February 26, 2019

இளையான்குடி மாறநாயனார்


இளையான்குடியில் பிறந்த வேளாளர். உழவுத்தொழில் இக்காலம் போலன்றி செழித்திருந்த காலம். மதிப்பும் மேன்மையும் கொண்டிருந்த காலம். பெரும் செல்வந்தாராக திகழ்தவர், தம் செல்வத்தை வீண் வழியில் வீசி இறைக்காமல், சிவனடியார்களை அழைத்து, பூசை செய்து உணவளிப்பதில் முனைந்தார். அதுவே தம் கொள்கையென வாழ்ந்தார். வறுமையிலும் அவர் உள்ளம் செழித்திருக்கும் அதிசயத்தை உலகறியச் செய்ய நினைத்த ஈசன், வளத்தைக் குறுக்கினான்.

வளம் குறுகியது, ஆனால் நாயன்மாரின் மனமும் அவர் மனையாளின் குணமும் குன்றவில்லை. அத்தனை செல்வத்தை விற்றும் தம் சேவையை தொடர்ந்து செய்தார். சிறு குத்தகை நிலத்தில் விதை-நெல் விளைவித்திருந்தார். 

அன்று பெருமழை. வீட்டிலோ சிறு தானியமும் இல்லை. இறையானார் சிவனடியாராக அவர் வீட்டுக் கதவை நள்ளிரவில் தட்டினார். இன்முகம் காட்டி வரவேற்று நல் பூஜை செய்து அமரச்செய்தனர். உணவருந்தச் செய்ய குந்துமணி நெல்லும் இல்லை. செய்வதறியாது சற்று திகைத்தவர்கள், உடனே சுதாரித்து, விதைத்திருந்த விதைநெல்லையே பெருமழையில் சேகரித்து வந்தார் நாயன்மார். விறகெறிக்க விட்டுப்போயிருந்த மேற்கூரைக் கட்டைகளை உடைத்து விறகாக்கினர். வீட்டுக் கூரையை விறகாக்கி, தோட்டத்துக்கீரையை உணவாக்கி, விதைநெல்லை சுத்தம் செய்து இடித்து அமுதாக்கி அடியவருக்கு படைத்தனர். கருணை கொண்டு இச்சிறியோரின் உணவை ஏற்றருள வேண்டும் என்று விண்ணப்பிக்க, அங்கு அடியவர் மறைந்து, உமாபதி உமையவளுடன் ஜோதி வடிவில் வானளாவ காட்சி தந்தார். இம்மையில் பெரும் செல்வ வளம் நிரம்ப பல காலம் பெருவாழ்வு வாழ்ந்து, பக்தித் தொண்டாற்றி, அதன் பின் மறுமையில் சிவபதவி அடைய திருவாய் மலர்ந்தருளினார்.

ஓம் நமச்சிவாய 

February 22, 2019

இயற்பகை நாயனார்

Image result for இயற்பகை நாயனார்



சோழ நாட்டில் காவிரிபூம்பட்டினத்தில் வைசியர் குலத்தில் பிறந்தார். பெரும் செல்வந்தாராக பொருளீட்டி நல்வாழ்வு வாழ்ந்திருந்தார். இல்லற தர்மத்தை செவ்வனே கடைபிடித்து சிவனடியார்களுக்கு இல்லையென சொல்லாமல் அவர்கள் விரும்பியவற்றை வழங்கி பணி செய்திருந்தனர்.


