September 20, 2016

இருபது மழைக்காலங்கள்



ஒரு மழைக்காலத்துக் குடையின் கீழ்
பூத்த முதல் புன்னகை
வசந்த கால வரவேற்பறையில்
சிந்திய கனவுக் கோலங்கள்
வலிகளை கடந்து விட்டதாய்
இறுமாந்த நேரத்தில்
நீர்வீழ்ச்சியென நினைவுகள்
நிரம்பித் தெரித்தோடும்.
அன்று நீர்த்தூவி வாழ்த்திய மழை
பிரிந்த போது பெய்யவில்லை.
பிரிந்தவர் கூடுவதும்; கூடுபவர் பிரிவதுமாய்
சுழலும் வாழ்க்கை.
இருபது மழைக்காலங்கள்
வந்து சென்றன.
மறுபடியும் சந்தித்தால்
மழை பெய்யும்.
.
.
அதன் பின் ஓயாது.

September 17, 2016

புரட்டாசி சனிக்கிழமையும் - பெருமாளும்




பெரும்பாலும் இறைவனை சாக்கிட்டு, நாம் கும்மி அடித்து குதூகலிக்க ஒரு சந்தர்ப்பமாகவே,  திருவிழாவும், கோவிலுக்கு செல்லும் வழக்கமும் இருந்து வந்திருக்கிறது. அதற்கப்பால் கோவிகளில் இறை உணர்வு மேலிட ஜபம் தபத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை சற்று மெலிந்து காணப்படும்.

இன்றைக்கும் புரட்டாசி சனிக்கிழமை என்பதால்  கோவிலில் எள் சிந்த இடமில்லை. அடிக்கடி கோவிலில் வந்து குசலம் விசாரித்தால் தான் அன்பு என்று அர்த்தமில்லை. இறைவனை அகத்திலேயே இன்னும் சொல்லப்போனால் நம் அகமெனும் மனத்துள் தரிசிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இருந்தாலும், எண்ணை, திரி, பூ பழம் சகிதம் வந்திருந்து, ஆரத்தி காண்பிக்கும் அரை க்ஷணத்தில் கன்னத்தில் போட்டுக் கொண்டதும், பக்கத்திலிருப்பவரிடம் வாய் நோக, விட்டு விஷயங்கள், தெரு சமாச்சாரங்கள், சமுகத்தின் சீர் கேடு அங்கலாய்ப்புகள் தொடங்கி, நடுவில் இரண்டு  நொடி தீர்த்தம் வாங்கி சேவித்து, இடையே என்ன பிரசாதம் என்று கண்களை மேய விட்டு, மீண்டும் தொடரும் கதைகள்.

நம் வீட்டுக்கு வந்த ஒருவன், நம்மை கண்டுகொள்ளாமல் இருந்தால் அஹங்காரம் தலைக்கேறி தாம் தூம் என்று குதிக்கும் நம்மை நினைத்து வெட்கப்படவேண்டும்.  இவ்வளவு உதாசீனத்தை புன்னகையுடன் ரசித்து கடாட்சித்து கொண்டிருக்கும் பெருமாளின் கருணைக்கு இணையே இல்லை.... 

இது போன்ற சந்தர்ப்பங்களில் வேறு சில வழக்கு முறைகளில் உள்ளபடி ஆலயங்களில் பேச்சு சுதந்திரத்தை வலுக்கட்டாயமாக குறைப்பது நல்லதோ என்று தோன்றுகிறது. 

இவ்வளவு ரணகளத்திலும் யாரையும் கண்டுகொள்ளாமல் ஹனுமான் சாலிஸா-வை உச்சஸ்தாயியில்  தப்பும் தவறுமாய்  சொல்லிக்கொண்டு அமர்ந்திருந்தவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 

உபன்யாச சிடி ப்ரஹல்லாதனின் பக்தியை எடுத்துரைத்து கொண்டிருந்தது, இத்தனை ஜன அலறலில் கரைந்தே போனது.

