரே மாதிரியே இல்லை. ரவி நன்றாகப் படிக்க மாட்டான். அதிகம் யாருடனும் பேச மாட்டான். ரேகா நன்றாகப் படிப்பாள். எல்லாருடனும் பேசுவாள். குறைகளை வெளிக்காட்டாமல் தைரியமாக இருப்பாள்.

இருவருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை தான். இருவரும் போலியோவினால் பாதிக்கப் பட்டவர்கள்.

சந்தானலஷ்மி ஏதோ ஒரு வகையில் அன்று பாடம் பெற்றாள்!

(இன்னும் வரும்)

November 15, 2010

சிறந்த பதிவர் விருது - மிக்க நன்றி.

என் படைப்புக்காக 'சிறந்த பதிவர்' வழங்கிய திரு. வி. ராதாக்ருஷ்ணனுக்கு என் பணிவான நன்றி. இதுவே வலை உலகில் எனக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம்.

என் இறைவன் க்ருஷ்ணனுக்கே இந்த மகிழ்ச்சியை சமர்ப்பிக்கிறேன்.

வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

November 09, 2010

திருவிளக்கு வழிபாடு - ( சோ-வின் எங்கே பிராமணன் பகுதியிலிருந்து)


திருவிளக்கு மிகப்புனிதமாகக் கருதப்படுகிறது. நல்ல காரியங்கள் எது நடந்தாலும் விளக்கு ஏற்றுவதை நல்ல சகுனமாக பாவிக்கிறோம். விளக்கை அகமாக பாவித்து அங்கு ஞான ஒளி ஏற்படுவதை உணர்த்துவதாகவும் கொள்ளலாம். விளக்கு சுற்றுபுறத்தை சுத்திகரிக்கவும் செய்கிறது. அகத்தில் இருள் அகற்றி, ஞானத்தை, விவேகத்தை வழங்கும் விளக்கை வழிபட்டு ஸ்தோத்திரம் பல உண்டு. விளக்கேற்ற கற்பூரத்தை திருத்தி திரியாய் செய்து உபயோகிக்கலாம். வெறும் துணியை திரியாக்கியும், உபயோகிக்கலாம் அல்லது துணியில் சந்தனம் தடவி திரியாய் உபயோகப்படுத்தலாம். பஞ்சுத் திரியில் ஏற்றிய விளக்கும் விசேஷம். விளக்கை எந்த நேய் கொண்டு ஏற்றினால் சிறப்பு என்று மறை நூல்கள் குறிப்பிடுகின்றன.


காரம்பசுவின் நெய் கொண்டு ஏற்றும் விளக்கே மிகச் சிறப்புடையகும். உடல் கருப்பாகவும் மடி வெளுப்பாகவும் இருக்கும் பசுவை காரம்பசு என்று கண்டுணரலாம். அதற்கடுத்தபடியாக பசுநெய் கொண்டு விளக்கேற்றலாம். ஆட்டு நெய் கொண்டு விளக்கேற்றுவதும் சிறப்பு. இறுதியாக நல்லெண்ணை விளக்கு சிறப்பிக்கப்படுகிறது. வெப்பம் எண்ணையோ ஆமணக்கு எண்ணையோ எருமை நெய்யிலோ ஏற்றுவது உசிதம் அல்ல. ஒவ்வொரு தெய்வத்திற்கும் வெவ்வேறு நெய்/எண்ணை உசிதம்.

தினசரி வீட்டு வழிபாடுகள் முதல் கோவில் வழிபாடு வரை, விளக்கு இல்லாமல் துவங்குவதில்லை, விளக்கு இல்லாமல் முற்றுபெறுவதும் இல்லை. மின் விளக்கெல்லாம் வந்த பிற்பாடும் பசு நெய், எண்ணை விளக்குகள் ஏற்றினால் தான் திருவிழாக்களும் மங்கல நிகழ்ச்சிகளும் நிறைவு பெறுகிறது. தீபாவளி, கார்த்திகை தீபம் என்று தீபத்திற்கு சிறப்பாய் திருநாளின் பேரில் போற்றிக் கொண்டாடுகிறோம். தீபம் மேல் நோக்கியே இருப்பதால், நம் வாழ்வின் நோக்கமும் உயர்வும் லக்ஷியமும் கூட மேல் நோக்கி உயர்ந்த எண்ணங்களால் இருக்க வேண்டும் என்று பாடம் புகட்டுகிறது திருவிளக்கு.

திருமூலரின் திருமந்திரம், ஐம்புலன்களை வென்றோர் அப்புலன்களையே விளக்காக்கி வழிபடுவதை உணர்த்துகிறது. நம் உடம்பே ஆலயம் என்றால், அங்கு புலனடக்கம் செய்த ஞானி அப்புலன்களையே விளக்காக்கி இறைவனை வழிபடுகிறான். புலன்களை இவ்வாறு ஞானத்தால் எரித்து விடுகிறான் (not in literal sense) என்றும் கொள்ளலாம்.

உள்ளம் பெருங்கோவில்
ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
ஐம்புலன்களும் காலா மணிவிளக்கு

விளக்கு பூஜைகளிலும் தினம் வீடுகளிலும் படிக்கப்படும் திருவிளக்கு அகவல் /ஸ்லோகம் படிக்க : சுட்டுக

November 01, 2010

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2ல் இருந்து)

போதுமென்ற மனமே பொன் மனம். போதும் என்ற எண்ணம் வராத வரை, நாம் தொடர்ந்து ஏதோ ஒன்றிற்காக போராடிக் கொண்டே இருக்கின்றோம். எத்தனை கிடைத்தாலும் திருப்தி பெறுவதில்லை. இன்னும் இன்னும்...இன்னும் இன்னும்... பெயரா? புகழா? பணமா? அந்தஸ்தா? இன்னும் சிந்தையை குளிர்விக்கும் அத்தனை வஸ்துவும் போதும் என்று நாம் நினைக்காத வரை நீண்டு கொண்டே போகிறது. எங்கே முற்று புள்ளி வைக்க வேண்டும்? அடி முடி காணாது நீளும் ஆசைகளுக்கு போதும் என்ற மனம் எப்பொழுதுமே வராது, நாமாக அதை அடக்காத வரை. அளவான இருவேளை சோறு, உடுக்க இரு துணி. படுக்க இடம். இவை போதும் சாதகனுக்கு.

ஆனால் பிள்ளை குட்டி ஆகிறது. பாதுகாப்பு, வீடு கட்ட வேண்டும். படிக்க வைக்க வேண்டும். பணம் வேண்டும். பணம் என்று வந்தவுடன் போதும் என்ற எண்ணம் என்றுமே வருவதில்லை. அவனை விட நான் பணபலம் பெற வேண்டும். அவனுக்கு இரண்டு என்றால் எனக்கு நான்கு... நீண்டு கொண்டே போகிறது. பணத்தோடு புகழ் / படை பலமும் வேண்டும். ஆள் அந்தஸ்து அவனுக்கு கௌரவத்தைக் கொடுக்கிறது. எப்படிப்பட்ட அந்தஸ்து என்பது ஆளவிட முடியாதது. சாதாரணமானவனுக்கு ஜில்லா பணக்காரன் ஆகவேண்டும் என்பது லக்ஷியம். அப்புறம் பரப்பளவு அதிகரித்துக்கொண்டே போகிறது. கடைசியில் ஹிட்லரைப் போல் உலகை ஆட்டுவிக்க எண்ணுகிறான். தரணையை ஆண்டவன் அண்ட சராசரத்தையும் ஆள எண்ணுகிறான்.

* ராஜாக்கள் ராஜ்ஜியத்தை பெருக்கிக் கொண்டதெல்லாம் "போதும்" என்ற மனம் இல்லாததால் தான்.

* சாதரணர்கள் ஆகிய நாம் இன்னும் இரண்டு வீடு கட்டிக்கொண்டு பிள்ளைகளுக்காக சேர்த்து, அவர்கள் சௌகரியம்.... பேரன் பேத்திகளுக்காக மீண்டும் பணம்....இதுவும் "போதும்" என்ற மனம் இல்லாததால் தான்.

* ஒவ்வொரு இலக்கும் லக்ஷியமும் கூட நம்மை உயர்த்திக்கொள்ள நாம் பிரயத்தனப்படுவது. நம் புகழுக்காக, பேருக்காக, உயர்வுக்காக. அந்தஸ்துக்காக.

* இதையும் தாண்டி ஒருவன் உலக நன்மைக்காக வாழ்கிறான் என்றால் (அப்படி வாழ்பவர்கள் மிக மிக குறைந்து வருகிறது) அங்கும் அவர்களின் மனதில் மூலையில் ஒரு இடம் "அங்கீகாரம்" எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கிறது.
"போதும்" என்பது "எவ்வளவு பெரிய நிலை எய்தினாலும்" சாத்தியப்படுவதில்லை. போதும் என்ற மனம் உண்மையான ஞானிக்கு சித்திக்கிறது. எனக்கு இது போதும். இவ்வளவு இருக்கும் போது கிடைக்கும் திருப்தி தான் மிக அதிக அளவில் கிட்டிய போதும் கிடைக்கிறது. ஆக மகிழ்ச்சி மனத்தில் இருக்கிறது. "போதும்" என்ற நிறைகின்ற மனத்தில். இப்படிப்பட்டவனின் மனம் கட்டுக்குள் நிற்கிறது. அவன் உதிர்க்கும் சொற்களும் கூட கட்டுக்குள் நிற்கிறது.

ஒரு கலந்துரையாடலில் இருவகையானோர் பேசாது மௌனம் காப்பார். ஒன்று, தனக்கு எதுவுமே தெரியாத புரியாத மூடன், இன்னொன்று, எல்லாம் அறிந்ததால், அங்கு பேச எதுவுமே இல்லை என்ற நிலையில் ஞானி. இருவரும் பார்வைக்கு ஒன்று. செயலில் ஒன்று. ஆனால் அறிவில் இருவேறு துருவங்கள்.

போதும் என்ற நிறைந்த மனத்தின் தன்மையை எடுத்திருக்கும் பட்டினத்தார் பாடல்:


உடை கோவணம் உண்டு
உறங்கப் புறந்திண்ணையுண்டு
உணவிங்கு அடைகாய் இலையுண்டு
அருந்த தண்ணீர் உண்டு
அருந்துணைக்கே விடையேறும் ஈசர் திருநாமம் உண்டு
இந்த மேதினியில்,
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே?

உணவுண்டு. உடையுண்டு. உறங்க திண்ணையுண்டு. நீர் உண்டு. வாயால் உரைப்பதற்கு தித்திக்கும் இறைவன் திருநாமம் உண்டு. வேறு என்ன வேண்டும்!! என்கிறார்.

அப்படியே ஒருவன் போதுமென்ற மனம் கொண்ட ஞானியாய் வாழ்ந்தாலும் அவனை பாடாய் படுத்த எத்தனை பேர்! ஆபுத்திரனுக்கு வராத சோதனையா? இறைவனை அடைய முற்படுவோர், முதலில் இறைவனை "அன்னமயமாய்" பார்கிறார். அன்னத்திலிருந்தே யக்ஞம். அதனின்று மழை. மழை கொணருவது பயிர். பயிரால் உயிர். ஆக உயிர்க்கு ஜீவ நாடி அன்னம். முதலில் பிரம்மத்தை ஜீவ நாடியான அன்னமாய் பார்க்கிறான். உணர்கிறான்.

அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்,
அஹம் அன்னாதோஹம் அஹம் அன்னாதோஹம் அஹமன்னாத:

நானே அன்னம். அன்னத்தை நுகர்பவன் நானே. என்கிறது ஸ்லோகம்.

அன்னத்தை த்வேஷிக்காதே என்று உபதேசித்தலில் துவங்கி, அன்னம் வழங்கும் இறைவனை லக்ஷ்மி ரூபமாய் காண்கிறோம். அன்னத்தை தனியே உண்பது சிறப்பன்று. பிறருக்கும் வழங்கி பின் உண்ண வேண்டும். பக்தர்கள் பலர் முன்னாளில் அடியார் ஒருவருக்கேனும் அன்னம் வழங்கிவிட்டே உணவு உண்பதை வழக்கமாகக் கொணடிருந்தனர். ஆபுத்திரனும் அப்படித்தான். யாரிந்த ஆபுத்திரன் ? பெற்றோர் நிர்கதியாக்கிவிட ஆவினால் (பசுவினால்) காக்கபட்டவர் வளர்க்கபட்டவர். அதனால் ஆபுத்திரன் என்று பெயர் வந்தது. அவர் பிக்ஷை எடுத்து ஜீவனம் நடத்துகிறார். கிடைத்த பிக்ஷையில் பசியையும் பொருட்படுத்தாது ஊனமுற்றவர்களுக்கும் நோயுற்றவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் வழங்குகிறார். இதனால் மனம் மகிழ்ந்து சரஸ்வதி தேவி அவருக்கு அள்ளக் குறையாத அக்ஷய பாத்திரத்தை வழங்குகிறாள். இது கிடைத்ததும் அவர் மிகவும் மகிழ்ந்து வாரி வாரி வழங்கிறார். தேவேந்திரன் இவரின் மனப்பக்குவத்தைக் கண்டு வரம் கொடுக்க எண்ணுகிறான்.

"தன்னிடம் இருப்பதே போதும், வேறென்ன வரம் வேண்டும்" என போதுமென்ற மனதோடு வரத்தையும் மறுத்துவிடுகிறார். இந்திரனுக்கு அஹங்காரம் குட்டுப்படுகிறது. உடனே அவர் கோபம் கொண்டு அந்நாடெங்கும் சுபீஷம் உண்டாக்குகிறார். ஆபுத்திரனுக்கு கொடுப்பதற்கு இருந்தாலும், எங்கும் சுபீஷம் நிலவுவதால் வாங்குவதற்கு யாருமே இல்லாமல் ஆகிவிடுகின்றது. இன்னொருவருக்கு கொடுக்க முடியாததால் அவரும் அன்னம் உண்ணாமலேயே இருக்கிறார். வேறு ஒரு நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்று கப்பலில் வந்த பிரயாணிகள் கூற அவர்களுக்கு உணவளிக்க பிரயாணிகளுடன் அந்நாடு நொக்கி புறப்படுகிறார். நடுவே ஒரு தீவில் களைப்பாற மீண்டும் பிரயாணிகள் கப்பலேறிய போது ஆபுத்திரனை மறந்துவிட்டு கப்பல் புறப்படுகிறது. தன்னந்தனி தீவில் மக்கள் யாருமின்றி, அன்னம் கொடுக்க ஒருவரும் இல்லாததால், அக்ஷய பாத்திரத்தை ஜலத்தில் விட்டு விட்டு, தானும் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார். அமுதசுரபி என்று பெயர்பெற்ற இப்பாத்திரமே மணிமேகலையில் கையில் கிடைத்ததாக கூறப்படுகிறது. போதும் என்ற உயர்ந்த குணம் உடையவனுக்கும் கூட எப்பேர்பட்ட சோதனை!

October 25, 2010

சாபம்-பாபம்-கர்மா - (சோவின் எங்கே பிராமணன் பகுதி 2ல் இருந்து)

"போன ஜன்மத்து பாவம் / கர்மா" போன்ற சொற்றொடர்களை பயன்படுத்துபவர்கள் அறிவிலிகள். இவற்றில் நம்பிக்கைகள் உடையவர்ளாக நாம் இருக்கும் பட்சத்தில் நம்மை பத்தாம்பசலிகளாக பாவிக்கும் நிலைமையே பெரும்பாலும் இன்றைய விஞ்ஞான சமுதாயத்தின் மேதாவிலாசத்தில் மிளிர்கிறது. இவை ஒரு புறமிருக்க, அவரவர் கர்மவினையின் பேரிலே கூட பலருக்கும் நம்பிக்கை இருப்பதில்லை, இதில் முன்னோர்கள் செய்த பாவம் நம்மை தாக்கும் என்பதெல்லாம் ஆதாரமற்றவை என்று புறம் தள்ளிவிடுகிறார்கள்.

கர்மவினை என்பதன் பேரில் நம்பிக்கை வைத்தாலும் கூட அவனவன் செய்த கர்மவினை (நம்பினோருக்கு) அவனை மட்டுமல்லவா பாதிக்க வல்லது? இதில் முன்னோருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?

கர்ம பலாபலன்களில் ஓரளவு நம்பிக்கை கொண்ட பலராலும் நம்பப்படும் விஷயம் ஒன்றுள்ளது. ஒருவன் வீட்டு உப்பைத் தின்றால் (உணவு உண்டால்) அவனுக்கு நாம் கடன் பட்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை. கர்மா என்பதே கொடுக்கல்-வாங்கல் கணக்கு தான். முன்னோர்கள் விஷயத்தை எடுத்துக்கொண்டால், அவர்களின் உதிரம், உடல், மரபணுக்கள் அத்தனையும் அவர்கள் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் தம் உதிரத்தில், பங்கு கொடுத்திருக்கிறார்கள். (அல்லது நாம், நம் கர்மாவினால் அதில் பங்கு எடுத்துக்கொண்டோம்) அவர்கள் வளர்த்து விட்ட அன்னை தந்தை நமக்கு சோறூட்டுகிறார்கள். அவர்கள் அசையும் அசையா சொத்துக்களில் பங்கு கேட்கிறோம். அவற்றை ஆண்டு அனுபவிக்கிறோம். அதே போல் அவர்கள் சம்பாதித்த வினைகளிலும் நமக்கு பங்கு உண்டு.

முன்னோர்களின் சாபம் நம்மை பாதிக்க வல்லது. முன்னோர்களுக்கு கொடுக்கபட்ட சாபமும் அவர்களின் காலத்தில் பலிதம் பெறவில்லையென்றால் நம்மை வந்தடையும் சாத்தியக் கூறுகள் உண்டு. சாபங்களோ வாழ்த்துக்களோ பலித்து விடுவதும் கூட "எவர் வாயினிலிருந்து அது புறப்படுகிறது" என்பதை பொருத்து அமையும். சாதாரண மனிதன் சொல்லும் பயனற்ற சொற்களுக்கு வலிமை அதிகம் இராது. சற்றே மேன்மையுடைவனோ, அல்லது சுத்தமான ஆன்மாவின் வாயிலிருந்து வரும் சொற்களுக்கு இன்னும் வலிமை அதிகம். இறைவனுக்கு ஒப்பானவர்களோ ரிஷிகளோ, தபஸ்விகளோ சொல்லும் சொற்களுக்கு அதிர்வுகளும் அடர்த்தியும் அதிகம்.

தபஸ்விகளோ, பரிசுத்தமானவர்களோ சொற்களை உதிர்த்துத் தான் சாபம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேன்மையானவர்கள் பலரும் மன்னிக்கும் மறக்கும் தன்மை படைத்தவர்கள். எனினும், அவர்கள் சற்றே மனவேதனை அடைந்தாலும் அவர்களின் எண்ண அலைகளுக்கு அதற்கு அதீத ஷக்தி உண்டு.