இவர்தம் பெருமை உலகறியச் செய்ய சித்தம் கொண்ட ஈசன், திருவிளையாடல் புரிந்தான். தம்பதியினரின் வீட்டிற்கு அந்தணர் வடிவத்தில் வருகை தந்தருளினார். இயற்பகை நாயனாரும் அவரை உபசரித்து வணங்கி நின்று, தம்மால் இல்லையென்று சொல்லாது இருக்கும் ஒன்றை விரும்பிக் கேட்டு தமக்கு அருளுமாறு வேண்ட, இறையனார், பக்தரின் மனைவியை விரும்பிப் பெற்றுச் செல்ல வந்திருப்பதாக உரைத்தார். அது கேட்டு பெரும் மகிழ்ச்சியுற்று, மனைவியை மலர்ந்த முகத்துடன் அந்தணருக்கு மனமுவந்து அளித்தர். மனைவியாரும் சில நொடிப்பொழுதே மனம் வெதும்பினாலும், உடன் தெளிந்து மணாளனின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்றும் பொருட்டு அவருடன் புறப்பட்டார். அதுமட்டுமன்றி, ஊராரும் உற்றாரும் தடுத்து இடையூறு விளைவிக்க வாய்ப்புள்ளதென்பதால், ஊர் எல்லை வரை இயற்பகையாரே துணை நின்று பாதுகாத்து அனுப்பி வைக்குமாறு கட்டளை பிறப்பித்தார்.



சிவனடியார்கள் பிறப்பித்த கட்டளையை சிவனே பிறப்பித்த கட்டளைக்கு சமமாகக் கருதிய பக்தரும், உடன் செவி சாய்த்தார். வழியில் அவர்களை தடுத்து உபதேசித்த ஊராரையும், நாயன்மாரையும் சிவனடியாரையும் வசைசொல் பாடி அவர்களோடு சண்டையிட்ட உறவினரை, பகைத்து, மேலும் சண்டை வலுக்கவே வீறு கொண்டெழுந்தார். பயந்தோடியவர்களைத் தவிர மற்றோறை வாளால் வெட்டி சாய்த்து, ஊர் எல்லை வரை துணை நின்று அனுப்பி வைத்தார். திரும்பப்போகலாம் என்ற கட்டளை பிறந்ததும், அந்தணரை ஸ்தோத்திரம் செய்து மறுமுறை திரும்ப பாரமல் சஞ்சலமின்றி வந்த வழி சென்றவரை, இறைவன் தடுத்து, உம்மையும் உன் மனைவியுடம் எம்மிடத்திற்கே இட்டு செல்ல வந்தோம் என்றருளி சிவலோக பிராப்தியளித்தார். அவர்களுக்காக சண்டையிட்டு உயிர் துறந்த மித்ர பந்துக்களுக்கும் வானுலக இன்பம் அருளினார் என்று கூறியருள்கிறார் சேக்கிழார்.

ஓம் நமச்சிவாய 


February 20, 2019

இடங்கழி நாயனார்

Image result for இடங்கழி நாயனார்


நாயன்மார்கள் பலரை சோழநாட்டினராகவே நாமும் காண்கிறோம். இடங்கழியாரும் கொடும்பாளூரில் சிறப்பாட்சி புரிந்தவர். சிவனுக்கும் அவனது அடியார்க்குமேயன்றி வேறு எவர்க்கும் அடிபணியாதவர் . சைவத்தின் வளர்ச்சிக்கும் அன்றாட கோவில் திருப்பணிகள் தடையின்றி நடப்பதற்கும் ஆவன செய்தார்.

சிவனடிருக்கு உணவிடுவதை தம் பணியென கொண்ட அடியார் ஒருவர், அமுது படைக்க தானியம் இன்றிப்போகவே செய்வதறியாது வருந்தி, மன்னரின் நெற்கிடங்கில் களவாடினார். பிடிபட்ட அடியாரும் மன்னனிடம் தாம் திருடியதற்கான காரணத்தை உரைக்க, மிக்க மெச்சிய மன்னன், இவரன்றோ சிறந்த அடியார் என்று பாராட்டி, ஊரெங்கும், மன்னனின் நெற்பண்டாரமும் மட்டுமன்றி நிதியும் கூட சிவனடியார்களுக்காக எவரும் கவர்ந்து கொள்ளலாம் என்று அறிவித்தார்.

