March 19, 2019

விழியில் விழுந்த விதை (ரியாத் கவிதை போட்டி)


ரியாத் கவிதை போட்டிக்காக சென்ற வருடம் எழுதியது:  பதினைந்து போட்டிக்குறிய தலைப்பில் நான் எழுதிய தலைப்பு  "விழியில் விழுந்த விதை"




**************************
விழியில் விழுந்த விதை
**************************

பிறப்பு முதல் இறப்பு வரை
பாலுண்ணும் போது துவங்கி
நிலம் கொள்ளும் வரை
பதிவுக் காட்சிகளாய் நடப்படும் நாற்று

துன்பம் சேர்த்து புடம் போடும் வித்துக்கள்
இன்பம் பெருகி
இதமாய் மணம் பரப்பி
இதயத்தில் தூவப்படும் நெல்மணிகள்

வாழ்வின் பயணத்தை மேலேற்றும் உந்துதல்
தாழ்விலும் நலம்சேரும் என நம்புதல்
இறுகப் பற்றும் நட்பின் கரங்கள்
இறுக்கிப் பிடிக்கும் பணிச் சுமைகள்

மாற்றுத் திறனாளிகளின் தளரா உழைப்பு
மாந்தர்கெல்லாம் பயன் தரும் சேவகர்
துளி நீரை சேமித்து
செடிகட்க்கு உயிரூட்டும் விவசாயி

கற்ற பாடங்கள் அதனை
விற்கும் மோசங்கள்
ஊழலில் புரளும் ஆசாமிகள் - கடும்
சூழலிலும் கொள்கை காக்கும் வீரர்கள்

தாய் தந்தை பரிவு
நோய் தந்த பிரிவு
இறையை நோக்கிய பயணம்
இல்லார்க்கு ஈயும் பெருங்குணம்

துளித் துளியாய் சேமித்த பதிவுகள்
எதிர்மறையாய் சில
நேர்முகமாய் பல

விழியில் தெறித்து உள் விழுந்த விதைகள்
வேரூன்றி அழியா காட்சியாய்
படமாக்கப்பட்டவை;
பாடமாக்கபட்டவை.
ஒவ்வொரு விருட்சமும் வளரும்..
அனுதினமும் பரந்து விரியும்..


No comments:

Post a Comment