ரிஷிகளும் தபஸ்விகளும் சதா சாபம் கொடுப்பதே வேலையாக்கிக் கொண்டு கொந்தளிக்கும் மனதுடன் இருப்பவர்கள் அல்ல. பல நேரங்களிலும் பலரும் அமைதியும் ஷாந்தமும், மன்னிக்கும் கருணை உள்ளமும் கொண்டவர்களாகத் திகழ்ந்தனர். சமீகரின் மன இயல்பு இதற்கு சிறந்த சான்று. பரிஷீத் மஹராஜாவின் ஆட்சி காலத்திலே கலியுகம் துவங்கியதாக பேசப்படுகிறது. பரிஷித், பன்றி வேட்டையாடி அதனை துரத்தியபடியே காட்டினுள் சமீகர் என்ற மஹரிஷியின் குடிலுக்குள் செல்கிறார். சமீகர் சிறந்த தபஸ்வி. அன்றைய தினம் அவர் மௌன விரதம் அனுஷ்த்திருந்தார். பேச்சு கொடுக்கும் தன்னிடம் பதிலுரைக்காதிருந்த மஹரிஷியின் மௌனத்தை அஹங்காரமாக தவறாக எண்ணி வெம்புகிறார் ராஜா. பல முறை பேசியும் முனிவரோ அமைதியாய் இருக்கவே, கோபம் மேலிட்ட பரிஷித், செத்த பாம்பு ஒன்றை சமீகரின் கழுத்தில் மாலையாய் தொங்க விட்டு விட்டு தன் கோபத்தை வெளிப்படுத்துகிறார். இதனை அரிந்த சமீகரின் மகன் கடும் கோபம் கொண்டு பாம்பினால் தீண்டபட்டு மன்னர் இறக்க வேண்டும் என்று சாபம் இட்டுவிடுகிறான்.

ரிஷியின் மௌனத்தின் காரணத்தை தெரிந்து கொண்ட ராஜா, மிகவும் மனம் வருந்தி, தனக்கு இச்சாபம் சரியானதே என்று பலவாறு மனம் வெம்புகிறான். நல்ல குணம் நிரம்பப் பெற்ற அப்பேர்பட்ட மஹராஜாவும் கடும் கோபம் கொண்ட க்ஷண நேரத்தில் தவறிழைத்து விடுகிறான். முனிவரோ இவருக்கும் ஒருபடி மேல் அல்லவா! தபஸ்வி ஆயிற்றே! சமீகரோ தம் மகனை கூப்பிட்டு பலவாறு கடிந்து கொள்கிறார். ராஜா என்பவனின் இறப்பு பிரஜைகளை பாதிக்கும். பரிஷித்தைப் போல் மிகவும் நல்ல அரசனாக இருந்து விட்டால் அவன் இழப்பு பலருக்கும் ஈடுசெய்ய முடியாதது. தபஸ்வியாகப் பெற்றவர்கள் கோபத்தை அடக்கத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். இல்லையெனில் தபஸ்வி என்று சொல்லிக்கொள்வதிலோ ரிஷி, ஞானி என்று சொல்லிக்கொள்வதிலோ ஒரு பயனும் இல்லை. மன்னிக்கும் குணம் அற்றவனும், முன் கோபம் கொள்பவனும் செய்யும் தபஸ் வீணாய் போவது கண்கூடு.

விஸ்வாமித்ரர் தம் கோபத்தால் பல முறை தபஸின் பலனை இழந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ராஜஸ குணம் நிரம்பப் பெற்றவர். ஒவ்வொரு முறை அவரின் அஹங்காரம் தலைதூக்கும் போதெல்லாம் சபித்து விடுகிறார். இதனால் அவர் பலவருடம் சேமித்து வைத்த ஷ்ரேயஸும் தபஸும் அதன் பலனும் வீணாய் போக, மீண்டும் கடும்தவம் இயற்றும்படி ஆகிறது. வலிமைக் கூடிய தபஸ்விகளின் சாபத்திற்கும் மன வருத்தத்திற்கும் மிக அதிக வீர்யம் உண்டு.

உயர்ந்த ஆன்மாக்களை பணிந்து அவர்களை மரியாதை செய்து தம் வாழ்நாளைக் கழிக்கும் ஒருவனுக்கு அதன் அருமை பெருமை தெரியாத மனையாளோ மக்களோ வாய்த்தால் அவன் பாடு வருந்தற்குறியது. ராமானுஜரின் சரித்திரம் ஒரு பாடமாய் அமைகிறது. திருக்கச்சி நம்பி என்ற ஒருவரை தம் குருவாய் ஏற்க ராமானுஜரின் மனம் வெகுவாக விரும்பியது. அவரோ ராமானுஜருக்கென வேறு ஒரு குரு வாய்ப்பார் என்று சொல்லிவிடுகிறார். நம்பியின் அருளுக்காக ஏங்கும் ராமானுஜர், அவரை வீட்டுக்கு உணவு உண்ண அழைத்து, அவர் உண்ட மீதத்தை உண்டு அதன் பலனைப் பெற எண்ணுகிறார். ராமானுஜர் கோவிலுக்கு சென்று வருவதற்குள் நம்பி வீடு வந்து உணவும் உண்டு வேறு காரியமாக விடைபெற்று சென்று விடுகிறார். வீட்டில் ராமானுஜரின் மனைவி, நம்பி உண்ட இலையை தீண்டத் தகாத ஒருவனுக்கு கொடுக்கப்படும் மரியாதையுடன் கழியை கொண்டு தள்ளிவிடுகிறாள். மனம் மிகவும் வருந்திய ராமானுஜர் மனைவிக்கு அறிவு புகட்டி இனிமேலும் அப்படி செய்யல் ஆகாது என்று கேட்டுக் கொள்கிறாள். குரங்கு புத்தி மனதை அவ்வளவு எளிதில் அறிவுரையின் பேரில் மாற்ற முடியுமா? அவரவர்கள் உதிரத்தில் இருக்கும் அஹங்காரமும், குணநலனும் தொடர்ந்து வந்தபாடாகவே இருக்கும். மனதை அடக்க சாமான்யன் வாழ்கை வாழும் ஒருவனுக்கு சாத்தியம் அல்ல. மீண்டும் ஒரு முறை ஏழை விஷ்ணு பக்தனை உணவு இல்லை என்று விரட்டியடிக்கிறாள். மறுபடியும் ராமானுஜர் புத்தி கூறி இப்படி செய்யாதே என்று வேண்டிக்கொள்கிறார். அதன் பின் பெரியநம்பி என்பவரை தம் குருவாக ஏற்கிறார். அவரும் அவர் பத்தினியுமாய் இராமானுஜர் வீட்டிலேயே தங்கியிருக்கின்றனர். இதற்கெல்லாம் பெரிதும் உடன்படாவிட்டாலும் வேறு வழியின்றி வாழ்ந்து வந்த ராமானுஜரின் மனைவிக்கு, சிறு சம்பவம் கூட எரியும் கொள்ளியை மேலும் சீண்டி சண்டையில் முடித்து விடும்படி வாய்க்கிறது. பெரியநம்பியின் மனைவி சண்டையை வலுக்காமல் பதிலேதும் கூறாமல் இருக்கிறாள். பெரியநம்பியும் அவர் மனைவியும் மௌனமாய் வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர். காரணம் அறிந்த ராமானுஜரின் மனம் மிகவும் பாடுபடுகிறது. அவர் மனைவியை ஏதோ ஒரு காரணம் சொல்லியோ சொல்லாமலோ பிறந்தகம் அனுப்பிவிட்டு நேரே கோவிலுக்குச் சென்று சன்யாசம் ஏற்கிறார். "கூறாமல் சன்னியாசம் கொள்" என்பது இது தான் போலும். ஒத்த கருத்துள்ள தம்பதியாக இராவிட்டால், இருவரின் குறிக்கோளும் வெவ்வேறாக இருந்தால், குணநலன் பொருந்தாமல் இருந்தால், இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிப்பதே நல்லது.


மனிதர்களும் தேவர்களும் ஒருவருக்கு ஒருவர் திருப்தி செய்து வாழ்கையை வாழ்வது இயற்கை அமைத்த நியதி. யக்ஞங்கள் மூலம் தேவர்களை மனிதன் திருப்தி செய்வதும், அவர்கள் சுபீக்ஷம், மழை மூலமாக பூமியை குளிர்வித்து மனிதனை திருப்தி செய்வதும் பொருந்தும். இது செய்யாத போது தேவர்களின் சாபம் பூமியைப் பீடித்து இயற்கை வளம் அற்றுப் போகிறது. இப்படியெல்லாம் செய்தும் கூட தொடர்ந்து தர்மம் தோற்றும் அதர்மம் தழைத்திருக்கும்படியும் நேரிட்டால் பூமியின் அதர்மத்தின் பாரம் தாங்காது அழிவு ஏற்படுகிறது. அவ்வப்பொழுதெல்லாம் இறைவன் அவதரிக்கிறான் என்பது ஹிந்து மதம் அல்லாது வேறு பல மதங்களின் நம்பிக்கையும் கூட. 'அதர்மம் அழித்து தர்மத்தை காக்க நான் யுகம் தோறும் தோன்றுவேன்' என்று இறைவன் கூறுகிறான். சில அவதாரங்களுக்கு வேறு பல காரணமும் உண்டு. விஷ்ணுவை பிருகு முனிவர் சபித்து விடுகிறார். சாபம் மனிதனை மட்டும் பீடிக்கும் விஷயம் அல்ல. சாபம் என்றால் "கோபத்தில் உதிர்த்த சொல்". எவர் வாயிலிருந்து புறப்படுகிறது என்பதைப் பொருத்து சாபத்தின் மகத்துவம் மாறுபடும். பெரிய முனிவரின் சாபம், பிரபஞ்சத்தில் பலரும் உணரும்படியான பெரிய அதிர்வூட்டி, இராம அவதாரமாக உருவெடுத்தது. தேவாசுர போரின் போது அசுரர்களுக்கு பிருகு மஹரிஷியின் மனைவி தம் தபஸின் பலனால் ஷக்தி வழங்குகிறாள். அதனால் கோபமுற்ற விஷ்ணு அவளை சக்ராயுதத்தால் சம்ஹாரம் செய்து விடுகிறார். இதனால் துணுகுற்ற பிருகு மஹரிஷி, பூமியில் பிறந்து மனைவியின் பிரிவால் அவதியுறுமாறு கோபத்தில் சொற்களை உதிர்த்து விடுகிறார். பெரிய மஹரிஷியின் சாபதிற்கும் கட்டுப்பட்டு அதர்மம் அழித்து தர்மம் தழைக்கவுமாய் இராமாவதாரம் தோன்றியது.

October 22, 2010

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்

துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதியை வழிபடும் நவராத்திரி நாள்களில், முதல் மூன்று நாள்கள் துர்கைக்கும், நடு மூன்று நாள்கள் லக்ஷ்மிக்கும், கடை மூன்று நாள்கள் சரஸ்வதிக்கும் விசேஷமாய் கொள்கிறார்கள்.


ஆதிபராஷக்தியே க்ரியாஷக்தி (துர்கை), இச்சாஷக்தி (லக்ஷ்மி), ஞானஷக்தியாய் (சரஸ்வதி) விளங்குகிறாள். துர்கை தனது அம்சமான அம்பா, காத்யாயினி, பார்வதி என எண்ணற்ற வடிவங்கள் கொண்டவளாய் நம்மை ஆட்கொள்ள வருபவள். அதில் ஒன்று தான் 'காளிகாதேவி'யின் அம்சம். இவளின் புறத்தோற்றம் மிகுந்த சர்ச்சைக்குறியதாகவும், அதிர்ச்சியூட்டுவதாயும் அமைந்திருக்கிறது. அண்டசராசரங்களையே ஆடையாய் அணிந்திருக்கும் இவள், 'திகம்பரி'யாய் வலம் வருகிறாள். 'ஷாக்தம்' அல்லது ஷக்தி வழிபாட்டின் முறையில் வந்தவர்களுக்கு காளி குலதெய்வமாக விளங்குகிறாள். ஐம்பது மண்டையோடுகளின் மாலைகளை அணிந்து, ரத்தவெறியுடன் மயானப் பிரதேசங்களில் உலா வருகிறாள். தலைமுடி கட்டுக்கடங்காமல் விரிந்து இருக்க, அழிவின் பிரதிபிம்பமாய் புனையப்படுகிறாள்.

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், போர் மூண்டபோது, துர்கை தனது அதீத ஷக்தியான காளிகாதேவிக்கு உயிர் கொடுத்ததாய் சொல்லப்படுகிறது. காளிகாதேவி, அசுர வடிவங்களை சம்ஹாரம் செய்து, மாலையாக்கி கோர தாண்டவம் புரிகிறாள். பிரளயத்தில் ஒரு யுகமே முடிந்த அறிகுறியுடன், கோர தாண்டவம் ஆடுகிறாள். தன் பணி முடிந்ததும் தெரியாமல் அவள் அழிவில் மூழ்கியிருக்கும் போது, சிவன் ஒரு குழந்தை உரு கொண்டு மயானத்தில் தோன்றுகிறார். குழந்தையைக் கண்ட மாத்திரத்தில் அவள் வெறியும் கோபமும் அடங்கி, இறப்பின் நடுவில் பிறப்பின் தத்துவத்தை உணர்த்துபவளாய் அதைத் தன் மார்போடு அணைத்துப் பாலூட்டுவதாய் புராணம் கூறுகிறது.

காளியே பின்பு 'பத்ரகாளி'யாக சாந்த உருப்பெற்று அருள்பாலிக்கிறாள். 'பத்ர' என்றால் சௌபாக்யம் அருள்பவள் என்று பொருள் கொள்ளலாம். கோப வடிவமாக இருக்கும் அன்னையை ப்ரீதி செய்தால் உடனே இளகி அருள்பாலிக்கிறாள். இதனால் காளிகாதேவிக்கு ஷக்தி அதிகம்.

கல்கத்தா காளியைத் தவிர, தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ஒரு காளி கோவில் இருக்கிறது. திருச்சியைத் தாண்டி பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் என்ற ஸ்தலத்தில், 'மதுரகாளியம்மன்' கோவில் இன்றும் பல பக்தர்களின் வழிபாட்டுடன் சிறந்து விளங்குகிறது.

பல பக்தர்களுக்கு குலதெய்வமாய் விளங்கும் அன்னையின் திருக்கோவில், திங்கள் வெள்ளிகளில் மட்டுமே திறந்திருக்கிறது. மாவிளக்கு போட வருவோரின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. அங்கிருக்கும் கிணற்றடியில் குளித்து, அங்கேயே மாவிளக்கு இடித்து அம்மனுக்குப் படைக்கிறார்கள். குளிக்க, மாவிடிக்க என எல்லாவற்றிற்கும் வசதி கோவிலிலேயே இருக்கிறது. தற்போது இன்னும் விஸ்தாரமாய் உடை மாற்ற சுற்று மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. எங்கள் பெற்றோருக்கும் இவளே குலதெய்வமாகையால், நானும் சில முறை இத்திருக்கோவிலுக்கு சென்றிருக்கிறேன். ஒரு முறை சிறப்பு பூஜை செய்ததால் கர்ப்பக்ரஹத்திற்கு அருகில் அமரும் பேறு கிட்டியது. உடுக்கை ஒலிக்க அம்மனை பூஜை செய்து அழைக்கும் பொழுது சிலிர்ப்பு உண்டானது நிஜம்.

மதுரகாளியின் ஸ்தல வரலாறு, சுவாரஸ்யமாகவும், மூன்று வித்தியாசமான கதைகள் கொண்டதாகவும் இருக்கிறது. சிலர், மதுரையை கண்ணகி எரித்த பிறகு, மதுரையில் வாழ் காளிதேவி, மதுரையை விட்டு, சிறுவாச்சூரில் கோவில் கொண்டாள் எனக் கூறுகின்றனர்.

வேறொரு கதைப்படி, ஐந்து ரிஷிகள் மலையில் தவமியற்றிக் கொண்டிருந்தனர். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காளிகாதேவியை வணங்கி வந்தனர். அவளும் மனமிரங்கி இவர்களுக்கு அருள் பாலிக்க, அங்கிருக்கும் ஒரு மரத்தடியில் குடிகொண்டு தாங்களின் பூஜையை ஏற்கவேண்டுமென காளிதேவியை வணங்கி கேட்டுக்கொள்கின்றனர். ஒவ்வொரு நாளும் பூஜிக்கும் போது, மரத்திலிருந்த தேன்கூட்டிலிருந்த தேன், ரிஷிகள் வாயில் விழுந்ததாகவும், அதனால் 'மதுர' காளி என்ற பெயர் வழங்கப்பட்டதாய் இன்னொரு கதை கூறுகிறது.

பலரால் நம்பப்படுவதாக இருக்கும் வேறொரு புராணக்கதைப்படி, செல்லியம்மன் என்ற தெய்வம் முன்பு இக்கோவிலில் குடிகொண்டிருந்தாள். ஒரு சமயம், மந்திரவாதியின் மாயத்தில் சிக்கி அவனுக்கு அதிக வரம் கொடுத்துவிட்டதால், அவனிடம் அவதியுற்று அடிமையாய் இருந்து வர நேரிட்டது. மதுரையை எரித்து கால்போன போக்கில் சுற்றிக்கொண்டிருந்த கண்ணகிக்கு, சிறுவாச்சூரில் அவள் தேடிய நிம்மதி கிடைத்தது. செல்லியம்மனின் இந்த நிலையைக் கண்டதும், காளியிடம் முறையிட்டு, செல்லியம்மனை வேறு இடத்திற்குத் தாற்காலிகமாய் சென்றுவிடுமாறு கூறிகிறாள். செல்லியம்மனும் சம்மதித்து, பெரியசாமி மலையில் கண்ணகியுடன் இருக்க, அத்திருக்கோவிலில், அன்று காளி குடிகொள்கிறாள். அன்றிரவு காளி, மந்திரவாதியை சம்ஹாரித்து அருள்பாலித்த பிறகு, செல்லியம்மன், காளியை அங்கேயே தங்குமாறு பணித்து, தான் மீண்டும் பெரியசாமி மலைக்கே சென்று விட்டதாய்க் கூறுகின்றனர். இன்றும் வரும் பக்தர்கள், மலையில் இருக்கும் செல்லியம்மனையும் தரிசித்துவிட்டுத் தான் செல்கின்றனர்.

காளி என்பவள் கொடுமைகளையும், அரக்க குணங்களையும் ஈவு இரக்கமின்றி அழிப்பவள். கேட்டினை அழிக்கும் வடிவத்தின் உருவகமே காளிகாதேவி. உக்ர தெய்வங்களிடம் பக்தியுடன் முறையிட்டால், அவர்கள் விரைவில் அருள்பாலிப்பார்கள் என்று கூறப்படுகிறது. காளிகாதேவியின் கோர வடிவத்தின் ஆழத்தில் இருக்கும் அன்பு அன்னையைக் கண்டு, அவளின் அருளுக்குப் பாத்திரமாவோம்.

யாதுமாகி நின்றாய் காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை எல்லாம் - நிந்தன்
செயல்கள் அன்றி இல்லை.

-மஹாகவி பாரதி.

October 20, 2010

தவலை அடை / தவலை தோசை

தவலை தோசை
________________
1. அரிசி, து.பருப்பு, மிளகு(optional), முதலியவற்றை ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும்.

2. தேங்காய்த் துருவல், தயிர், ஜீரகம், பச்சை மிளகாய்(பொடியாய் நறுக்கியது) முதலியவை கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

3. வாணலியில்(குழிவு வாணலி) சிறிதே எண்ணை விட்டு, ஒரே ஒரு தோசை வார்த்து, அதை மூடி வேக விடவும்(திருப்பிப் போடுதல் வேண்டாம்).

