March 05, 2012

மீண்டும் பள்ளிக்குப் போகலாம் (தொ. ப)





பள்ளி நினைவுகளை பதிவிட ஷைலஜா அழைத்திருக்கிறார். சுயபுராணம் பாடுவதே தனி சுகம்.  கரும்புத் தின்ன கூலியா! நினைவுகளை அசைப்போடுவதில் ஒன்றும் சிரமமே இல்லை. ஒரே ஒரு பிரச்சனை தான்.  மீண்டும் பள்ளிக்கூடம் போனால், எளிதில் திரும்ப மாட்டென்.  சில மணி நேரம், அப்படியே தொலைந்து போய்விடும் அபாயம் உண்டு...


பள்ளிக்கூடம் என்றால் என்ன என்று ஷைலஜா என்னை விட அழகா சொல்லிட்டாங்க.

சின்ன வயது (நினைவு தெரிந்த நாள்) முதலே 'குருகுல வாசம்' என்றால் ரொம்ப பிடிக்கும். புராணப் படங்கள் பார்க்க நேர்ந்தால், பள்ளிக் கூடங்கள் ஏன் குருகுல வாசம்  போல் இல்லை என வருந்தியதுண்டு. சொர்கத்துக்கு இணையாக ஒலிக்கும் வார்த்தை "குருகுலம்". ஏன் தான் குருகுலம் வழக்கொழிந்த இந்நாளில்  பிறந்தோமோ என்று  நொந்து கொண்டிருக்கிறேன்.

நான் பிறந்த காலகட்டத்துல குருகுல வாசம் மறைந்து போய் விட்டதால் ஆரம்ப பள்ளிக்காக பக்கத்தில் இருக்கும் தனியார் மாண்டீஸ்வரி பள்ளிக்குடத்தில் சேர்த்தார்கள்.

சில பல நினைவில் நின்றவை நிகழ்ச்சிகளாக கோர்கிறேன்....

எல்.கே. ஜி தூக்கம்

** எல்.கே.ஜியின் நினைவு கிண்டிப் பார்த்தாலும் ஒன்றிரண்டு தான்.  கீதா மிஸ் ஸ்கேல் வைத்திருப்பார்கள்.  ஏபிசிடி சொல்லித் தந்ததும், நான் கற்றதும், அறவே நினைவு இல்லை. தினம் ஒரு பீரியட் ஸ்லீபிங்க் பீரியட். ஸ்கேல் வைத்து, எங்களையெல்லாம் தூங்கச் சொல்லி மிரட்டுவார்கள். நீட்டி நெடுக படுத்து, கண் மூடுவது போல் இடுக்கு வழியாக மிஸ் என்ன செய்கிறார்கள் என்று பார்த்த நினைவு இருக்கிறது...இடது புற செவுத்தை ஒட்டிப் படுத்திருப்பேன். நினைவிலிருக்கிறது. 

சுமாராய் படிக்கும் பாபு

** யூகேஜி யில் சியாமளா மிஸ்-ஸின் பையன் பாபு தான் என் பக்கத்தில் அமர்வான். அவன் நன்றாக படிக்க மாட்டான். அதனால் அதிகமாக திட்டு வாங்குவான். எனக்கு அவனை பார்த்தால் பாவமாக இருக்கும். ஆனாலும் அவனை பிடிக்காது. நான் ஏ பி சி டி சரியாக எழுதி "குட்" வாங்குவேன்.
பாபு  கன்னம் குழி விழ சிரிப்பான். ஆனால்  ஏபிசிடி  சரியாக எழுத மாட்டான்.
அவன் திட்டு வாங்கும் போது எனக்குள் சிறு சந்தோஷம். ஒரு வேளை திமிரா?

** அடுத்த சில வருடங்களில் பாபு சரியாக படிக்க மாட்டேன் என்கிறான் என சியாமளா மிஸ் அம்மாவிடம் குறைபட்டுக் கொண்ட போது எனக்கு பாபு மேல் பாவமாக இருந்தது. அப்புறம் பாபு என்ன ஆனான் எனத் தெரியாது. நான் கேட்கவில்லை.

காதல் தோல்வி

** ஒன்றாம் வகுப்பு மறக்கவே முடியாது. ப்ரேமா மிஸ். அழகான முகம். நீள முடி. சிரித்தால் ஜெயலலிதா போல் இருபார்கள். என் பக்கத்தில் பையன்கள் உட்காருவதைத் தான் நான் அதிகம் விரும்பியிருக்கிறேன்.  பெண் பிள்ளைகள் சரியான போர். திரும்பத் திரும்ப, சாப்பாடு, சொப்பு விளையாடுதல் போன்ற பேச்சைத் தவிர ஒன்றும் தெரியாது. பாய்ஸ் என்றால் ஜோக்ஸ் சொல்வார்கள். சிரிக்க வைப்பார்கள். புது புது  விஷயங்கள் பேசுவார்கள்.