பக்தியின் எல்லை விரியும் பொழுது உலக நாட்டத்திற்கான பற்றும் குறைந்து வரும். உலகத்தின் பார்வைக்கு பொன்னாகவும் பொருளாகவும் அருளாகவும் தெரியும் தன சம்பத்துக்கள் பக்தர்களுக்கோ ஒரு பொருட்டாகாது. ஈசனுக்கோ அல்லது அவன் அடியவருக்கோ அல்லாத பொருள் தேங்கி கிடந்தும் பயனென்ன? இப்புவியின் பிறப்பும் சிறப்பும் தனமும் அவன் அருளியது அவனுக்கே சென்று சேர்வதற்காக பணிக்கப்பட்டவை என்பதே பக்தர்களின் எண்ணமாயிருக்கும். அரச போகத்திலும் செருக்கிலும் திளைத்த பேரரசர்கள் மத்தியில் இப்படியும் ஒரு அரசர். அதனால் நாயன்மாராக உயர்ந்தார்.

திருநீரின் மகிமை தழைக்க நெடுங்காலம் சிறந்த ஆட்சிபுரிந்து முக்தி அடைந்தார்.

.

ஓம் நமச்சிவாய 

February 17, 2019

இசைஞானியார் மற்றும் சடைய நாயனார்

Image result for இசைஞானியார் சடையநாயனார்


இசைஞானியார், ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகப் பிறந்தார். திருமணப்பருவம் எய்தியவரை, அவரது தந்தை சிவ சிந்தனையுடையவரான சடையநாயனாருக்கு மணமுடித்து வைத்தார். சடைய நாயனார் சிவபெருமானின் அடிமைக்கு, அடிமை பூணும் இலக்குடையவராய் வாழ்ந்தார். ஆதிசைவ குலத்தவர்கள் இருவரும் திருமுனைப்பாடியிலிருக்கும் திருநாவலூரில் வாழ்ந்து வந்தனர் .

சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்ற பேற்றிற்கே இசைஞானியாரையும் சடையநாயனாரையும் நாயன்மார்களாகக் கொண்டாடி மகிழும் பாக்கியம் பெறுகிறோம். ஈன்ற பொழுதை விட சான்றோன் என்ற சொல்லுக்கே பெரிதுவக்கும் தாய், தந்தையருக்கு சுந்தரமூர்த்தியைப் போன்ற இறையம்சம் நிரம்பிய அருளாளர் மகனாகப் பிறந்த பெருமையே இருவரையும் சிவகதிக்கு இட்டுச் செல்ல போதுமானதாய் இருந்தது. கொண்டாடப்படும் மூன்றே மூன்று பெண் நாயன்மார்களில் இசைஞானியாரும் ஒருவர்.

திருமுனைப்பாடியிலுள்ள நரசிங்க முனையர் எனும் செல்வந்தர் (இவரும் நாயன்மார்களில் ஒருவர்) நம்பியாரூரன் என்றழைக்கப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனாரின் அழகில் தன் உளம் பறிகொடுத்து அவரை வளர்க்கும் பாக்கியத்தை சடையநாயனாரிடமும் இசைஞானியாரிடமும் வேண்ட, பற்றற்றவர்களான அம்மேன்மக்கள் உடனெ தம் மைந்தனை அவருக்கு வார்த்து நெடிதுயர்ந்து நின்றனர். நன் மக்களைப் பெறுதலும், முறையாக வளர்த்தலுமே பேசற்க்கறிய அருளை பெற்றுத்தரும் என்பது இதனால் சான்று.

ஓம் நமச்சிவாய 

February 15, 2019

ஆனாய நாயனார்.




திருமங்கலம் எனும் சோழர் திருத்தலத்தில் பிறந்த இடையர். ஆனிரை மேய்த்தவரென்பதால் ஆனாய நாயனார். வெய்ங்குழலை ஊதுவதில் வல்லவர். அல்லும் பகலும் அனு தினமும் சிறு நொடியும் இறை சிந்தனையை விட்டு அகலாதவர். ஆனிரை மேய்க்கும் பொழுதும் குழலூதி அதில் சிவனை துதிக்கும் ஐந்தெழுத்து மந்திரத்தை பாடலாக்கி இசைத்திருப்பார். இவர் பாடலை மாடுகளும் கேட்டுய்ந்து களிப்புறும். இவரது இசைக்கு மக்கள் மட்டுமன்றி மாக்களும் மயங்கி தம் நிலை மறப்பர்.