4. சூடான தக்காளி-வெங்காய சட்னி, அல்லது தேங்காய்ச் சட்னியுடன் பறிமாறவும்.

5. பாராட்டைப் பெறவும். (hehe)

தவலை அடை
_____________

செய்முறை ஒன்று
~~~~~~~~~~~~~~
1. அரிசி உப்புமா அல்லது பிடி கொழுக்கட்டைக்கு உள்ள சாமான்களை அரைவேக்காட்டில் வேக வைக்கவும்.

2. குழிவு வாணலியில், சிறிதே எண்ணை விட்டு, வடைபோல் தட்டி, மேல் புறம் மூடி வேக விடவும்.

3. பொட்டுப் பொட்டாய் நீர் மேல் இருந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம். முறுகலான அடிபாகத்துடனும், மெதுவான மேல்பாகத்துடனும், தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாய் இருக்கும்.

செய்முறை இரண்டு
~~~~~~~~~~~~~~~
1. அரிசி உப்புமா மாவை, உப்புமா செய்வதற்கு முன்பே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்

2. அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து, கடுகு, பெருங்காயம், ஜீரகம் முதலியவை தாளிதம் செய்யவும்.

3. நீர் சேர்த்து சற்றே கரகரப்பாய் கலந்து வைத்துக்கொள்ளவும்

4. குழிவு வாணலியில் ஒன்றொன்றாய் விட்டு, இருபுறமும் *நிறைய எண்ணை விட்டு* shallow fry செய்து எடுக்கவும்.

5. எதையாவது தொட்டுக் கொண்டு சாப்பிடவும். :D

சின்ன சின்ன எனக்குத் தெரிந்த சமையல் டிப்ஸ்


குறிப்புகள்

1. நிறையவே பேச்சுத் தமிழ்ல எழுதிருக்கேன். அப்போ தான் ரெசிபி எழுத வரும்.
2. எனக்கும் சமைக்கத் தெரியும் என்று நினைவு படுத்திக் கொள்ள இப்பதிவு...
3. மங்கையர் மலர், தோழி, சினேகிதி ன்னு தமிழ் பத்திரிகைகள் நியாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை.
4. ஏறக்குறைய தொண்ணூறு சதவிகிதம் பேருக்கு நான் எழுதிய டிப்ஸ் தெரிந்திருக்கும் :))))) சும்மா பொஸ்ட் கணக்குக்கு எழுதியதாக எண்ணி மன்னித்துவிடுங்கள்.

******கொழுக்கட்டை செய்ய வரவில்லையா?

கவலையை விடுங்கள். அரிசி ஊறவைத்து அரைக்கும் பொழுது ஈரமாக(தோசைமாவு பதத்துக்கு) அரைத்து, கிளறிப்பாருங்கள். பந்து போல் உருண்டு வரும். அப்புறம் சொப்பு செய்வது நம் கைவண்ணம் தான். குயவனின் ஆர்வத்தோடு மாவை எடுத்து மெல்லியதாய் செய்யுங்கள். வாயில் போட்டால் கரையும் கொழுக்கட்டை தயார்.

******பாகற்க்காய் செய்தால் குழந்தைகள் ஓடுகிறார்களா?

பாகலை பாதியாய் வெட்டி, கொட்டை எடுத்து அதில் வெங்காயம் தக்காளி ஸ்ட·பிங் வைத்து நூல் போட்டு கட்டி, பின் வதக்குங்கள். சுவையான பாகல் தயார். 'அம்மா எனக்கு தினமும் பாகல் தான் வேணும்ன்னு அடம் பிடிப்பாங்க குழந்தைகள்'

******குடைமிளகாய் ஸ்ட·பிங்க்கு,

முழுதாய் பிளக்காமல், மேல் காம்பு மட்டும் எடுத்து, உள்ளே ஸ்ட·ப் செய்து சமையுங்கள். குண்டு குண்டாய் குடைமிளகாய் சமைத்த பின்பும் கண்கவரும்(நாக்கையும் கவரும்)

******வட இந்திய சமையல் செய்யும் பொழுது(ஒரு பஞ்சாபி தோழி கூறியது)சிறிதே சிட்டிகை(அரை ஸ்பூன்) சர்க்கரை சேருங்கள். காரத்தை தூக்கிக் காண்பிக்கும்.

******முருங்கைக்காயில் ரசமும் வைக்கலாம்.

தக்காளியுடன் ஐந்து பீஸ் பிஞ்சு முருங்கை நறுக்கிப் போட்டு செய்து பாருங்கள். வாசனையும் ருசியும் ஊரைக்கூட்டும்.

******பரோட்டா செய்யும் பொழுது ( உருளைக்கிழங்கு, முள்ளங்கி, காலிஃபளவர் எதுவாக இருந்தாலும்)

ஸ்ட·பிங் dry ஆக இருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். மூள்ளங்கி பரோட்டாவுக்கு, அதன் தண்ணீரைப் பிழிந்து அதிலேயே மாவு பிசையலாம். தனியாப்பொடி, ஜீரகப்பொடி தவிர, கைநிறைய நறுக்கிய கொத்துமல்லித் தழை சேர்த்து ஸ்ட·பிங் செய்து பரோட்டா செய்தால், எல்லோரும் பாராட்டுவர். நிமிடத்தில் காலியாகிவிடும். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவர்.

******வெங்காயம் நறுக்கினால் அழுகை வருகிறதா?

இனி வெங்காயத்தை நீரில் அலம்பிவிட்டு நறுக்குங்கள். oxidize ஆவதால் நிகழும் அழுகை குறையும்.


********ஆரோக்கியத்தை வரவேற்கலாமே!**********

!!!!வேகவைத்த தண்ணீரை கீழே கொட்டாதீர்கள். அதில் சத்து அடங்கியிருக்கிறது. முடிந்தால் வேறெதிலாவது சேருங்கள். இல்லையெனில் குடித்துவிடுங்கள்.

!!!!கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பே உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.

!!!!முடிந்தவரை, artificial drinks(coke etc), preservatives இருக்கும் packed foods போன்றவற்றை வாங்காதீர்கள். வாங்கும் முன், கலரோ, ப்ரிசர்வேடிவோ இருக்கா எனப் பார்த்து வாங்குங்கள்.

!!!! தினம் இரு பல் பூண்டு, முழுங்கி வாருங்கள், fatal முதல் சாதாரண வியாதி வரை எதுவுமே அண்டாது(பி.பி கூட ;))

October 13, 2010

பிடிக்காமல் பொன நவராத்திரி


நவராத்திரி என்றாலே அலங்காரங்கள், பூக்கோலங்கள் ரங்கோலிகள் என்று கண்முன் பல காட்சிகள் விரியும். சிறு வயது முதல் எனக்கு நவராத்திரி என்றாலே பிடிக்காது. என்ன பெண்பிள்ளை, இப்படிப் பேசுகிறாளே என்று நீங்கள் எண்ணலாம்.


நவராத்திரியில் அவரவர் திறமைகளைக் காண்பிப்பதில் பெண்கள் போட்டி போட்டுப் பெருமிதம் கொள்வர். எங்கள் வீட்டில் ஏழு படிகள் கட்டி கொலு வைக்கும் வழக்கம் உண்டு. தினம் ஒரு சுண்டல். வெள்ளிக்கிழமைகளில் அம்மா புட்டு செய்வாள். முதல் நான்கு நாட்கள் பூக்கோலம், அடுத்த மூன்று நாள்கள் கலர் கோலம், என அம்மாவும் நானும் பெரிய பெரிய கோலங்கள் போடுவோம். கிட்டத்தட்ட பனிரெண்டு வயது வரை, ராதை வேடம், 'மாமி' வேடம், வனதேவதை வேடம் என எனக்கு விதவிதமாய் வேடம் புனைந்து விடுவாள் அம்மா. இரவு ஒன்பது மணிக்கு மேல் பத்து சிறுவர்கள் குடிசைப்பக்கதிலிருந்து 'மாமி சுண்டல் மாமி' என்று மணியடிப்பார்கள். அவர்களுக்கென நிறையவே சுண்டல் செய்து தினமும் கொடுப்போம். எல்லாம் நன்றாகத் தானே இருக்கிறது பின் ஏன் நவராத்திரி பிடிக்கவில்லை என்று நானே யோசித்த பொழுது நவராத்திரியில் பிடிக்காதவைகளைப் பட்டியலிடத் துவங்கினேன்.

முதல் முக்கிய காரணம் எனக்குத் தாவணியோ பாவாடையோ அணிவது பிடிக்காது. வற்புறுத்தலின் பேரில் அணிந்து கடுப்புடன் வெளியே வந்தால், 'அட! தாவணி போட்டுருக்கியே! நவராத்திரின்னா தான் தாவணி போட்டுப்பியா' என பக்கத்து விட்டு மாமி கமெண்ட் அடித்து இன்னும் வெறுப்பேற்றுவார்.

வீட்டிற்கு வரும் மாமிகள்(அம்மாவின் தோழிகள்) 'கொலு' பார்த்துவிட்டு சும்மா போக மாட்டார்கள். 'இது எங்க வாங்கினீங்க?' 'புடவை என்ன விலை' 'என் மாமியார் தொல்லை தாங்கலை' என்று கோவிலில் வம்படிப்பது போல், கொலுவில் கொலுவிருக்கும் அம்மனைத்தவிர வேறு எல்லாவற்றைப் பற்றியும் பேசுவார்கள்.

இரண்டு வாண்டுகள் கூட வரும். அவர்களைப் பாடச் சொல்வார்கள். அது மிரண்டு விழிக்க, அம்மாக்கள் விழியாலேயே மிரட்டி, 'இப்போ பாடலைன்னா வீட்டுக்கு வந்தா மொத்து தான்' என்ற ரீதியில் ஒரு பார்வை பார்ப்பார்கள். பரிதாபமாய் இரண்டும் பாடும். அதில் ஒரு குழந்தையின் குரலோ திறமையோ அதிகமிருப்பின் அடுத்த அம்மாளுக்கு முகம் சுருங்கிவிடும். 'என் பொண்ணும் பாடுவா, இன்னிக்கு மூட் இல்லை' என்று பெண்ணிற்கு ஆதரவாய்ப் பேசுவார். (வீட்டுக்குப் போனால் செமர்த்தியாய்த் திட்டு இருக்கும்).

நவராத்திரியின் போது அறிந்த அறியாத உறவினர் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து தாம்பூலம் கொடுப்பது வழக்கம். நானும் என் தோழியும் பக்கத்து வீடுகளுக்கு அழைக்கச் செல்வோம். நவராத்திரி வருவதற்கு முன்பே பாட்டு டென்ஷன் வந்து விடும். குறைந்தது பத்து பாட்டு பாடிப் பார்த்துக்கொள்வோம். கோடி விட்டில் ஒரு மாமி இருப்பார். அவர் வீட்டிற்கு தினமும் செல்லவில்லை என்றால் கோபம் வரும். அதனால் ஒன்பது விதமான பாட்டுடன் தயாராய் இருப்போம். 'பாடு' என்று சொல்வதற்கு முன், நாங்களே சாவி கொடுத்த பொம்மை மாதிரி பாடிவிட்டு, பயபக்தியோடு அந்த மாமியைப் பார்ப்போம். நாங்கள் பாடும் போதே இன்னும் இரண்டு குட்டிகள் வரும். அவற்றையும் பாடச் சொல்லி மாமி படுத்துவார். அந்த குட்டிகள் நெளிய, மாமியோ 'பாடினால் தான் சுண்டல்' என்று கறாராகப் பேசுவார். வேடிக்கைக்குச் சொன்னாலும் கூட, சுண்டலுக்குப் பாட வந்த லெவலுக்கு எங்களைத் தள்ளி விட்டாரே என்று கோபம் வரும். பாட்டு தெரியாது என்று சொல்லும் குழந்தைகளையும் குறைந்தது 'ஜனகனமன' பாட வைக்காமல் அனுப்ப மாட்டார். ஒரு முறை, பாடச் சொன்னவுடன் ஒரு குட்டி, 'சுண்டல் வேண்டாம் மாமி, நாங்க பாடலை' என்று சொல்ல, நாங்கள் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்துவிட்டோம். மாமி எங்கள் வீட்டில் வந்து கோள்மூட்டி விட, அம்மாவுக்கு என் பேரில் வருத்தம். அவர்கள் வீட்டைத் தாண்டி செல்லும் பொழுது, நாங்களும் தப்பித்து ஓடி விடவேண்டும், என்று அடிமேல் அடி வைத்து, சத்தமிடமால், குனிந்து கொண்டே நடப்போம். அப்படியும் மாமி கண்ணில் பட்டுவிடாமல் தப்ப இயலாது. வேறு யாராவது அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றாலும், மொத்த கும்பலாக வெளியே நின்று, அழைக்க வந்த நபரை மட்டும் உள்ளே அனுப்பி, சில நாள் தப்பித்ததுண்டு.

ஒரு நாளுக்கு ஒரு பாடல் என்று ஒன்பது பாடல் பழகிக்கொண்டிருப்போம். ஒரே நாளில் ஐந்து வீடு அழைக்கச் சென்றால், ஐந்து வீட்டிலும் அதே பாட்டு! தப்பித் தவறி, அந்த வீடுகளில் தென்பட்ட முகங்கள் வேறு வீடுகளிலும் அன்றே தென்பட்டால், அதே பாட்டை நாங்கள் பாட, அவர்கள் கேலியாய் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க, ரொம்ப அவமானமாய் இருக்கும். ஒரு வாண்டு ஒரு முறை 'அக்கா சுதா மாமி ஆத்துலையும் இதே பாட்டு தானே பாடின' என்று பகிரங்கமாகவே மானத்தை வாங்கிவிட்டது.

என்னுடைய சித்தி பெண்ணை ஒரு முறை அடுத்த தெருவில் உள்ள வீட்டிற்கு நவராத்திரிக்கு அழைத்து செல்ல நேரிட்டது. அந்த வீட்டில் என் வயதொத்த ஒருவன் இருப்பான். தெருவில் போகும் போதும் வரும் போதும் பாட்டுப் பாடி வம்பிழுக்கும் 'ரௌடி' என்று நான் அவனைப் பற்றி கருவிக்கொண்டாலும், அவர்கள் வீட்டிற்கு, கொலுவிற்காக அழைக்கச் செல்வதிலிருந்து தப்ப முடியாது. என் சித்திப் பெண்ணை அழைத்து சென்ற அன்று, அவனுடைய அம்மா, "கொழந்தை பாடுவாளா?" என்று சித்திப் பெண்ணைப் பற்றிகேட்டார். அவளும் இல்லை என்று தலையாட்ட, நான் மட்டும் வழக்கம் போல் பாட அரம்பித்தேன். அடுத்த அறையிலிருந்து அவனும் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது எனக்குத் தெரியும். அவசரமாய் முடித்து ஓடிவிடலாம் என்று நினைத்து, நான் பாடி முடித்து கிளம்பிக் கொண்டிருக்க, என் சித்திப் பெண்ணோ, "மாமி! நான் டான்ஸ் ஆடுவேன், ஆனா அக்கா பாடணம்" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள். 'நீ பாடினாத்தான் உண்டு, உன் பாட்டை யாரு கேட்டா, கொழந்தை ஆட்டத்துகாக பாடு' என்று மாமி கட்டளையிட மீண்டும் நான் பாடி அவள் ஆட்டம் தொடர்ந்தது. என் நிலையை நினைத்து எனக்கே பரிதாபமாய் இருந்தது. தெருவில் இறங்கி நடக்கையில் 'ஏய், உன் பாட்டைவிட அவ டான்ஸ் நல்லா இருந்தது' என்று ஜன்னலில் இருந்து அந்த 'ரௌடி' கிண்டலுடன் கத்தினான்.

அடுத்த நாளோ 'மாமி' வேடமிட்டு அந்தப் பையன் வசிக்கும் தெருவிலேயே இன்னொரு வீட்டுக்கு அழைக்கச் செல்ல வேண்டியிருந்தது. வாசலில் நின்று கொண்டு, 'ஓ மாமி வேஷமா.. மாமி, கண்ணாடி போடாத மாமி! உன் ஜோடியக் காமி!' என்று பாடிக்கொண்டே உள்ளே ஓடிவிட்டான். ரொம்ப அழுகையாய் வந்தது. மறுநாள் அடம் பிடித்து ராதை வேடம் போட மாட்டேன் என்று மறுத்து எனக்கு பனிரெண்டு வயதாகிறது என்பதை என் அம்மாவுக்கு நினைவூட்டினேன். ஒரு வழியாக நவராத்திரிக்கு வேடம் புனைவது நின்றது.

தினம் குறைந்தது பத்து விதமான சுண்டல் பொட்டலம் கிடைக்கும். எது யார் வீட்டு சுண்டல் என்பது மறந்துவிடும். குத்து மதிப்பாய் இந்த சுண்டல் இந்த மாமி தான் செய்திருப்பார் என்று நாங்களே தீர்மானித்து விடுவோம். கொலுவின் ஹைலைட்டே "தேங்காய் மூடிப்பைகள்" தாம். பத்து வீட்டுக்கு கலெக்ஷன் செல்வதால் தேங்காய் சுண்டலுக்காக வலுக்கட்டாயமாய், ஒரு பை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். தெருவில் போகும் பசங்களெல்லாம் 'வந்துட்டாங்கப்பா கலெக்ஷனுக்கு' என்று சிறுமைப்படுத்திவிடுவர்.

இப்படி பல சோதனைகளுக்கு உள்ளாகி, ஒன்பது நாள் தேவி வழிபாடு செய்தால், ஒன்பதாம் நாள் அன்று அவள் அருள் பாலித்து படிக்க முடியாமல் செய்து விடுவாள். அதாவது சரஸ்வதி பூஜை. ஒரே குஷியாக இருக்கும். அப்பாடா! இன்று, புத்தகத்தைத் தொடவேண்டாம்! படிக்க யாரும் வற்புறுத்தவும் முடியாது.

மறு நாள் விஜயதசமியன்று, ஒவ்வொரு புத்தகத்திலிருந்து இரண்டு பக்கம் படிக்கச் செய்து, ஈடு செய்து விடுவாள் அம்மா. அன்று பாட்டு வகுப்புக்கு ஒரு மணி முன்பே சென்று பாட்டு மாமி வீட்டை அலங்கரித்து, மூன்று மணி நேரம் சந்தோஷமாக பாடுவோம். நாங்கள் சீனியர் என்பதால், ஜூனியர் குழந்தைகளை அதட்டி வேலை வாங்குவது சந்தோஷமாக இருக்கும்.

