December 01, 2009

பிடித்த 10 பிடிக்காத 10

நண்பர் பதிவர் D.R. Ashok தொடர்பதிவுக்கு என்னை அழைத்திருந்தார். பிடித்த - பிடிக்காத 10 விடயங்களைப் பகிர்ந்து கொள்ளும் பதிவு। நல்ல முயற்சி. நம் நண்பர்களை, உடன் பழகும் பதிவர்களைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

பிடிச்ச பத்து, பிடிக்காத விதிகள்.

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.
5. (தொடருக்கு இன்னும் சுவாரஸ்யத்தை கூட்டுமென்பதால்) எக்ஸ்ட்ரா ஒரு விதிமுறை, இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும்.

__________________________________________________________________




பிடித்த 10 பிடிக்காத 10
____________________




1. சமயமும்-ஆன்மீகமும்

பிடித்தது: சமயம் சார்ந்து நில்லாத பொது ஆன்மீக நெறிகள். சில பௌத்த / சமண / ஹிந்து தத்துவங்கள்.

பிடிக்காதது: மதம் எங்கெல்லாம் மனிதனுள் பிரிவினைச் சிந்தனையை தோற்றுவிக்கிறதோ, அப்படிப்பட்ட அனைத்து சிந்தனைகளும், நெறிகளும், வழிமுறைகளும்।

2. குணம்

பிடித்தது: மன்னிக்கும் குணம், சுயம்-அகன்ற பக்குவம், பிறரை துன்புறுத்தாமை, ' take it easy' policy

பிடிக்காதது: தற்புகழ்ச்சி, belittling others.

3. திரைப்படங்கள்

பிடித்தது: காதலை மைய்யமாய்க் கொண்ட (romance) படங்கள், thrillers (திகில் படங்கள் அல்ல), art films

பிடிக்காதது: Dark themes.

4. நடிகர்/நடிகையர்

பிடித்தவர்: கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த், ராதா, மாதவன், ஜீவா

பிடிக்காதவர்: அர்ஜுன், ரேவதி, கவுண்டமணி (சத்தம் தாங்க முடியலைங்க :(( ), ஆர்யா

5. இயக்குனர்

பிடித்தவர்: பாலச்சந்தர், சேரன், மணிரத்னம், பாரதிராஜா, பாக்யராஜ், பாலுமஹேந்த்ரா, தங்கர்பாச்சன், ஃபாசில், கே.விஸ்வநாத்

பிடிக்காதவர்: பேரரசு, பாலா (தற்போதைக்கு)

6. தொலைக்காட்சி தொகுப்பாளர்

பிடித்தவர்: நீயா நானா- கோபிநாத், மமதி

பிடிக்காதவர்: தமிழை சரியாக உச்சரிக்காமல் கடித்துத் துப்பும் அனைத்து தொகுப்பாளர்களும்.

7. பாடகர்கள்

பிடித்தவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகி, எல்.ஆர் ஈஸ்வரி, எஸ்.பி.பி, அனுராதா ஸ்ரீராம், சுனிதா சாரதி, மால்குடி ஷுபா,

பிடிக்காதவர்கள்: சில நேரங்களில் மூக்கால் பாடும் டி.எம்.எஸ் (பல பாடல்களில் பிடிக்கும் என்றாலும்)

8. தொலைக்காட்சியில்

பிடித்தது: சில நேரங்களில் ஒளிபரப்பப்படும் நல்ல திரைப்படங்கள்

பிடிக்காதது: தொலைக்காட்சி தொடர்கள், game shows, போட்டி நிகழ்ச்சிகள் என சரமாரியாக அனைத்தும்.

9. எழுத்தாளர்கள்

பிடித்தவர்: கல்கி, சுஜாதா

பிடிக்காதவர்: ரமணி சந்திரன் (yawn அறுவை : ) (mnb range க்கு எழுதுவதாக நினைத்து எழுதப்பட்டிருக்கும் மஹா போர் romance)

10. சாதனையாளர்கள்

பிடித்தவர்கள்: விஞ்ஞானிகள் பலரும், social activists

பிடிக்காதவர்கள்: world record-ற்காக வினோதமான விஷயங்கள் செய்ய முனைந்த அனைவரும்.


பிடித்த பாடல்கள்......பிடித்த கவிஞர்......பிடித்த இதிஹாஸ பாத்திரங்கள்........அடடா...10 தானாம்... இங்கனயே நிறுத்த வேண்டிய கட்டாயம்!

______________________


ரெண்டு பேரையானும் கூப்பிடணமாம். அதனால....(முன்பு அழைக்கப்படாதிருந்தால்)

ஐயப்பன் (ஜீவ்ஸ்)
ஷைலஜா
R.Gopi
தமிழ்ப் பறவை
ராமலக்ஷ்மி


ஆகிய ஐவரை பதிவைத் தொடர அழைக்கிறேன். :)

November 15, 2009

பள்ளிக்கூடம் போகமாட்டேன் ('சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009')

அன்புள்ள நண்பர்களே, உங்களுக்கு என் கதை பிடித்தமானதாக இருந்தால், உங்கள் வாக்குகளை இங்கே பதிக்கவும் மிக்க நன்றி। அன்புடன், ஷக்தி
_________________________________________________________________

தினம் ஒரு சினிமா, கூத்து எல்லாம் இன்றுடன் முடிந்தது. நாளை முதல் மீண்டும் பாழாய்ப் போன பள்ளிக்கூடம். வருடம் முழுவதும் விடுமுறை விட்டால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்! பள்ளிக்கூடமும் புஸ்தகமும், பாடமும் யார் தான் கண்டுபிடித்தார்களோ! ஷண்முகத்தின் முகம் சுண்டிய கத்தரிக்காயாக வாடி விட்டிருந்தது.

"முகமெல்லாம் ஏன் சுருங்கி போயிருக்குது!" - கலை தான் முதலில் கண்டுபுடித்தாள்.

"ஒண்ணுமில்ல"

"அப்பத்தா.... பாருங்க ஒங்க பேரக் கொளுந்த!.. நாளைக்கு ஸ்கூல் போக இம்புட்டு வாட்டம்" "- கலை சூள் கொட்டினாள்.

அப்பத்தா அழாத குறையாய் கெஞ்சி பள்ளிக்கு அனுப்பியதெல்லாம் ஒரு காலம். அப்பொழுது அவன் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தான். பழைய சோற்றை தின்றுவிட்டு ஸ்லேட்டுப் புத்தகத்துடன் வயக்காட்டுப் பக்கம் ஓடிவிடுவான். மூச்சிரைக்க ஓடி வரும் அய்யனோ அப்பத்தாவோ தரதரவென்று இழுத்துக் பள்ளியில் விட்டு வருவார்கள்.