திருநாள் ஒன்றில் தம் கேசம் அலங்கரித்து, மலர் அணிந்து, மலர்மாலை சூடி ஆனிரை மேய்க்கப் புறப்பட்டார். அங்கு கண்ட காட்சியில் தமையிழந்தார். எங்கும் பூத்துக்குலுங்கும் எழில் சோலையில் முல்லையும் நறுமலர்களும் கொன்றை மலர்களும் உள்ளம் கவர்ந்து மெய்மறக்கச் செய்தன. கொன்றை மரத்தில் மலர் முகிழ்ந்திருந்தது சிவனார் கொன்றை மலர் மாலையணிந்து காட்சிதருவது போல் அவர் கண்ணுக்கு புலப்பட்டது. சிவனாரின் ஐந்தெழுத்து இசையாகி ஒலித்தது. அவ்விடத்து எழில் அனைத்தும் அவர் குழலிசை வழியே தம் வனப்பை வெளிப்படுத்தின. ஊதிய குழலொலிக்கு ஆனிரையும் மயங்கியது. மான்களும் மயிலும் களிநடம் புரிந்தன. அனைத்து ஜீவனும் தம் பகை மறந்து ஒருமைப்பட்டு அன்பொழுக இசையில் இன்பம் பருகின. காற்றும் மரமும் அருவியும் சலனமற்று அவர் கானம் கேட்டவண்ணமிருந்தன. கல்லும் கரையும் தேவ கானம் பொழியக்கண்டு தேவர்கள் கந்தர்வர்கள் கின்னரர்கள் என அனைவரும் இறங்கி வந்து இசைக்கு வசப்பட்டு நின்றிருந்தனர்.


இத்தகைய தேவகானம் சிவபெருமான் செவியில் இன்னமுதென விழுந்து, அவரை புறப்பட்டு வரச்செய்தது. உமையவளுடன் காட்சி தந்தவர் ஆனாய நாயனரை குழலூதியபடியே தமை வந்தடைய அருளினார். பூமழை பொழிய, முனிவர்களும் தேவர்களும் துதிக்க, குழலூதிக்கொண்டே இறைவனுடன் ஜோதியில் கலந்து திருக்கையிலை சென்றடைந்தார். இவர் வாழ்ந்த காலப்பகுதி கிபி ஏழிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுக்குள் என்று தோராயமாக கணிக்கப்பட்டிருக்கிறது.

ஓம்  நமச்சிவாய 

February 11, 2019

அரிவட்டாய நாயனார்.

Image result for அரிவாட்டாய



சிவபக்தி கொண்ட கண்மங்கலம் எனும் கிராமத்தில் வாழ்ந்த சோழ வேளாளர். தினம் சிவ வழிபாட்டுக்கு செந்நெல் அரிசியும், கீரையும் மாவடுவும் இறைவனுக்கு அமுது படைத்து வந்தார். அவ்விடத்தில் குடிகொண்ட நீள்நெறிநாதர் இவரை சோதனைக்கு உட்படுத்தி, வளம் குன்றச் செய்தும், திருப்பணி மறவாது செய்து வந்தார். கூலி வேலைக்கு உடம்பை வருத்தி, பொருளீட்டு பெருமாளுக்கு தொண்டு செய்தார். சிறு கீரையும், சில நேரம் வெறும் நீரும் மட்டுமே தமக்கு வாய்த்த போதும் இறைவனுக்கு மறவாமல் படையலிட்டு வந்தார். திருநாளாம் பெருநாள் ஒன்றில் அமுதாக்கி இறைவனுக்கு எடுத்து செல்லும் வழியில் மட்கலம் உடைந்து அத்தனையும் சிதறியது. இறைவன்