இப்பொழுதெல்லாம், நவராத்திரி என்றால் நண்பர்கள் கூடும் நல்ல பண்டிகை என்ற நினைப்பு மேலிடுகிறது. அம்பாளுக்கு தினம் ஒரு பாடல் நானே பாடி, இங்கு வரும் தோழிகளுடன் பேசும் போது, அட இப்படித் தானே அம்மாவும் பேசியிருக்கிறார்கள் என்று புரிகிறது. ஆசையாய் தைத்த பாவாடையை வலுக்கட்டாயமாய் இன்று என் பெண்ணுக்கு அணிவிக்கும் போது, அம்மா அணியச் சொல்லிய தாவணி நினைவு வருகிறது. வீட்டிற்கு வரும் குட்டிப் பெண்களைப் பாடச் சொல்லும்போது இப்படித் தானே அந்த மாமியும் என்னை பாடச் சொன்னார்கள் என்ற நினைப்புடன் புன்னகைக்க முடிகிறது. எனக்கு சிறு வயதில் பிடிக்காத நவராத்திரியை வேறு கோணத்தில் பார்க்கக் கற்றுக்கொண்டு விட்டேன். வேடமிட்டு வீடுவீடாய் சென்ற நாங்கள் இப்பொழுது ஆளுக்கொரு மூலையில் இருக்கிறோம். எங்களைக் கிண்டல் செய்தவர்களெல்லாம் குடியும் குடித்தனமுமாக அதே ஊரில் வசிக்கிறார்கள். ஊருக்குச் சென்றால் மரியாதையான புன்னகையை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டு நகர்கிறோம். எங்களைப் பாடச் சொல்லி வற்புறுத்திய மாமி மட்டும் நிரந்தரமாய், காண முடியாத இடத்திற்குச் சென்று விட்டார்.

இப்பொழுது நினைத்தாலும் கிட்டாது, அந்த இனிய நவராத்திரி நாள்கள்!

(மேலே உள்ள படம் எங்கள் வீட்டு கொலுவின் ஒரு பகுதி)

October 05, 2010

நின்றால் - நடந்தால் - பேசினால் குத்தப்படும் ஜாதி முத்திரை (ஆசிரியர்கள் - பகுதி 3)

காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெங்கும் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்

என்று பாடினார் பாரதி. அதன் அர்த்தத்தை, பாட்டின் இன்னிசையிலே புகுத்தி ஊட்டியவர்கள் என் பெற்றோர்கள். எனக்கு ஜாதி பார்க்கத்தெரியாது. ஏனெனில் ஜாதி என்று ஒன்று இருக்கிறது என்பதே என் மனதில் வெகு நாள் வரை பதிந்ததில்லை. அப்படி ஒன்று இருப்பதாக தெரிந்த பிறகும் யாரிடமும், ஜாதியைப் பற்றி பேசுவதும் இல்லை. அதன் அவசியமும் இருந்ததாக தோன்றியதில்லை.

சோனியாவும், மிதாவும், பினு ஃபெர்னான்ண்டஸும் பள்ளியில் என்னருகேதான் மீன் உண்பார்கள். எனக்குக் குமட்டியதில்லை. அது தீட்டு என்று தோன்றியதில்லை. அவர்கள் மீன் உண்ண, அவர்கள் அருகில் தோள் உரசிய படி நானும் புளியோதரையை எந்த விதக் காழ்ப்புணர்ச்சியும் இன்றி உண்டிருக்கிறேன்.


எங்களுடன் ஹேமா என்ற வகுப்புத் தோழியும் அவ்வப்பொழுது உணவு உண்ண வருவாள். மற்றவர்கள் கொண்டு வரும் உணவை வெளிப்படையாக முகம் சுளித்துப் பழிப்பாள். ஒரு நாள், மிதா ஆம்லெட் கொண்டு வந்ததை தோசை என்று ஏமாற்றி, ஹேமாவை உண்ணச் சொன்னாள். அவளும் தோசை என்றே நம்பி, அதை ரசித்து, சப்புக் கொட்டிப் பாராட்டினாள். இந்த அநாகரீகத்தைக் கண்டித்து நான் நன்றாக திட்டினேன். அதற்கு அவர்கள் தந்த பதிலோ, 'எங்கள் அருகே அமர்ந்து எங்கள் சாப்பாட்டை மட்டம் தட்டிப் பேசுகிறாளே எங்கள் மனது புண்பட்டிருக்காதா?' நியாயம்தான். நியாயம் இவர்கள் பக்கம் இருந்ததாகத் தோன்றியதால், அது பற்றிய பேச்சைப் பிறகு எடுக்கவில்லை. அதன் பின்னரும், அவள் எங்களுடன் ஒருநாளும் உண்ண வரவில்லை. புலால் உண்ணாததும், உண்பதும் ஜாதியையொட்டி பார்ப்பது மிக வினோதமானது. புலால் உண்பதற்கும் அல்லது உண்ணாமல் இருப்பதற்கும் ஜாதிக்கும் என்ன சம்பந்தம்?

பினு ஃபெர்நாண்டஸ், க்ருஸ்மஸ் அன்று என்னை வீட்டிற்கு அழைத்திருந்தாள். எனக்காக அவள் ஒரு துண்டு கிருஸ்துமஸ் கேக் வைத்திருந்தாள். கொறிப்பதற்கு பாகற்காயை அவள் அம்மா வறுத்து வைத்திருந்தாள். 'இதில் முட்டை இல்லை. உனக்காக முட்டையின்றி கேக் செய்யச் சொன்னேன். சாப்பிடுவாயா?'' ரொம்பத் தயங்கி என்னிடம் தட்டை நீட்டியபடி கேட்டாள். என் உணர்வுகளை மதித்து, முட்டை இருப்பதால் கேக் சாப்பிட மாட்டேனோ என்ற எண்ணத்தால், எனக்காக தனியே செய்து வைத்திருந்த அவள் நட்பு என்னை நெகிழ்த்தியது. கண்ணில் நீர் முட்டிக்கொண்டு வந்தது. 'கேக் மட்டும் கொடுத்து அனுப்பிவிடுவாயா என்ன? நான் உன் வீட்டில் தான் இன்று உண்ணப் போகிறேன்' என்றேன். ஆண்டி செய்த பாகல் வறுவல் போல், அம்மா என்ன, யாருமே அத்தனை ருசியாய் செய்ததில்லை. நான் வளர வளர ஜாதியற்ற சிந்தனையும் வளர்ந்தது. கூடவே நான் வித்தியாசமானவள் என்ற நினைப்பும்.

ஜாதி என்பதன் தாக்கம் சிறுவர்கள் அல்லது இளைஞர்கள் வரை செல்லும் என்பது கல்லூரி நாட்களில் நிறையவே தெரியவந்தது. வேதம் புதிது அருமையான படம். அதன் கருத்தும்நடிப்பும் பிடித்திருந்தது. குறிப்பாய் சிறுவனின் நடிப்பு. அவன் பிராமணச் சிறுவனாய் நடித்தான் என்பதால் இல்லை.ஒரு சிறுவன் நன்றாய் நடித்திருக்கிறான் எனும் பொதுவான எண்ணத்தால்.

"வேதம் புதிது படத்தில் அந்தப் பையன் நன்றாக செய்துள்ளான் இல்லையா" என்றேன் என் தோழியிடம். தோழிக்கோ சொல்லப்பட்ட சிந்தனையல்லாது, ஜாதி மட்டும் நன்றாகவே புரிந்திருந்தது. 'ஆமாமாம் உனக்கு அந்த சீன் புடிக்கத்தானே செய்யும். நீ பிராமின் இல்லையா' என்றாள் சிரித்தபடி. ஜாதியின் தீவிரம் எப்படி இளைஞர்களையும் யுவதிகளையும் விட்டுவைக்காமல் தாக்கியுள்ளது எனப்புரிந்தது. கள்ளமில்லாத குணத்திற்கு அன்று தான் கிடைத்தது முதல் சாட்டையடி. நான் பார்க்கத் தவறிய கோணத்தில் அவளால் பார்க்க முடிந்தது. நடிப்பை, திறமையை, செயலை, சொல்லவரும் எண்ணத்தையெல்லாம் தாண்டி அங்கு ஜாதியைத்தான் அவளால் பார்க்க முடிந்தது.

அப்பொழுது தான் எனக்கு முதன்முதலாய் கர்வம் தலை தூக்கியது. நான் மிகவும் வித்தியாசமானவள். என் சிந்தனை சிறந்தது எனும் லேசான கர்வம். என் மேல் எனக்கே நிரம்ப பெருமை. நான் பார்க்கும் கோணங்கள் மேலும், எண்ணங்கள் மேலும் எனக்குத் தாங்கொணாப் பெருமை. ஜாதியில்லை என்று சிந்திப்பதே 'மாண்புமிகு' செயல் என்று நினைப்பதால் வருவது. இதுவும் ஒரு வகையில் தவறுதான். இப்படிப் பட்ட எண்ணம், வேறூன்றியது என்றால் அதற்குக் காரணம் சுற்றுப்புறச்சூழலில் உள்ள மற்றோர்களின் சிறுமை எண்ணங்கள். இந்தக் கர்வம் பல வருடங்கள் தொடர்ந்தது.

திருமணமான புதிதில், எங்கள் அடுக்கு மாடியில் இருக்கும் சில தோழிகளிடம் நட்புப் பூண்டிருந்தேன். ஜாதியைப் பற்றி நான் என்றும் பேசியதில்லை. அவர்கள்தான் என்னிடம் கிண்டல் செய்வார்கள். 'உங்கள் பிராமணர்களுக்கு என்றுமே தலைகனம் உண்டு' என்பதில் துவங்கி பல விஷயங்களை சுட்டிக் காட்டுவார்கள். எல்லாவற்றிற்கும் சிறு புன்னகையைத் தவிர பதிலேதும் கூறியதில்லை. அவர்கள் புலால் உண்டால், என் வீட்டில் வந்து உண்டால் கூட, என் அருகிலேயே அமர்ந்து ஒட்டி உறவாடி உண்டால் கூட எனக்கு அதில் சங்கோஜமோ வெறுப்போ இருந்ததில்லை. பிராமணர்களின் சில பண்பை தவறு என்று நானே அவர்களிடம் ஒப்புக்கொண்டிருக்கிறேன். என் மேல் அவர்கள் நல்ல அன்பு வைத்திருந்தனர்.

அன்று என் வீட்டில் பண்டிகை. கோலமிட்டுக் காவியிட்டுருந்தேன். என் சிந்தித் தோழி ஒருத்தி சமைக்க மட்டன் வாங்கி வந்திருந்தாள். என்னை வம்பு செய்வதற்க்காக, வாசலில் கோலத்தின் அருகே, சற்று உட்புறமாய், மட்டனை கவருடன் வைத்துவிட்டு 'உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன் பார்' எனக் கூவிச் சிரித்தாள். என்னெவெனப் புரிந்த பிறகு அதிராமல், கத்தாமல், எடுத்துப் போகும் படி, பொறுமையாய் கூறினேன். பின் எனக்குப் பண்டிகை, வாசல் முகப்பு என்பது எங்களைப் பொருத்த வரை மிக புனிதமான விஷயம், அதில் செத்த ஆட்டை கோலத்தின் அருகில் வைத்தது எனக்குப் பிடிக்கவில்லை என்று நிதானமாய்க் கூறினேன். இது ஜாதியைத் தாண்டிய நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கலாம்.

அவளுக்குப் புரிந்தது. அப்படியே அதை கொண்டு வெளியில் ோட்டவள், என்னை நோகடித்ததற்கு இனி பத்து நாள் புலால் உண்ணப் போவதில்லை என்று தெரிவித்தாள். எனக்கு மிகவும் பாவமாக இருந்தது. இவ்வளவு தன்னை வருத்திக்கொள்ள வேண்டாம் என்று பத்துமுறை கூறியும் அவள் கேட்கவில்லை. இதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு தோழி என்னிடம் மெதுவாய் கேட்டாள். 'உனக்கு புலால் அவ்வளவு பிடிக்காது என்றால், எங்களையெல்லாமும் புடிக்காதா? நாங்கள் உன் நெருங்கிய தோழிகள் இல்லையா? எங்களை நீ தான் புண்படுத்திவிட்டாய்'

'உன்னை புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள். என் வீட்டில் விசேஷ தினங்களில் புலால் வாசலில் இருப்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை'. என்றேன். நானும் அவர்களைப் புண்படுத்தியிருக்கலாம். இன்றும் இவர்களெல்லாம் எனக்கு மிக மிக நெருங்கிய தோழிகள். பாசமும் அன்பும் பரிமாறிக்கொள்கிறோம். எங்கோ தவறு நிகழ்கிறது. ஜாதிகள் இல்லை என்று மனதால் நம்பி, சம மனப்பாங்கோடு பார்க்கும், என் போன்ற சிலருக்கும், சில நேரம் அவமதிப்பே ஏற்படுகிறது.

'ஜாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்'


சரிதான். மறுக்கவில்லை. குல உயர்த்தி இருப்பதாக நினைத்துக்கொண்டு, உயர்ந்த குலத்தவர்களாய்ச் சிலரைக் கற்பித்துக் கொண்டு, அவர்களை மட்டம் தட்டுவோரை என்ன சொல்வது? விட்டுக்கொடுப்பதாலேயே, குட்டப்படவேண்டுமா என்ன?

பேசும், சிந்திக்கும் ஒவ்வொரு கோணத்திலும் ஜாதி தலை காட்ட வேண்டுமா? நெடு நாளானது புண் ஆற. பிறகு இன்னும் ஆழமாய்ச் சிந்தித்துப் பார்த்தேன். 'நான், எனது' என்ற எண்ணம் மறையவேண்டும். அதுதானே உயர்ந்த தத்துவம்? யார் எந்த ஜாதியை மட்டமாய் பேசினால்தான் என்ன? அதனால் எனக்கு ஏன் வருத்தம் ஏற்பட வேண்டும்?

பிராமணன் என்பவன் பிறப்பால் பிராமணன் ஆகமாட்டான். எவன் ஒருவன் பிரம்மத்தைத் தியானிக்கிறனோ அவனே பிராமணன்.பிராமணனாய் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் தான் என்ன?

நமக்கென ஒரு கோட்டை வரைந்து வைத்திருப்பதில் தப்பில்லை. அதை மற்றோரை தாண்டச் சொல்லாமல் இருப்பதிலும் தப்பில்லை. அது தாண்டப்படும் பொழுது, அது மன்னிக்கப்பட வேண்டும். அன்றலர்ந்த தாமரையாய், முகம் கருகாமல் இருக்கவேண்டும். தன் வீடு, தன் மக்கள் தன் சாதி என்னும் தொன்னை உள்ளம் உடைய வேண்டும். சாதிப் பெருமை பேசாததாலும், சமத்துவமாய்ச் சிந்திப்பதாய் நினைத்துக் கொள்வதாலும், எனக்குள் எனக்கே தோன்றும் கர்வம் உடைய வேண்டும்.

'காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெங்கும் நாமன்றி வேறில்லை'


இன்னொரு கர்வமற்ற பரிமாணத்துக்கான முயற்சி.



(இன்னும் வரும்)

October 04, 2010

வாஸ்து சாஸ்திரம்

(சோ-வின் எங்கே பிராமணன் பகுதி-2லிருந்து தொகுக்கப்பட்டது)


ஒவ்வொரு பழக்கவழக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால் சுவாரஸ்ய கதை, நிகழ்வு அல்லது நியதி கோர்க்கப்பட்டிருக்கும். ஜோதிட சாஸ்திரத்தைப் போலவே நம்பிக்கையுடன் பின்பற்றப்படுவது வாஸ்து சாஸ்திரம். வாஸ்து சாஸ்திர வல்லுனர்களை நாடி வீட்டிற்கு ஹோமமும் ஷாந்தியும் செய்த பின்னரே குடிபெயரும் பழக்கம் பலரிடம் நிலவி வருகிறது.

ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ளபடி வாஸ்தோத்வன் எனப்படும் வாஸ்து அதிபதி ஈஸ்வரனின் அம்சம். அவன் கருணா மூர்த்தி. நல்லன எல்லாம் நடத்திக்கொடுப்பவன். அவனை வேண்டியும் அவன் அருளை துதி பாடும் ஸ்தோத்திரங்கள் உள்ளன, எனினும், வாஸ்து புருஷனைப் பற்றி ஆகம சாஸ்திரத்தில் வேறு விதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் கொடூரம் நிறைந்தவன், அவனுக்கு ஷாந்தி செய்து திருப்தி செய்யவிட்டால், நம்மை ஆட்டுவிக்கக் கூடியவன் என்பது இன்னொரு நம்பிக்கை.

அரக்கனை அழிக்க தேவர்கள் சிவபெருமானை வேண்டி நிற்க, அவரின் வியர்வை துளியிலிருந்து தோன்றியவன் வாஸ்து புருஷன் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. அரக்கனை அழித்த பின்பும் அவன் குரூரம் கட்டுக்குள் அடங்காமல் போக, சிவன் அவனை தன் காலடியில் அமிழ்த்தி, அஹம் அழிக்கிறான். வாஸ்து புருஷன் சிவனிடம் தஞ்சம் புகுந்த பிறகு, மனிதர்களுக்கு நிறைவும், செல்வமும் அருளி நிற்கும் வாஸ்து அதிபதியாக்கி பூமிக்கு அனுப்பப்படுகிறான். அவனை வணங்கி நிற்போருக்கு அருள் பாலிக்கிறான் என்று கூறுகிறது.

இன்னொரு சாராரின் கருத்து படி வாஸ்து புருஷன் கட்டுக்கடங்காமல் போன போது தேவர்கள் பலரும் அவனை அமுக்கி வீழ்த்தியதாகவும், அவன் உடம்பின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒவ்வொரு தேவன் அதிபதியாகி அமுக்கியதால் அந்தந்த பாங்கங்களை அந்த தேவதைகளைக் கொண்டு குறிப்பிடுகின்றனர். தன் தோல்வியை வேண்டி நின்ற அவனுக்கு வருடத்தில் எட்டு நாட்கள் முழித்திருக்கும் வரமும் அதிலும் பிரத்தியேகமாக சில மணிகளே அவன் முழித்திருப்பான் என்று வரமருள்கின்றனர். வாஸ்து புருஷனின் அருளை சம்பாதிக்காதவர்களை அவன் பலவாறாக சோதனைக்கு ஆட்படுத்துகிறான் என்பது நம்பிக்கை. வாஸ்து புருஷனின் தலை - கிழக்கு நோக்கி ஈசான்ய மூலையிலும், கால் - தென் மேற்கு மூலையிலும் அமைந்திருக்கிறது. இவனை திருப்தி படுத்திய பின்னரே கட்டிட வேலைகளைத் துவக்கி எந்தெந்த இடங்கள் எந்தெந்த திசை நோக்கி இருக்க வேண்டுமோ அப்படி அமைத்தால் சுபீஷம் நிலவுவதாக கருத்து.

தேவலோகத்தில் கட்டிட கலையில் நிபுணராக அதிபதியாக கருதப்படும் மயனே தேர்ந்த வாஸ்து சாஸ்திர நிபுணன் என்பதால் அவனே வாஸ்து புருஷனாக பாவிக்கப்படுகிறான் என்றும் வேறு கோணமும் உண்டு.

கட்டிடங்களின் கட்டமைப்புகளை சாஸ்திரமாக வழங்கி வருவது சைனாவிலும் feng shui என்ற பெயரில் கடைபிடிக்கபடுகிறது. விஞ்ஞான முறைப்படியான விளங்கங்களுடன், வானவியல் சாஸ்திரத்தின் தொடர்போடு அலசி ஆராய்ந்து, பாஸிடிவ் அதிர்வுகள் அலைகளை வரவேற்க வல்லதாய் அமைத்துக் கொள்கிறார்கள். சிரிக்கும் புத்தர் சிலையோ, மீன் தொட்டியோ சரியான் இடத்தில் வைக்கப்பட்டால் சுபீஷம் தரும் என்பதும் இவ்வழக்கத்தின் நம்பிக்கை. வாஸ்து சாஸ்திரமும், feng shui-ம் நிறைய இடங்களில் சற்றே வேறுபடுகிறது.



