December 14, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 ( யார் குரு?)

"குரு" என்ற சொல் மிகப் புனிதமானது. 'வாத்தியார்', 'ஆச்சார்யர்', 'உபாத்யாயர்' என பல சொற்கள் இவற்றை குறிப்பிடுபவன என்று நாம் நினைத்தாலும், அவற்றின் அர்த்தங்கள் வெவ்வேறு.

வாத்தியார் எனும் சொல், அத்யாபகர், உபாத்தியாயர் போன்ற சில சொற்கள் மருவி வந்ததன் விளைவு. அத்யாபகர், உபாத்யாயர் என்றால் வேதங்களை கற்பிப்பவர். தற்காலத்தில், கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் என எதைக் கற்பித்தாலும், அவரை வாத்தியார் அல்லது உபாத்தியாயர் என்றே அழைக்கிறோம்.

ஆச்சார்யர் என்பவரோ, தாம் கற்பிப்பதை நடைமுறையில் கடைபிடிப்பவர். குருதஷிணையாக மாணவர்கள் எது கொடுத்தாலும், அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, குருகுலத்தில் வழி நடத்துபவர்.

சிறந்த குரு என்பவரோ, மௌனத்தினாலேயே பாடங்களைக் கற்பிப்பவர்। முதல் குரு தக்ஷிணாமூர்த்தி என்பவரை நாம் கடவுளாய் வரிக்கிறோம். ஆலமரத்தடியில் சீடர்கள் அமர்ந்திருக்க, குரு என்பவர், மௌனமாய் அமர்ந்திருக்கிறார். அந்த மௌனத்தின் மொழியிலேயே சீடர்களின் சந்தேகங்கள் அனைத்தும் தீர்கின்றன. அப்பேற்பட்டவர் குரு.



கல்லூரி ஆசிரியர்கள், வித்தைகளை கற்றுவிப்பவர்களை குருவின் ஸ்தானத்தில் உயர்த்த தகுதியில்லை. ஒரு முறை சிறந்த குரு ஒருவர் தம் சிஷ்யனுக்கு பரீட்சை வைத்தார். "நீ மாடும் மேயும் போது பாலைக் கறந்து உண்ணாதே" என்று உத்தரவிடுகிறார். அவன் பிட்சை எடுத்து உண்கிறான். "பிட்சை எடுக்காதே" என்கிறார். திடீரென ஒரு நாள் கிணற்றில் அவன் விழுந்துவிட்ட செய்தி எட்டுகிறது. "உங்கள் ஆணைப்படி நான் பிட்சை எடுக்காமல், எருக்கம்பூவை உண்டு வந்தேன், அதனால் என் பார்வை குன்றிவிட்டது, கண் தெரியாது கிணற்றுள் விழுந்து விட்டேன்" என்றான். எப்பேற்பட்ட குரு பக்தி! என்று மெச்சி, அவனுக்காக அஸ்வினி தேவர்களிடம் வேண்டி பார்வை மீட்டுத் தந்து பின் ஞானமும் உபதேசித்தார்.

குருபக்தி என்பது அப்பேற்பட்ட விஷயம். அப்படிப்பட்டனை குருவாக கொண்டதால் அந்த பக்தி தலை சிறந்து விளங்கியது. இங்கு குருவும் உயர்ந்தவராய் இருத்தல் மிக அவசியம். உண்மையான குருவின் ஞானம் சிஷ்யனின் பக்தியுடன் சேரும்போது ஜொலிக்கிறது. குருவிற்கு சிஷுருஷை செய்து ஞானம் பெற்றுக்கொள்ள வேண்டும். குருவின் பால் பக்தி இருத்தல் வேண்டும். குரு என்பவன் சிறந்த "ஞானி" ஆக இருத்தல் அவசியம்.

உத்தாலகன் என்பவன் குருவின் ஆணைப்படி வெள்ளம் கரைபுரண்டு கிராமத்தை அழிக்காமல் இருக்க, தன் உடலைக் கொண்டு அணைக்கட்டுகிறான். (casabianca ??!!) அப்படிப்பட்ட குருபக்தியை மெச்சி அவனுக்கு ஞானம் புகட்டுகிறார் குரு.

மாதா-பிதா-குரு-தெய்வம் என்ற வரிசைக் கிரமத்திற்கு, ஒருவன் மாதா-பிதா ஆகியவருடன், குருவின் துணை கொண்டு, ஞானமெய்தி இறைவனின் ஷரண் புகுகிறான் என்ற விளக்கமும் உண்டு.

No comments:

Post a Comment