அப்படித் தான் ப்ரேமா மிஸ் பற்றியும் கேலி பேசித் திரிந்தோம்.    ஒருவர் ஜோக் சொல்ல, எல்லோரும் ரகசியமாக சிரிப்போம்.  ப்ரேமா மிஸ் ஒரு நாள் வரவில்லை. வேறு யாரைப் பற்றி கிண்டல் செய்து சிரித்து மகிழ்வது என்று தெரியவில்லை. ப்ரேமா மிஸ் ஒருவாரம் வரவில்லை. அப்புறம் தான் பள்ளியில் சொன்னார்கள்...

காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டுவிட்டார்கள். காதல் என்றால் என்ன?  தற்கொலை என்றால்? செத்து போவதுன்னா என்னம்மா? பல கேள்விகளுக்கு பள்ளியில் விடை கிடைக்கவில்லை.

என்னை விட அவள் அழகா....எப்படி!

 

** என் அம்மா எனக்கு வித்தியாசமான மாடர்ன் தலையலங்காரங்கள் செய்துவிடுவார்கள்.  அதனால் எனக்கு "லண்டன் லேடி" என்ற செல்லப் பெயர் எங்கள் ஆசிரியர்கள் மத்தியில் இருந்ததும், ஒரு சில ஆசிரியர்கள் என்னை முத்தமிட்டு கொஞ்சியதுமுண்டு.  பல பிஞ்சு உள்ளங்கள் இருக்கையில் ஒரு குழந்தையை கொஞ்சுவது தவறு என்றெல்லாம் ஆசிரியர்களுக்கு யாரும் சொல்லித் தருவதில்லை போலும்.  இதுவெல்லாம் இப்பொழுது யோசிப்பது.  அப்பொழுதோ என்னைக் கொஞ்சியது  எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

பிரபாவதி என்ற பெண் எங்கள் தெருவழியே செல்பவள். அவள் கண்கள் விரிந்து அழகாய் குவளை மலர்கள் போல் இருக்கும். ஒரு முறை என் சித்தியோ பாட்டியோ அவள் கண்கள் அழகு. என்னுதை விட அழகு என்று சிலாகித்திருப்பதைப் கேட்டேன். எனக்கு அது பொறாமையைத் தூண்டியது.

"அம்மா பிரபாவதி கண்ணு என்னுதை விட அழகா?! அவ கண்ணை....நோண்டி எடுத்துடணும்" என்று என் அம்மாவிடம் சொன்னது எனக்கு காட்சி அமைப்புடன் நினைவில் இருக்கிறது.

அவமானம்

**இரண்டாம் வகுப்பு. எங்கள் ஆசிரியை, சக மாணவன் ஒருவன் அடிக்கடி தனது உள்ளாடையில் சிறுநீர் கழிப்பதை வெகு மோசமாக விமர்சனம் செய்து அவனை அழ வைத்தார்கள்....எனக்குப் பிடிக்கவில்லை. அந்த பையன் பெயர், சின்ன முகம், அவமானம், அழுகை எல்லாம்  இன்னும் நினைவில் இருக்கிறது. அடுத்த வருடம் அவன் பள்ளியை மாற்றிக் கொண்டான்.

செத்து போனா என்ன ஆகும்

இரண்டாம் வகுப்பு படிக்கும் போது வாக்கிங் சென்ற பக்கத்து வீட்டு அங்கிள் செத்துப் பொனார். அப்புறம் சில மாதங்களில் அம்மாவை பெற்ற பாட்டி உடல் நலிந்து உயிர் இழந்தார். சாவு என்றால் என்ன... எதுக்கு பிறக்க வேண்டும்? பின் சாக வேண்டும்?... என் கேள்விகள் அதிகமாகியது.

சில நினைவுகள்

 

** பள்ளிக்கு மூடி போடு கொக்கி போட்ட ரிக்ஷா வண்டியில் போவேன். அப்படி வண்டிகள் தற்போது நடைமுறையில் இல்லை என்று நினைக்கிறேன். இரு பக்கமும் உட்கார சீட்டுகள் உண்டு. கூட்ஸ் வண்டியைப் போல் காட்சி அளிக்கும். எங்களுக்கு ரிக்ஷா ஓட்டுபவர் பெயர் நினைவில் இல்லை. அவரை ரிக்ஷா காரர் என்று அழைப்பதை தடுத்து "பெயிண்டர்" என்று அழைக்கச் சொல்வார். ரொம்ப நாள் வரை, ரிக்ஷா ஓட்டுபவர்களை பெயிண்டர்கள் என்று நினைத்திருக்கிறேன்.

** நான்காம் வகுப்பில் என்னை நடனத்திற்கு தேர்வு செய்து, வராத நடனத்தை கற்று கொடுத்தார்கள். எப்படியோ ஆடினேன். ஐந்தாம் வகுப்பில் என்னை தேர்வு செய்தே ஆக வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு ஆசை. ஆனால் எனக்கோ நடனம் வரவில்லை. கடைசியில் அஷ்ட லக்ஷ்மி நடனத்தில்  என்னை லக்ஷ்மி தேவியாக உட்கார வைத்தனர்......பசுமை.