சாஸ்திரம் எது எப்படியாயினும், நம் சுற்றுப்புற சுழலின் அமைதிக்காக சிறு பிரார்த்தனையுடன் கட்டிட வேலைகளைத் துவங்கி, எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளே எல்லா சாஸ்திரங்களிலும் அவற்றின் அதிபதியாகவும் விளங்குகிறான் என்ற தெளிந்த அறிவுடனும் பணிவுடனும், குடிபெயர்ந்த பின்பும், தினமும் கூட இறைவழிபாட்டை மேற்கொண்டால், இல்லமும், சுற்றுப்புறமும், இன்பமாய் அமைத்திட எளிது.

September 30, 2010

திரையிசைப் பயணங்கள் - 5 (அழகான சந்தங்கள்-சந்திரபோஸ்)

உடல் நலக் குறைவால் பிரபல இசையமைப்பாளார் சந்திரபோஸ் இன்று காலை காலமானார். எண்பதுகளில் பிரபலமாக இருந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்திரபோஸ் ஏறக்குறைய முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவர்களின் தாயாரும் முன்னாள் பாடகியாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. எம்.எஸ்.வி அவர்களின் இசையில் "ஏண்டி முத்தம்மா" என்ற பாடலைப் பாடி திரையுலகிற்கு அறிமுகமானவர்.

சூரியனின் பிரகாசத்தில், பல உயிர்ப்புள்ள ஜொலிக்கும் நட்சத்திரங்களின் சுடரை சற்றே முயன்று தேடி கண்டுணர வேண்டியுள்ளது. "இளையராஜா" என்ற சூரியனின் பிரகாசத்தில் மறைந்து விடாமல் தன் தனித்தன்மையை ஜொலிக்கச் செய்த நட்சத்திரமாய் ஒளிர் விடுகிறது சந்திரபோஸ் அவர்களின் இசை. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று "ரவிவர்மன் எழுதாத கலையோ" என்ற பாடல். நளினமான ஓவியம் மெல்ல எழுந்து நடப்பது போன்ற உணர்வைத் தட்டி எழுப்பியிருப்பார்.

சந்திரபோஸ் இசையில் பாரம்பர்ய வருடலுடன் துள்ளலும் உணர்வும் சேர்ந்து மிதக்கும். இளையராஜா அவர்களின் இசைக்கும் எம்.எஸ்.வி அவர்களின் இசைக்கும் இடையில் அமைந்த அற்புத இடைவெளிப்பாலமாக இவரது இசை அமைந்தது என்பது என் கருத்து. சந்திரபோஸ் இசையில் மனதில் நின்ற பாடல்களுக்கு நிச்சயமாக இந்த ஒரு பதிவு போதாது.

"நீலக்குயில்கள் ரெண்டு"
"இளஞ்சோலை பூத்ததோ"
"மாம்பூவே"
"வண்ணத்துபூச்சிக்கு வயசென்ன ஆச்சு"


ஆகிய பாடல்கள் என் நெஞ்சில் நிறைந்த பாடல்களில் சில என்றாலும் இவற்றையும் தாண்டி என் மனதில் முதலிடம் பிடித்த பாடலைத் தான் இன்று நான் இடப் போகிறேன். அழகான சந்தங்கள் அலைபாயும் நெஞ்சங்கள்" என்ற பாடலை "rare songs" பிரிவில் சேர்க்கலாம். மற்ற பாடல்கள் அளவு பேசப்படாத பாடல். கேட்டுப் பாருங்கள் நிச்சயம் பிடிக்கும்.

http://www.divshare.com/download/5534339-507
நன்றி டிஸ்க்பாக்ஸ்.

படம்: அது அந்தக் காலம்
பாடல்: அழகான சந்தங்கள்
பாடியவர்கள்: கே.ஜெ.யேசுதாஸ், வாணி ஜெயராம்
இசை: சந்திரபோஸ்


த த நி ஸ ஸ ஸ ஸ ஸ
த த நி ஸ ஸ ஸ ஸ ஸ
ஸ நி த நி த ப க ப நி த
அழகான சந்தங்கள் அலைபாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது!!!
அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது

த த நி த நி த த நி த நி த ப க
த த நி த நி த த நி த நி த ப ப
சுர மழையில் இவள் நனைந்து கவி எழுதினாள்
கவி எழுதி இரு விழியில் கதை எழுதினாள்
கதை முடியும் பொழுதில் இவள் சுருதி விலகினாள்

சங்கீதம் முதல் என்று யார் சொன்னது
சாஹித்யம் முதல் என்று நான் சொல்வது
எப்போது ஆகாயம் உண்டானது
அப்போது சங்கீதம் உருவானது
சங்கீதமோ உயிர் போன்றது
சாஹித்யமோ உடல் போன்றது
ப நி ஸ க ரி க ரி ஸ நி
ப நி ஸ க ரி க ரி ஸ ஸ
உடலோடு உயிர் சேரும் திருநாளிது.

நான் பாடும் சங்கீதம் சுகமானது
நதி பாடும் சங்கீதம் நயமானது
மண்ணோடு நீர் சேரும் புதுவானது
உன்னொடு நான் சேர முடிவானது
பூங்காக்களே வாருங்களேன்
பூமாலைகள் தாருங்களேன்
ப நி ஸ க ரி க ரி ஸ நி
ப நி ஸ க ரி க ரி ஸ ஸ
குயில் கூட்டம் பல்லாண்டு பாடுங்களேன்

அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நான் பாடும் ராகங்கள் நீ தந்தது
சுர மழையில் நனைந்து ஒரு கவி எழுதினாள்
கவி எழுதி இரு விழியில் கதை எழுதினாள்
கதை முடியும் பொழுதில் இவள் சுருதி விலகினாள்

இவ்விசைக்கு மயங்கி நடனமாட வேண்டும் என்ற எண்ணம் நடனமாடத் தெரியா பாமரனுக்கும் வந்து விடும். இங்கு மயங்கி ஆடும் இருவரின் மயக்கம் இசையின் மயக்கமா, ஆடலின் மயக்கமா அல்லது காதலின் மயக்கமா? எல்லாம் கலந்ததொரு விருந்தின் மயக்கம்.

http://www.divshare.com/download/5534339-507
நன்றி டிஸ்க்பாக்ஸ்.

இந்த இசைப் பயணம் துவங்கியதிலிருந்து வரிசையாக முரளி அவர்கள், ஸ்வர்ணலதா அவர்கள், சந்திரபோஸ் அவர்கள் என்று அஞ்சலி பதிவுகளாய் பதிக்க நேரிடுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

சந்திரபோஸின் இசைக்கு என் வணக்கங்கள்.

September 28, 2010

எண்ணற்ற பொக்கிஷங்கள் (சோ-வின் எங்கே பிராமணனிலிருந்து தொகுக்கப்பட்டது )

காலகாலமாக நாம் போற்றி வரும் புராண இதிஹாசங்கள், வேத மந்திரங்கள், உபநிஷதுக்கள் இவற்றுள் நமக்கு தெரிந்தவை சில. தெரியாதவை கணக்கற்றவை. ரிக், யஜூர், அத்ர்வன, சாம வேதங்களாக இன்றைக்கு நான்கு வேத மந்திரங்களை அடிப்படையாகக் கொண்டு நம் மதம் வழங்கி வருகிறது. ஆனால் வேதமோ மொத்தம் நான்கு மட்டுமல்ல. கணக்கிலடங்காதவை. எண்ண எண்ண குறையாதவை. எத்தனை வேதங்கள் என்று கண்டுணர முடியாதவை. இறைவனைப் போல் முடிவற்றவை. சாமான்யனின் புரிதலுக்கும் புலனறிவுக்கும் அப்பாற்பட்டவை.

"அனந்தாவை வேதானாம்" என்று வேதமே குறிப்பிடுகிறது. இதில் நான்கே நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். வேதங்களை ரிஷிகள் உணர்ந்தனர். ஞானிகளால் "உணரப்பட்டவை", கற்றுக்கொடுக்கப்பட்டவை அல்ல. அதனாலேயே இம்மந்திரங்களை ஓதுவது மட்டுமே சிறந்தது - குரு மந்திரம் ஓதும் பொழுது அதனை கேட்டே தெளிவுற்று மாணாக்கன் ஓதினான். வேத மந்திரங்களை எழுதி கற்பித்தல் முறையாக கருதப்படவில்லை. ஒலி நீட்சி , i.e. குறில் நெடில் முதலியவை மிகுந்த கவனத்துடன் ஓதவேண்டும் என்பதால், தானாக எழுதி படித்தலை விட குருவின் மேற்பார்வையின் கீழ் ஓதுதலே சரியென உணர்ந்து அவ்வழியே பின்பற்றப்பட்டது. வேதங்களை சரிவர கற்றுணர கிட்டத்தட்ட பனிரெண்டு வருட காலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தற்காலத்தில் நாம் வேதமந்திரங்களை அல்லது வேதத்தின் ஒரு பகுதியான ருத்ரம் சமகம் முதிலிய மந்திரங்களை ஒலிநாடாக்களில் பதிவு செய்து, வீட்டில் மந்திர ஓலியை நிரம்பச் செய்கிறோம். இது மிகவும் உன்னதமானது என்று கூறிவிட முடியாது என்கிறார் சோ. மந்திரங்களை சரியாக பயின்ற ஒருவர் நேரடியாக ஓதுவதே மிக்க நலன் விளைவிக்கக் கூடியது. மேலும் வேத மந்திரங்கள் ஒலிக்கும் இடங்களில் மற்ற சப்தங்கள் ஒடுங்கி இருத்தல் சிறப்பு. காலத்திற்கேற்ப நாம் நம்மை மாற்றிக்கொண்டு விட்டாலும், இவ்வழக்கத்தை ஒப்புக்கொண்டு விட்டாலும், இவ்வழி பின்பற்றினால் பயனோ பலனோ முழுமை பெறுவதில்லை.


பரத்வாஜ மஹரிஷிக்கு ப்ரம்மன் முன்னூறு வருட கெடு கொடுத்து வேதம் முழுவதையும் அறிந்து வரச் சொல்கிறான். முன்னூறு வருடம் முடிந்த பின், இந்திரன் அவர் முன் தோன்ற, பரத்வாஜ முனிவரோ "இன்னும் நூறு வருடம் கொடுத்தாலும் அதை வேதத்தை உணரும் பொருட்டே செலவிடுவேன். தெரிந்து கொள்ள வேண்டியதோ மிக அதிகம்" என்கிறார். அங்குள்ள சில மலைகளை சுட்டிக்காண்பித்து அவற்றை வேதம் என்று உருவகப்படுத்தினால் 'நீங்கள் தெரிந்து கொண்டதோ இவ்வளவே' என்று ஒரு பிடி மண் அளந்து காட்டுகிறான். வேதத்தை முழுவதுமாய் தெரிந்து கொள்வது இயலாத காரியம். அவை முடிவற்றவை கணகற்றவை என்று இந்திரன் சொன்னது புராணக் கதை.

தொலைந்த பொக்கிஷங்கள் பலவற்றில் திவ்ய ப்ரந்தமும் ஒன்று. வெவ்வேறு ஆழ்வார்களால் இயற்றப்பட்ட திவ்யப்ரபந்தம் முதலில் கிடைக்காமலே இருந்தது. நாதமுனிவர் என்பவரே, தொலைந்த பிரபந்தங்களை மக்களுக்கு சேர்பிக்க மனம் கொண்டு அவற்றில் சிலவற்றை தேடி நம்மிடம் கொணர்ந்தார். அவையே நாலாயிரம் திவ்யப்ரபந்தமாக வழங்கப்படுகிறது. தமிழில் ஆழ்வார்கள் பலர் தமக்கு தெரிந்த வேதத்தை முன்னிறுத்தி அதனையொட்டி பாடல்கள் புனைந்துள்ளனர். நம்மாழ்வாரின் பல பாடல்கள் வேதங்களின் சாராம்சத்தை விளக்குகிறது. அவர் எழுதிய திருவாய்மொழியை ஆதாரமாக வைத்தே இராமானுஜர் வைணவ விளக்கங்களையும் நியதிகளை வகுத்ததாக அபிப்ராயப்படுகின்றனர்.

September 26, 2010

சில நேரங்களில், சில ஆசிரியர்கள்! ( பகுதி 3 - ஆசிரியர்கள்)

பள்ளிக்குச் சற்றே தள்ளி, அடுத்த தெருவில் இரண்டு கார் ஷெட் உண்டு. அங்கு தான் எங்களுக்கு இரண்டாம் வகுப்பு. (இரண்டாம் வகுப்பு ஏ செக்ஷன், மற்றும் பி செக்ஷன்). அதை அடுத்து உடனேயே மணல் நிரப்பிய விளையாட்டுத் திடல். முக்கால்வாசி நேரம், ரன்னிங் அண்ட் காட்சிங், இல்லாவிட்டால் லாக் அண்ட் கீ விளையாடுவோம். பொட்டல் கிரௌண்டின் பக்கத்தில் வகுப்பு என்பதால் வெயிலாய் இருக்கும். எங்களுக்கு வகுப்பெடுத்த மிஸ்ஸின் பெயர் 'சாரதா' மிஸ். வகுப்பில் நான் வழக்கம் போல் கடைசி பென்ச்சில் தான் உட்கார்ந்திருப்பேன். பாதி நேரம், க்ரவுண்டை வேடிக்கை பார்ப்பதும் பிடித்த விஷயம். சாப்பாடு கொண்டு வரும் ஆயாக்கள், பிள்ளைகளுக்கு உணவூட்ட வரும் அம்மா, என்று பலரும் பன்னிரெண்டு மணி அளவில் கிரவுண்டில் குழுமி விடுவார்கள்.

ஆங்கில வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார் சாரதா மிஸ்.


"Can I marry u mary" asked john

"No john, you can marry me when I am 20 and you are 25"


இதற்கு அழகாய் தமிழில் விளக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். இரண்டாம் வகுப்பிற்கு சாரதா மிஸ் தான் வகுப்பாசிரியை. முக்கால் வாசி ஆசிரியைகள், ஆங்கிலம், தமிழ், கணக்கு என பல வகுப்பும் எடுப்பார்கள். விளக்கம் கொடுக்கும் பொழுது, பக்கத்து செக்ஷன் மிஸ் வந்து விட்டதால், சற்றே பாடத்தை நிறுத்தி, தங்களுக்குள் ஏதோ பாடம் எடுக்கும் அந்த வாக்கியத்தைப் பற்றி தமிழில் கூறி சிரித்துக் கொண்டனர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும், marry என்ற வார்த்தை மட்டும், ஏதோ கெட்ட வார்த்தை என்று புரிந்தது போல் இருந்ததால், ஒருவரை ஒருவர் பார்த்து, ரகசியமாய் புன்னகைத்துக் கொண்டோம்.

என் அம்மா அப்பொழுதெல்லாம் தனி வித சிகையலங்காரம் செய்து விடுவார்கள். அதன் பொருட்டு 'லண்டன் லேடி' என்று என்னை பல ஆசிரியைகள் கூப்பிடக் காரணமாய் இருந்தது சாரதா மிஸ் தான். சாராதா மிஸ்ஸுக்கு என் மேல் தனி பிரியமா இல்லையா என்றெல்லாம் நினைவில்லை. ஆனால் என்னைத் திட்டியதில்லை. 'என்ன லண்டன் லேடி எதுக்கு சிரிக்கற' என்று கேள்வி எழுப்ப, எக்குத் தப்பாய் மாட்டிக் கொண்டு நான் முழித்தேன்.

'இல்லை மிஸ் சும்மா தான்.. சாரி'

அன்று நல்ல மனநிலையில் ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தார்.

'சரி இதனால எல்லாருக்கும் என்ன தெரியுது? யாரானும் கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தா 20 பொண்ணுக்கும் 25 ஆணுக்கும் இருந்தால் தான் செஞ்சுக்க முடியும்' என்று சொல்லி சிரித்தார். (ஏன் சிரித்தார் என்று அப்பொழுது விளங்க வில்லை!)

குறைந்தது பத்து அல்லது பன்னிரெண்டு வயது வரை, ஐந்து வருட இடைவெளி இருக்கும் ஆணை மட்டுமே ஒரு பெண் திருமணம் செய்ய வேண்டும் என்று தீவிரமாய் நம்பிக்கொண்டிருந்தேன்!



சாரதா மிஸ்ஸுக்கு ஒரு (கெட்ட?!) பழக்கம் உண்டு. எந்த மாணவனோ மாணவியோ 'தெரிலை மிஸ்' என்று சொன்னால், வெகு நக்கலாய் அவர்களை மட்டம் தட்டிப் பேசுவார்கள். மிச்ச மாணவ மாணவியரின் முன் அவமானப்படுத்தவும் செய்வார்கள்.இதனால்யே சாரதா மிஸ் என்றால் ஏனோ எனக்கு அவரால் விளைந்த ஒரு கசப்பான அனுபவம் தான் நினைவில் வரும்.

எங்கள் வகுப்பில் விஷால் என்று ஒரு மாணவன் இருந்தான். படிப்பில் சற்றே சுமாரான மாணவன். இதைத் தவிர அவனிடம் தவிர்க்க முடியாத விஷயம் இன்னொன்று இருந்தது. அப்பாவியாய், அசமஞ்சமாய் முகம் வைத்திருக்கும் இவன் தன் அரை டிராயரிலேயே மலம் கழித்து விடுவான். சில நாட்களில் அல்லது பல நாட்களிலும் சாரதா மிஸ் ரொம்ப அமைதியாய் அதை அணுகியிருக்கலாம். அணுகியிருப்பார்கள். நினைவில்லை.

ஒரு மதிய வேளை விஷால் மலம் கழித்திருந்தான். அவனது கை, கால்கள், சட்டை, ட்ரவுசர், பெஞ்ச் என எல்லாவற்றிலும் கறையாகி ஆகி விட, ரொம்ப எரிச்சலடைந்தார். சொல்லி களைத்துவிட்டதாலோ என்னவோ அல்லது வேறேதோ எரிச்சலின் பிரதிபலிப்பாக இருக்கலாம், அன்றைக்கு அவனை அத்தனை மாணவர்களின் முன்னிலையில் வெகுவாய் அவமானப்படுத்திவிட்டார். வகுப்பில் துர்நாற்றம் மிகுந்திருந்தாலும், சக மாணவன் என்ற முறையில், டீச்சரிடம் திட்டு வாங்குகிறானே என்ற பரிதாபத்தில் யாருமே அவனை கிண்டல் செய்யவில்லை. நாங்கள் அப்படி இருக்க, அவர் வெகுவாக கிண்டல் செய்து, மிகவும் அவமானப் படுத்திவிட்டார்.

பெயர் பெயராய் எங்களை அழைத்து, ' நீ உள்ளாடையில் மலம் கழிப்பாயா' என்று கேட்க, பலரும் அமைதியாய் இருந்தோம். ஆனாலும் வற்புறுத்தி எங்களை 'இல்லை மிஸ்' என்று கூறவைத்தார். அவன் முகம் வெகுவாய் சிறுத்துப் போனது.

