September 13, 2010

பிரதோஷம் ( சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2ல் இருந்து தொகுக்கப்பட்டது)

பிரதோஷம் என்றால் சந்தியாக்காலம். சூரியம் அஸ்தமிக்கும் நேரம் பிரதோஷ காலம். பாற்கடலை கடைந்து அமுதம் பெற விழைகின்றனர் அசுரர்களும் தேவர்களும். வாசுகி எனும் பாமப்யே கயிறாகக் கொண்டு மந்திர மலையில் மத்தாக்கி பெரும் பாற்கடலைக் கடைகின்றனர். அமுதின் ஊடே நஞ்சும் எழும்ப, வாசுகி என்ற பாம்பு கக்கிய விஷமும் சேர்ந்து கொண்டு எங்கும் கடும் விஷம் கருமையாய் எழும்பி நின்றது. அஞ்சிய தேவர்களும் அசுரர்களுக்கும் ஈஸ்வரன் கருணை உள்ளம் கொண்டு அபயம் அளித்தார். தம் தொண்டர் சுந்தரரை விட்டு விஷம் கொணரச் செய்தார். சிவன் அதனை உட்கொண்ட பின்னர், சற்றே கலங்கிய பார்வதி, சிவனின் தொண்டையில் அழுத்தி விஷத்தை கீழறங்காமல் செய்து விடுகிறாள். திருநீலகண்டன் ஆகிய ஈசனின் கருணை உள்ளத்தை போற்றித் துதித்து சகல ஜீவராசிகளும் வழிபட்ட அந்த நேரம் பிரதோஷ நேரம்.

சகலரையும் காத்து நின்ற ஈசன் மனம் குளிர்ந்து அனைவரின் பயமும் வருத்தமும் போக நந்தி பெரிய ரூபம் எடுத்து நிற்க அதன் கொம்பின் நடுவே ஆனந்த நடனம் புரிகின்றார். இதன் பொருட்டே பிரதோஷ காலத்தில் நந்தியின் கொம்பின் வழியே இறைவனை

தரிசிப்பது சாலச் சிறந்தது. வளர்பிறை / தேய்பிறையின் பதிமூன்றாம் நாள் பிரதோஷமாக பாவிக்கப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் மூன்றரை நாழிகையும் அஸ்தமனம் ஆன பின் மூன்றரை நாழிகையும் பிரதோஷ காலம். இந்நேரத்தில் ஈஸ்வர தியானத்தில் இருப்பது சிறந்தது.

பிரதோஷம் என்பது ஒடுங்கும் நேரம் என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது. ஜீவராசிகள் தங்கள் கூட்டுக்குள் அமிழ்ந்து அடங்கும் நேரம். பிரதோஷத்தை, நித்திய ப்ரதோஷம், பக்ஷப் ப்ரதோஷம், மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என்று பலவாக வகைப் படுத்துகின்றனர்.

நித்திய ப்ரதோஷம்: என்பது தினமும் சந்தியா நேரத்தில் சிவனை வணங்கி அவன் தியானத்தில் இருப்பது.

பட்சப் பிரதோஷம்: சுக்லபட்ச(வளர்பிறை) சதுர்த்தி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

மாதப் பிரதோஷம்: க்ருஷ்ணபக்ஷ (தேய்பிறை) திரயோதசியில் பிரதோஷம் அனுஷ்திப்பது

மஹா பிரதோஷம்: க்ருஷ்ணபக்ஷ திரயோதசி சனிக்கிழமை அன்று வந்தால் அன்று மஹா பிரதோஷம்

பிரளய பிரதோஷம்: மஹா பிரளய காலத்தில் அண்டசராசங்களும் அழிந்து அனைத்தும் சிவனிடம் ஒடுங்கும் நேரம், பிரளய பிரதோஷம்.

பிரதோஷத்தின்போது அப்பிரதக்ஷிணமாகவும் பின்னர் பிரதஷிணமாகவும் மாறி மாறி மூன்று முறை (பொதுவாகவே சிவனை மூன்று முறை வலம் வருதல் சிறப்பு) வலம் வருவது சோமசூத்திர வலம் வருதல் எனப்படுகிறது. இது பிரதோஷ காலத்திலோ அல்லது எந்த நாளிலும் கூட செய்வது உத்தமம்.

சிந்தையும் நித்தியம் அஸ்தமனத்தின் போது ஈஸ்வரனை தியானித்தல் மிக நல்ல சித்தியும், அமைதியும் கிட்ட வழிவகுக்கும். அண்டங்களை அழித்தலை (இங்கே கூட்டுக்குள் ஒடுக்குதல் என்று கொள்ளவேண்டும்) அல்லவா சிவனின் பிரதான தர்மம். பிரளயத்தில் அனைத்து ஜீவராசிகளையும் தன்னுள் ஏற்று பின்னர் மீண்டும் தோன்றச் செய்கிறார் சர்வேஸ்வரன். அப்படிப்பட்டவனை வணங்கி அவன் கருணை பெறுதல் வீடுபேறு எய்த சுலபமான வழி.

No comments:

Post a Comment