பிரியா விடை

** ஐந்தாம் வகுப்பில் தான் ஜெமினி மிஸ் எங்கள் பள்ளியை விட்டு விலக நினைத்தார்கள். நாங்கள் ஆறு பெர் ஃப்ரெண்ட்ஸ். கௌஷிக், சத்யமூர்த்தி, அர்ச்சனா, தர்ஷனா, அரவிந்த், நான்.

ஜோக்ஸ், சிரிப்பு, கிண்டல், பேச்சு என பொழுது கழியும். எங்களுக்கு சமமாக
தோழி போல் பழகியவர்கள் ஜெமினி மிஸ். ஆங்கில ஆசிரியை. காதில் தொங்கும் நீண்ட ரிங்,  நெற்றியில் புரளும் கேசம்,  நீண்ட கண்கள்,  கவரும் சிரிப்பு, முதல்  முதல் ஹீரோயின் வர்ஷிப் செய்தது ஜெமினி மிஸ்ஸைத் தான்.  எங்கள் ஐந்து பேரை வீட்டிற்கு அழைத்திருந்தார்கள். திருமணம் செய்து கொள்ளப்போவதாய் சொன்னார்கள். ... பள்ளி நண்பர்களுடன் சென்ற முதல் அவுட்ங்! டீ, சமோசா இத்யாதி வாங்கிக் கொடுத்தார்கள்.  இனிமையான பொழுது...அப்புறம் பிரிந்த பொழுது, முதன் முறையாய் தொண்டை அடைத்தது. அந்த உணர்ச்சி அது நாள் வரை உணராதது.

நானே நானா

** கான்வென்ட் பள்ளிக்கு மாறியிருந்தேன். என்னைச் சுற்றி எங்கும் ஆங்கிலோ இந்தியர்கள். எனக்கும் ஒரளவு ஆங்கிலம் தெரியுமென்றாலும், சங்கோஜமாக உணர்ந்தேன். என்னை நானே அவர்களிடமிருந்து அன்னியப்படுத்தி கொள்ள துவங்கிய பொழுது,  அவர்களோ நெருங்கி வந்தனர். என்னைச் சுற்றி நிறைய ஆங்கிலோ இந்தியர்கள் தோழிகளாகிப் போயினர். என் பேச்சு, அபிப்ராயம்,  பாதை, எண்ணங்கள். பயணம்,  எல்லாமே மாற்றம் கொண்டது.

சிகரெட் புடிக்க தெரியுமா

** ஆறாம் வகுப்பில் என்னுடன் ஆட்டோவில் வருபவள் 'ஷாரன்'. ஒரு நாள் சிகரெட் பிடிப்பதைப் பற்றி பேசி, நீ பிடித்திருக்கிறாயா என்று கேட்டாள். இல்லை என்று சொன்னேன்.  அடுத்த நாள் இரண்டு சிகரெட் கொண்டு வந்திருந்தாள். ஆட்டோவில் மற்ற சிறுமிகள் இறங்கிவிட நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். ஒரு சிகரெட்டை தன் உதடுகளில் வைத்துக் கொண்டாள். ஒன்றை எனக்கு நீட்டினாள்.  குருகுலவாசமென்ன, புராணப்  படமென்ன எல்லாம் காணாமல் போக, ஒரே ஒரு கணம் அந்த சிகரெட்டை வாங்கினேன்.  தீப்பெட்டியை வாங்கிப் பத்தவைக்கும் முன்  உடல் எல்லாம் படபடக்க, தப்பு செய்கிறோமோ என்ற எண்ணம் தலையெடுக்க,  வேண்டாமென திரும்ப கொடுத்து விட்டேன். இதற்குள் ஆட்டோ ட்ரைவர் வேறு எங்களைப் பார்த்து திட்டி விட்டு, சிகரெட்டை வாங்கி தூர போட்டுவிட்டான். ஷாரன் அடுத்த வகுப்புக்கு எங்கள் பள்ளியில் தொடரவில்லை.

ஆங்கிலம் தெரிந்து கொண்டு வா

** ஆங்கிலத்தில் பேசுவதாலும், ஆங்கில தோழிகளின் நட்பு இருப்பதாலும், ஆங்கிலம்  மட்டுமே பெரிதும் பேச வாய்ப்பு இருந்தது. அதுவே சௌகரியமாகவும் உணர்ந்தேன். அதுவரை தவறில்லை. ஆங்கிலம் சரியாக தெரியாத என் பக்கத்து வீட்டு தோழிகளை, கிண்டல் செய்து, உனக்கு உச்சரிப்பே வரவில்லை, நீ என் தோழியாய் இருக்க லாயக்கு இல்லை என்று சண்டையிட்டு அனுப்பிவிட்டேன். என் திமிருக்கு அளவே இருந்ததில்லை போலும்! அப்புறம் அப்பா எனக்கு புத்திமதி கூறி எங்கள் நட்பை வளர உதவியது மறக்க முடியாதது. இன்றும் என் ஆருயிர் தோழியாய் தொடர்பில் இருக்கும் இனியவள்.