சிரித்த முகத்துடன், நளினமாய் இருக்கும் சாரதா மிஸ் ஏன் அன்று அவ்வாறு அவனை சிறுமைப் படுத்தினார் என்று இன்னும் விளங்கவில்லை. பல வருடங்கள் பள்ளியில் இருந்த பொழுதும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி, சாரதா மிஸ்ஸை எப்பொழுதேனும் தெருவில் பார்க்க நேரிடும். அவர்களை பார்க்கும் பொழுதெல்லாம் விஷாலின் சிறுத்துப்போன அழுத முகமே நினைவிலாடும்.

அதன் பின் அவர்களின் அன்புக்குறிய மாணவியாக ஆக இருக்க எனக்கு மனம் வரவில்லை.

சில நேரங்களில், சில ஆசிரியர்கள்!

(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது)

September 25, 2010

இரந்துண்டு வாழ்தல் - (சோ-வின் எங்கே பிராமணன் பகுதியிலிருந்து)


"ஏற்பது இகழ்ச்சி" என்கிறார் அவ்வை. இரந்துண்டு வாழ்தல் என்பது இகழ்ச்சியாக கருதப்படுகிறது. ஒவ்வொருவரின் மரண பயத்தையும் மிஞ்சி நிற்கிறது பிறரிடம் நாம் கடன் பட்டு விடுவோமோ, அவர்கள் தயவை எதிர்பார்த்து வாழ நேரிடுமோ என்ற பயம். அதற்காகத் தானே பணமும் சேமிப்பும்!

"இறைவனே உன்னிடம் மாறாத பக்தி, பிறரிடம் கை ஏந்தாத வாழ்வு, அனாயாசமான (எளிதான) மரணம்" இவற்றைத் தவிர வேறேன்ன வேண்டும்!

அனாயாசேன மரணம்
வினாதைன்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபயா சம்போ
த்வை பக்திம் அசஞ்சலாம்


இரந்து வாழும் நிலையல்லவா பிரம்மச்சரியத்தின் கடமை. பிக்ஷை பெறுதல் என்பதே இங்கு எப்படி மேன்மையாக்கப்படுகிறது? என்றால்...

பிட்சை உண்டு வாழ்தல் பிரம்மச்சரியத்தின் கடமை. அவன் தன் கடமையை கர்மயோகியாகச் செய்யும் பொழுது அது உயர்வுக்கே வழிவகுக்கும். உஞ்சவ்ருத்தியும் பிட்சையும் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசப்பட்டவை. உஞ்சவிருத்தி பிரம்மாச்சாரியின் கடமை இல்லை. அது பிராமணனின் கடமை. போர் அடிக்கும் இடத்திலோ அங்கு இல்லாத பொழுது கடை வீதியில் சிதறிக்கிடைக்கும் நெல்லை எடுத்து உண்பதே உஞ்சவ்ருத்தி. உஞ்சவிருத்தி செய்பவர்கள் வேறு எவரிடமும் உணவை வாங்கிக்கொள்ளுதல் கூடாது.

தானம் வாங்கலாம். முந்தைய காலத்தில் மூதாதையர்களுக்குறிய கடனை / காரியத்தை செய்யும் பொழுது அங்கே பிராமணன் ஒருவனுக்கு தானம் கொடுப்பது வழக்கம். தானம் எப்படி வாங்க வேண்டும் கொடுக்க வேண்டும் என்பது சாஸ்திரப்படி தெரிந்து கொண்டு வாங்கிக்கொள்ளுதல் நலம். உதாரணத்திற்கு பசு தானம் வாங்கினால் லக்ஷம் முறை காயத்ரி மந்திரம் சொன்னால் வாங்கியவனின் சுமை குறையும். தானம் பெறுபவனின் தலையில் மிகப்பெரிய சுமை இறக்கி வைக்கப்படும். தானம் கொடுப்பவனின் பாதி பாபங்களும் வாங்குபவனுக்கு போய் சேரும். இதெல்லாம் தான மனப்பான்மையோடு செய்யப்படும் உண்மையான தானத்திற்கு பொருந்தும். தானம் என்பது பிச்சையிடுவதல்ல, தானம் என்பது அன்பளிப்பு அல்ல.

தானம் கொடுப்பதற்கு பரந்த மனசு முக்கியம். பணம் இருப்பதோ இல்லாததோ இங்கு பொருட்டு அல்ல. உன்னிடம் என்ன இருக்கிறதோ அதை கொடு. தானம் கொடுக்கும் பாவத்துடன் கொடு. தானம் கொடுக்கும் பொழுது

* சிரத்தையுடன் கொடுக்கவேண்டும்
* பயத்துடன் கொடுக்கவேண்டும் (பவ்யம் /அடக்கம் என்று கொள்ளலாம்)
* வெட்கத்துடன் கொடுக்க வேண்டும் ('இது என்ன பெரிய தானம்' என்ற கூச்சம் நிரம்பியிருக்க வேண்டும்)
* சந்தோஷத்திடனும் முகமலர்ச்சியுடனும் கொடுக்க வேண்டும்.
* தானம் கொடுப்பதன் அருமை பெருமைகளை அறிந்து கொடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட தானத்தை ஏற்பவனுக்கு நிச்சயம் அதன் சுமை கூடும். அப்போது அவன் தானம் ஏற்றதற்கு பரிஹாரம் செய்து கொள்ளுதல் நலம். தானத்தின் சிறப்பை விளக்கும் பல கதைகள் பலரும் அறிந்ததே. கீரிப்பிள்ளை பிராமணன் ஒருவனை தானத்தை உயர்வாகப் பேசிய கதை நமக்குத் தெரியும். அதுவே சிறந்த தானத்திற்கு உதாரணம். எது இருக்கிறதோ அதையும் இழக்க மனம் துணிந்தால் அதுவே தானம்.

ரந்திதேவன் என்ற ஒரு அரசன். அவன் நாட்டில் பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. அரசனும் மக்களுக்காக வருந்தி உணவருந்தாமல் இருந்தான். மக்கள் மனம் வருந்தி, அரசனே மக்களை வழிகாட்ட வேண்டியவன், அவன் உண்ணாவிட்டால் எப்படி சாத்தியப்படும் என்று எடுத்துக்கூறி அவனை உணவருந்தச் செய்தனர். மிகுந்த வற்புறுத்தலின் பேரில் அவன் முதல் கவளம் உண்ணும் போது வேறொருவன் பசி பொருக்காது பிச்சை கேட்கிறான். அரசனும் சிறிது உணவை தானம் வழங்குகிறார். திரும்பவும் உண்ண முற்படுகிறான் இப்பொழுது பசி பிச்சை கேட்டு இன்னொருவன். இப்படியே அனைத்து உணவையும் தானம் வழங்கிவிட்டு பசிக்கு கொஞ்சமேனும் நீர் அருந்த நினைக்கிறான். அதையும் ஒருவன் இரந்து கேட்க, நீரையும் தானம் வழங்கி விடுகிறான். அதன் பின் இறைவன் கருணை உள்ளம் கொண்டு அவனையும் அவன் நாட்டு மக்களையும் அருள்வதாக புராணக் கதை கூறுகிறது. இறை தரிசனம் பெற்ற அவன் "அஷ்ட சித்திகள் வேண்டேன், பிறவா வரம் வேண்டேன், உலகில் உள்ள துன்பம் அனைத்தும் எனக்கே வந்து சேரட்டும்" என்று கேட்டுக்கொள்கிறானாம். அப்பேர்பட்ட கருணை உள்ளம் கொண்டவன்!

"நான் இருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன் - இன்னும்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்"


(ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா)

September 21, 2010

குங்குமச் சிமிழில் வெளிவந்துள்ள பதிவர் ஷைலஜாவின் நாவல்

"குங்குமச் சிமிழ்" பத்திரிகையில் வெளி வந்துள்ள நாவல்


மலர் போல மனம் வேண்டும்


ஆசிரியர்- ஷைலஜா


வாழ்த்துக்கள் ஷைலஜா. இன்னுமொரு நாவல் உங்கள் கைவண்ணத்தில்.


நாவலை வாசித்தவுடன், கலகலப்பாக ஒரு பதிவு போட வெண்டும் என்று தான் முதலில் நினைத்தேன். கதை இறுதி கட்டத்தில் மளமளவென கனத்து விட்டது. அதன் பின் கலகலப்பாக பதிவிட மனம் இடம்கொடுக்கவில்லை.


"மலர் போல் மலர்கின்ற மனம்" என்றால் 'அன்றலர்ந்த தாமரைப் போல்' என்ற வாக்கியம் எண்ணத்தில் உதிப்பது சகஜம். துன்பத்திலும் துவளாது மலர்கின்ற மனம். அப்படி பட்ட மனம் தான் கதாநாயகிக்கு என்று நினைத்தால், கதாநாயகியை தூக்கி சாப்பிட்டு விட்டு மலர் போல் மலர்ந்து மணம் பரப்புவது வேறு சில கதாபாத்திரங்கள்.


மகளிரை மைய்யமாக வைத்து கதை எழுதியிருக்கிறார்கள். துவண்டு விடாத எண்ணமும், தைரியமும் பெற்ற துணிந்த பெண்களின் கதை. கதையின் மையப் பாத்திரத்துக்கு அமைதியாய் துணை நிற்கும் வேறு பாத்திரங்களின் துணிவு எனக்கு இன்னும் பிடித்திருந்தது.


பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை -நிதர்சனமான உண்மை. வீழ்ச்சியடைந்தவர்களின் கண்ணீர் கதைகள் ஏராளம். குறிப்பாக பங்குச் சந்தையின் சரிவின் போதும், நிதி நிறுவனங்களின் சக்கரவீழ்ச்சியில் பாதிக்கப் பட்ட பல நிறுவனங்கள் சரிந்து அதள பாதாளம் சென்றது. பணவீழ்ச்சியில் பாதிக்கப்பட்டு நின்று போகும் திருமணம் "படிக்காத மேதை" சாயலில் இருந்தது.

மசாலாப் பொடிக்கு பெயர் பொருத்தம் பரவாயில்லை, இருந்தாலும் வாஷிங் சோப்புக்கு வேறு பெயரே கிடைக்கவில்லையா? பெண்ணின் மேல் கொணட பாசத்தால் அவளே அதிர்ஷ்ட தேவதையாக பிறப்பெடுக்கிறாள். அதனாலேயே சோப்பு என்ன, தொழில்நுட்ப பொருட்களின் தயாரிப்பில் இறங்கியிருந்தால் கூட பெண்ணின் பெயரிலேயே தயாரித்திருப்பார்கள்.

ஆசிரியருக்கு எந்தெந்த நடிகர்கள் நடிகைகளையெல்லாம் பிடிக்கும் என்று நாவலைப் படித்து தெரிந்து கொள்ளலாம். கதையில் வலம் வரும் ஏறக்குறைய நிறைய கதாபாத்திரங்கள் நடிக நடிகையர் சாயலில் இருக்கிறார்கள். கதை படமாக்கப்பட்டால் உதவும் என்பதாலா? கதையில் இன்னும் வியாபார நுணுக்கங்களும், சில "டெக்னிகல்" விஷயங்களையும் ஊடே புகுத்தி கனம் சேர்த்திருக்கலாம். தெளிவாக நிதானமாக சென்று கொண்டிருந்த கதையோட்டம் திடீரென அடம் பிடித்து ஆபார வேகத்துடன் திரும்புகிறது. அதே வேகத்தின் முடிந்தும் விடுகிறது.


எல்லாரும் கொல்-னு சிரிக்க, கெட்டி மேளம் முழங்க, ஹீரோயின் வெக்கப்பட ஹீரோ அவள் காதில் காதல் வார்த்தைகள் கிசுகிசுக்க இப்படி முடிச்சாத் தான் கதையில் திருப்தி. நிஜத்தில் அப்படி முடிக்காத சில கதைகள் தான் இன்னும் ஆழமாக பதிகிறது. கதையின் பலமே எதிர்பாராத தருணத்தில் திரையை மூடி, அதே நேரத்தில் நம்பிக்கைக்கும் ஊறு விளைவிக்காமல் வணக்கம் கூறி முடித்திருப்பது தான்.


துன்பத்திலும் துவளாத மனம், பத்து அடி சறுக்கினாலும் இரண்டடி மேலே வைக்கும் திடம், இவை மூலதனமாக கொண்டு பலர் முன்னேறியுள்ளனர். இன்றும் பல பெண்கள் தங்கள் திறமைகளை முடக்கி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் என்பது உண்மை. இப்படிப்பட்ட கதைகள் சாதனை படைக்கத் துடிக்கும் பெண்களுக்கு உற்சாகமும், நம்பிக்கையும் ஊட்டுகிறது. சாதனைப் பெண்களைப் பற்றி தகவல் சேகரித்து நமக்கு தொடராய் தந்துள்ள சாதனைப் பெண் ஷைலஜா அந்த தாக்கத்திலிருந்து மீள்வதற்கு முன் அவற்றையெல்லாம் ஒரு குமிழில் (சிமிழில்) நிரப்பி நமக்கு இந்த நாவலை தந்துள்ளார்.

குங்குமச் சிமிழ் புத்தகத்தில் தனது நாவல் வந்திருப்பதாக சொன்னது முதல் நானும் வாங்கி விட நினைத்திருந்தேன். "இவளெல்லாம் எங்க வாங்கி படிக்க பொறா" என்று நம்பிகை இழந்துவிட்டதாலோ என்னவோ, நாவல் மென்நூல் வடிவில் வரப் பெற்றிருப்பதையொட்டி "என் நாவலைப் படிச்சுட்டு சொல்லு" என்று அன்பான மடல் காலையில் வந்திருந்தது. எழுத்துலகில் தனக்கென பெயர் நாட்டிய பிறகும் ஷைலஜாவின் மாறாத நல்ல மனமும் பிள்ளை குணமும் தான் தலைப்பிற்கும் காரணம் போலும்.

நன்றி.

September 20, 2010

சத் சங்கம் (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2லிருந்து தொகுக்கப்பட்டது)

ஒவ்வொரு சிந்தனையுமே அலைளை எழுப்ப வல்லது. சிந்தனை மட்டுமன்றி செயல், வார்த்தைகள் என அனைத்திற்கும் அலைவடிவம் உண்டு. அது சுற்றுப்புறத்தை பாதிக்கின்றது.

ஆதிஷங்கரர் மண்டல மிஸ்ரரைத் தேடி வருகிறார். மண்டல மிஸ்ரர் சிறந்த கர்ம யோகி. அவர் வீட்டிற்கு வழிகேட்டு வரும் ஆதிஷங்கரரை "எந்த வீட்டில் கிளிகள் "ஸ்வதப்ரமாணம் பரத ப்ரமாணம்" பொன்ற விஷயங்களை அலசுகின்றதோ அதுவே அவர் வீடு என்று காண்க" என்று வழிகாட்டுகின்றனர் மக்கள்.

{ ஸ்வதப்ராமணம் என்றால் அதுவே தன்னை சுயமாக விளக்கிக்கொள்வது (it is self explanatory) பரதப்ரமாணம் என்றால் வேறொரு வஸ்து அதனை விளக்குவது (needs another object to throw light ) (இதனைப் பற்றி இன்னும் விளக்கம் தெரிந்தவர்கள் விளாக்கலாம் அல்லது வலைப்பதிவு சுட்டி இருந்தால் இடலாம். நன்றி) }

அதாவது அங்குள்ள கிளிகள் கூட மேதாவிலாசத்துடன் விளங்குகிறது. பெரிய தத்துவங்களை ஆராய்கிறது. ஏனென்றால், அங்கு பேசப்படும் பேச்சும், எண்ண ஒலி அலைகளும் உயர்வான விஷயத்தை ஊக்குவிப்பதாய் அமைகிறது. இதன் காரணத்தை யொட்டியே நல்லதை கேட்டு பேசி செய்ய வேண்டும் என்று வேண்டப்படுகிறது. வீட்டில் தொலைககாட்சி பார்க்கலாம். அதே நேரத்தை வேறு விதமாக பயன்படுத்தி நல்லவற்றை பேசி படிப்பது உத்தமம். உபன்யாசம் கேட்பது சிறந்தது. அங்கு சொல்லப்படும் கதை நம் மனதில் சாதகமான அலைகளை எழுப்பவல்லது. தற்கால மனிதனின் குணநிலைக்கேற்ப பாகவதர்களும் கற்பனையை, ஸ்லோகங்களை, சாஹித்தியத்தை, பாடல்களை ஊடே சேர்த்து சுவையாக உபன்யாசம் செய்கின்றனர். நடுநடுவே ஆங்கிலம் கலந்து ஜனரஞ்சகம் ஆக்கப்படுகிறது. கலை இன்னும் அழியப்படாமல் நிறைய இடங்களில் தற்காலத்திற்கேற்ப ஒப்பனையுடன் தொடரப்பட்டுதான் வருகிறாது. ஆனாலும் இன்று நமக்கெல்லாம் இவற்றை கேட்பதற்கு நேரம் ஒழிவதில்லை. ஒதுக்குவதில்லை. சொற்பொழிவின் ஊடே சில நேரங்களில் நம் சந்தேகங்களுக்கோ அல்லது பிரச்சனைகளுக்கோ கூட தீர்வு கிடைக்கலாம்.

இது போன்ற கலைகளை அழியவிடாமல் வளரவிட வேண்டும். என்னைப் பொருத்த வரை கோவில்களில் கூட உபன்யாசங்கள் குறைந்து வருவதாக நினைக்கிறேன். ஆனால் அதை ஈடு செய்யும் வகையில், தொலைக்காட்சியில் காலை / மாலை வேளைகளில் சில சானல்கள் உபயாச சொற்பொழிவுகளை ஒளிபரப்புகின்றனர். ஆன்மீகம் / பஜனை / சமய வழிபாடுகள் இவற்றை மட்டுமே ஒளிபரப்பும் சானல்களும் உண்டு. அவ்வப்பொழுது கண்டு கேட்டு பயன் பெறலாம்.

ஸ்த் சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி

September 17, 2010

கிரஹணம் முதல் கிரகம் வரை (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2ல் இருந்து)


சூரியனும் சந்திரனும் பூமியும் ஒரே கோட்டில் நின்றால் அது கிரஹணம். நம் ஜாதகத்தில் நவ கிரஹங்களும் சாயா கிரஹங்களான ராகு கேது உட்பட ஒன்பதும் கிரஹ நிலைகள், athan வீர்யம், வீழ்ச்சி, உச்சம், பார்வை என பலவும் கணிக்கப்பட்டிருக்கும்.

அண்டவெளியில் என்னவெல்லாம் நிகழ்கிறதோ அது ஜீவராசிக்குள்ளும் நிகழும் என்று கூறுவதுண்டு. இதன் அடிப்படையிலேயே நம் ஜோசிய ஜாதக கணிப்புகள் அமைந்துள்ளன. எங்கோ எதிலோ அண்டத்தில் நிகழும் நிகழ்வுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்றால், அங்கு பெரிய (macro) அளவில் நிகழும் அனைத்தும் ஒவ்வொறு சிறு ஜீவராசியின் உள்ளும் சிறு அளவில் நிகழ்கிறது என்கின்றனர். "பிண்டத்துள் அண்டம்" என்பதே ஆன்மீக தத்துவமும். வேளியே வெளி ஆராய்ச்சியில் இறங்கி விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பும், தன்னுள் இறங்கி ஆராயும் ஞானமும் எங்கோ எப்படியோ பின்னிப்பிணைவதே இறைத் தத்துவதின் ஆணிவேர்.