September 14, 2016

குருவே பொன்னடி போற்றி



வேடிக்கையிலும்
கேளிக்கையிலும்
விவேகமின்றி உழன்றக்கால்- எம்
கேள்விக்கு பதிலாய்
ஐயம் அகற்றும் பேரொளியாய்
மிக்க கருணையுடன்
தேடி இல்லம் புகுந்து
தடுத்தென்னை ஆட்கொண்ட
சங்கரனே சிவனே
நீயே  தாயுமானாய்
தந்தையுமானாய்
நீயே மாலுமானாய்  - எம்
மாதவனுமானாய்
ஏழேழ் பிறவிக்கும்
அதன் அப்பாலும்
உன் பொன்னடி தொடர்ந்தே
பூஜித்திருப்பேனே
உன் சொற்படி நடந்தே
சேவித்திருப்பேனே

July 07, 2016

உடையார் ராஜராஜசோழன் - (பாலகுமாரன்)

நேற்றோடு மூன்று மாதங்களாக என்னுடனே ஒட்டி உறவாடிய உடையாருக்கு தற்காலிக விடைகொடுத்து அனுப்பியிருக்கிறேன் .

பொன்னியின் செல்வனாக விளையாட்டாய் விடலைப் பருவத்தில் வந்தமர்தவன், இன்று ராஜராஜத்தேவனாக உயர்ந்து, உடையாராக உள்ளமதில் நிரந்தரமாய் குடிகொண்டுவிட்டான்.

கல்கி அவர்களின் எழுத்து வண்ணத்தில் வர்ணமேறியவன், இன்று எழுத்துச் சித்தரின் உளிபட்டு செதுக்கிய சிற்பமாய் உயர்ந்து நிற்கிறான்.

சரித்திர சான்றுகளின் துணை கொண்டு, ஆங்காங்கே கற்பனைக் கோடுகள் விரிய, புதினமாக பரிசளித்திருக்கிறார் பாலகுமாரன் அவர்கள்.

தன்னை சிவபாதசேகரனாக உணர்ந்து சிவ வழிபாட்டின் உன்னதங்களை, சிவதரிசனத்தை உணர்தவனாக காட்சியளிக்கிறான். பாலகனாக, வாலிபனாக, மன்னனாக இருந்தவன், தன்னில் சிவனைக் காணும் சிவபக்தனாக நீங்காத காதல் ஏற்படுத்துகிறான். சோழ சாம்ராஜ்யத்தையும், நாகரீகத்தையும்  உலகறியச் செய்து, ஒவ்வொருவரின் பங்களிப்பை சிரசில் தூக்கி வைத்து, அவர்களின் எளிய பங்களிப்பைப் பொறித்திருக்கிறான்.  எப்பேர்பட்ட மன்னன் என நம்மை வியக்க  வைக்கிறான். சோழ மண்ணின் மீது மாறா பக்தி கொள்ள காரணமாகிறான்.

பஞ்சவன்மாதேவியின் பாத்திரப்படைப்பு அற்புதமாக வெளிவந்திருக்கிறது. ஏறக்குறைய நம் மனதில் வானதியின் இடத்தை பிடித்து விட எத்தனிக்கிறார். இன்றும் பழையாறையில் இவருக்கான பள்ளிப்படை தனது தாய்க்காக ராஜேந்திரன் கட்டிய கோவில் என்ற சான்றுடன் திகழ்கிறது. சுமக்காத தாய்க்கு பள்ளிப்படை கட்டும் அளவு அவளது வாழ்வும், பெருங்குணமும் கண்டிப்பாக அமைந்திருக்கலாம்.

இன்றுடன் பஞ்சவன்மாதேவியும், வானதியும், ராஜேந்திரனும், பிரம்மராயரும், வைணவதாசனும், உமையாளும், சீராளனும், கோவிலின் செங்கல் சுமந்தவரும், கல்வெட்டுக்களில் இருக்கும் ஆயிரமாயிரம் மாந்தர்களும் அவர்களைப் பற்றிய என் சிந்தனைகளும் தற்காலிகமாக என்னுடன் விடைபெற்றுக் கொண்டாலும், என்றும் என் சோழ காதலில் சுமந்து நிற்பேன்.