ஏழை என்றால் கிள்ளுக்கீரையா

 

** எங்கள் வீட்டுக்கு அப்பாவின் கீழ் வேலை செய்பவர் வந்திருந்தார். கிழிந்த ஆடை. கரிய உடல். "அப்பா யாரோ பிச்சைக் காரன் வந்திருகான்" என்று சொல்லி, முதல் முதலில் அப்பாவிடம் சரமாரியாக அடி வாங்கினேன். அந்த மனிதர் அரண்டு போய்விட்டார். அன்று முதல் இன்று வரை அப்பாவிடம் வாங்கிய ஒரே அடி அது தான்.  அப்புறம் அவரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க செய்தார்.  பல புத்திமதிகள் சொன்னார். அப்பாவின் நண்பரும் எனக்கு மிகவும் பிரியமானவராகிப் போனார். என் திமிர் மாறியதா? நான் மாறினானா?  ....மாறினேன்....ஆனால் கொஞ்சம் தான்...

கெமிஸ்ட்ரி என்னும் அரக்கன்


** வகுப்புக்கு வரும் டீச்சர்களை கிண்டல் செய்வது,  பேப்பர் ராக்கெட் விடுவது, போன்ற விஷயங்களில் பெரும் பங்கு  வகிக்காவிட்டாலும், சிறு பங்கு வகித்திருக்கிறேன். நிறைய நேரம் கூட இருந்து கும்மி அடித்திருக்கிறேன்.  பத்தாம் வகுப்பு  கணித ஆசிரியை, ஆங்கில ஆசிரியை இருவரும் மிகவும் பிடிக்கும். பிடித்த வகுப்புகள், கணிதம், ஆங்கிலம், வரலாறு, புவியியல்.

சயின்ஸ் பிடிக்கும் என்றாலும் கெமிஸ்ட்ரி பிரிவு எனக்குப் பிடிக்காது. balancing of equations எனக்கு வரவே வராது. 'எமிலி' என்ற க்யூட் ஆசிரியை கெமிஸ்ட்ரி எடுத்தார்கள். சின்னவயதுக் காரர்.  அவருக்கு எங்கள் வகுப்பைக் கண்டால் பயம். நான் முதல் பெஞ்சில் தான் உட்காருவேன். 'கெமிஸ்ட்ரி என்றால் அத்துப்படி' என்பதை போல் முகம் வைத்து தப்பித்து விடுவேன். அப்படியும் ஒரு முறை,  equation balance செய்ய என்னைக் கூப்பிட்டு விட்டார்கள்.  இந்தப் பக்கமும் அந்தப்பக்கமுமாய் சில பல எண்கள் போட்டுப் பார்த்தும் balance ஆகவில்லை.


 "யார் சரியான நம்பர் சொல்றீங்க பார்கலாம்"  என்று நான் வகுப்பைப் பார்த்துக் கேட்டேன்.  "குலுக்கிப் போட்டு என்ன  நம்பர் வருதோ போடு" என்று வகுப்பு மொத்தம் கிண்டல் செய்ய,   ஒரே சிரிப்பும் கும்மாளமும்  கூச்சலும் சத்தமுமாய் போய்விட்டது. இந்த தொல்லை தாங்காமல், என்னை இடத்துக்கு அனுப்பிவிட்டு வகுப்பைத் தொடர்ந்தார். அதன் பிறகு யாரையும் அவர் கேள்வியே கேட்டதாய் நினைவில்லை. பயிற்சிக்கு வந்த ஆசிரியை. சில மாதங்களில் வேறு பள்ளிக்குப் போய்விட்டார்.

சயின்ஸ் mid-term தேர்வுக்கு முன், Interval  நேரத்தில் சமோசா சாப்பிட தோழிகளுடன் காண்டீன் சென்று, நேரம் போவது கவனிக்காமல்,  லேட்டானதால், வேகமாக ஓடி சறுக்கு மரம் அருகே  விழுந்து கையில் ஃப்ராக்சர்.  வலியின் நடுவிலும்,  அப்பாடா சயின்ஸ் பரிட்சை எழுத வேண்டாம் என்று ஒரே குஷி எனக்கு. என்னைப் பார்த்து வகுப்பு மொத்தமும் பொறாமை வேறு பட்டார்கள்.


சும்மா பார்த்தாலே மதம் மாறணுமா?


** பத்தாம் வகுப்பில், படிக்கிறேன் பேர்வழி என்று வராண்டாவில் பொழுதைக் கழிப்பேன். என் வீட்டை இரண்டு க்ருத்துவ வாலிபர்கள் சுத்தி வந்த காலம் அது. ஒரு முறை அதில் ஒருவன் "ஐ லவ் யூ" என்று கத்த, அவனை நீ கல்யாணம் செஞ்சுக்க போறியா என்று வெடிகுண்டை தூக்கிப் போட்டாள் என் தோழி. "கல்யாணம் செஞ்சுக்க மதம் மாரணம்டி". - அடுத்த ஷாக். 

