December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (வைணவம்)

முறையே ஹிந்து மதத்தில் பெரிய அளவில் போற்றப்படும் முப்பெரும் தத்துவங்கள், அத்வைதம், த்வைதம் மற்றும் விசிஷ்ட அத்வைதம் என்பன. இவை மூன்றும் வேதங்களையோ வேதத்தின் வித்தான உட்பொருளையோ மாறுபடுத்தவில்லை. கோணங்கள் மற்றுமே மாறுபடுகின்றன. அத்வைதம் என்பது இரண்டல்லாத ஒன்றே என்று ஓதுவது, த்வைதம் பிரம்மமும் ஜீவனும் வெவ்வேறு என்று குறிப்பிடுகிறது. விசிஷ்ட அத்வைதமோ, நீயும் பிரம்மமும் ஒன்று தான், ஆனால், சில நிபந்தனைகளின் பேரில் என்ற தகுதி வாதம் வைக்கிறது. முறையே ஷங்கரர், மாத்வாச்சார்யர், ராமானுஜர் அத்வைத, த்வைத, விசிஷ்ட அத்வைதங்களை நிலைநிறுத்தினர். அதாவது மீண்டும் வலியுறுத்தினர். இவர்கள் காலத்தின் முன்பும், இக்கருத்துக்கள் வழங்கப்பட்டு வந்தவையே. த்வைத கருத்துக்களை பின்பற்றி வரும் வைணவர்களுக்கு, பஞ்ச சம்ஸ்காரம் என்ற ஐவகை கர்மாக்கள் உண்டாம்.

*முதலாவதாக சங்கு சக்கரத்தை தம் உடலில் பொரித்துக்கொள்வது

*இரண்டாவதாக நாராயணனின் பனிரெண்டு நாமாக்களை குறிக்கும் வகையில் பனிரெண்டு இடங்களில் திருமண் (துளசி மாடத்து மண்) காப்பு இட்டுக்கொள்வது.

*மூன்றாவதாக 'தாசன்' என்ற பெயரை தம் பெயருடன் சேர்த்துக்கொள்வது

*நான்காகவதாக 'த்ரயம்-அஷ்டாக்ஷரம்' என்ற மூன்று மந்திரங்களை உபதேசம் பெறுவது. அவையாவன:

"ஓம் நமோ நாராயண"
"ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே"
"ஸ்ரீமதே நாரயணாய நமஹ"

*ஐந்தாவதாக நாரயணனை வழிபடும் ஆராதனை முறைகளை முறையே குருவிடம் கற்றுப் பெற வேண்டும். சார்ம மந்திரமான கீதை மந்திரமும் உபதேசம் பெற வேண்டும். அம்மந்திரம் பின் வருமாறு:

"சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச: "


கீதையில் க்ருஷ்ணன் அர்ஜுனனிடம் கருணை கொண்டு கூறுகிறார் " எல்லா தர்மங்களையும் விடுத்து என் ஒருவனை ஷரணம் அடைவாய். உன்னை எல்லா பாபங்களிலினின்றும் நான் காக்கிறேன்".

இதனை மேல் நிறுத்திப்பார்த்தால் த்வைதத்தின் முக்கிய பண்பு ஷரணாகதி. இறைவனே என்னைக் காக்க வேண்டும் என்ற பரிபூர்ண நம்பிக்கை. அவனை தன்னின்று வேறாய், உயர்த்திப் பார்ப்பது. அப்படி வரும் வைணவ சம்பிரதாயத்தில் வடகலை தென்கலை என்ற இருவேறு பிரிவுகளும் உண்டு. இதில் தென்கலை வைணவத்தினர், மர்ஜாயன நியாயப்படி இறைவனிடம் ஷரணாகதி அடைகின்றனர்.

பூனை எவ்வாறு தன் குட்டியை தானே கவ்விக்கொண்டு போய் காக்கிறதோ, அப்படி இறைவன் உயிர்களை படைத்து, அவனே அவற்றை பரிபாலிக்கிறான். நாம் ஒன்றும் செய்யாவிட்டாலும் கூட காப்பது அவன் கடன் என்ற நம்பிக்கை. சும்மாயிருந்தாலும், நம்பிக்கையற்று இருந்தாலும் முயற்சி கூட எடுக்காவிட்டாலும் காப்பது அவன் கடமை என்கின்றனர். வடகலை வைணவத்தினர், மர்கட நியாயப்படி ஷரணாகதி அடைகின்றனர். பகவானை விடாபிடியாக பக்தன் பிடித்துக்கொள்ள வேண்டும். பிடித்துக்கொள்ளாவிடில் இறைவனின் கருணை அவனுக்கு கிட்டுவதில்லை. பிடித்துக்கொண்ட பின்னரே இறைவனின் அருட்கரங்கள் நம்மைக் காக்கின்றன என்பது அவர்கள் நம்பிக்கை. The faith here is one has to call upon god, then god comes to his rescue, how can he rescue you, when u aren't even inclined to invite him?

நாராயணனே சகலமும், சர்வமும் என்பது இருவரும் ஒப்புக்கொள்ளும் கூற்று என்றாலும், கூட மொத்தமாக தென்கலை வடகலை வைணவர்களிடம் இருபத்தெட்டு அபிப்ராய பேதங்கள் இருக்கின்றனதாம்.