போர்காலங்களின் அவலங்கள், பயங்கள், வெற்றிக் களிப்புகள் அனைத்தையும் நம் கண்முன்னே நிறுத்திவிட்டார் ஆசிரியர். அரசப் பதவியில் இருப்பவர்கள் அவர்களின் சேனாபதிகளின் அன்றாட பிரச்சனைகளும் உணர்வு பூர்வமாய் அலசப்பட்டிருக்கின்றன.  அன்றைய நாகரீகம் சரித்திர சான்று கலந்த கற்பனையுடன் அழகாய் படம் விரிகிறது.

வணிகர்கள் அந்தணர்கள் மறவர்கள் பஞ்சமர்கள் கருமார்கள் இவர்கள் இடையே நடைபெறும் ஜாதிக்கலவரங்களுக்கும் பஞ்சமில்லை.  மனிதன் என்னும் மாறவில்லை, என்றும் அவனது இயல்பு குணம் தொடரும் என்பதற்கு சான்று.  

இவர்களை எல்லாம் தாண்டி ராஜராஜன் தற்காலிகமாகக் கூட விடைபெற மறுத்து என்னுள் உறைந்துவிட்டான்.

இனி பெரியகோவிலில் பரமசிவனார் மட்டுமல்ல, ராஜராஜனும், பஞ்சவன்மாதேவியும், பிரம்மராயர் கிருஷ்ணன் ராமனும், நித்த வினோதனும், குஞ்சரமல்லரும் இலத்திசடையனும் கதை சொல்வதை தடவிப் பார்க்கலாம். உணர்ந்து கண்ணீர் உகுக்கலாம். 

எழுத்துச்சித்தருக்கும், கல்கி அவர்களுக்கும் என் மண்ணின் சரித்திரத்தை, பெருமையை உணர்த்தியமைக்கு என்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

June 30, 2016

எதுவும் கடந்து போகும்





அதிர்ச்சி ஆத்திரம் துயரம்
ஜாதிமத பேதம் பேதமின்மை
அரசியல் ஆதாயம்
பகிர்வு விவாதம் ஊகம்
தற்காப்ப்பு ஆலோசனை
இரங்கற்பாக்கள்
நடு நடுவே ஊடுருவும் ஹாஸ்யம்
ஐந்து நாட்களில்
திரைகள் ஒவ்வொன்றாய் களைந்து
வெறும் செய்தியாகிப் போகும்
ஸ்வாதிகளும் வினுப்ரியாக்களும்


ஒப்பனை




மையிட்டெழுதிய விழிகளின் படபடப்பு
செப்பனிட்டு செதுக்கிய வெளிப்பூச்சு
வண்ணமேற்றிய உதடு
வெட்கத்தை பூசிக்கொண்ட கன்னங்கள்
ஆபரணங்களின் நேர்த்தி
ஆடைகளின் பகட்டு
மெருகேற்றிய வண்ணக் கலவைக்குள்
எங்கோ தொலைந்தே போன முகங்கள்
ஆழ் மயக்கத்தில் உறங்கிக் கிடக்கும் அகம்.


-ஷக்திப்ரபா

June 27, 2016

ஏன் வரவில்லை...


கிட்டே நெருங்கி உன்னை
எட்டிப் பிடிக்க எத்தனிக்கையில் 
எட்டடி தள்ளிப் போகிறாய்
உணர்ந்து உன்னை கொஞ்சிக் கிடந்திருந்த
தருணத்தில் தடாலென நீ நகர்ந்ததால்
அரிச்சுவடிப் பாடமே ஆடிப்போனது

வழக்கொன்றுமில்லை எனக்கு
காவல்துறையின் இருப்பும் இல்லாமையும்புகைப்படக் கருவிகளின் துல்லியமும்
சட்ட ஒழுங்கின் அமைப்பும்
அவரவர் உயிர் போர்த்தி ஓட்டமெடுக்கும்
மானிடரிடன் பயமும் சுயநலமும்
வருத்தமொன்றுமில்லை.
எவருடனும் காழ்பொன்றும் இல்லை


உன் சரண் பற்றிய அடியவளை
இத்தனை கொடூர மரணம் எழுதி
தள்ளி நின்று
தாயத்தின் அடுத்த காயை நகர்த்தும்
உன்னிடம் மட்டுமே கேள்விகள் ஆயிரம்.
நம்பினோரை கைவிட்ட நாயகனே
உன்னை தண்டிக்க எந்த சட்டத்தில் இடமுண்டு?
வாராமலே போன மாதவனே
பிணக்கும் கோபமும் வருத்தமும்.........
உன்னிடம் மட்டுமே
ஆயிரம் ஆயிரம்.