"அப்பத்தா அய்யன் கோவிச்சுக்கும், நானு....வாச வளியா ஒடிட்டு குறுகால புகுந்து தோட்டத்து வளியா உள்ள வந்துரவா"

"எலே போலே, இஸ்கூல் போனாத் தான் எங்கள மாதிரி வயக்காட்டுல அவதிபடாம, டவுசர் சர்ட் பொட்டு சுகமா வேலைய பாப்ப"

இயல்பிலேயே ஷண்முகம் பயந்த சுபாவம். யாருடனும் அதிகம் கைகலப்பு சண்டைகள் கிடையாது. சத்தியமூர்த்திக்கும் இவனுக்கும் தினமும் தகராறு வரும். இவன் பலப்பத்தை பிடிங்கிக்கொண்டு விடுவான். டவுரை கிழித்துவிடுவான். பயத்தில் ஓரிரு முறை நிக்கர் கூட ஈரமாக்கியிருக்கிறது. படிப்பிலும் ஷண்முகம் சத்தியமூர்த்தியை விட சுமார் தான். தமிழரசி மட்டும் தான் இவன் கட்சி. "லே ஏன் அவனோட தெனமும் சண்ட இளுக்கற" என்று சத்தியமூர்த்தி காலரை பிடித்து கேட்கும் தைரியம் அவளுக்கு மட்டும் உண்டு.

"அந்த பொட்ட புள்ளைக்கு இருக்குற தகிரியம் கூட ஒனக்கு இல்ல" - அய்யன் சொல்வது வெப்பங்கொழுந்தாய் கசந்தாலும் அப்பட்டமான உண்மை.

"அப்பத்தா கத சொல்லேன்... "

"அப்ப அந்த ராஜா தன்னோட மவன குருகுலத்துக்கு அனுப்பிட்டாங்களாம்"

'அப்டீன்னா?"

"அப்டீன்னா, நீ இஸ்கூல் போவுர இல்ல, அது மாதிரி இல்லாம, வாத்தியாருங்க வீட்டுலையே தங்கி படிக்கோணும். ஒரு பத்து வருசத்தில அம்புட்டும் கத்துகிட்டு அப்புறம் தான் வூட்டப் பார்க்க போவணம்."

"இதெல்லாம் எப்ப அப்பத்தா" ஷண்முகத்தின் கண்கள் பயத்தில் விரியும்.


"அது கெடக்கும் நூறாயிரம் வருசத்துக்கு முன்ன"

"செயிலு மாதிரி இருக்குமா"

"இல்லடா கண்ணு, நல்லதெல்லாம் சொல்லி தருவாங்க"

"நல்லவேள அப்ப நான் பொறக்கல" அப்பத்தாவை இறுக்கமாய் பிடித்து உறங்கினாலும் கனவில் ராமசுப்பு வாத்தியாரின் பிரம்புக்கு கை கால் முளைத்து மிரட்டும். கொம்பை பிடித்துக் கொண்டு சத்தியமூர்த்தி இடி-இடியென சிரிப்பான். அப்பத்தாவின் கதையின் காரணமாக கனவில் சத்தியமூர்த்திக்கு குடுமி முளைத்திருக்கும்.

'பேசாதைக்கு வயக்காட்டுல அய்யனுக்கு கூட மாட வேலைக்கு போய்ட்டா என்ன!' இந்த ரகசியத்திட்டம் தோன்றிய மாத்திரத்தில் அய்யனும் ராமசுப்பு வாத்தியாரைப் போல் பிரம்புடன் மனக் கண் முன் காட்சியளித்து, திட்டத்தை தவிடுபொடியாக்கி விடுவார்.

இந்த வருடம் ஷண்முகம் எட்டாம் வகுப்பு. புது பாடத்திட்டம். மாநில அளவில் பொதுத்-தேர்வு வைக்கலாமா வேண்டாமா என்ற சர்ச்சை பள்ளியில் எழுந்த வண்ணம் இருக்கிறது. பொதுத்-தேர்வு என்றால் இன்னும் அதிகம் பொறுப்பு, அதிகம் உழைப்பு, படிப்பு. சினிமா கூத்து எல்லாம் மூச்! இனி நேரமே இருக்காது. போதாத குறைக்கு சென்ற வருடம் ரௌடிப் பட்டம் தக்கவைத்துக் கொண்ட மாரியப்பன் இந்த வருடம் இவன் வகுப்பில் மாற்றப்பட்டிருக்கிறானாம். அரசல் புரசலாய் சத்தியமூர்த்தி சொல்லியிதிலிருந்து பள்ளி இன்னும் பிடிக்காமல் போனது. மாரியப்பன் மற்ற மாணவர்களை விட வயதில் மூத்தவன் என்பதாலேயே அவன் ஆதிக்கம் சக நண்பர்களிடையே செல்லுபடியாகும். அவன் கிண்டலுக்கு பயந்து பள்ளியை விட்டு மாற்றல் வாங்கியவர்கள் பலர். அவன் அப்பா பெரிய மிராசுதார் என்பதால் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் முதல் சக மாணவர்கள் வரை அனைவரும் அவன் சட்டைப் பையில்.

சத்தியமூர்த்திக்களையெல்லாம் கடந்து வந்திருக்கிறவனுக்கு இப்போது மாரியப்பன் பிரச்சனை பூதாகாரமாய் பயமுறுத்தியது. பள்ளியில் செட்டு சேர்த்துக்கொண்டு, புள்ளைகளை கிண்டலடிப்பது, ஆசிரியர் தலையை குறி பார்த்து சாக்பீஸ் விட்டடிப்பது போன்றவை குறைந்தபட்ச இன்னல்கள் விளைவிக்கக் கூடியவை. ஏன் என்று கெட்ட சக மாணவனின் சைக்கிள் காற்று புடுங்கப்பட்டது. கூடவே அவனை பற்றி இல்லாத, இருக்கிற, அந்தரங்க நடவேடிக்கைகளை பள்ளிச்சுவர்கள் பரப்பிக்கொண்டிருந்தன.

ஆசிரியர்களையும் விட்டு வைத்ததில்லை. போன முறை தமிழாசிரியர் புகழேந்தியின் உணவு டப்பாவை மேய்ந்து விட்டு, அதனுள் ரப்பர் பாம்பு ஒன்றை பரிசாக விட்டு வைக்க, மதியம் டப்பாவை திறந்த புகழேந்திக்கு பயத்தில் ரத்தக்கொதிப்பு அதிகமாகி, அடுத்த ஒரு மாதம் பள்ளிக்கு வரவே இல்லை.

'ஓகோ இந்த வருசன் பூகோளப் பாடம் புதிசா சேர்ந்திருச்சா!' கலை சோற்றுடன் கருவாட்டை வைத்து ஊட்டி விட்டாள்.

"எத்தன பெருசா இருக்கு பாரு புத்தகம்!" - கண்கள் அசர புத்தகத்தை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த ஷண்முகத்தை கலை கண்டுகொள்ளவே இல்லை.

"நான் ஒரு பத்து நாள் லீவு எடுத்து பெரியய்யா வீட்டுல போய் இருந்துட்டு வர்ரேனே." - கெஞ்சல்களுக்கும் அவள் மசிந்ததாய் தெரியவில்லை.

