December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (மாயா வாதம்)

ஆதிஷங்கரர் "மாயாவாதத்தை" முன் வைத்து பிரசாரம் செய்தவர். இவ்வுலகம் மாயை. உலகமே மாயை, பிரபஞ்சமே மாயை என்றால், அங்கிருக்கும் தோன்றல்களும் மாயை. "மாயை" என்னும் வார்த்தைக்கும் "பொய்" அல்லது "அசத்தியம்" என்னும் வார்த்தைக்கும் வித்தியாசத்தை உணர வேண்டும். பிரபஞ்சம் பொய் என்று சொல்லவில்லை, பிரபஞ்சமும், அதன் தோற்றமும், நடப்பவை, நடந்தவைகளும் மித்யை என்கிறார்கள் மாயாவாதிகள். சத்தியம் என்று ஒரு பொருளை குறிப்பிட வேண்டுமென்றால் அது நிரந்தரமான அழவற்ற நிலையில் இருக்க வேண்டும். சத்தியத்தை மூன்று வகையாக பிரிக்கின்றனர்.

* பிரம்மம் அழிவற்றது அதுவே சத்தியம். நித்தியமானது. அதை பரமார்த்திக சத்தியம் என்பர்.

* வியாவஹாரிக சத்தியம்(உலக நிகழ்வுகள், படைக்கப்பட்டவை, அதன் தோற்றங்கள் அனைத்தும்)

* பிராதிபாசிக சத்தியம் என்பது இல்லாத ஒன்று இருப்பது போல் தோற்றுவிப்பது. இது மாயையின் காரணம்.


இந்த மாயா தத்துவத்தை குறிப்பிட பெரும்பாலும் பலர் கையாள்வது "பாம்பு-பழுது" மேற்கோள். பழுதைப் பார்த்து பாம்பென பயப்படுபவனுக்கு எது சத்தியம்? அங்கே எதோவொன்று இருப்பது சத்தியம். அதை பாம்பாக பார்க்கும் வரை நம் கண்ணுக்கும் மனத்துக்கும் புலனுக்கும் பாம்பு தென்படுவதும் மித்யை. ஆனால் அங்கிருப்பது பழுது அது தான் சத்தியம். அது தெளிந்தவுடன் அங்கு பழுது மட்டுமே தென்படும் அங்கு பாம்பு மறைந்து விடுகிறது.

உறங்கும் மனிதனின் சொப்பனங்கள். உறங்கும் வரை அது மிகவும் உண்மை போன்ற தோற்றத்தை கொடுத்து, பின் மறைந்ததும் தெளிவு பிறக்கிறது. ஞானிகள் பாம்பைத் தாண்டிய பழுது நிலையில் இவ்வுலகை பார்க்கின்றனர். நம் கண்களுக்கு பிராதிபாசிக சத்தியம் விலகி வியாவஹாரிக சத்தியம் தோன்றுவது போல், அவர்களுக்கு இவ்வுலகமே பிராதிபாசிக சத்தியம் என்பதாக உணர்கின்றனர். மீண்டும் ஒடுங்கும் போது நித்தியமான 'ப்ரம்மம்' ஒன்றே சத்தியம் என்ற தெளிவுடன் இருக்கிறது அவர்கள் நோக்கு.

மரத்தில் மறைந்தது மாமத யானை
மரத்தை மறைத்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்

இவையும் கூட இதே தத்துவத்தை சுட்டிக்காட்டும்.

No comments:

Post a Comment