March 08, 2016

சத்தமின்றி செய்யப்படும் சாதனைகள்

பெண்ணின் அடையாளம் அவள் சிறகுகளின் எழுச்சி. எப்பொழுதெல்லாம் சிறகை விரித்து பறக்க அனுமதிக்கப்படுகிறாளோ அப்பொழுதெல்லாம் பெண் சுவாசிக்கிறாள்.



சாதனை என்பது பெரியதாய் இமாலயமாய் இருக்க வேண்டியதில்லை. வண்ணச் சிறகை விரித்து, நல்லதை நுகர்ந்து,  தீமைக்கு எதிராய் குரல் கொடுக்கும் பெண் சாதிக்கிறாள். அவள், அக்கம் பக்கத்திலுள்ள அடுக்களைகளில் புகுந்து கொண்டிருந்தாலும், சாதிக்கிறாள்.   நல்ல குடிமக்களைப் பெற்று, பேணி நற்கருத்தூட்டி ஆக்கபூர்வமான உயிரை உலகுக்கு அளிக்கிறாள். 


பெண்ணை சுவாசிக்க விடுங்கள். அவள் அடிப்படைத் தேவைகளுக்குத் தடை போடாதீர்கள். புணர்ச்சிப் பொருளாய் மட்டும் பார்க்கும் மிருகங்களிடமிருந்து பெண்களை மீட்க, ஒவ்வொரு பெண்ணும் ஆணும் சேர்ந்து போரிடுவோம். 

பெண் சுதந்திரம் பாலுணர்ச்சிகளை தூண்டும் எழுத்துக்களிலோ, போதைப் பொருட்களிலோ, ஏட்டிக்கு போட்டியாய் சுற்றித் திரிவதிலோ முடங்கிவிடுவது அல்ல. 


எங்கெல்லாம் பெண்ணின் சுய உணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் பூட்டு பூட்டபடுவதில்லையோ எங்கெல்லாம் அவள்  வாதங்களுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப் படுகிறதோ  அங்கெல்லாம் அவள் உயிர்த்தெழுகிறாள். அவள் குடும்பம் சுகிக்கிறது. சுற்றமும்  நாடும். உலகமும் சம நோக்குச் சமுதாயமாய் பரிமளிக்கிறது. 

பெண்ணுக்கென்று தனி ஒரு தினத்தின் தேவையின்றி, ஒவ்வொரு தினமும் நல்-மனிதர்க்குறிய தினமாய் மாறட்டும்.

March 02, 2016

ரயில் சினேகம்

(முன்னறிவிப்பு: இது தொலைகாட்சித் தொடரைப் பற்றிய பதிவு அல்ல) 



பூமித்தாயின் மடியில் ஏறக்குறைய பல நேரங்களில் தனித்து விடப்பட்ட குழந்தையைப் போல்   நீங்கள் உணர்ந்ததுண்டா? 

நூற்றுக்கணக்கான மனிதர்களின் மத்தியிலும் சிரித்து பேசியபடியே தனிமையை தழுவியிருக்கிறீர்களா? நண்பர்களையும் உறவுகளையும் கொண்டாடியபடியே தனித்து நின்றிருக்கிறீர்களா? அப்படியெனில் இப்பதிவு நம்மைப் போல் சிலரைப் பற்றிய பதிவு. 

பதின்ம வயதிற்கும் முன்பே, குழந்தைப் பருவம் தொட்டே எனக்கு பேச தெரிந்ததில்லை என்பதே உண்மை.  ஒருவேளை எழுதும் திறன் அதிகரித்திருந்தால் என் மனதில் எங்கோ மூலையில் ஒளிந்திருக்கும் சில எண்ணங்களை எழுத்துருவில் வார்த்திருப்பேன்.