என்ன அநியாயக் கொடுமை! சும்மா இடுக்கு வழியே அப்பாவியாய்(!) எட்டிப் பார்த்ததற்கு இவ்வளவு விளைவா !! என்று கதிகலங்கிப் போய் வராண்டாவில் படிப்பதை அடியோடு நிறுத்தினேன். சைக்கிள் வாலிபர்களும் ஒரு சுபமுகூர்த்தத்தில் காணாமல் போனார்கள்.

ஆவிகள் உலகம்

** பதினோராம் வகுப்பில், ஆசிரியர்கள் இல்லாத பொழுதுகளில்  ஆவியை அழைத்து, கும்பல் கும்பலாய் கேள்வி கேட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள்.  நான் தள்ளி  நின்று பார்த்திருக்கிறேன். காசு, மெழுகுவர்த்தி வைத்து அழைப்பார்கள். பாஸா ஃபெயிலா, எப்போ கல்யாணம், புருஷன் பெயர் என்ன, போன்ற அத்தியாவசிய கேள்விகள் கேட்கப்படும்.

இதெல்லாம் நிஜமா பொய்யா என்ற எண்ணம் எழும். "காசு தானாக நகர்கிறது நான் நகர்த்தவில்லை"  என சம்பந்தப்பட்ட இரு தோழியரும் சொன்னதுண்டு.

ஆவி, இவர்களில் ஒருவரை பிடித்துக் கொண்டு போக மாட்டேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது  என்ற பயம் கூட எழும். இரண்டு மூன்று முறைகளுக்குப் பிறகு, ஆவியை அழைக்க நேர்ந்தால் நானும் இன்னும் சிலரும், அந்த இடத்தை விட்டு அகன்று விடுவோம்.


நன்றாக படித்து, வகுப்பில் இரண்டாவதாக நின்றது, பதினோரம் வகுப்பில் தான். முதல் ஐந்து ராங்க் அதுவரை வாங்கியதில்லை. அந்த அனுபவம். ரொம்ப பெருமையாக இருந்தது.

முதல் முதல் சேலை

பதினோராம் வகுப்பு தான் முதன் முதலில் ஃபேர்வெல் பார்டிக்கு சேலை கட்டினேன். சேலை கட்டிக்கொண்டு பி.டி.ஸி பஸ்ஸில் பள்ளி செல்லும் வரை திக் திக் என்றிருந்தது. எங்கே அவிழ்ந்து விடுமோ என்ற பயம். பயத்திற்கு ஏற்ப பாதி வழியில் கொஞ்சம் அவிழ்ந்தது போல் பிரமை வேறு.  ஒரு மாதிரி கைப்பையின் உதவியுடன் இறுக்கப் பிடித்து கொண்டு பள்ளி சென்றேன்.  என் தோழி மறுபடி எனக்கு சேலை உடுத்தி விட்டாள்.

பள்ளியைத் தவிர நான் மதிக்கும் ஆசிரியர்


சிறு வயதில் ராஜாஜியின் ராமாயணம், மஹாபாரதம் படித்ததுண்டு. புராணக் கதைகள் பிடிக்கும். அதில் வரும் இறைவியாக, என்னை கற்பனை செய்து கொண்டு, ஏதோ சாபத்திற்காக மானுடப் பிறவி எடுத்ததாக நினைத்துக் கொள்வேன். சிவபெருமான் என்னை அழைத்துப் போக வருவார் என்று எண்ணுவேன்.  (ரொம்ப கதைகள் படித்ததன் விளைவு)


பி.ஆர் சோப்ராவின்  "மஹாபாரதம்" வழியாகத் தான் கீதையை முதன் முதலில் கேட்டேன்.  அந்த தாகம் தொடர்ந்து பரவியது. வீட்டிலுள்ள புத்தங்களில் கீதையைத் தேடினேன். ஸ்லோகம் சாரம்சம் கூடிய ஒரு புத்தகம் கையில் கிட்டியதும், மூன்று நாள் இடைவிடாது திரும்பதிரும்ப  கீதை படித்தேன். நிறைய புரிந்தது போல் இருந்தது.

