January 13, 2021

திருப்பாவை பாசுரம் 30 - பாசுரத்தில் தேடிய முத்து

ஆழ்கடலின் முத்து


பாவை நோன்பை கடைபிடிக்கும் வழிகளை, அதன் உயர்ந்த நோக்கத்தை தேமதுரத் தமிழில் பாமாலையாக சூட்டியிருக்கிறாள் ஆண்டாள். விரும்பிய லௌகீக விஷயங்களைப் பெற்றிருந்தால், பாவை நோன்பு இன்னுமொரு ஸ்துதியாகியிருக்கும். நோன்பு நோற்றவர்கள் ஆயச்சிகள். கோபிகைகள். அவர்கள் அடைந்த உயர் நிலையை இங்கு சுட்டிக்காட்டிய கோதை, நமக்கெல்லாமும் பாதை காட்டியிருக்கிறாள்.
.
இந்த பாசுரங்களை அதன் பொருளை, சொல்ல வரும் உயர்ந்த அர்த்தங்களை உள்வாங்கி, பக்தியுடனும் அன்புடனும் பாசுரம் பாடுபவர்கள், நான்கு புஜங்களையுடைய பங்கஜ நேத்திரன் திருமாலின் அனுகிரஹம் பெற்றவர்கள் ஆகிறார்கள். திரு நிறைய பெறுகிறார்கள். திரு என்றால் செல்வம். பொருள் வளத்துடன், அருள்வளம், அறிவுவளம் அனைத்து செல்வங்களையும் பெற்ற பெரும் செல்வந்தர்கள் ஆகிறார்கள். நிரந்தர இன்பம் எய்துகிறார்கள்.
.
நோன்பு நோற்ற கோபியர்கள் அழகானவர்கள் செல்வச் செழிப்பு நிறைந்தவர்கள். அவர்களை வழி நடத்திய ஸ்ரீவில்லிப்புத்தூரின் ரத்தினமான பெரியாழ்வார் மகளோ நிலமகளே ஆவார். உயர்ந்தவர்களால் பின்பற்றபட்டு, தாயாராலேயே ஆசீர்வதிக்கப்பட்ட விரதம்.
.
கேசி என்ற அரக்கனைக் வதைத்த கண்ணனைப் பாடிப் புகழ்வோம். ஓயாத அலைகள் நிறைந்த வங்கக்கடலை வாசுகியை மத்தாக்கி கடைந்தவன். நம்முள்ளத்து கடலை கடைந்து அதிலிருக்கும் தேவையற்ற விஷத்தை வெளியேற்றி, அமுதமாகிய பக்தி எனும் திருவை வெளிக்கொணர்பவன்.
.
கைபிடித்து இட்டுச்சென்ற ஆண்டாள் ஆழ்வார் பொன்னடி போற்றி. அவன் அடி பணிவோம். பிறப்பின் பெரும்பயன் அதுவே என்று உணர்வோம்.
***
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கன் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
***

Rangoli Credit : Suganthi Ravi




No comments:

Post a Comment