பசியாற அமுதளிக்க முடியாமல் மிக நொந்து மனம் உடைந்தவாகி, தமது கழுத்தை அரிவாள் கொண்டு அரிந்து உயிர் விடத்துணிந்தார். நீள்நெறிநாதனானவரும் உடன் இரங்கி, அவரை தடுத்தாட்கொண்டு ரிஷப வானகனாக காட்சி தந்து சிவலோக பிராப்தியருளி இவர் தொண்டை உலகோர் உணரும் வண்ணம் நீங்கா புகழ்பெறச் செய்தார்.
நாயன்மார்கள் சிலர் செய்த தொண்டு சிறுதொண்டாயினும் அதை வறுமையிலும் தொடர்ந்தமையாலும், தம் பசியை பொருட்டாக கருதாமல் இறைவனுக்கே வாழ்வை அற்பணித்ததாலும், உயிர் துறந்தேனும் இறைவனுக்கு தொண்டாற்ற எண்ணிய சீரிய பக்தியாலும் அவை மகுடமாக ஜொலிக்கின்றன.

ஓம் நமச்சிவாய

February 02, 2019

திருமங்கையாழ்வார்






சீர்காழியிலுள்ள திருக்குரையலூரில் பிறந்தவர் திருமங்கையாழ்வார். சோழ மன்னனின் படைத்தலைவனாக விளங்கியவர் வீரத்திலும் தீரத்திலும் பெரிதும் போற்றபட்டு சோழமன்னனாலேயே அரசனாக்கப்பட்டவர். சோழப்பேரரசன் திருமங்கை எனும் நாட்டை, அவர் படைத்தலைவனுக்கு பரிசளித்து குறு-நில அரசனாக்கினான்.

நீலன் என்று இயற்பெயர் பெற்ற படைத்தலைவன், திருமங்கையின் அரசனானான். அரசன் எப்படி ஆழ்வாரானார்? ஒழுக்கத்திலும் உயர்விலுஇம் சிறந்த ஒருவரை மேலும் மேன்மையான பாதைக்கு மாற்றி அழைத்துச் செல்ல தக்க குணமுள்ள மாதரசியாலே முடியும். திருமங்கை மன்னன் குமுதவல்லி என்ற பெண்ணின் மேல் காதல் கொண்டு திருமணம் புரிந்த பின், அவள் பின்பற்றும் வைணவ நெறியை தானும் பின்பற்றலானான். சிறிது சிறிதாக மன்னனை பெருமாளிடம் பெரும் பித்து வைக்கும் அளவுக்கு குமுதவல்லியால் மாற்ற முடிந்தது. போரும் குருதியும் வெற்றிக்களிப்பும் கண்டு மாவீரன், திருமாலுக்கும் அவர் அடியவருக்கும் கைங்கரியம் செய்யும் எளிய பக்தனாக மாறிப்போனார். சேவையில் ஈடுபட்டே தன் செல்வம் இழந்தார்.

அதனால் சோழ மன்னருக்கு வரி செலுத்த முடியாமற் போயிற்று. சினந்த மன்னன் திருமங்கையாழ்வாரை சிறைபிடித்தார். திருமால் இவர் சார்பில் பணம் கொடுத்து காத்தருளியதை அறிந்து சோழனும் ஆழ்வாரை விடுவித்து அவர் செலுத்திய வரிப் பணத்தையும் திரும்பக் கொடுத்தான்.

திருமங்கையாழ்வார் கள்வனைப் போல் வேடமிட்டு, வழியில் அகப்படும் பெரும் செல்வந்தர்களிடம் பொருள் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இவரை ஆட்கொள்ளும் பொருட்டு வைகுந்தவாசன், மன்னன் வழக்கமாக களவாடக் காத்து நிற்கும் பாதையில் , ஸ்ரீலக்ஷ்மியுடன் மணக்கோலத்தில் ஒரு அந்தணராகத் தோன்றி, தம் பொருளனைத்தையும் களவு கொடுத்தார். எவ்வளவு முயன்றும் ஆழ்வாரால், களவாடிய நகைகளையும் பொருட்களையும் நகர்த்தி எடுத்துச் செல்ல முடியவில்லை. பின்னர் அந்தணராக வந்த பகவான் மந்திரோபதேசம் செய்து நல்வழிக் காட்டியருளினார்.