"வந்ததும் ஸ்கூலுக்குத்தான் போவேன். நிசம்மா"

"நல்லா படுத்து தூங்கு, பள்ளிக்கூடம் போக இம்புட்டு ரகளை!"

இவர்களுக்கு என்ன தெரியும், தன்னை இழிவாக பார்க்கும் சத்தியமூர்த்தியைப் பற்றி அல்லது புதிதாக வகுப்புக்குள் நுழைந்திருக்கும் மாரியப்பனைப் பற்றி! கோபமும் வருத்தமுமாய் பொங்கி வந்தது. கலையை பக்கத்திலேயே படுத்துறங்கிப் போனான்.

அன்று கனவில் நல்லவேளை யாரும் வரவில்லை.

"என்னலே பள்ளிக்கூடம் தொறந்தாச்சு இன்னமும் தூக்கம். ஒம்பது மணிக்கு மணி அடிச்சுருவாங்க. போன வருசம் மாதிரி பத்து மணி இல்லை" கரவைப் பசுவின் கத்தலுக்கு முன், கோழியின் கொக்கரிப்பிற்கும் முன்னமே வாசலில் கூவியபடி சத்தியமூர்த்தி நின்றிருந்தான். எரிச்சலாய் வந்தது ஷண்முகத்திற்கு.

"நான் இந்த வருசம் ஒம்பதாம் க்ளாஸ் தெரியுமா" பெருமையும் கிண்டலும் குரலில் மண்டிக்கிடந்தது.

"ஆங் சொன்னியே॥ ரெண்டு க்ளாஸ் மேல போட்டுடாங்க போல" முகமெல்லாம் பல்லாக இளித்த சத்தியமூர்த்தியை காளை மாட்டை விட்டு முட்டச் சொல்ல வேண்டும்!

"சரி பொறவால பாக்கலாம், சுளுவா வந்திரு...என்ன!"

தலைமை ஆசிரியருக்கு எப்போதுமே சத்தியமூர்த்தி என்றால் பிரியம் அதிகம். அதான் இரண்டு க்ளாஸ் மேல பொட்டுடாங்க. இயலாமையுடன் கருவிக்கொள்ளத் தான் முடிந்தது. கதவோரமாய் தயங்கி நின்றவனை அய்யன் அப்போது தான் கவனித்தார்.

"என்னப்பா பள்ளிக்கூடம் போவல?"

"இல்ல...நானும் வயக்காட்டு பக்கம்...வந்திரவா, ஒனக்கும் கூட மாட வேலைக்கு...."

"அடி செருப்பால"

"என்னத்த சொல்ல, அன்னியலெருந்து இன்னிய வரை இதே ரோதனை இவனோட. பள்ளிக்கூடம் போக தொரத்தி விட்டே எங்காலம் ஓஞ்சு போச்சு." அப்பத்தாவின் பொலம்பல் தெரு முக்கு வரை கெட்டிருக்கும்.

***

ஷண்முகம் போகும் போதே மணி அடித்துவிட்டிருந்தார்கள். வகுப்பை நோட்டமிட்ட படி உள்ளே நுழைந்தான். எல்லாரும் இவனையே பார்ப்பது போல் பிரமை. பிரமை என்ன அது தான் உண்மை. அதோ அங்கே மாரியப்பனும் இவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். வகுப்பு நிறைந்திருந்தது. இந்த வருடம் நிறைய புது மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள் போலும்.

***

"ஹ்ம்ம் இவனும் பாங்கி கீங்கி ன்னு பெரிய உத்தியோகம் பார்ப்பான்னு நினைச்சுத் தான் அனுப்பி வெச்சது। இப்படி ஸ்கூலையே கட்டிட்டு அளணம்ன்னு தான் அவன் தலையில எளுதிருக்குது போல"

அப்பத்தா சொல்லச் சொல்ல கலைக்கு சிரித்து மாளவில்லை.

***

"வணக்கம் பசங்களா. நான் தான் இந்த வருசம் ஒங்க எட்டாம் வகுப்பு வாத்தியார். எம்பேரு ஷண்முகம். எங்க.... ஒவ்வொருத்தரா உங்க பேரைச் சொல்லுங்க. "


சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

October 30, 2009

ஒருவனுக்கு வேறொருத்தி


விலகி ஓடும் உறவை எட்டிப் பிடிக்க
பழுத்து உதிரும் பூவை தக்க வைக்க
கிழக்கில் உதிப்பதை மேற்கில் மாற்ற
இறைவியோ இவள் திருத்திப் பார்க்க

வேறொருத்தியை நாடியதால்
வேரறுந்து சாய்ந்த தாம்பத்திய மரம்
வேற்றுப் பூவை நுகரத்துடித்து
ஆட்டம் முடித்து அழுது களைத்து
ஒட்டிக்கொள்ள உயிர்த்தெழும் போது
தொடுவானமாய் துவண்ட உறவில்
தொலைதூரம் தொலைந்த தலைவி

நினைவு அவன் பாரம் சுமக்கலாம்
சுமக்காமல் மலடியாய் மரிக்கலாம்
அவன் தேடி வரும் வேளையில்
அவள் புள்ளியாய் பெயரின்றி கரைந்துவிடலாம்
திரும்பி வரும் கோவலனை
விரும்பி ஏற்கும் கண்ணகிகள்
இப்பொழுதெல்லாம் பிறப்பதில்லை

October 22, 2009

தீவிரவாதத்தின் மரண ஓலங்கள்




சீற்றம் கொண்டெழுந்த இயற்கை உயிர்களின் காவு வாங்கும் பொழுதெல்லாம் பூமியெங்கும் மரண ஓலங்கள். பேரிழப்பு நிகழும் தருணங்களில், இறந்த, இறக்கின்ற, மீட்கப்படாத உயிர்களை எண்ணி இறப்பின் கொடும் தன்மையை சகித்துக்கொள்ள முடியாமல், ரத்த சம்பந்தமின்றியே கண்ணீர் சிந்தியோர் பலர். தீயினாற் சுட்ட புண் ஆறிய பிறகும் வடுவை விட்டுச் செல்வது போல், நேரடி மரணங்கள் நிகழ்ந்த குடும்பங்களைத் தவிர, கணக்கற்ற பொருட்களையும் நம்பிக்கையையும் தொலைத்து பரிதாபமாய்ப் பலர் வாடி நின்றனர்। இவ்விழப்புக்கள் சில நாட்களிலோ மாதங்களிலோ ஈடுகட்டக் கூடியவை அல்ல. வருடங்கள் உருண்டாலும் வெவ்வேறு வடிவில், வெறுமையையும் எண்ணற்ற துன்பத்தை பரிசாய் அளிக்கக் கூடியவை. இந்நிகழ்வுகள் ஆழ்ந்து உறங்குகின்ற பரோபகார உணர்வை தட்டி எழுப்பக்கூடியவை. அவரவர் தங்களால் முடிந்த பண, பொருள் உதவிகளும் சேவைகளும் செய்து தங்கள் அஞ்சலியை செலுத்தி, உள்ளே கசியும் மனிதநேயத்திற்கு பால் வார்த்துக கொண்டனர்.