அப்படி இருக்கையில், கிரஹண நிகழ்வுகள் நம்முள்ளும் சிறிய அல்லது பெரிய மாற்றத்தை தற்காலிகமாக உண்டுபண்ணலாம். (அல்லது பண்ணாமலும் போகலாம்). கிரஹண நேரங்களில் இறைவனை தியானித்தலே சிறப்பு. மற்றபடி கிரஹண நேரத்தில் பிள்ளை பிறந்தால் அது குற்றம் ஆகாது. கிரஹண நேரத்தில் இன்புற்று இருந்து கர்பம் தரித்தால் அப்படிப்பட்ட சிசுவிற்கு தோஷம் இருப்பதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி கர்மவினை கடுமையாக இருந்தால் ஜோதிடமும் ஜாதகமும் அதை சுட்டிக்காட்ட வல்லவை. எப்பேர்பட்ட பரிகாரமும் அதனை தடுக்க முடியாமற் போகலாம்.

கணித மேதை பாஸ்கராச்சார்யாரின் வாழ்வில் நடந்ததே இதற்கு சான்று. அவரின் பெண் லீலாவதிக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதை அறிந்து, அதனை தடுக்கும் பொருட்டு, பல ஆராய்ச்சிக்கு பின்னர், குறிப்பிட்ட நேரத்தில் திருமணம் நிகழ திட்டமிட்டிருந்தார். அக்கணத்தில் திருமணம் நிகழ்ந்தால் மாங்கல்யம் பலம் பெறும் என்று கணித்து அதன் படி திருமண ஏற்பாடுகள் நடைபெற்று திருமணமும் குறிப்பிட்ட நேரத்தில் முடிந்தது. ஆனாலும் லீலாவதியின் கணவன் இறந்து விடுகிறான். எங்கேயோ தவறு நேர்ந்திவிட்டிருக்கிறது புரிந்தது. கடிகா / கடிகை என்பது அக்காலத்தில் நேரம் கணிக்க உதவிய கருவி. அதன் அருகில் எட்டிப்பார்த்து விளையாடிக் கொண்டிருந்த லீலாவதியின் மூக்குத்தி கடிகையினுள் விழுந்து விட கடிகையின் நேர கணிப்பு குழம்பி, தவறாகி விடுகிறது. மனித முயற்சிக்கு மேற்பட்ட கர்மவினை தான் இறுதியில் வாழ்வை வழிநடத்திச் செல்கிறது!

நம் வினையே நம்மை ஆட்டுவிக்கிறது. நம் வினையை நம் ஜாதகத்திலும், துணைவன் / துணைவியின் ஜாதகமும் மேலும் நமக்கு பிறந்த குழந்தைகளின் ஜாதகமும் சுட்டிக்காட்ட வல்லவை. பிறந்த குழந்தை நம் வினையை சுட்டிக்காட்டுகிறது. அல்லது நம் வினைக்கேற்ப சிசு பிறக்கின்றது. அது பிறந்த வேளையால் நாம் உயர்வதும் தாழ்வதும் இல்லை. அதனால் யாரையும் இராசி இல்லாதவர்கள் என்றோ அல்லது மிகுந்த ராசிக்காரர்கள் என்றோ அபிப்ராயப் படுவது அறிவீனம். அவரவர்களின் உயர்வும் தாழ்வும் அவரவரின் கர்மாவைப் பொருத்தே அமைகிறது. வினைப்பயனை வெல்லக்கூடியது பிரார்த்தனையும் இறைவன் அருளும் மட்டுமே. வினை கடுமையாக இருந்தால், மகத்தான பிரார்த்தனையும், அருளும் வேதனையை மட்டுப்படுத்த செய்யலாமேயன்றி அகற்றுவது மிகவும் கடினம். கடும் வினையின் காரணமாக பிரார்த்தனை செய்யும் மனநிலையும் இயல்பும் கூட இல்லாமல் போகலாம்.

September 15, 2010

(குட்டிக் குட்டி கிறுக்கல்கள் - 5) மௌனத்தின் அலறல்



உதடுகள் உயிறற்று உலர்ந்திருந்தாலும்
உயிரோசையில் ஓய்வற்ற அனத்தல்
பழையது புதியது
பத்து வருடத்து முந்தைய தூசு
சின்ன வயது பல்லாங்குழி
வயது வந்ததும் வந்த ஈர்ப்பு்
முற்றிலும் மெய் மறந்த முதல் காதல்
இதுவும் அதுவும்
இன்னும் சிலவும்
நினைவு கிடங்கில்
கூச்சலிடும் சப்தங்கள்
விரதங்களைக் கீறிவரும் ஓசைகள்
உள்ளொன்று வைத்து புறமொன்று
போர்த்தியிருக்கும் பொய் முகத்துடன்
ஓயாமல் ஒலிப்பதால்
மௌனம்
அர்த்தமற்றது

September 14, 2010

திரையிசைப் பயணங்கள் - 4 (ஆசையே அலை போலே)

படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடல்: கவிஞர் கண்ணதாசன்


பாடலைக் கேட்க சுட்டுக:

http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/aasaialai.rm

ஒவ்வொரு முறை கேட்கும் போதும் சில வரிகளின் ஆழம் புதிய பரிமாணத்துடன் மிளிரும். எல்லா சூழ்நிலைக்கும் சரியான வரிகளாக அமையும். மனித வாழ்வின் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் மூன்றே மூன்று ஆசைகள்தாம் என ஞானிகள் முதல் சாமான்யர் வரை பலரும் கண்டுள்ளனர். அவற்றை மூன்றே மூன்று தொகுப்பிற்குள் அடக்கி விடலாம். எப்பேர்பட்ட ஆசையாக இருந்தாலும் இம்மூன்றில் அடங்கி விடும்.
மண்/ஆளுமையின் ஆசை
பெண்/ஆண் ஆசை
பொன்/பொருளின் ஆசை

இவைகளுள் அடங்கும். இந்த ஆசைகளே இரண்டு விதமாக செயல்படும் திறமையுடையது. இவையே இன்பத்தையும் தரவல்லது துன்பத்தையும் வரவழைப்பது. இவற்றால் கட்டுண்டு நம் மனமும் எப்படி எல்லாம் ! அலை போல் மேலும் கீழும் நம்மை ஆட்டுவிக்கிறதல்லவா இந்த ஆசைகள்!

ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே


இந்த உண்மையைக் கண்டாலும் கேட்டாலும் உணர்ந்தாலும் கூட பருவம் பொல்லாதது. அங்கு காதல் கொண்ட ஆணின் மனமும் பெண்ணின் மனமும் ஆசையின் பூர்த்தியால் களிக்கிறது. ஆசையை நிறைவேற்றிக் கொண்ட ஓடம் போன்ற மனமும் உச்சத்தில் ஆடி வெல்லமாய், வெள்ளமாய் களிக்கிறது.

பருவம் என்னும் காற்றிலே ..பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்...
சுகம் பெறுவார்...
அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே......... யார் காணுவார்


நேற்றைக்கு சுகம் பெற்று இன்று பாதை மாறினாலும் சுகத்தின் சுவையும் நினைவும் கூட மனிதனை வாழ வைத்து விடுவது. வாழ்கை முதுமையின் போர்வையில் நுழைந்து ஆசுவாசப் படுத்தி, துயில் கொள்ள எத்தனிக்கும் முன், அனைத்து சுகமும், துக்கமும், ஆசையலையின் உச்சமும், போராட்டமும் நினைவில் வந்து போகும். வாழ்கை தீர்ந்ததாக நினைக்கும் சாமான்ய மனிதனும் நேற்றைய "வடிவங்களை" நிகழ்வுகளை எண்ணத்திலேற்றி அதில் இன்பம் கொள்கிறான். அப்படி கொள்ளும் இன்பத்தில் சுகமா? அல்லது இளமைக் காலங்களின் அதிசய உலகம் சுகமா? சில நேரங்களில் நிஜத்தை விட அசை போடும் நினைவு சுகம் தரும் போலும்.

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்...
இளமை மீண்டும் வருமா.... மணம் பெறுமா.....முதுமையே சுகமா...
காலம் போகும் பாதையை இங்கே...........யார் காணுவார்

அலையுச்சத்தில் மகிழ்வது மட்டுமா வாழ்வு? ஓடம் துக்கம் எனும் சூறைக்காற்று மோதினால் துவண்டு பலமிழந்து விடுகிறது. மிகுந்த சிரமத்துடன் படகை மெல் செலுத்த வேண்டியுள்ளது. மனித மனத்தின் சுகமும் துக்கமுமே வாழ்கையை முன்னேற்றுவதும் அல்லது தேங்கச் செய்வதுமான வல்லமை படைத்தது.

வரவு என்று இருந்தால் செலவு இருக்கத்தானே செய்யும். உலகமே இரட்டைத் தன்மையுடையது. நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய வரிகளைக் கவிஞர் பாடியுள்ளார். சுகத்தை வரவு என்று சொல்லவில்லை. சுகம் தான் செலவாம். துக்கம் நமக்கு வரவு. நாம் எக்கடமையை முடிக்க பூமியில் பிறப்பெடுத்துள்ளோம் என்று அறியோம். நாளை நடப்பதும், காலம் வகுத்த கணக்கும் தெரியாது. ஆனால் துக்கம் தரும் பாடமும், படிப்பினையும் நமக்கு வரவு. ஏனெனில் துக்கம் நம்மை செம்மை படுத்தும். சுகம் சேமிப்பில் வைத்த புண்ணிய கணக்கை செலவிடுவதாகிறது. துக்கம் நம்மை மேன்மை படுத்தி செப்பனிடுவதால் 'வரவு' என்று வரவேற்கிறார் கவிஞர். எத்தகைய தெளிவுள்ள மனிதனுக்கு இப்படிப் பட்ட சிந்தனை பிறக்கும்? வெகு சொற்பம்.

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு...சுகம் செலவு....இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே........யார் காணுவார்


"இருப்பதே கனவு" - ப்ரபஞ்சமே நிலையாமை தத்துவத்தில் மாறிக்கொண்டே இருப்பதால், இன்று இருப்பதும், நாளை இருப்பதும் நிலையில்லை. இந்த வாழ்வை செம்மையாக வாழ்ந்து உயர்நிலை அடைந்தால் இந்த வாழ்வு இங்கு வாழ்ந்ததும், இங்கு கண்ட காட்சியும், நிகழ்வும் கூட ஒரு கனவு தானே?!

இப்பாடலை கவிஞர் ரயில்வே க்ராஸிங் சிக்னலுக்காக காத்திருந்த போது சிகரெட் பாக்கெட்டில் எழுதினாராம். திருச்சி லோகநாதனின் குரலும் கே.வி மஹாதேவன் இசையும் அர்த்தம் நிறைந்த தத்துவமும் மோனத்திற்கே இட்டுச் செல்கிறது.


September 13, 2010

பிரதோஷம் ( சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2ல் இருந்து தொகுக்கப்பட்டது)

பிரதோஷம் என்றால் சந்தியாக்காலம். சூரியம் அஸ்தமிக்கும் நேரம் பிரதோஷ காலம். பாற்கடலை கடைந்து அமுதம் பெற விழைகின்றனர் அசுரர்களும் தேவர்களும். வாசுகி எனும் பாமப்யே கயிறாகக் கொண்டு மந்திர மலையில் மத்தாக்கி பெரும் பாற்கடலைக் கடைகின்றனர். அமுதின் ஊடே நஞ்சும் எழும்ப, வாசுகி என்ற பாம்பு கக்கிய விஷமும் சேர்ந்து கொண்டு எங்கும் கடும் விஷம் கருமையாய் எழும்பி நின்றது. அஞ்சிய தேவர்களும் அசுரர்களுக்கும் ஈஸ்வரன் கருணை உள்ளம் கொண்டு அபயம் அளித்தார். தம் தொண்டர் சுந்தரரை விட்டு விஷம் கொணரச் செய்தார். சிவன் அதனை உட்கொண்ட பின்னர், சற்றே கலங்கிய பார்வதி, சிவனின் தொண்டையில் அழுத்தி விஷத்தை கீழறங்காமல் செய்து விடுகிறாள். திருநீலகண்டன் ஆகிய ஈசனின் கருணை உள்ளத்தை போற்றித் துதித்து சகல ஜீவராசிகளும் வழிபட்ட அந்த நேரம் பிரதோஷ நேரம்.

சகலரையும் காத்து நின்ற ஈசன் மனம் குளிர்ந்து அனைவரின் பயமும் வருத்தமும் போக நந்தி பெரிய ரூபம் எடுத்து நிற்க அதன் கொம்பின் நடுவே ஆனந்த நடனம் புரிகின்றார். இதன் பொருட்டே பிரதோஷ காலத்தில் நந்தியின் கொம்பின் வழியே இறைவனை

தரிசிப்பது சாலச் சிறந்தது. வளர்பிறை / தேய்பிறையின் பதிமூன்றாம் நாள் பிரதோஷமாக பாவிக்கப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் மூன்றரை நாழிகையும் அஸ்தமனம் ஆன பின் மூன்றரை நாழிகையும் பிரதோஷ காலம். இந்நேரத்தில் ஈஸ்வர தியானத்தில் இருப்பது சிறந்தது.

பிரதோஷம் என்பது ஒடுங்கும் நேரம் என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது. ஜீவராசிகள் தங்கள் கூட்டுக்குள் அமிழ்ந்து அடங்கும் நேரம். பிரதோஷத்தை, நித்திய ப்ரதோஷம், பக்ஷப் ப்ரதோஷம், மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என்று பலவாக வகைப் படுத்துகின்றனர்.

நித்திய ப்ரதோஷம்: என்பது தினமும் சந்தியா நேரத்தில் சிவனை வணங்கி அவன் தியானத்தில் இருப்பது.

பட்சப் பிரதோஷம்: சுக்லபட்ச(வளர்பிறை) சதுர்த்தி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

மாதப் பிரதோஷம்: க்ருஷ்ணபக்ஷ (தேய்பிறை) திரயோதசியில் பிரதோஷம் அனுஷ்திப்பது

மஹா பிரதோஷம்: க்ருஷ்ணபக்ஷ திரயோதசி சனிக்கிழமை அன்று வந்தால் அன்று மஹா பிரதோஷம்

பிரளய பிரதோஷம்: மஹா பிரளய காலத்தில் அண்டசராசங்களும் அழிந்து அனைத்தும் சிவனிடம் ஒடுங்கும் நேரம், பிரளய பிரதோஷம்.

பிரதோஷத்தின்போது அப்பிரதக்ஷிணமாகவும் பின்னர் பிரதஷிணமாகவும் மாறி மாறி மூன்று முறை (பொதுவாகவே சிவனை மூன்று முறை வலம் வருதல் சிறப்பு) வலம் வருவது சோமசூத்திர வலம் வருதல் எனப்படுகிறது. இது பிரதோஷ காலத்திலோ அல்லது எந்த நாளிலும் கூட செய்வது உத்தமம்.

சிந்தையும் நித்தியம் அஸ்தமனத்தின் போது ஈஸ்வரனை தியானித்தல் மிக நல்ல சித்தியும், அமைதியும் கிட்ட வழிவகுக்கும். அண்டங்களை அழித்தலை (இங்கே கூட்டுக்குள் ஒடுக்குதல் என்று கொள்ளவேண்டும்) அல்லவா சிவனின் பிரதான தர்மம். பிரளயத்தில் அனைத்து ஜீவராசிகளையும் தன்னுள் ஏற்று பின்னர் மீண்டும் தோன்றச் செய்கிறார் சர்வேஸ்வரன். அப்படிப்பட்டவனை வணங்கி அவன் கருணை பெறுதல் வீடுபேறு எய்த சுலபமான வழி.

ஆசிரியர்கள் பகுதி - 2 - பழைய பதிவு

நம் ஒவ்வொருவரின் பிறப்பிலும் பல அர்த்தங்கள் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாமும் மெருகேறி, நம்மை செப்பனிட்டுக் கொள்ள விழைகிறோம். எத்தனையோ பள்ளங்கள், தோல்விகள், விழுந்து எழும் சிராய்ப்புகள். இத்தனையும் மீறி நிமிர்ந்து நின்று, கணப்பொழுதும் கற்கும் பாடத்தால் நம்மை உயர்த்திக் கொள்வதே வாழ்வின் குறிக்கோள்.

இதற்கு ஆசிரியர்களின் பங்கு சொல்லி மாளாதது. நான் கூறுவது பாடதிட்டத்தை சிந்தையில் புகுத்தும் ஆசிரியர்கள் மட்டுமல்ல. பல்வேறு முகமூடிகளின் ஊடே ஒளிந்திருக்கும் பலரின் செயல், சொல், சில நேரம் நாம் பட்டு அனுபவிக்கும் படிப்பினை என எல்லாமே ஆசிரியர்கள் தான்.

காலம், நேரம், அனுபவம் இவை தான் முன்னோடி ஆசிரியர்கள். இவை கற்றுக்கொடுக்காதது கொஞ்சமே. அவ்வப்பொழுது பல ஆசிரியர்கள் பாடங்களை இன்னும் மெருகூட்டுகிறார்கள்.

குழந்தை பிராயம் முதல் எத்தனை பாடங்கள்! கீழே விழுந்தால் அடி. முதல் பாடம். தீ சுடும் அடுத்த பாடம். பாடங்கள் என்றும் கசக்கும். சிறு குழந்தை முதல், பெரியவர் வரை பாடங்களை என்றும் கசப்புடனேயே அசை போடுவர். ஆனால் அவற்றால் நாம் பெற்ற பயன் மட்டும் மிகவும் தேவையான படிப்பினை. அதனை அளித்த அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் என்ற போர்வையில் விளங்கும் அனைவருக்கும் நாம் கடமைப் பட்டுள்ளோம்.

முதல் ஆசிரியர் அம்மா தான். நானென்று இல்லை அனைவரும் கூறும் மறுக்க முடியாத உண்மை. உலகை அறிமுகப்படுத்துபவள். அப்பாவை உற்றாரை, உறவினரை, நல்லதை, கெட்டதை, அறிமுகப்படுத்தி நம்மை உலகை எதிர்கொள்ளத் தயாராக்குபவள். அவள் சொல்லிக்கொடுக்காததை படிப்பினையாய்ப் பிறரிடம் புரிந்து கொள்ளும் பொழுது சில நேரம் வலிக்கும்.

காலமும், சூழ்நிலையும், நிறையவே சிந்திக்க வைக்கும் பல படிப்பினைகள் தந்ததைப் பற்றி நான் யோசிக்கும் முன், எனக்கு நினைவிற்கு வருபவர்கள் சில பள்ளி ஆசிரியர்களும்.

எனக்கு நினைவாற்றல் நிரம்பக் கம்மி. எனினும் என்னுடைய ஒவ்வொரு ஆசிரியை, தோழி, தோழர்கள் என பலரின் பெயரும் முகமும் இன்னும் நினைவில் நின்றாடும் ஒன்று.

