December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (தானங்களில் சிறந்தது எது?)

தானம் தர்மம் என்பதன் சிறப்பென்ன? தர்மம் செய்தலே உயர்ந்தது என்றாலும் எப்படிப்பட்ட தர்மத்திற்கு தலைவணங்கவேண்டும் என்றால், எவன் ஒருவன் தன் இருப்பிற்கு மீறி, தன்னை ஷக்தியைத் தாண்டி தர்மம் செய்கிறானோ அவன் செய்யும் தர்மத்தின் விலை மதிப்பிட முடியாதது. தனிமனிதன் தன்னிடம் இருக்கும் தனத்தைப் பொருத்தே தானம் செய்கிறான். தனக்கும் சேமித்து வைக்காது பிறருக்கு தானம் வழங்கும் கொடை குணம் இன்றைக்கெல்லாம் தேடினாலும் தென்படுவதில்லை. தானத்தின் சிறப்பை மஹாபாரதத்தின் கிளைக்கதை நன்று உரைக்கிறது.

போரில் வெற்றியடைந்து உலகத்தோரும் வானத்தோரும் வியக்க அஸ்வமேத யாகம் நடத்துகிறான் யுதிஷ்டிரன். உலகமே போற்றும் யாகத்தில் குறைவின்றி தான தர்மங்கள் நடைபெறுகின்றன. அவ்விடத்தில் குறுக்கும் நெடுக்குமாக கீரிப்பிள்ளை ஓடுகிறது. அதன் ஒரு பக்கம் மட்டும் தகதகவென தங்கமாய் ஜொலிக்கிறது. இவர்கள் நடத்தும் தர்மங்களை பொருட்டாகவே மதிக்காது அது மேலும் கூறுகிறதாம்.

"ஏழை பிராமணன் ஒருவன் தர்ம விதிப்படி வாழ்பவன். தனக்கென மறுநாளுக்கேனும் சேர்த்துவைக்காத உண்மை அந்தணன். பிட்சை எடுத்த உணவை உண்ணும் தருவாயில், முனிவன் ஒருவன் விருந்தினனாக வந்துவிடுகிறான். தன் பசியை பொருட்படுத்தாது தனக்கென சமைத்த உணவை முனிவனுக்கு கொடுத்துவிடுகிறான். முனிவனுக்கு போதவில்லை. உடனே பிராமணனின் மனைவியும் தனக்கென இருக்கும் பங்கை கொடுத்துவிடுகிறாள். மேலும் பசித்த முனிவனுக்கு அந்தணனின் மகனும் மருமகளும் கூட தங்கள் உணவை கொடுத்து உபசரிக்கின்றனர். அடுத்த வேளைக்கும் கூட சேகரிப்பு இல்லாத நிலையிலும், பசியையும் வென்ற அவர்களின் தர்ம குணத்திற்கு ஈடு இணை ஏதும் உண்டோ என மகிழ்ந்து தர்மதேவன் அவர்களை அருளிச்செல்கிறான். அவ்விடத்திலுள்ள காற்று பட்டதால் என் உடல் தங்கமயமாய் ஆனது. அன்றையிலிருந்து என் இன்னொரு பக்க உடலையும் தங்கமாக்க நானும் அலைந்து கொண்டிருக்கிறேன். அவன் தர்மத்திற்கு இணையாய் இன்று வரை நான் கண்டதில்லை"

கோடி பொன் கொடுத்த யுதிஷ்டிரனின் தர்மத்தை விட, ஒரு வேளை உணவிட்ட அந்தணனின் தர்ம சிந்தனை பெரிது. தன்னலத்திற்கென எதுவுமே சேகரிக்காது இருப்பதை மொத்தமும் கொடுத்துவிடும் தர்மத்திற்கு இணை கூறுவிட முடியுமா?

தன் அடுத்த வேளையைப் பற்றி சிந்திக்காது, இருக்கும் நெல்லிக்கனியை ஆதிஷங்கரருக்கு வழங்கிய அம்மையாரின் தர்மசிந்தனைக்காக ஆதிஷங்கரர் பணிந்து இறைவனை வேண்டினார். தன்னலம் கருதாத ஒருவனிடம் இறைவனின் அருகாமை நிறைந்திருக்கும் என்பதற்கு இதுவே சான்று. லட்சம் லட்சமாய் பணத்தில் புரண்டாலும், காலம் நேரம் ஆணையிடும் போது அத்தனை லட்சத்தையும் மறு யோசனையின்றி தர்மம் செய்துவிட்டு, தன் இலக்கை புன்சிரிப்புடன் எவனால் தொடர முடிகிறதோ அவன் உயர்ந்த நிலையில் இருப்பவன்.

No comments:

Post a Comment