அசம்பாவிதங்கள் நேரும் போதெல்லாம் கடவுள் ஏனோ மாட்டிக்கொண்டுவிடுகிறார். இறை என்ற ஒரு வஸ்துவை தலைக்குத் தலை நாறடிக்கின்றனர். இரக்கமற்ற அந்த வஸ்துவிற்கு கருணாமயி என்று எவ்வாறு பெயர் வந்திருக்கக்கூடும் என ஆராய்கின்றனர். மரணங்கள் நிகழ்ந்த சில நாட்கள் வரை, கடவுளுக்கு கொலைகாரப் பட்டம் கட்டி, தூற்றுகின்றனர். மரணங்களில் இயற்கை தருவிக்கும் மரணங்களுக்கு அதிக முக்கியத்துவமும் ஆராய்ச்சியும் தொடர்ந்த வண்ணமிருக்கிறது. ஒரு பூகம்பம் இல்லாவிட்டால் எரிமலைகளோ, வெள்ளமோ சூறாவளியோ பூமியின் பாரத்தை சமன்படுத்திய வண்ணம் உள்ளது. இவைகளின் தீவிரங்களை அளக்க ரிக்டர்களையும், காற்றழுத்த எண்களையும் பற்றிக் கேட்டறியாதவர்கள் கூட, இது போன்ற சம்பவங்கள் நடந்த ஓரிரு நாட்களுக்கு, சரளமாய்ப் பயன்படுத்தி வருந்திக் கொண்டிருப்பார்கள்.

முரணான விஷயம் இங்கே ஒன்றே ஒன்று தான். இத்தனை வருத்தப்படும் மனிதர்கள், இயற்கைச் சீரழிவுக்காகக் கண்ணீர் சிந்தியபடி பெயரில்லா எதையோ கரித்துக் கொட்டும் நம்மால் எப்படி தீவிரவாதத்தை அங்கீகரிக்க முடிகிறது? அங்கீகரிக்கவில்லையெனில், மதத்தின் பெயரிலும், ஜாதியின் பெயரிலும் மொழியின் பெயராலும் சரமாரியான கொலைகளை ஏன் யாரும் முயற்சியெடுத்து தட்டிக்கேட்பதில்லை? உள்ளாடும் உயிர் அனைவருக்கும் பொது. அது பறிக்கப்படும் போது ஜாதி மதங்களைத் கடந்து வலியென்ற ஒரே பொது மொழி மட்டும் புரியும். இயற்கை மரணங்களைப் பழிக்கும் நாம், மனிதனே மனிதனைக் கொல்லும் காட்டுமிராண்டித் தனத்தை வளர்க்கும் தீவிரவாத்திற்கு சோறூட்டிக்கொண்டிருக்கிறோம். இயற்கையின் சீற்றத்தைத் தடுக்க எத்தனித்து தோற்கும் நாம், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாவதைத் தடுத்து நிறுத்த முனைகிறோமா?

எங்கோ குறிப்பிட்ட ஜாதிக்காரன் இறந்ததற்கு சம்பந்தமில்லா ஒரு தனி மனிதனிடம் அந்த வெறியைத் தீர்த்துக் கொள்ளுதல் எவ்வகையில் நியாயம்? தேசப்பற்று என்று போற்றி, வேற்று தேசத்தவனைச் சுட்டுக்கொல்கிறோம். அது கொலையாகாது. அங்கு இறப்பு போற்றப்படுகிறது. கொச்சையாய்க் கூறினால் எதிரியின் இறப்பில் கூத்தாடுகிறோம். மனிதர்களே எழுதிய சட்டங்கள். உயிர் பறிக்கப்படுவது எல்லாவற்றிலும் அடித்தளமாய் அமைந்தாலும், கொலை, நாட்டுப்பற்று, தீவிரவாதம் என்று அதற்கு வண்ணம் தந்து அதற்கேற்றாற் போல் போற்றவோ தூற்றவோ செய்கின்றனர்.

உங்களுக்கு இப்பொழுது குழப்பம் வரலாம். அப்படியெனில் நாட்டுப்பற்று தவறா? போர் வீரர்கள் முதல் தரமான தியாகிகள் அல்லவா என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். நாட்டுப்பற்று தேவை. தற்காப்புக்காக உருவாக்கப் பட்ட உணர்வு. என் இடத்தில் நீ நுழைந்து அபகரித்தால் நான் எதுவுமின்றி இழந்து நிற்பேன். அதனால் நீ திமிறும் போது நானும் திமிறுவேன். நீ எல்லைமீறும் போது நானும் எல்லை மீறுவேன். நீ என்னைக் கொன்றால் நானும் உன்னைக் கொல்வேன். பலரின் நன்மைக்காக ஒரு போர்வீரன் இன்னொருவனை கொன்று ஒரு பிரிவினரிடம் தியாகப் பட்டத்தை வெல்கிறான். அப்படியெனில், இரான் இராக் போர், இதுவரை நடந்த உலகப் போர்கள் முதல் இதிகாசப் புராணங்களில் வரும் பாரதப் போர் வரை எல்லாமே தியாகத்தின் பிரிவில் வருகிறதா என்றால் இல்லை.

தற்காப்பிற்காக இன்றி, மற்ற எந்த காரணத்திற்காகவும் போர் எனும் பெயரில் உயிர்கள் பறிக்கப் பட்டால் அது தியாகம் ஆகாது. வாழ்வை எளிமைப்படுத்தவும், இயற்கை வளங்களை முறையோடு தடையின்றி அனுபவிக்கவும், வரையறுக்கப் பட்ட கோடுகளே நாடுகள். இதே எண்ணத்துடன் இக்கோடுகள் பார்க்கப்படும் வரையில் நாடு என்ற ஒன்று வரவேற்கத்தக்கது. கண்ணுக்குப் புலப்படாத இந்த பாகப் பிரிவினைகளினால் பிறகு படிப்படியாய் மொழி, இனம் பழக்க வழக்கங்கள் என உட்பிரிவுகளுக்கு உட்பட்டு, எதுவெல்லாம் நம் வாழ்வை எளிமையாக்கி வழி நடத்திச் செல்ல வேண்டுமோ அவையே வில்லங்கமாய் விளங்கிவருகிறது.