அறிவியல் கண்டுபிடிப்புக்களைப் பற்றி ஆராயலாம். அத்தனை அறிவு இருப்பவர்கள் என்னிடம் சிக்கினாலும் அவர்களிடம் திறமையாய் கேள்வி கேட்கவும் அவர்களின்  கருத்தை உள்வாங்கும் திறனும் எனக்கு அதிகம் இருப்பதாய்  நினைத்ததில்லை.

நமக்குத் தெரிந்த சொற்ப ஞானத்தைக் கொண்டு இசை, இலக்கியம் சார்ந்த பேச்சுக்களில் சற்றே மூழ்கி எழலாம். இருப்பினும், இசை-இலக்கியக் கடலின் 
ஆழத்தில்,  நாம் சிறு துளியென மௌனமாய் கலந்து விடுவதே உத்தமம். கலை இசை இலக்கியத்தின் ரசிகையென என்னைக் கற்பித்துக் கொண்டால், ரசிகைக்கு பேச ஒன்றுமே இல்லை. 

சமையல் சிந்தனை, ஆடை அணிகலன், அன்றாட அலுவல்கள் இது குறித்துப் பேச பெரும் ஈடுபாடு எழுந்ததில்லை. 

அன்பையோ பரிவையோ பகிரவேண்டியது கண்டிப்பாக அவசியம். அத்தகைய குசல விசாரிப்புக்கள் இரண்டு அல்லது மூன்று வாக்கியங்களில் முடிந்து விடுகிறது. 

கடந்து வந்த பாதையில் அறிமுகமான ஏறக்குறைய எல்லா முகங்களின் தோழமையை, உறவை, சுவைத்த படியே விட்டு விலகிக் கொண்டே இருக்கிறேன். 

பெரும் கும்பல்களின் மத்தியில் ஆரவார சந்தோஷங்களில் பங்கேற்றுக் கொண்டே தனித்து  நின்றிருக்கிறேன்.

பள்ளி கல்லூரி  நாட்களிலுருந்து தற்போதைய பயணம்  வரை நூற்றுக்கணகான உறவுகளின் அறிமுகம் உண்டு.  ஆழ்ந்த நட்புக்கும் - ஆரம்ப பரிச்சியத்திற்குமான  நடுத்திர கயிற்றிலேயே பலர் நின்றுவிடுவார்கள். அதைத் தாண்டி உள்ளே வர நான் அனுமதித்ததில்லையா என்று குழம்பியிருக்கிறேன். 

ஏன் எவரிடமும் அதிதீவிர நட்போ உறவோ பாராட்ட என்னால் முடிந்ததில்லை என பல முறை யோசித்ததுண்டு. 

என்னுள் ஆழ்ந்து மூடப்பட்டு உறங்கிக் கிடக்கும் ஒரிரு சிந்தனைகளும் கருத்துக்களும் அதிகம் பரிமாறப்படுவதற்கு ஏதுவாய் இருப்பதில்லை. 

எப்படிப்பட்ட வார்த்தைகள் பரிசீலித்து பின் தேர்வு செய்து வாயினின்று உதிர்க்க வேண்டும் என்று புத்தர் சொல்லியிருப்பதைப் பாருங்களேன்! 'அட! என்னமா யோசிச்சு நமக்காவே சொல்லிவிட்டு பொயிருக்கிறார் ! 





"Rolling stone gathers no moss" என்ற கூற்றின் படி, சுழன்றோடிய படியே எத்தனையோ மனிதர்களிடம், பேசிக்கொண்டிருக்கும் வேகத்திலேயே விடைபெற்று சென்று கொண்டே இருக்கிறது என் பயணம். 

எதையும் சுமந்ததில்லை. எவரையும் சுமந்ததில்லை. 

சுமந்த மிகச் சிலரை இழக்கும் பொழுது  - இன்னும் ஆழ்ந்த தனிமையில் மறுபடியும் மௌனமாகிப் போகிறேன். 



