December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (பிராமணனின் குணங்கள்)

தொன்று தொட்ட காலம் முதல் இன்று வரை, இடைவிடாது கேட்கப்பட்ட கேள்வி, கேட்கப்படும் கேள்வி பிராமணன் என்பவன் யார் என்பது தான். அப்படிப்பட்ட முக்கியக் கேள்வியா இது? என்றால், "ஆம்" என்பது தான் பதில். பிரம்மத்தை துதிப்பவன் எப்பேற்பட்டவன், எத்தகைய குணங்களை உடையவன். அவன் அருகதை என்ன, அவனின் அறிவு எப்படிப்பட்டது என்பதை உணர இக்கேள்வி மீண்டும் மீண்டும் ஒலிக்கப்படுகிறது. ஏனெனில் இப்படிப்பட்ட மனிதன் பிரம்மத்தை உணர முடிந்தவன், நுகர்ந்தவன் என்பதால் அவனை உயர்த்துகின்றனர். அவன் இறையறிவு பெறுகிறான் என்பதால் அவனை ஆசனத்தில் அமர்த்துகின்றனர். அவ்வப்பொழுது மங்கப்பட்ட அறிவு மயங்கி தவறான முடிவுக்கு வருகிறது. வர்ண முறையை பிறப்பினால் அறிந்து கொள்கிறது. இது பிறப்பினால் வருவதல்ல, என்று வலியுறுத்தப்பட்டாலும், ஜாதி என்ற போர்வை சமூகத்தில் அடர்ந்து போர்த்தப்பட்டுள்ளதால் உண்மை விளக்கம் தெளிவு பெறுவது பலராலும் முடியாமல் போகிறது.

உண்மையான பிராமணன் என்பதைப் போல் உண்மையான க்ஷத்ரியன் யார், வைசியன் யார் என்றெல்லாம் ஆராய்ந்தால் அவரவர் தொழில் தர்மப்படியும், இயல்பினாலேயே அவர்களுக்குறிய குணாதிசயங்களைக் கொண்டும், ஈடுபாடுகளை நிலைநிறுத்தியும் அறியப்படவேண்டியது.

மஹாபாரதத்தில் பல இடங்களில் "யார் பிராமணன்" என்ற கேள்வி எழுகிறது. i.e. எழுப்பப்படுகிறது. அதற்கு தக்க பதிலும் உரைக்கப்படுகிறது. யக்க்ஷ ப்ரஷ்னத்தில் யக்ஷனாக தோன்றி தர்மதேவன், யுதிஷ்டிரனை தொடர் கேள்விகள் கேட்கிறான். அக்கேள்விகளுள் ஒன்று "எவன் பிராமணன்"

அதற்கு யுதிஷ்டிரனும் " எவன் ஒருவன் ஒழுக்கம் தவறாது, இருக்கிறானோ, இந்த்ரியங்களை அடக்கி ஆள்பவனாய் இருக்கிறானோ, அவனுடைய ஆர்வம் பிரம்ம ஞானத்தில் நிலையாய் இருக்கிறதோ அவன் பிராமணன், அவன் பிறப்பினால் அறியப்படுபவன் அல்ல" என பதிலளிக்கிறான்.

அதே போல் நகுஷன் என்பவன் மலைப்பாம்பின் வடிவில் பீமனை பற்றிவிடுகிறான். அவனிடம் கேட்கப்படும் கேள்வி "பிராமணனை எப்படி அறிவாய்" பீமனும் சொல்வதாவது: "எவனிடம் பொறுமை, ஒழுக்கம், இரக்கம், தவம், உண்மை, தயாள குணம் இருக்கிறதோ அவனை பிராமணனாக அறியலாம்" காலத்தின் போக்கில் (ஆதி காலம் முதல்) வர்ணக்கலப்பு அவ்வபொழுது ஏற்பட்டு விடும். ஸ்வதர்மங்கள் கலந்து விடும். அதனால் பிறப்பினால் ஒருவனின் வர்ணம் நிர்ணயிக்க முடியாதது என்பதே கண்கூடு. என்கிறது மஹாபாரதம்.

கீதையில் கண்ணன் கூறுவதும் இதற்கு சான்று.


"சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ:
தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம்"

chathurvarNyam maya srushtam guna karma vibhagasha:
thasya karthaaram api maam viththyakarthaaram avyayam

It was me who created the four varnas and their jobs as per a being's nature and activities. Me being the creator of these divisions, one should still understand that I am the non-performer and the unchangeable. (the division is hence based on
nature and their attitude and not by birth, can be quite clearly understood)

நான்கு வர்ணங்களை உருவாக்கியவன் நானே. ஒருவனின் குணத்திற்கும் கர்மத்திற்கும் செயலுக்கும் ஏற்றவாறு நான் உருவாக்கினேன். அவற்றை நான் படைத்திருப்பினும், நான் செயலற்றவன், அழிவற்றவன் என்று உணர்.



எத்தனை பேசினாலும் படித்தாலும், புரிந்துணர்ந்தாலும், விழலுக்கு இறைத்த நீராய் சில நேரங்களில் மனதில் மாயை குடிகொண்டு விடுகிறது. அதே போல் உலகில் புரிந்துணர்ந்த பேர்கள் மத்தியிலேயே பிறப்பினால் நாமே வகுத்துக்கொள்ளும் ஜாதியை விட்டொழிக்க முடிவதில்லை. தாழ்ந்த வகுப்பு என்ற நாமே நிர்ணயிக்கும் வகுப்பில் ஒருவன் பிறந்தானென்றால், அவனின் மதிப்பு மட்டுப்படுத்தப்படுகிறது வேதனைக்குறிய விஷயம்.