நாட்டுப்பற்று போற்றக்கூடியது. மொழிப்பற்றும் மதப்பற்றும், இனப்பற்றும் ஜாதிப்பற்றும் தனிமனிதப்பற்றும் அவ்வாறே. பற்றாக மட்டும் இருக்கும் வரை எல்லாமே போற்றக்கூடியது. பற்று என்பது என்று வெறியாய் மாறுகிறதோ, அன்று அதற்கு தீவிரவாதத்தின் வண்ணம் பூசப்படுகிறது. இயற்கையிலேயே மனிதனுக்கு ஆள்காட்டி விரலை உபயோகித்து இன்னொன்றை காரணம் காட்டுவது பிடித்தமான விஷயம். அழிவு என்றில்லை, பொது வாழ்வில் நமக்கு பிடிக்காத ஒவ்வாத ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால் முதலில் ஆள் காட்டி விரல் உயர்ந்து வேறு ஒருவரை சுட்டிக் காட்டும் வரை தூக்கம் வராது. நூறு பேர் ஜாதிவெறியால் பலியா? தீவிரவாதம் ஒழிய வேண்டும். எல்லாம் கட்சிகள் செய்யும் வினை. பள்ளிக் குழந்தைகள் பலியா? பொறுப்பற்ற அரசாங்க ஊழியர்களை வேலை நீக்கம் செய். இரு நாடுகளிடையே போரின் துவக்கமா? பதவியிலிருக்கும் வெறியர்களே காரணம். இங்கு தனி மனிதனால் என்ன செய்ய இயலும்? கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிக்கப் புறப்படலாம். அதுவும் இல்லையெனில் தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் செய்திகள் படித்து அலசலாம். நானும் தர்மம் செய்தேன் என்று ஒரு பர்சண்ட் மாதவருமானத்தை நிதி நிவாரணங்களுக்கு வழங்கலாம். அது யாரிடம் போய் சேருகிறது என்று கவலைப்பட்டே அடுத்த ஒரு வருடத்தைக் கழிக்கலாம். கொஞ்சம் திறமையுள்ளவர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி, கவிதை, கட்டுரை, கதை, ஜோக் என்று எழுதி பெயர் வாங்கக்கூடும்.

யாருமில்லையெனில் 'கடவுளே எனக்கு இந்தச் சோதனையா? உனக்குக் கண்ணில்லையா' என்ற புலம்பல்களில் மாட்டிக் கொண்டு விழிப்பது மறுபடியும் இறைவன். இயற்கைச் சீற்றத்தால் அழிவா? இருக்கவே இருக்கிறான் இறைவன். எந்த மொழியில் எத்தனை அசிங்கமாய் கத்தினாலும் கேட்டுக் கொண்டிருப்பான். இறைவன் என்றாவது சீற்றம் கொண்டு பழிச்சண்டை போட கிளம்பி வரும் வரையில் கவலையின்றி அவனைக் குறை சொல்லலாம்.

ஒவ்வொரு தனிமனிதனும் யோசிக்க வேண்டிய ஒன்றுள்ளது. மரணங்களும் துக்கங்களும் தவிர்க்கமுடியாதவை. பூமி நகரும் போதும் புயற்காற்று சீறும் போதும், எரிமலை வெடிக்கும் போதும் நம்மால் அதைத் தடுக்க இயலாது. வருமுன் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஒன்றே வழி. மனிதனும் மரணத்துடன் போராடிக்கொண்டே இருக்கிறான். புதுப்புது மருந்துகள் கண்டறிகிறான். முதுமையை மூப்பை ஒழிக்கப் பாடுபடுகிறான். பத்து வியாதிகளுக்கு மருந்துகளும் மாற்று மருந்துகளும் கண்டு பிடித்து சந்தோஷ ஆரவாரம் பெருகும் போது, பதினோராவது வியாதி உருவெடுக்கிறது. அதைக் கண்டறிய குறைந்தது அரை நூற்றாண்டாகிறது. அதை வெல்ல இன்னும் பல ஆண்டுகள். இதில் வேதனைக்குர்¢ய எதிர்மறையாய், வாழப் பாடுபடும் மனிதனே, அழிக்க வல்ல விஷயங்களையும் கண்டறிந்து அதைச் சரியாக உபயோகப் படுத்த எத்தனிக்காமல், சுற்றுப்புறத்தையும், பிற ஜீவராசிகளையும் அழிவின் பாதையிலே தள்ளுகிறான்.

மனிதன் மனிதனாய் இல்லாத வரை, வாழ முயலாத வரை இயற்கையை வெல்ல எத்தனை முறை முயன்றாலும், அது முடியாமல் நழுவிக்கொண்டே செல்லும். எவ்வகையில் அழிக்கப்பட்டாலும் அழிவு ஒன்று தான். எந்தப் பெயரில் கொல்லப்பட்டாலும் கொலை ஒன்று தான். அன்பையும், கருணையையும் அள்ளி வழங்கும் மஹாத்மாவாய் ஒவ்வொருவரும் உருவெடுக்க வேண்டாம். அரக்க குணங்களை அழித்து, கலவரங்களிலும் இரத்த சேதங்களிலும் ஈடுபடாமல், வன்முறை பழகாமல், குறைந்த பட்சம் மனிதனாய் இருக்க முயல்வதில் சிரமம் ஏதும் இருப்பதில்லை. முயன்று பார்க்கலாம்.

September 16, 2009

தென்கச்சி கோ சுவாமிநாதனுக்கு இதயபூர்வ அஞ்சலி



அதிகாலை மணம் பரப்பும் மலரின் மென்மையோடு, நம்பிக்கையூட்டும் காலைக் கதிரின் நட்பினைப் போல், இளம் தளிர்கள் துளிர்விடும் அழகோடு மெல்ல வருடும் குரல். 'தினம் ஒரு தகவலாக' பல வருடங்கள் பல தகவல்கள் பரிமாறிய, பதப்பட்ட குரல். தென்கச்சி சுவாமிநாதன் என்றாலே என் மனதில் இனம் புரியாத சந்தோஷம் குதிக்கும், நம்பிக்கை பிறக்கும். ஏறக்குறைய அன்றைய வானொலியிலும், இன்றைய தொலைக்காட்சியிலும் இவர் குரல் கேட்ட அத்தனை உள்ளங்களுக்கும் இந்த அனுபவம் புரியும்.


மிகையான நாடகத்தன்மையோடு ஒலிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கிடையே,நம்மில் ஒருவரைப் போல், அக்கம் பக்கத்து திண்ணையில் அமர்ந்து பேசப்படும் இயல்பான நடையில், தினம் ஒரு தகவல். தினம் ஒரு படிப்பினை. தினம் ஒரு சுவாரஸ்யமான திருப்பம் நிறைந்த குட்டிக் கதை.

"வந்தே மாதரம்" என்று துவங்கும் எங்கள் வானொலிப் பெட்டியில், தொடர்ந்து செய்திகளும் தகவல்களும் ஒலித்தவண்ணமிருக்கும்.அத்தனைக்கும் மகுடம் சூட்டும் நிகழ்ச்சி "இன்று ஒரு தகவல்" . பள்ளி புறப்படும் முன் கடைசியாக நான் கேட்பதும் சென்னை வானொலியின் "இன்று ஒரு தகவல்" நிகழ்ச்சி. அவசரமாக இரண்டே இரண்டு கவளம் உணவை அள்ளி அடைத்துப் புறப்படும் போதும் கூட என் கவனம் மட்டும் இவர் குரலில் அமிழ்ந்திருக்கும்.