ஷக்திப்ரபா


January 11, 2016

மௌனமான நேரம்



அருகேயுள்ள திருக்கோவிலில்  பூஜைக்கு பூ பறித்து கொடுப்பது என் அன்றாட பணிகளுள் தலையாயது, பிடித்தமானதும் கூட. 

பூஜைக்கு தேவையான பூவை குருக்களே சில நாள் பறித்திருப்பார். அன்றைக்கெல்லாம் இறைவனின் நாம ஜபம் செய்து விட்டு புறப்பட்டு விடுவேன்.

சென்னையின் வெயிலுக்கு சளைக்காமல், கிட்டத்தட்ட  ஒரு  நந்தவனமே கோவிலுள் குடிகொண்டுள்ளது. அதை  நங்கு செழிப்புடன்   பராமரித்து சுத்தமாய் வைத்திருக்கின்றனர்.  



செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மௌனம் அனுஷ்டிப்பதால், பெரும்பாலும் நான் பேசி யாரும் கேட்டிருக்கும் வாய்ப்பு அரிது அல்லது மிகவும் குறைவு. மௌனம் அனுஷ்டிக்காத தினங்களிலும் கூட நாம ஜபத்தில் ஈடுபடுவதால், பெரும்பாலும் அறவே பேச்சை தவிர்த்து வருகிறேன். 

இன்றைக்கு அன்றாட பூக்களை சேகரித்த பின்னர், சேற்றில் புதைந்த என் கால்களை கழுவ அங்கு தொண்டு செய்யும் இன்னொரு பெண்மணி முன் வந்தார். 



"அடடா! வேண்டாங்க" என கூச்சத்துடன் நெளிந்த என்னை....

"அட வுடுப்பா,  நீயும்  நானும் ஒன்னு தான், சும்மா இரு,  நான் தண்ணி ஊத்தறேன்" என கூறியபடி  நீரூற்றி உதவி செய்தாள். 

அங்குள்ள இன்னொரு பெண்மணியும் மெதுவே பேச்சுக்கொடுத்தாள். 

"நீ பேசியே  நான் பார்த்ததில்லை" "செவ்வாய் சனி மௌனம், மிச்ச நாளுங்க
கண்ண மூடி உக்காந்துக்குற,  உங்குரல இன்னிக்குத் தான்   கேட்டனே" என்றாள்.



"அப்படியில்லம்மா, மௌனம் இல்லைன்னாலும், சாமி பேர சொல்லிட்டு இருப்பேன் அதான்" எனவும்,

"அப்புடித்தான் இருக்கணும், சொம்மா எதையானும் பெசி என்னத்த கண்டோம்,  நீ செய்யுறது தான் சரி தாயி, உன்னப் பாத்து  நாலு பேரு, கண்ணமூடி ரெண்டு  நிம்சம் சாமிய நெனைப்பாங்க பேச்சக் குறைப்பாங்க"


ஒவ்வொருவரின் செயல்பாடும் சுற்றியுள்ள சிலரயாவது சிந்திக்கத் தூண்டுவதாய் இருக்கும் பொழுது, சீரிய கவனதுடன் நம் எண்ணங்களை, செயல்களை, சிந்தனைகளை வடிவமைத்துக் கொள்ளும் பெரும் பொறுப்பு நம்மிடம் இருப்பது புரியத் துவங்குகிறது. 



January 07, 2016

காத்திருப்பு



உடனிருந்த கணங்களுக்கு
உரமிட்டு உயிரூட்டி
நீரூற்றி  நிறம்சேர்த்து
செழித்தோங்கும் மனத்தோட்டத்துப் பூக்களின்
பறிக்கப்படாத  வாசம்...
()
கடன்படவில்லை உனக்கெனவே உயிர்பெற
திடம் பெறவில்லை   உறவெனவே  உரிமை தற
உன் தோளில் உறவாடும்  வேறொருத்திக்கு
என் மனப்பூக்களை அணிவித்து அழகூட்டி
அறிவிப்பின்றியே அகன்றிடவோ...

ஷக்திப்ரபா