ஏறக்குறைய கீதையை கரைத்து குடித்துவிட்டதாய் நானே என்னை மெச்சிக் கொண்டேன். ஒரு ஞானியைப் போல் என்னை நானே நினைத்துக் கொண்டு ஒரு வாரம், பத்து நாட்கள்,  அதிகம் பேசாமல், இதே சிந்தனையில் இருந்தேன். கண்ணனையே திருமணம் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். இறைவன் சேவையில் ஈடு பட்டு திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து விடுவது தான் சிறந்த பாதை என்று நினைத்தேன்.

a. பக்தி

பள்ளி நாட்களில்,  பாட்டு வகுப்பு டீச்சர் எனக்கு மிகவும் மரியாதைக்கு உரியவர். பஞ்சரத்ன கீர்த்தனைகளை அர்த்தம் புகுத்தி படிப்பிப்பார். "துடுகு கல நன்னே தொர" என்று தியாகராஜர் போல் நானும் கற்பனை செய்து கொண்டு இத்தனை துஷ்டத் தனங்கள் செய்த என்னை நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று உருகி பாடியிருக்கிறேன்.

"சிறுத ப்ராயமுல நாடே பஜனாம்ருத ரஸ விஹீன குதர் குடைன" என்ற வரிகள் குறிப்பாக பிடிக்கும் (சிறுவயது முதலே, பஜனையும் உன் நாமரஸத்தையும் ருசிக்காமல், குதர்க்கம் பேசித் திரிந்தேன் என்பது தொராயமான அர்த்தம்)

பக்தி புகட்டிய குரு என்று என் பாட்டு டீச்சரை நினைக்க கடமைப்பட்டுள்ளேன்.  "அலைபாயுதே கண்ணா" என்ற பாடல் இறைவன் கண்ணனுக்காக நான் காதலுடன்  பாடுவதாய் நினைத்துத்தான் அதிகம் பாடியிருக்கிறேன்.

b. அன்பே கருஷ்ணன்  ( I will never forget u)

வீணா என் வகுப்பில் பாட்டு படிக்க வருபவள். என்னுடன் ஒன்றாக சிறுவயதில் படித்தவள்.  மிகவும் எளிமையாய் உடை உடுத்துவாள். அன்பானவள்.  நான் வீணாவிடம் அதிகம் பழக மாட்டேன். மரியாதைக்கு தலை அசைத்து ஹாய் சொல்வதோடு நிறுத்திக்கொள்வேன். ஒரு வருடம் கழித்து, பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம்.

உங்கள் பள்ளியில் ஃபேர்வெல் உண்டா என்று அவள் கேட்க, நான் சுருக்கமாக ஏதோ இரண்டு வார்த்தைகள் பதில் சொல்லி நகர முற்பட்டேன்.

"கொஞ்சம் இரு"  என்று நிறுத்திய வீணா, தொடர்ந்து,  "நீ கூப்படற கண்ணன் என்னுள்ளையும் தானே இருக்கான். ஏன் என்னோட பேசாம இருக்க? நானும் உன்ன மாதிரி பொண்ணு தானே.... எனக்கு உன் அன்பு தானே வேணும், ஏன்  இவ்ளோ திமிர் உனக்கு....இப்டி திமிரோட இருந்தா க்ருஷ்ணன் வர மாட்டான்." ...

சரமாரியாக அட்வைஸ். அரை மணி நேரம்...மூச்சே விடாமல்,.....நிறுத்தாமல்....பொழிந்தாள்.   நான் கேட்டுக்கொண்டிருந்தேன். வாயே திறக்கவில்லை :))

விஷயம் இவ்வளவு தான். அவளுக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும். ஆனால் நான் கண்டு கொள்ளாமல் இருந்தது, அவளை வருத்தியிருக்கிறது. எனக்கு நிஜமாகவே சாட்டையில் அடித்தது போல் இருந்தது............. அவள்....வீணா....என் ஆருயிர் தோழியாகிப் போனாள்.............நான் மாறினேன்........ நிறையவே....முழுமையாக...என்னை மாற்றியவள் அவள். என் தோழியுமாகி, என் குருவும் ஆகிப் போன வீணா. இன்று அவள் முகவரி தெரியாது போனாலும் என் இதயத்தில் அழுத்தமான முகவரி, நிரந்தரமான முகவரி பதித்துச் சென்றிருக்கிறாள்.

இன்னும் என்னென்னவோ  நினைவுகள்....எத்தனைப் பாடங்கள்! எத்தனை மனிதர்கள்! எப்படியெல்லாமோ பாதைகளில்  பிரயாணம்.. நம்மை மெருகேற்றியவர்கள்...பெற்றோர்...ஆசிரியர்கள்...பள்ளிகள்...நண்பர்கள்......என்னை அருமை பள்ளி நினைவின் மகிழுலகுக்கு அழைத்த ஷைலஜாவுக்கு மிக்க நன்றி....

நீங்களும் உங்கள் பள்ளி நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என அன்புடன் அழைக்கிறேன்...

1. இராஜேஸ்வரி
2. வை.கோ சார்
3. கீதமஞ்சரி
4. ராம்வி


March 02, 2012

மரணத்திற்கு முன் சரணம்



இரு தினங்களுக்கு முன் பொதிகைத் தொலைகாட்சியில் வரும் "கண்ணபிரான் கதையமுதம்" நிகழ்ச்சியில் மிகவும் எளிமையான தத்துவம் ஒன்றை விளக்கினார் வேளுக்குடி க்ருஷ்ணன் அவர்கள்.