அடடா இன்றைக்கு கணிதப் பரீட்சையாயிற்றே என்று பதறும் நாட்களில் எனக்கு புன்னகையூட்டியவர். வீட்டுப்பாடம் முடிக்கவில்லையே என்று கவலைப்படும் தினங்களில் கூட தைரியம் கொடுத்து வழி அனுப்பிவைத்தவர். குதூகலித்து பள்ளிசெல்ல ஆயுத்தமாகும் பல தினங்களில் இவர் கதைகளும், குரலும் மேலும் உற்சாகத்தை வழங்கி விடையளிக்கும்.


காலை ஆறு மணிக்கே புறப்பட்டுவிடும் அப்பா. சமையலில் மும்முரமாக இருக்கும் அம்மாவுக்கு பேச ஏது நேரம்! காலை வேளையில் என்னை ஊக்கப்படுத்திப் பேசியதெல்லாம் தென்கச்சி கோ சுவாமிநாதன். தினமும் பேசினார். விதவிதமான கதைகள் மூலம் பேசினார்.


கதைகளை விட, கதைகளின் முடிவு எப்பேற்பட்டதாய் இருக்கும் என்று கவனிப்பதில் எனக்கு ஆர்வம். சடாரென திருப்பம் கொணர்ந்து நம் கவனம் ஈர்க்கும் ஒவ்வொரு கதையும் . அதன் பிறகு, இவருக்கே உரிய தனி பாணியில், வித்தியாசமான ஹாஸ்யத்தை புகுத்தி, புன்னகையுடன் முடிக்கப்படும் கடைசி அத்தியாயம். கதை முடிந்தவுடன், நானும் என் அம்மாவும் புன்னகை பரிமாறிக்கொள்வோம். ரசனைக்கு அப்பாற்பட்ட அனுபவத்தின் ஊடே வார்த்தைகளுக்கு இடமேது!

தோழனாய், ஆசிரியனாய் இருந்து வருடிக்கொடுத்த குரல். என் பள்ளிப்பருவத்தின் ஒரு அங்கமாகி விட்ட குரல். இன்றைக்கும் இவர் குரலைக் கேட்கும் போதெல்லாம் தொலைந்த பள்ளிப் பருவம், தோழர்கள், தோழிகள், பல நினைவுகள், காலை நேரத்து அவசரங்கள் எல்லாம் தொய்ந்த கலவையான உணர்வு எழுவதுண்டு.

அதெல்லாம் நேற்றுடன் முடிந்து விட்டது. இன்று நம்மிடையே இவரின் நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. "சென்னை: பிரபல எழுத்தாளரும் ரேடியோ தொலைக்காட்சி பேச்சாளருமான தென்கச்சி. கோ. சுவாமிநாதன் காலமானார்" என்ற செய்தி கண்கள் பனிக்கச் செய்தது. என்னுடைய பால்ய பருவ உணர்வுகளில் சிலவற்றை தன்னுடனேயே பிய்த்து எடுத்துச் சென்று விட்டார் . தொலைந்த கல்லூரி பருவம், தொலைந்த தோழர்களைப் போல், இன்று இவரும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு சென்று விட்டார்.


இவர் குரல் மட்டும் என்றும் சுப்ரபாதமாய் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

September 06, 2009

சந்திரமுகி - A pheonix



( படம் வெளியானவுடனேயே, சுடச்சுட திரையரங்குகளில் பார்த்த அனுபவம் மிகக் குறைவு. அப்படிப் பார்த்த ஒரு சில படங்களுள் இதுவும் ஒன்று. ப்ளாகர்கள் ஷை, ஜீவ்ஸ், மரவண்டு உட்பட பல நண்பர்களுடன் சேர்ந்து ரசித்த படம். பயந்தாங்கொள்ளியான என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த, ஜீவ்ஸ்-ஐயும் பயமுறுத்திய புண்ணியம் என்னைச் சாரும். அவனுக்கு தனியே நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். )


'பேய்ப் படம்' என்ற முன்னறிவிப்பு யாரும் தரவே தராததால், சவுண்ட் இ·பெக்ட் அதிகமாய் இருக்கும் இடமாய்த் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் பெரும் பாக்கியம் கிட்டியது. 'பாபா படம் முழுசாய் ஊத்திக்கிச்சு' என்று பரபரப்பாய் பேசப்பட்டதால் இதில் சிரமம் எடுத்து ஏதேனும் செய்திருப்பார்கள் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது. ரஜினி கதாபாத்திரத்தின் அறிமுகத்தின் பொழுது, ஜிகினா பேப்பர்கள் தியேட்டரில் (அதுவும் பெங்களூரில்!) பறந்தன. (யாரும் எழுந்து வீசியதாய் தெரியவில்லை) இதெல்லாம், ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்த, படச்சுருளிலேயே இணைத்து எடுத்துவிடுவார்களா எனப் புரியவில்லை.


தமிழ்ப் பட டைரக்டர்களுக்கு, 'பேய்ப் படங்களோ', 'த்ரில்லர்'களோ, 'டிடெக்டிவ்' படங்களோ 'சஸ்பென்ஸ் படங்களோ' எடுக்கத் தெரியும்...ஆனால் எடுக்க மாட்டார்கள்.
அப்படியே இது போல் எதேனும் கதை இருந்தால், அதில் நாலு சண்டை, இரண்டு டூயட், சலிப்பூட்டும் காமெடி என்று கலவையாய் ஒரு விருந்திட்டு, திகட்ட வைப்பதில் மன்னர்கள். இந்தப் படமும் அதில் விதிவிலக்கல்ல.

இந்தப் படத்தின் கதைப்படி, ரஜினிக்கு சண்டைக்காட்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எங்கே ரசிகர்கள் சீட்டை விட்டு எழுந்து ஓடிவிடுவார்களோ என்று பயந்து, சின்னக் குழந்தைகளுக்கு சொல்லும் காக்கைக் கதையையே சும்மா ஒப்புக்கென்று சில மசாலாக்களை சேர்ப்பது போல், சண்டை என்று ஓரிரண்டு காட்சிகளை சேர்த்து, உணர்ச்சி வசப்படும் ரசிகர்களை முதலில், லாலிபாப் கொடுத்து உட்கார்த்தி வைத்து விடுகிறார்கள்.

கொஞ்சமே கொஞ்சம் கதையும் எதிர்பார்க்கும் சிலர், தேவையில்லாத சண்டைக்காக முகம் சுளிக்கும் சமயம், தடாலென்று 'வேட்டையபுரம் அரண்மணை', 'அகிலாண்டேஸ்வரி' என்று பில்ட் அப் கொடுத்து, நம்மை சற்றே நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டு, கே.ஆர்.விஜயா காணாமல் போய் விடுகிறார்.

அதுக்கப்புறம், நடக்கும் கதை எல்லாமே வேட்டையபுர அரண்மனையும், அதைச் சுற்றியிருக்கும் கிராமத்திலும் நடப்பது. தன் மனைவிக்காகத் துடிக்கும் பிரபு, நெகிழ வைக்கிறார். செம்மின் ஷீலாவிலிருந்து, மாளவிகா வரை, நாசரைலிருந்து பிரபு வரை, எல்லோரும் தன் பாத்திரத்தை மிகைப்படுத்தாமல் நன்றாகவே செய்ய....