திருமங்கையாழ்வார் 'பெரிய திருமொழி', 'திருக்குறுந்தாண்டகம்", சிறிய திருமடல், பெரிய திருமடல் உட்பட ஆறு நூல்கள் எழுதியுள்ளார். மற்றோரைக் காட்டிலும் அதிக பெருமாள் கோவில்களை மங்களசாசனம் செய்த ஆழ்வார் திருமங்கையாழ்வார்.

திருப்பாணாழ்வார்





குலவேற்றுமைகளும் அதனால் பிறரை சிறுமைப்படுத்தும் இழிச்செயல்களும் காலம் தோறும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஆழ்வார் காலமும் இதற்கு விதி விலக்கல்ல. பாணர் குலத்தோர் இசை வல்லுனர்களாக பெயர் பெற்றுள்ளனர். பிற்காலங்களில் பாணர் குலம் தீண்டுதற்கு ஆகாத குலமென்று தள்ளி வைக்கப்பட்டது.
திருப்பாணாழ்வார் பாணர் குலத்தில் பிறந்து, உறையூர் அருகிலுள்ள திருக்கோழி கிராமத்தில் வாழ்ந்தார். பெருமாள் மேல் பக்தி பூண்டு இசையால் அவர்க்கு ஆராதனை செய்து மகிழ்வார். பாணர் குலத்தவர்க்கு விதித்த கட்டுப்பாட்டை மனதில் கொண்டு கோவிலுள் செல்லாமல் காவிரிக்கு அக்கரையிலிருந்தே பாடல் பாடி திருவரங்கத்து பெருமாளை மகிழ்வித்து வந்தார்.
ரங்கநாயகனுக்குத் திருமஞ்சனம் செய்ய காவிரி நீர் சுமந்து வந்த கோவில் பட்டர், வழியில் பாட்டுப் பாடி உருகி நிற்கும் பாணரை பல முறை விலகும் படி கேட்டுக்கொண்டும் விலகாததால், செய்வதறியாது திகைத்தார். திருமஞ்சனம் செய்ய நீர் கொண்டு போகும் வேளையில் பாணரைத் தீண்டினால் சுத்தமும் ஆச்சாரமும் போய்விடுக்கூடும் என்று கருதி வேறு வழியின்றி அவர் விலக சிறு கல் எறிந்தார். அந்தக் கல் பாணரின் தலையில் பட்டு குருதி வழிந்தது. அதை கவனிக்காத அர்ச்சகர் அரங்கனுக்கு அபிஷேகம் செய்ய புறப்பட்டார். பாணரின் உயர்ந்த உள்ளமும் பக்தியின் மேன்மையும் உலகுக்கு உணர்த்த எண்ணிய திருவரங்கத்தான், குருதி வழிய காட்சி தந்து, திகைத்த பட்டருக்கு பாணரின் உயர்வை உணர்த்தும் பொருட்டு, பாணாழ்வாரை, அர்ச்சகர் தமது தோளில் சுமந்து திருக்கோவிலுள் வரும்படி ஆணையிட்டார்.
திருப்பாணாழ்வார் பெருமாளின் அங்க அழகை விவரித்து பாடல் எழுதியுள்ளார். இவர் பாடல்களுள் பெருமாளின் திருவழகை விவரிக்கும் பத்துப் பாடல் 'அமலனாதிபிரான்' என்றழைக்கப்பட்டு திவ்யப்பிரபந்ததில் சேர்க்கப்ப்ட்ட முத்துக்கள். ஆண்டாளைப் போலவே ஸ்தூல உடலுடன் பெருமாளுடன் ஐக்கியமானதாக சரிதம்.