கீதையில் கண்ணன்

"என்னை நினைத்திரு...
மரண காலத்திலும் என்னை நினைத்திரு..
அப்படி நினைப்பவன் என்னையே வந்தடைகிறான்
"  என்கிறார்.


மரணத்தின் வாயிலில் நமக்கு பெருமானை நினைக்கும் பாக்கியம் கிட்டுமா என்றே தெரியவில்லை. முன்னமே இக்கருத்தினையொட்டி ஒரு பதிவு எழுதியிருந்தேன். மரணம் என்பது எப்படி எங்கு எந்த சூழ்நிலையில் நம்மை வந்தடையும் என்பதே புதிர். அத்தருணத்தில் நாம் சிந்தனையற்று இருக்கலாம். கேளிக்கையில் திளைத்திருக்கலாம். கைகால் விழுந்து கோமாவில் இருக்கலாம். மரணபயத்தில் பீடித்து இருக்கலாம். உற்றார் உறவினரின் நினைவில் நெகிழ்ந்திருக்கலாம். பாசத்தில் கட்டுண்டு இனி இவர்களை எங்கு காண்பேன் என்று கலங்கி இருக்கலாம்.

எத்தனையோ எண்ணற்ற நினைவுகளும் பயங்களும் வந்து போகும் நேரத்தில் இறைவனை நினைக்கும் பக்குவம் சிறந்த பக்தனுக்கே வருவது குறைவு. சாமான்யனுக்கு சொல்லவும் வேண்டுமா? சதா சர்வ காலம், இறைத் தியானத்தில் இல்லாத ஒருவன் இறுதி நேரத்தில் எவ்வாறு நினைக்க முடியும். இப்படி எல்லாம் சந்தேகம் எழுகிறது. போதாத குறைக்கு, இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற சர்சையில் வாழ்வின் பாதி காலம் கழிந்து விடுகிறது.

நம்மை போன்றவர்களுக்காகவே ராமானுஜர், திருகச்சி நம்பிகளிடம், வரதராஜ பெருமானாக விளங்கும் ஸ்ரீமன்நாராயணனுக்கு கேள்வி அனுப்பினர். திருக்கச்சி நம்பிகளிடம் இறைவன் தினமும் பேசி உபதேசம் அளிப்பார். ராமானுஜர் அனுப்பிய ஆறு கேள்வியில் ஒன்று தான் "மரணத் தருவாயில் இறைவனை நினைப்பது அவசியமா?"

அதற்கு இறைவன்,. "உடல் நன்றாக இருக்கும் பொழுது நினைத்தாலே போதுமானது. என்னைச் சரணம் என்று பற்றியவனை அவனது இறக்கும் தருவாயில், நான் நினைத்து என்னிடம் சேர்த்துக்கொள்வென்" என்றாராம். அதாவது அவனை சரணம் என்று அடைந்துவிட்டால் நமக்காக அவனே நம்மை நினைத்து தன்னிடம் சேர்த்துக்கொள்கிறேன். என்னே கருணை!

"எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே." 

 என்றார் பெரியாழ்வார்.

மரணத்தருவாயில் நினைக்க மாட்டேனோ என்னவோ, இப்போதே உன்னிடம் சொல்லிவைத்தேன். 

 அப்படியெனில் மானின் மேல் இறுதிநாட்களில் மட்டுமே ஆசை வைத்த ஒரே செயலுக்கு ஏன் இறைவன் ஜடபரதரை மானாய் பிறக்கச் செய்தார்? இதற்குத் தான் வேளுக்குடி அவர்கள் சொன்ன விளக்கம் என்னை பெரிதும் நெகிழச்செய்தது.

பரதர் பக்தியோகம் கொண்டு பக்திபூண்டார். தம் முயற்சியினூடே பக்தியில் திளைத்திருந்தார். பக்தியோகத்தைத் தாண்டி எவன் ஒருவன் சரணாகதி என சரணம் கொள்கிறானோ, அதாவது, என்னை இட்டுச் செல்வதும் நீயே, உன்னையே சரணம் அடைந்தேன், என்று முழுவதுமாய் சரண் அடைந்தவனை இறைவன் இறுதிகாலத்திலும் உடல் நலிந்தோ, ஆசை மேலிட்டோ அவன் நினைக்காது போயினும் கூட தாமே நினைத்துச் சேர்த்துக்கொள்கிறார்.

பக்தி பூணுவோம். அதனையும் தாண்டி அந்த பக்தியைத் நமக்கு அருளவும் அவனையே சரணமும் அடைவோம்.

திரையிசைப் பயணங்கள் (4) (சும்மா பொழுது போகாம)

படம்: காற்றுக்கென்ன வேலி
பாடல்: ரேகா ரேகா காதலென்னும் வானவில்லை
பாடியவர்கள்: ஜாலி ஆப்ரஹாம், பி.சுசீலா
இசை: சிவாஜி ராஜா
நடிப்பு: ராதா, மோகன்

விவிதபாரதியில் பள்ளி செல்லும் முன் கேட்ட எண்ணில் அடங்கா அருமைப் பாடல்களில் இதுவும் ஒன்று....





