September 14, 2010

திரையிசைப் பயணங்கள் - 4 (ஆசையே அலை போலே)

படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடல்: கவிஞர் கண்ணதாசன்


பாடலைக் கேட்க சுட்டுக:

http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/aasaialai.rm

ஒவ்வொரு முறை கேட்கும் போதும் சில வரிகளின் ஆழம் புதிய பரிமாணத்துடன் மிளிரும். எல்லா சூழ்நிலைக்கும் சரியான வரிகளாக அமையும். மனித வாழ்வின் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் மூன்றே மூன்று ஆசைகள்தாம் என ஞானிகள் முதல் சாமான்யர் வரை பலரும் கண்டுள்ளனர். அவற்றை மூன்றே மூன்று தொகுப்பிற்குள் அடக்கி விடலாம். எப்பேர்பட்ட ஆசையாக இருந்தாலும் இம்மூன்றில் அடங்கி விடும்.
மண்/ஆளுமையின் ஆசை
பெண்/ஆண் ஆசை
பொன்/பொருளின் ஆசை

இவைகளுள் அடங்கும். இந்த ஆசைகளே இரண்டு விதமாக செயல்படும் திறமையுடையது. இவையே இன்பத்தையும் தரவல்லது துன்பத்தையும் வரவழைப்பது. இவற்றால் கட்டுண்டு நம் மனமும் எப்படி எல்லாம் ! அலை போல் மேலும் கீழும் நம்மை ஆட்டுவிக்கிறதல்லவா இந்த ஆசைகள்!

ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே


இந்த உண்மையைக் கண்டாலும் கேட்டாலும் உணர்ந்தாலும் கூட பருவம் பொல்லாதது. அங்கு காதல் கொண்ட ஆணின் மனமும் பெண்ணின் மனமும் ஆசையின் பூர்த்தியால் களிக்கிறது. ஆசையை நிறைவேற்றிக் கொண்ட ஓடம் போன்ற மனமும் உச்சத்தில் ஆடி வெல்லமாய், வெள்ளமாய் களிக்கிறது.

பருவம் என்னும் காற்றிலே ..பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்...
சுகம் பெறுவார்...
அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே......... யார் காணுவார்


நேற்றைக்கு சுகம் பெற்று இன்று பாதை மாறினாலும் சுகத்தின் சுவையும் நினைவும் கூட மனிதனை வாழ வைத்து விடுவது. வாழ்கை முதுமையின் போர்வையில் நுழைந்து ஆசுவாசப் படுத்தி, துயில் கொள்ள எத்தனிக்கும் முன், அனைத்து சுகமும், துக்கமும், ஆசையலையின் உச்சமும், போராட்டமும் நினைவில் வந்து போகும். வாழ்கை தீர்ந்ததாக நினைக்கும் சாமான்ய மனிதனும் நேற்றைய "வடிவங்களை" நிகழ்வுகளை எண்ணத்திலேற்றி அதில் இன்பம் கொள்கிறான். அப்படி கொள்ளும் இன்பத்தில் சுகமா? அல்லது இளமைக் காலங்களின் அதிசய உலகம் சுகமா? சில நேரங்களில் நிஜத்தை விட அசை போடும் நினைவு சுகம் தரும் போலும்.

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்...
இளமை மீண்டும் வருமா.... மணம் பெறுமா.....முதுமையே சுகமா...
காலம் போகும் பாதையை இங்கே...........யார் காணுவார்

அலையுச்சத்தில் மகிழ்வது மட்டுமா வாழ்வு? ஓடம் துக்கம் எனும் சூறைக்காற்று மோதினால் துவண்டு பலமிழந்து விடுகிறது. மிகுந்த சிரமத்துடன் படகை மெல் செலுத்த வேண்டியுள்ளது. மனித மனத்தின் சுகமும் துக்கமுமே வாழ்கையை முன்னேற்றுவதும் அல்லது தேங்கச் செய்வதுமான வல்லமை படைத்தது.

வரவு என்று இருந்தால் செலவு இருக்கத்தானே செய்யும். உலகமே இரட்டைத் தன்மையுடையது. நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய வரிகளைக் கவிஞர் பாடியுள்ளார். சுகத்தை வரவு என்று சொல்லவில்லை. சுகம் தான் செலவாம். துக்கம் நமக்கு வரவு. நாம் எக்கடமையை முடிக்க பூமியில் பிறப்பெடுத்துள்ளோம் என்று அறியோம். நாளை நடப்பதும், காலம் வகுத்த கணக்கும் தெரியாது. ஆனால் துக்கம் தரும் பாடமும், படிப்பினையும் நமக்கு வரவு. ஏனெனில் துக்கம் நம்மை செம்மை படுத்தும். சுகம் சேமிப்பில் வைத்த புண்ணிய கணக்கை செலவிடுவதாகிறது. துக்கம் நம்மை மேன்மை படுத்தி செப்பனிடுவதால் 'வரவு' என்று வரவேற்கிறார் கவிஞர். எத்தகைய தெளிவுள்ள மனிதனுக்கு இப்படிப் பட்ட சிந்தனை பிறக்கும்? வெகு சொற்பம்.

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு...சுகம் செலவு....இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே........யார் காணுவார்


"இருப்பதே கனவு" - ப்ரபஞ்சமே நிலையாமை தத்துவத்தில் மாறிக்கொண்டே இருப்பதால், இன்று இருப்பதும், நாளை இருப்பதும் நிலையில்லை. இந்த வாழ்வை செம்மையாக வாழ்ந்து உயர்நிலை அடைந்தால் இந்த வாழ்வு இங்கு வாழ்ந்ததும், இங்கு கண்ட காட்சியும், நிகழ்வும் கூட ஒரு கனவு தானே?!

இப்பாடலை கவிஞர் ரயில்வே க்ராஸிங் சிக்னலுக்காக காத்திருந்த போது சிகரெட் பாக்கெட்டில் எழுதினாராம். திருச்சி லோகநாதனின் குரலும் கே.வி மஹாதேவன் இசையும் அர்த்தம் நிறைந்த தத்துவமும் மோனத்திற்கே இட்டுச் செல்கிறது.


2 comments:

  1. //
    மண்/ஆளுமையின் ஆசை
    பெண்/ஆண் ஆசை
    பொன்/பொருளின் ஆசை
    //

    ஆசைப் பற்றின தெளிவான செய்தி.

    நன்றி...
    அன்புடன் என் சுரேஷ்

    ReplyDelete