1. மர்ஜார மர்கட - பூனை தன் குட்டியை கவ்விக் காப்பதை போல் இறைவன் காக்கின்றான் என்பது மர்ஜார தென்கலை வாதம்.

குரங்குக்குட்டியைப் போல் தானே முயன்று தாயைப் பற்றிக்கொள்ளல் வேண்டும், அந்த சிறு முயற்சியேனும் ஜீவாத்மா மேற்கொண்டு அதன் பின் இறைவனிடம் நம்மை ஒப்புவித்து விடலாம் என்பது மர்கட வடகலை நியாயம்.

2. இலக்குமி தேவிக்கு நாராயணனைப் போல் எல்லா வல்லமையும் பொருந்தப் பெற்றவள். மோக்ஷத்தையும் அளிக்கவல்லவள் என்கிறது வடகலை.

தென்கலை இலக்குமி தேவியை நாரயாணனுக்கு சமமாய் பார்க்கவில்லை.

3. பக்தி அல்லது ஷரணாகதி இருந்தால் போதுமானது என்று வடகலை வலியுறுத்த,

பக்தி மட்டுமே போதாது ஷரணாகதி அவசியம் என்பது மற்ற சாரார் கருத்து.

4. நாம் செய்யும் தவறுகளையும் பாபங்களையும் இறைவன் ஏற்றுக்கொள்கிறார் என்கிறது தென்கலை. பாவங்களை கடவுள் மன்னித்து புறம்தள்ளிவிடுகிறார் என்பது வடகலை கண்ணோட்டம்.

5. ஒருவன் துன்பத்தில் துவண்டால், இறைவனும் அவனுடன் சேர்ந்து துவள்கிறார் - தென்கலை இறைவன் இன்ப துன்பங்களுக்கு

அப்பாற்பட்டவர், அவர் துன்பத்தை விலக்கக்கூடியவர் - வடகலை.

6. சந்தியாவந்தனம் போன்ற நித்யகர்மாக்கள் அவசியமாக்குகிறது வடகலை।
ஞான நிலை எய்திய ஒருவனுக்கு நித்யகர்மாக்கள் அவசியமில்லை என்கிறது தென்கலை.
மேற்கூறியவை சொல்லப்படும் சில பேதங்களுள் சில.

வைணவர்கள் ஏன் மற்ற கோவில்கள் வருவதில்லை? மற்ற தெய்வங்களைத் தொழுவதில்லை என்பதற்கு விளக்குகிறார். நாரணன் ஒருவனே எல்லாம் வல்ல ஒரே கடவுள் என்ற உயர்ந்த நிலையில் அவனை வைப்பதால், அவனைத் தவிர இன்ன பிற தேவதைகளைத் தொழுதால், பக்தியின் அடர்த்தி குன்றிவிடும் என்றும், சிரத்தை மட்டுப்பட்டு விடும் என்றும் அவர்கள் தொழுவதில்லை என்று காரணம் கூறுகிறார். (பல வைணவர்கள் இதே காரணம் கூற நானும் கேட்டிருக்கிறேன்) இவர்களை "வீர வைணவர்கள்" என்று அழைப்பது வழக்கம். அதனாலேயே நவக்ரஹங்களின் சன்னிதியும் வைணவக்கோவில்களில் இருப்பதில்லை. நவக்கிரஹங்கள் பெருமாளை வழிபடுவதால், நாம் நேரடியாக பெருமாளிடம் பக்தி செலுத்தும் போது தனியாய் இன்ன பிற தெய்வங்களை வணங்க வேண்டிய அவசியத்தை அவர்கள் வலியுறுத்தவில்லை. எனினும் எண்ணிவிடக்கூடிய ஓரிரெண்டு வைணவக் கோவில்களில் நவக்கிரஹங்களை ஸ்தாபித்திருக்கிறார்கள்.

வைணவன் வலியுறுத்துவது த்வைதம். அதாவது இறைவன் எல்லாம் வல்லவன். நீ அவன் ஆணைப்படி செயல்படுத்தப்படுகிறாய். இதன் அடிப்படையில் வைணவர்களுக்கு பக்தி மார்கமும், பக்தியில் ஈடுபாடும், தன்னை தாழ்த்தி, இறையை உயர்த்தும் பண்பும் உண்டு.

சைவர்கள் அல்லது சிவனை வழிபடுவோர் வலியுறுத்துவது "அ-த்வைதம்" அதாவது இரண்டற்ற நிலை. நீயே அது. அதுவே நீ என்ற நிலை. இதனால் அவர்கள் போக்கு ஞான மார்கமாக அமைவது இயற்கை.

2 comments:

  1. vadagalai presses the saranagathi thathuvam and it consider the Mahalakshmi thayar as equal to Narayanan. Please checkup with some authenticated versions and amend accpudingly

    ReplyDelete
  2. http://sriramanujar.tripod.com/tVsv.html

    மிக்க மிக்க நன்றி srinivasanp03 I stand corrected. வடகலை தாயாரை பகவானுக்கு சமமாய் பாவிக்கிறது. தென்கலையோ நாரணனுக்கு பிறகே லக்ஷ்மி தேவியை கருதுகிறது. link shared as above. மிக்க நன்றி. திருத்தம் செய்தாகிவிட்டது.

    ReplyDelete