எல்.கே.ஜி.யில், 'கீதா' மிஸ் நினைவுகோரும் பொழுது வேறெதுவும் நெகிழ்ச்சியாகவோ, இகழ்ச்சியாகவோ தோன்ற வாய்ப்பே இல்லை. ஏனெனில் இவர் எங்களுக்கு பாடம் புகட்டிய நினைவு இல்லவே இல்லை. ஸ்கேல் ஒன்று வைத்திருப்பார். பெஞ்செல்லாம் இருக்காது. தரையில் அமர்ந்திருப்போம். என்ன செய்வோம் என்றும் நினைவில்லை. ஏ,பி.சி சொல்லிக் கொடுத்திருக்கலாம் (சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும்). சற்று நேரத்திற்கெல்லாம் எல்லோரும் கட்டாயமாகப் படுத்து விட வேண்டும். ஸ்கேல் வைத்துக் கொண்டு வலம் வருவார். யார் கண்ணை மூடவில்லை என்று மிரட்டிக் கொண்டே வருவார். ஆனால் இவரிடம் யாருக்கும் பயமே இல்லை. சாந்தமான முகம். கோபம் வரவே வராது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்யலாம். அதனால் அரைக் கண் மூடி, தூங்குவது போல் நான் நடித்தது நன்றாய் நினைவிருக்கிறது. ஒல்லியாய் குச்சியாய் வெள்ளையாய் தேகம். ஒல்லியாய் குச்சியாய் நீளமாய் முடி. பின்னலிட்டிருப்பார். மாமியாருக்கு வேண்டியதை செய்து விட்டு, பொழுது போகாத நேரத்தில் (ஊதியத்திற்காகவும்) எங்களுடன் மாரடித்தார் என்று இப்பொழுதும் தோன்றுகிறது. அப்பட்டமான நடுத்தர வர்க்க முகம். எல்.கே.ஜியெல்லாம் தாண்டிய பின், ஐந்தாம் வகுப்பு வரை இவரை பலமுறை பார்த்திருந்தாலும் ஒரு முறை கூட, மாணவ மாணவிகளைப் பார்த்து புன்னகைத்ததே இல்லை. இவரை பற்றி ஏன் எழுதுகிறேன் என்பதற்கு ஒரே காரணம் தான். என் பள்ளி வாழ்க்கையின் *முதல் ஆசிரியை* என்பதால் மட்டுமே.

அடுத்து சியாமளா மிஸ். கருப்பாய் குள்ளமாய் இருப்பார். இவருக்கு பாபு என்று ஒரு மகன் உண்டு. அவனும் என்னுடன் யூ.கே.ஜி படித்தான். என் பக்கத்தில் உட்காருவான். பென்சில் ஸ்லேட் என எல்லாவற்றையும் பிடிங்கிக் கொண்டுவிட்டு அழவிடுவான். குறும்பு கொப்பளிக்கும் அவன் முகத்தில், நான் அழும் பொழுது அப்படி ஒரு திருப்தி தெரியும்! அடிக்கடி சியாமளா மிஸ்ஸிடம் போய் கோள் மூட்டிவிடுவேன்; 'பாபு இப்படி செய்யறான் மிஸ்!' என்று. அவரும் அவனைக் கண்டிப்பார். ஒரே ஒரு முறை, ஏனென்று நினைவில்லை, எதோ தவறு செய்து விட்டதால் இருக்கலாம். என்னை கூப்பிட்டு ஸ்கேலால் 'படீர்' என்று ஒரு அடி உள்ளங்கையில் கொடுத்தார். பள்ளி ஆசிரியர்களிடம் நான் வாங்கிய இரண்டு அடிகளில் முதல் அடி, இவர் கொடுத்தது தான். ரொம்ப அவமானமாய் இருந்தது. அன்று முழுக்க குனிந்த தலை நிமிராமல் வகுப்பில் இருந்தது நினைவில் இருக்கிறது.

பாவாடை தாவணியில், பதினெட்டு வயது மிஸ் ஒருவர் எங்களுக்கு பாடம் எடுப்பார். அப்பொழுது நாங்கள் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். எனக்கு அரவிந்த், சத்ய மூர்த்தி என்று சில நண்பர்கள் இருந்தனர். இவர்களுடன் கடைசி பெஞ்சில் அமர்ந்திருப்பேன். டீச்சரை கிண்டல் அடிப்பது, கமுக்கமாய் சிரிப்பது என்று நல்ல காரியங்களில் அவ்வயதில் ஈடுபட்டிருந்தேன். இந்த அழகான பதினெட்டு வயது டீச்சரின் பெயர் ப்ரேமா. முகத்தில் பரு இருக்கும். சற்றே பூசினாற் போன்ற தேகம். எல்லா மிஸும் சுமாராய், வயதானவராய் (comparitively) இருக்கும் நேரத்தில் இவர் மட்டும் சின்னப் பெண்ணாய் பளிச்சென்று இருப்பார். நீள அடர்த்தி முடி. இவரை கிண்டல் செய்வது எங்களின் பொழுது போக்கு. ஏதேனும் துர்நாற்றம் வருவது போல் அர்விந்த் மூக்கை மூடிக் கொள்வான். உடனே இன்னொருவன் "ப்ரேமா மிஸ் குளிக்காம வந்துட்டாங்களா" என்பான். நான் கிக்கிபிக்கி என்று இளிப்பேன். இப்படி அவர் எங்களைக் கடக்கும் பொழுதும் வேண்டுமென்றே நிறைய பேசுவோம். அதெல்லாம் அவரின் காதில் விழாதா, அல்லது விழுந்தாலும் கண்டு கொள்ளாமல் இருந்தாரா என்பது இன்று வரை மர்மம்.

சாவை பற்றியும், சோகத்தை பற்றியும் நிறைய தெரியாது தான். முதன் முறை அன்று தான் கேட்டோம்.

"சில்ரென், இன்னிக்கு உங்களுக்கு லீவ். ப்ரேமா மிஸ்க்காக எல்லாரும் எழுந்து நிக்கறீங்களா?"

"ஏண்டா சத்யமூர்த்தி என்னாச்சு?"

"ப்ரேமா மிஸ் செத்து போய்ட்டாங்களாம்!"

"அப்டீன்னா"

"தெரில. ஆனா இனிமே வரமாட்டாங்க."


வீட்டிற்கு சென்று நிறையவே அழுதேன். ப்ரேமா மிஸ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுவிட்டிருந்தார்கள். (காதல் தோல்வியாய் இருக்கலாம்.... இல்லை பரிட்சையில் பெயில் ஆனார்களோ என்னவோ) வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொன்னேன். "ரொம்ப கிண்டல் பண்ணினோம் மிஸ்ஸை.. இனி வரவே மாட்டாளா" என்று.

ஒரு வாரம் எல்லோருமே சுரத்தில்லாமல் இருந்தோம். அதன் பிறகு மீண்டும் சாவு என்ற வார்த்தை மறந்து போனது. அதைப்பற்றி அதிகம் யோசிக்கவும் இல்லை. ஒரு மாதத்திற்குப் பிறகு அர்விந்த் "இங்க தான் ப்ரேமா மிஸ் தூக்கு போட்டுட்டாங்க" என்று எங்களை பயமுறுத்த, ரொம்ப டென்ஷனோடு இரண்டாம் வகுப்பு உத்திரத்தைப் பார்த்து, அந்த பயத்திலேயே ப்ரேமா மிஸ்ஸின் சோகத்தை மறந்து போனோம்.

(இன்னும் வரும்)

September 08, 2010

கூடு விட்டு கூடு பாய்தல் ( சோவின் எங்கே பிராமணன் - பகுதி 2ல் இருந்து கோர்கப்பட்டது)

உடல் அநித்தியம், ஆன்மா நித்தியம், உடலானது உயிர் தங்கும் கூடு. 'கூடுவிட்டு கூடு பாய்தல்' பெரிய சித்தர்களால் ஞானிகளால் செய்யக்கூடிய சித்திகளுள் ஒன்று. இன்னொருவரின் உடல் தாங்கி நின்ற போதும், ஆன்மா வேறுபடுவதால் (நிற்க: ஆன்மா வேறுபடாது என்றாலும், தனிப்பட்ட கர்ம பதிவுகளைத் தாங்கிய ஜீவ-ஆத்மா என்று கொள்ளலாம்) நடை உடை பாவனை குணம் முதலியவை வேறுபடுவதால் தங்கியிருப்பது வேறு ஒரு ஆன்மா என்று கண்டுகொள்ளலாம்.

"கூடுவிட்டு கூடு பாய்தல்" முக்கியமாக சித்தர்கள் வரலாற்றில் சர்வசாதாரணமாய் சுட்டிக்காட்டப்படும். ஆதிஷங்கரர் இதே முறையை கையாண்டு, விடையுணர்ந்து நிபந்தனையில் வென்ற சரித்திரம் அனைவரும் அறிந்ததே. பாம்பாட்டி சித்தரும் கூடுவிட்டு கூடு பாய்ந்து சில ஞான உபதேசங்களை உபதேசித்தார். சித்தர்கள் இச்சித்தியை உயர்ந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தினர் என்பது நினவில் கொள்ளத்தக்கது.

பெயருக்கேற்றார் போல் பாம்பாட்டி சித்தர், பாம்பை பிடிப்பது, படமெடுத்து ஆடச் செய்வது, அவைகளில் விஷத்தை சேமித்து விற்பது இதையே தொழிலாகக் கொண்டிருந்தார். பாம்புடன் பழகுவதால் அவருக்கு விஷமுறிவு மூலிகைகளெல்லாம் அத்துபடி. அவ்வூரில் பாம்பு கடிக்கு சிறந்த வைத்தியராகவும் திகழ்ந்தார். பாம்புகளைப் பற்றிய ஆராய்ச்சியிலும் இறங்கினார். மருதமலைப் பகுதியில் விஷவைத்திய ஆய்வுக் கூடம் ஒன்றும் துவங்கினார்.

ஒரு சமயம் நவரத்தின பாம்பு ஒன்று மருதமலைப் பகுதியில் வசிப்பதாகவும், அதன் நஞ்சு மிகப்பெரிய சித்து வித்தைகளைச் செய்யும் திறன் கொண்டது என்றதால் அதனை பிடிது விட உறுதிபூண்டு மருதமலைக் காட்டிற்கு சென்றார். இவர் தேடும் பணியில் மும்முரமாக இருக்கும் தருவாயில், பலத்த சிரிப்பொலியுடன் பிரகாச உருவம் தாங்கி சட்டை-முனி சித்தர் பாம்பாட்டி சித்தர் முன் தோன்றினார்.

இவர் பாம்பை தேடுவதைப் பார்த்து சிரித்தபடி, "நவரத்தின பாம்பை நீயே உனக்குள் வைத்துக்கொண்டு வெளியே தேடுகிறாயே இது பயனற்ற செயல்தானே" என்றார்.

"மிகுந்த உல்லாசத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு பாம்பு உன் உடலுக்குள் குடியிருக்கிறது (பாம்பாக உருவகப்படுத்துவது உறங்கிக்கொண்டிருக்கும் குண்டலினி ஷக்தியை) , உன் உடலில் மட்டுமன்றி எல்லோர் உடலிலும் குடியிருக்கிறது, உன் உடம்புக்குள் இருக்கும் அப்பாம்பை ஆட்டுவிப்பவன் தான் அறிவாளி. அதனை அடக்கி ஆளக்கூடியவர்கள் தான் சிறப்பு மிக்க சித்தர்கள் எனவே வெளியில் இருக்கும் அந்தப்பாம்பை விட்டு விட்டு, உன்னுள் இருக்கும் இந்தப்பாம்பை அடக்க வழி தேடு" என்று அருள் கூர்ந்தார். மேலும், 'இறைவனை உணர்ந்து பாடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும், குண்டலினி விழித்து எழும், தியானம் சித்திக்கும்ம். மனிதனுள் இறைவனைக் காணும் ரகசியம் இதுவே' என்கிறார்.

பாம்பாட்டி சித்தர் பக்குவம் அடைந்து இனி இப்பாதையை விட்டு விலகாத யோகம் பயில்வேன் என்று உறுதிபூண்கிறார்.

"அப்பொழுதும் நீ பாம்புகளை பிடித்துக்கொண்டிருந்தாய், இப்பொழுதும் சூட்சுமமான பாம்புகளை பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளாய் எனவே நீ இப்பொழுதும் பாம்பாட்டி தான்" என்று அருளி மறைந்தார் சட்டை முனி சித்தர்

ஒரு ஊரில் இறந்து போன மன்னனைச் சுற்றி மனைவி சுற்றத்தார் அழுது புலம்பிக்கொண்டிருந்தனர். கொடுங்கோலாட்சி புரிந்த தீய நடத்தை கொண்டிருந்தவன் மன்னன். அப்படியும் மக்கள் அவன் மேல் வைத்த பாசம் ஆச்சரியம் தந்தது. அவனை நல்லவனாக்கி நடமாடவிட்டு, நல்ல உபதேசம் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து, தன் உடலை பத்திரப்படுத்திவிட்டு, இறந்து போன பாம்பு ஒன்றை அரசன் உடலில் விசிறியடிக்கிறார். மக்கள் எல்லோரும் பீதியுடன் விலக அரசி மட்டும் உடலை விட்டு நகராது நிற்கிறார். அதன் பின் அரசன் உடலில் சித்தர் புகுந்து கொண்டார்.

பாம்பு தான் அரசனை கொன்றுவிட்டது என்று அதனை அடிக்க மக்கள் புறப்படுகின்றனர். அரசன் உடல் தாங்கி எழுத சித்தர் "செத்த பாம்பை ஏன் அடிக்கிறீர்கள்? என்று அதனை தடவி கொடுத்து " பாம்பே நான் எழுந்து விட்டேன், நீயும் எழுந்திரு" என்றார்.

ஆடு பாம்பே என்று பாம்பை ஆட்டுவித்து தத்துவங்கள் நிரம்ப பாடல் பாடுகிறார். அரசிக்கு வந்திருப்பது வேறு ஒரு நபர் என்ற
சந்தேகம் உதித்தது.

நாடுநகர் வீடு மாடு நற்பொருள் எல்லாம்
நடுவன் வரும்போது நாடிவருமோ
கூடுபோன பின்பு அவற்றால் கொள்பயன் என்னே?
கூத்தன் பதங்குறித்தி நின்று ஆடு பாம்பே


முக்கனியும் சக்கரையும் மோதகங்களும்
முதிர்சுவை பண்டங்களும் முந்தி உண்ட வாய்
மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க
மெய்யாக கண்டோமென்று ஆடு பாம்பே

(பாடல் எளிமையாய் இருக்கிறது. self explanatory ) செல்வமும், புகழும், படை பலமும், இறப்பும் காலனும் தேடி வரும் போதும் கூட வருமோ? கூடு விட்டே ஆவி பொனால் அவற்றின் பயன் தான் என்ன என்று ஆடு பாம்பே (கூத்தன் பதம்: ? இங்கு சிவனை அவனின் புகழைக் குறிக்கிறதா அல்லது சிற்றறிவு கொண்டு கூத்தாடும் மாநதரைக் குறிக்கிறதா எனத் தெரியவில்லை...any takers? )

முக்கனி சக்கரை பத்து வகை பட்சணங்கள் உண்ட வாய், இப்போது மண்ணைக் கவ்வும் நிலை குறித்து, உடலின் நிலையற்ற தன்மை நினைந்து எழுதாடு பாம்பே என்பது குத்துமதிப்பான விளக்கம்.

ஆதி சங்கரர் அருளிய பஜகோவிந்த வரிகள் நினைவிற்கு வருவதை தவிர்க முடியவில்லை.

மா குரு தன ஜன யௌவன கர்வம் ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா

ஞான உபதேசங்கள் தொடர்ந்து பாடிய வண்ணமிருக்கிறார். அதன் பின் சந்தேகம் உதித்த அரசிக்கும் தான் யார் என்று கூறி நல்லுபதேசம் செய்து மீண்டும் தன் உடல் கொண்டார். பல அறிவுரைகளும் தத்துவ உபதேசங்களும் செய்த வண்ணம் தன் வாழ்நாள் தொடர்ந்தார். தேடிப்போய் உபதேசித்தும் இந்த அறிவிலி மக்கள் திருந்துவதில்லையே என்று வருந்திய் சித்தர், யார் கண்ணிலும் படாமல் மறைந்தார்.

திருமூலர் என்ற சித்தரும் கூடுவிட்டு கூடுபாய்ந்ததாக சொல்லப்படுகிறது. திருமூலர் கைலாய பரம்பரையை சேர்ந்தவர். சித்தர்களில் முதன்மையானவராக கருதப்படுகிறார்.

அந்தணர்கள் வாழும் சாத்தனூரில் தொன்று தொட்டு ஆனிரை மேய்க்கும் குடியிற் பிறந்த ஆயனனாகிய மூலன் பசுக்கள் மேய்த்து வந்தான். அவன் வாழ்நாள் முடிந்த வினையால் உயிர் நீங்கி நிலத்தில் வீழ்ந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி கதறி வருந்தின. இதனைக் கண்ட திருமூலர் பசுக்களுக்காக மனம் நெகிழ்ந்து அவன் உடல் கொண்டார். பசுக்களை மேய்த்து தத்தம் இடத்தில் அனுப்பிய பின், தனித்து நின்று கொண்டிருந்த திருமூலரை மூலன் மனைவி கண்ணுற்றாள். விரும்பி வீடு அழைக்கும் அவளுக்கு தான் மூலன் அல்ல என்றும் அவன் விதி முடிந்து இறந்து விட்டான் என்ற உண்மை திருமூலர் கூறியும் உரைத்தபாடில்லை. தன் கணவனுக்கு புத்தி தடுமாறியதென்று ஊரைக் கூவி அழைத்து, அவனை தன்னுடன் இருக்குமாறு அறிவுரை வழங்கச் செய்கிறாள். தன்னுடலைத் தேடி அதனுள் புகுந்து உண்மையை உணர்த்தி இவ்வுடலை செய்யலற்றதாக்கி தன்னை யார் என்று நிரூபித்தார். உண்மை உணர்ந்த சான்றோர் மூலன் மனைவியைத் தேற்றி அவளை வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்.

அதன் பின் அவருக்கு எங்கு தேடியும் தன் பழைய உடல் தென்படவில்லை. மூலன் உடலிலேயே நிரந்தரமாகத் தங்கி விட நேரிடுகிறது. உலகத்தோர் உய்யும் பொருட்டு க்ரியை, ஞானம், சரியை, யோகம் என்று நால்வகை நன்னெறிகளும் விளங்கும் திருமந்திரம் என்னும் நூல் வழியாக ஓர் ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்கள் வழங்கியுள்ளார். பின்னர் இந்நூல் நிறைவுற்றதும் மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இறைவன் திருவடி அடைந்தார்.


ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நென்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே

- திருமந்திரம்.

உயிர்கள் அனைத்தும் ஒன்றே குலம் ஒருவனே இறைவன், என்று நினைப்பவருக்கு மரணமில்லை i.e. அவர்கள் இறவாத்தன்மை அடைந்து விடுகின்றனர். இந்த எண்ணத்தில் நீர் நிலைபெற்று நின்றால் அதுவே முக்திக்கு வழி. வேறில்லை என்பது தோராயமான பொருள்.


(நன்றி: சி.எஸ் முருகேசன் அவர்கள் எழுதிய பதினெண் சித்தர் வரலாறு )

(தொடரும்)