காமெடி என்றாலே, தொண்டை கிழிய கத்துவது என்று, கவுண்டமணி காலத்திலிருந்து வந்த பாரம்பர்யத்தை விடாமல் கைப்பற்றி, மிகவும் மிகையாய் நடித்து, எரிச்சலூட்டுகிறார் வடிவேலு. வடிவேலு கேரக்டர், 'ஒரு வரிக்கதையை எப்படி மூன்று மணிநேரம் ஓட்டுவது' என்ற பயத்தில், காமெடிக்காக மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிறது. முகமும் உடலும் சேறு அப்பிக்கொண்டு, வண்டியில் ஏற மறுப்பதும், உடனே ரஜினி 'அப்போ நான் ஊருக்கு போகமாட்டேன்' என்றவுடன், அதே 'வரட்டு ஜம்ப' முகத்துடன்.... "என்ன வில்லத்தனம்!!" என்று மனதுள் பொருமுவது மட்டும் புன்னகைக்க வைக்கிறது.

வடிவேலுவின் காமெடியிலும், கதை இம்மி அளவும் நகராத அலுப்பிலும் நாம் சீட்டில் கடுப்புடன் நெளிகையில், மணிமணியாய் பாடல்கள் சற்றே சாந்தப்படுத்துகின்றன. "அத்திந்தோம்" பாடல் நாட்டுப்புற மெட்டை நன்றாய் நினைவூட்டி, தாளமிட வைக்கிறது என்றால், "கொக்கு பற பற" பாட்டு, அதன் குரல் வளத்திற்கும், இசைக்கும் ரசிக்க வைக்கிறது.

"·பாசில்'-ன் 'மணிச்சித்ரதாழு' கதையின் தழுவல் இல்லவே இல்லை என்று பி.வாசு முழங்கிக் கொண்டிருக்க, பார்த்த அத்தனை பேருக்கும், ஏனோ 'மணிச்சித்ரதாழு'வும், கன்னடத்தின் 'ஆப்த-மித்ர' வும் நினைவிற்கு வராமல் தவிர்க்க முடியவில்லை. ஒரு வேளை இவ்விரு படங்களையும் பி.வாசு சரியாய் பார்க்கவில்லையோ?

இந்தப் படத்தில் இன்னொரு கவனிக்கத் தக்க விஷயம், ரஜினியின் புதுமையான தோற்றம். குறைந்தது பத்து வயது இளமையாய்த் தெரிகிறார். போடும் உடைகளில் நவீனத்துவம் எட்டிப் பார்ப்பதற்கு அவர் மகள் ஐஸ்வர்யாவிற்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளார். இது தவிர, ஃபேஸ் லி·ப்டிங் செய்துள்ளார் என்றும் சிலர் அரசல் புரசலாய் பேசுகிறார்கள். எது எப்படியிருப்பினும் அவர் உடையும், முகமும் "பளிச்".

ஒரு வழியாய், கதையை இடைவெளை வரை படாத பாடு பட்டு நகர்த்தி,

"இனி...சந்திரமுகி"

என்று ஸ்டில் போடும் போது, மீண்டும் நமக்கு லேசாய் நம்பிக்கை பிறக்கிறது.

பிறகு தான் புரிந்தது, இது ரஜினி படமே அல்ல! இது சந்திரமுகியின் படம்; படத்தை தூக்கி நிறுத்துவது சந்திரமுகி. படத்தின், நாயகன், நாயகி, ஆதாரம் எல்லாமே "சந்திரமுகி". சந்திரமுகியின் படத்தை சிறுவன் ஒருவன் வரைந்ததாகச் சொல்லப்படுகிறது. பாம்பும், சந்திரமுகியின் படமும், வேட்டைய ராஜாவின் படமும் காண்பிக்கும் பொழுது, 'அமானுஷ்ய' உணர்வு ஏற்படுகிறது. "சிறந்த கவிதையோ கதையோ தன்னைத் தானே எழுதிக் கொள்ள வேண்டும்" என்று கூறுவது போல், சந்திரமுகி தன்னைத் தானே எழுதிக் கொள்கிறாள். கதையில் அவள் வரும் அத்தியாயங்கள், நம்மை அவளின் உள்ளுணர்வுகளுடன் ஒன்ற வைக்கிறது.

சந்திரமுகி தன்னை மறந்து ஆடும் நேரம், ஒலிக்கும் வீணையிசை உயிரோடு ஒலிக்கிறது. மற்றோர் உலகத்திற்கு நம்மை இட்டுச் செல்லும் விமானம் போல், அவ்வீணை ஒலி, நம்மை வேறு உலகத்திற்கு கொண்டு செல்கிறது. இங்கு ஏனோ, வித்யாசாகரின் நிழலில் என்னால் இளையராஜாவைத் தான் காண முடிகிறது. குறைந்த பட்சம் 'ரா...ரா...' பாடலிலேனும் இளையராஜாவின் சாயை இருக்கிறது என்று அவர் இசையைக் கேட்ட எல்லோராலும் அடித்துக் கூற முடியும்.

நூறு வருடத்திற்கு முன் அமைந்த நாகரிகம், நம் கண்முன் விரிகிறது. சந்திரமுகியின் அறை என்று காட்டப்படும் அறையின் interiors பிரமிக்க வைக்கிறது.

எல்லோரும் குறிப்பிட்டது போல் நிறைய விடையில்லா 'எப்படி?'க்களும் 'ஏன்?'களும் மண்டியிருக்கின்றன. இக்கதையில், ஸ்ப்லிட் பர்சனாலிடியை பற்றி மட்டுமே பேசுகிறார்கள் என்றால், பாம்பு எதற்காய் வருகிறது? இது போன்ற பல கேள்விகளுக்கு நமக்குத் தோன்றிய விடை அளித்துக் கொள்ள ஏதுவாய், இயக்குனர் முடிவை நம்மிடம் விட்டு விட்டார்.

கதைகளைப் படித்து, அல்லது படங்களைப் பார்த்து, மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய கதாபாத்திரமாய் தன்னையே பாவித்துக் கொள்பவர்கள் பலர் உண்டு (நான் உட்பட). அவர்களுக்கெல்லாம் இப்படிப் பட்ட வியாதி இருப்பதாய் கூறிவிட முடியாது. இம்மனோபாவத்தையும் தாண்டிய பலமான மன-பாதிப்புகள் இருக்க வேண்டும். அந்த பின்னணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதற்கு ஒரு காரணம், 'யார் சந்திரமுகி' என்ற விறுவிறுப்பை தக்கவைத்துக் கொள்வதற்காய் இருக்கலாம். யாரென்று தெரியச் செய்யாமலே, பின்னணிக் கதைக்கும் குழந்தைப் பருவத்திற்கும் அதிக கவனத்தைத் திருப்பியிருக்கலாம். தேவையற்ற காமெடிக்கு பதில் இத்தகைய காட்சிகள், மேலும் கதைக்கு வலுவூட்டியிருக்கும்.