ரேகா ரேகா ரேகா ரேகா
காதலென்னும் வானவில்லை கண்டேன்  நீ பார்த்த பார்வையில்
ராஜா ராஜா ராஜா ராஜா
வானவில்லின் கோலம் உந்தன் ஜாலம் நீ தந்த ஆசைகள்

பூ போல உன் மெனியின் புதுவாசம் மயக்கம் தரும்
பனி போல் நீ தொட்டதும் புதிதான வேகம் வரும்
பொற்கோலங்கள் கண்டு பண்பாடட்டும்
காலங்கள் கனிகின்றதே

இளங்காலைப் பொழுதாக வா புதுராகச்சுவையாக வா
குளிர்கால நிலவாக வா கனியாடும் கொடியாக வா
உன் ஆசைகள் கண்டு என் தேவைகள் நூறாகி
மலர்மேனி கொதிக்கின்றது
......
***********

//
காதலென்னும் வானவில்லை கண்டேன்  நீ பார்த்த பார்வையில்
வானவில்லின் கோலம் உந்தன் ஜாலம் நீ தந்த ஆசைகள்
//

சுவை அல்லது ரசம் அத்தனையும் காதல் கற்பிக்க வல்லது. என்னென்ன ரசங்கள்? கருணை, காதல், காமம், கோபம், வெட்கம்...என்னவெல்லாம் உண்டோ அத்தனையும் காதல் மட்டுமே கற்பிக்க வல்லது.

அந்த சுவைகளை உணர்ந்த காதலனோ காதலியோ சுவைக்கேற்ற வண்ணம் கொள்கின்றனர். அப்படி வண்ணத்தை எழுப்ப வல்ல காதலும் வானவில் தானே? காதல் என்ற வானவில் தொடுத்து நீ பார்த்த பார்வையில் என்னுள் பல சுவைகளை எழுப்பியது, அதனால் நானும் பலவண்ணம் கொண்டேன்.

இன்னும் சில மறைபொருள் இருக்குமாறும் எழுதியிருக்கிறார் கவிஞர்...
அதாவது, காதலிக்கும் வரை black and white ஆக சுமாராக தெரிந்த சுற்றம்,
சொந்தம், தெரு, மாடு, கன்னுகுட்டி, கல்லூரி, வாத்தியார் எல்லாமே
மனதில் தோன்றும் பற்பல வண்ணத்தில் கலர்ஃபுல் ஆகி விடும்....


வானவில் போல் எப்படி என்னுள் பல வண்ணம் எழுந்தது தெரியுமா? எல்லாம் நீ செய்த ஜாலம், அதனால் என்னுள் விளைந்த ஆசைகளல்லவா அத்தனை வண்ணம் கொண்டது!!

//இளங்காலைப் பொழுதாக வா,  புதுராகச்சுவையாக வா//

அதெல்லாம் சரி...ஏன் மத்தியானம், மாலை எல்லாம் சொல்லலை? மயக்கும் மாலையும் இனிக்கும் இரவாக அல்லவா காதலன் வரவேண்டும்!?!?....இங்க ஏன் இளம் காலைப் பொழுதாக வரவேண்டுமாம்?

இளங்காலை பொழுதில் நம்பிக்கை, நிறைவு, திருப்தி, புத்துணர்ச்சி, பொலிவு எல்லாம் நிறைந்திருக்கும். என் வாழ்வின் அங்கமான நீயும் என்னுடைய வாழ்வில் இளங்காலைப் பொழுதாக வரவேண்டும். அது மட்டும் போதாது. இதுவரை நான் பாடிய சுவை, ராகம் வேறு. இன்று முதல் உன்னுடன் பாடவிருக்கும் புதுராக மோஹனம், இதுவரை பாடாதது.


//
உன் ஆசைகள் கண்டு என் தேவைகள் நூறாகி
மலர்மேனி கொதிக்கின்றது
//

இப்படி காதலும் ஆசையும் பொங்க காதலன் கூறும் விண்ணப்பத்தில் இவள் தேவை அதிகரித்து விட்டதாம். தேமே என்று சும்மா இருந்த மனசை கெடுப்பது என்பது இது தான் போலும், தேவை ஒன்று இரண்டு என இருந்தது, நூறாகி, அவனது தேவை இவளது தேவையாக மாறிவிட்டதால் மலர் போன்ற மென்மையான குளுமையான மெனி, சென்னை வெய்யிலாக கொதிக்க ஆரம்பித்து விட்டதாம்.

(ரொம்ப முக்கியம்.... இலக்கிய சந்தப் பாடலுக்கு பதவுரை பொழிப்புரையா வேறையா என்று தக்காளி முட்டை எரிவதற்குள் ஓடிவிடுகிறேன்)