ராமானுஜரிடம் தாழ்ந்த வகுப்பில் பிறந்ததால் தாழ்ச்சியாகக் கருந்தப்படுகிறான் "உறங்காவிழி தாசன்" எனும் சீடன்.ராமானுஜர் அவனின் பெருமையை தயாள குணத்தை, கொடைத்தன்மையை ஞானத்தை செயலால் மற்றோருக்கு எடுத்துணர்த்தியதாக சொல்வதுண்டு. அந்நாளிலேயே ஆலயத்தில் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்களை உள்ளே அனுமதிக்குமாறு செய்து ஹரிஜனப்பிரவேசம் செய்தார். நடைமுறை வாழ்வில், ஞானிகள் அல்லாத சாதாரண பிரஜைகளிடையே இந்த ஞானத்தை வளர்க்க உதவியவர் இராமனுஜர்.


பிறப்பால் எந்த ஜாதியில் பிறக்கிறான் என்பது சர்ச்சைக்குறிய விஷயமே அல்ல. தன் ஒழுக்கத்தால் நடத்தையால் எவனும் எந்த வர்ணத்திற்கும் மாற முடியும் என்று சாஸ்திர நூல்களும் குறிப்பிடுகின்றன. சூத்திரன் என்ற வர்ண முறையைச் சேர்ந்தவனும் கூட பிராமணன் ஆகலாம்.

சூத்திரனுக்குறிய அடையாளங்கள், அவன் பிறருக்கு தன் உடலால், உழைப்பால் சேவை செய்பவன். உடலுழைப்பை ஏனையோருக்கு வழங்குபவன் சூத்திரன் என்று பொதுவாக அறியப்படுகிறது. அதே போல் பிராமண வர்ண முறையை (ஜாதி அல்ல) சேர்ந்தவனும் தன் தேர்வினால், சுத்திர வர்ண முறையை தழுவி வாழலாம். வாழ்வின் முறையை நாம் ஒவ்வொருவரும் மாற்றி அமைத்துக்கொண்டே தொடர்கிறோம். விச்வாமித்ரன் என்ற க்ஷத்ரியன், பிராமணனாக மாறி, காயத்ரி மந்திரத்தை உலகுக்கே உபதேசித்து, பிராமணீயத்திற்கு பாதை வகுத்தார். கசப்பு கடைக்காரன் உண்மையான பிராமணனாக வாழ்ந்த கதையின் குறிப்பை முன்பே கண்டோம். சத்யகாம ஜாபலி உயர்ந்த பிராமணன்.

பிராமணன் என்பவனுக்குறிய குணங்கள் - வாழ்க்கை முறை:

* மனசை அடக்கி, இந்திரியங்களை ஜெயித்து, தவம், பொறுமை, ஞானம், கருணை, சத்தியம் முதலியவை இருக்கப்பெற்றவன்.

* அவன் தானாக அவனுக்கு கிடைக்கும் உணவையே உட்கொள்ள வேண்டும். வயலில் எரியப்பட்டதை பொறுக்கி எடுத்து பொங்கித் திங்கலாம். யாசித்துப் பெறலாம், 'உஞ்சவிருத்தி' செய்து உணவைப் பெறலாம்.

* இப்படிப்பட்ட கடினமான பாதையை, வைராக்கியம், சத்தியம், பக்தி, ஆசையின்மை என்ற ஊர்திகளைக் கொண்டு கடக்கவேண்டும்.

* பொறாமையின்மை, ஞானம் போன்ற ஷக்திகளே இந்த இவ்வூர்திகளுக்கு உரமிடும் குணங்கள்.

பிராமண ஜாதியில் பிறந்தவர்கள் செய்யும் சந்தியாவந்தனங்களும், வழிகாட்டியாக விளங்கும் படிப்பறிவான சாஸ்திர சம்பிரதாயங்களும் வேதங்களும், அங்க அடையாளாங்களும் மட்டும் உண்மையான பிராமணன் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை கொடுத்து விடுவதில்லை. படிப்பறிவினாலோ, அறிவினாலோ, புண்ய ஸ்தலங்களுக்கு செல்வதாலோ, ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்பதினாலோ வந்துவிடுவதில்லை. தெளிந்த அறிவோடும், ஆன்மீகச் சிந்தனையோடும், ஒவ்வொரு கணமும் வாழப்பழக வேண்டும். ஏட்டுச் சுரைக்காயாக அறிவு இருந்து பயனிலை. அதனை பயன்படுத்தி வாழ்ந்தாலே ஒரு மனிதன் பிரம்ம ஞானத்தை பெறும் நிலைக்கு மாணாக்கன் ஆகும் உயர்வினைப் பெறுகிறான். தன்னடக்கமும், விடாமுயற்சியும் (வீழ்ந்தாலும், மீண்டும் எழுந்து உயரத்தை எட்ட எத்தனிக்கும் ஆன்ம தாகம்), ஞானம், வைராக்கியம் பெற்றவன் இன்னிலைக்கு தன்னை உயர்த்திக்கொள்ள தகுதியாவனாகிறான் என்று உபநிடதம் கூறுகிறது.


'பணம் சேர்ப்பது' என்பதே பிராமணனுக்கு விதிக்கப்படாத கர்மா. பணத்திற்காகத் தான் புரோகிதர்கள் கூட வேதம் ஓதுவதும், யாகம் நடத்துவதும் செய்கின்றதால், 'விதிமீறல்' ஏற்படுகிறது. பிராமணனுக்கான கர்மவிதியே அடிபட்டுப்போகின்றது.

No comments:

Post a Comment