ஜோதிகாவின் நடிப்பிற்கு பக்கபலமாய் இருப்பது அவர் கண்கள், அப்புறம், அதிக இஃபெக்டிற்காக கண்களில் அடிக்கும் 'டார்ச் லைட்'. ஷோபனாவிற்கு 'மணிச்சித்ரதாழு' வின் சிறந்த நடிகை விருது கிடைத்தது என்றால், ஜோதிகாவிற்கு குறைந்து நம்மூர் ·பில்ம்-·பேர் அவார்ட் நிச்சயம் கிடைக்கும். சிரமம் எடுத்திருக்கிறார்.

சாடிஸ்டிக் பாத்திரம் வேட்டையராஜாவினுடையது. அவர் வரும் பொழுதே, அவையினர் ஒருவரின் தொப்பி கீழே விழுந்து விட, கைக்கொட்டி ஆர்பரித்து மகிழ்கிறார். ஒரே வெட்டாய் குணசேகரனை வெட்டிய வேட்டையராஜா, கீழே விழுந்திருக்கும் தோட்டை மெதுவாய், ஜதி பாடியபடி ஆர்ப்பாட்டமின்றி, முகத்தில் அதே வெறிகலந்த மௌன சிரிப்புடன், எடுத்து அணியும் இடம் மகுடம். சந்திரமுகி காணும், கற்பனைச்சூழலை, பாட்டுடன், கலந்து, நிஜத்திற்கும், நிழலுக்கும் தாவும் picturisation / choreography பாராட்டத்தக்கது.


சிக்கென்ற முகத்துடனும், ஆடையலங்காரத்துடனும், ரஜினி வேட்டைய ராஜாவாய் மனதில் நிற்கிறார். 'பதினாறு வயதினிலே', 'மூன்று முடிச்சு', 'அவர்கள்', 'அவள் அப்படித்தான்'- இந்தப் படங்களை பார்த்தவர்களுக்குத் தெரியும், ரஜினியின் வில்லத்தனம் என்னவென்று! அவர் செய்யும் ஹீரோயிஸத்தில், மனதைப் பறி கொடுத்த தமிழ் சினிமா, நிச்சயம் 'ரஜினி' என்ற ஒரு அருமையான 'வில்லன்' நடிகரை இழந்து விட்டது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு 'ரஜினி' என்ற நடிகர் படத்தில் மிளிர்கிறார். அவருக்கு ஈடுகொடுத்து இன்னும் அதிகமாய் மின்னுகிறார் ஜோதிகா.

படத்தின் மைன்ஸ் பாண்ட். டிரெக்ஷன், காமெடி.

ப்ளஸ் பாய்ண்ட். ரஜினி, ஜோதிகா எல்லோரையும் விழுங்கி விட்டு, படத்தை தூக்கி நிறுத்தியிருக்கும் "சந்திரமுகி". நடிகர்களையும் தாண்டி, கதையையும் தாண்டி, கதாபாத்திரமாய் வெற்றி பெறுகிறாள் சந்திரமுகி.

ஒரு முறை பார்க்கலாம். ரஜினி, ஜோதிகா, மற்றும் இசைக்காக!

இன்னொரு முறையும் பார்க்கலாம். 'சந்திரமுகி'க்காக!!

September 04, 2009

காதல் வந்துடுச்சா? வரப்போகுதா?

கிட்டே வராதே
என் வாய் குழறி மனம் திறந்துவிட்டால்?
புன்னகை உதிர்க்காதே
உன் புன்னகையின் கிறக்கத்தில்
என் புன்னகை தொலைந்துவிட்டால்?
.
தூரமாய் நின்றும் என்னைப் பார்த்துத் தொலையாதே
பார்வைக் கிரணங்களின் தகிப்பில் என் பாதை மாறிவிட்டால்?
கனவின் நிழலில் சுருண்டுகொள்ளாதே
சுவாசம் திணறி தூக்கத்திலேயே இறக்க நேரிட்டால்?
.
விலகி ஓட ஓட என்னை விரட்டாதே
எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை,
பயமாய் இருக்கிறது..
என்னைக் காதலிப்பதை நீயே துப்பிவிட்டால்?
.
அடடா!
என் எழுத்துக்குள் தஞ்சம் புகுந்து இம்சிக்காதே
எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை,
பயமாய் இருக்கிறது..
உன்னைக் காதலிப்பதை நானே உளறிவிட்டால்?

ஒன்றானவன் - உருவில் இரண்டானவன்

'நீ' இல்லாத பொழுதுகளில்
'நான்' என்பதும் புலப்படாது ஒழிந்துவிட வேண்டும்
என் இயக்கங்கள் நொறுங்கிவிட வேண்டும்.

'நாம்' மட்டும் வெட்டவெளி எங்கெங்கும்
ஆதாமாய் ஏவளாய் பிரிந்து
பற்பலவாய் பெருகாமல் இரண்டாய் நின்றுவிட வேண்டும்
மூன்றென ஏதும் முளைக்காமல் முடங்கவிட வேண்டும்

எதேனுமொரு பரிமாணாத்தில்
'நீ' என ஒன்று உதிக்காமலிருக்குமானால்
'நான்' என வேறொன்றும் நிலைக்காமல் நசிந்துவிட வேண்டும்.

'நீ' மட்டுமே எங்கும் எதிலும் என்றென்றும்...
ஐம்புலன்களாக
மனமாக
ஆன்மாவாக
அதனினும் உயர்ந்த அறிவாக

'நீ' மட்டும் என்றென்றும் - என்
ஒட்டுமொத்த இருப்பாக
உணர்வாக உயிராக
காதலாக காமமாக
முதலாக
முடிவாக

ம்ஹூம்...அழ மாட்டேன்!



பளீரென புன்னகை வரைந்து விடையளித்த பின்
இயல்பாய் இருக்க எத்தனித்து
இருபத்தி இரண்டாம் முறையாய் தோற்றுவிட்டேன்.
அதற்காகவெல்லாம் என்னால் அழமுடியாது.
.
இப்பொழுதெல்லாம் அழுவதில்லை தெரியுமா
மரத்துவிட்டது.
உன் நினைவுகளின் எச்சில் மிச்சமிருக்கிறது என்பதற்காக
அதைக் கண்ணீரிலா கரைக்க முடியும்?!
.
போதும் இன்னும் இம்சிக்காதே
விட்டுவிடு.
கடமைகள் காத்திருக்கிறது
அழ நேரமில்லை.
அய்யயோ... அழுவதில்லை என உனக்கு சத்தியம் வேறு செய்துள்ளேன்!
.
நல்லவேளை...
மனம் வரையும் ஓவியங்களை படம்பிடிக்கும் கருவியில்லை.
நல்லவேளை....
மனம் அழும் ஓசைகளை மொழிபெயர்க்க வழியில்லை.