January 12, 2021

திருப்பாவை பாசுரம் 29 - பாசுரத்தில் தேடிய முத்து

 

சாஸ்வதமான பந்தம்
.
லௌகீக சுகங்களில் வைராக்கியம் வர மறுத்தாலும், லௌகீகத்தை ஒரு கையில் பிடித்து ஆன்மீக பயணத்தின் பயிற்சியை இன்னொரு கையில் பிடித்தபடி நீடிக்கவும் கடினமாகிறது. உயர்ந்த ஸ்தானத்தில் நிலைபெற்று நிற்க தெளிவும் மனவுறுதியும் அத்தியாவசியம். லௌகீகத்தின் பிடியை மெல்லத் தளர்த்தி இறுதியில் விட்டுவிடும் தைரியம் எல்லோர்க்கும் இருப்பதில்லை.
.
எதனிடம் பற்று வைக்கிறோம் என்பது நம் கையில் உள்ளது. உணவின் மீது பற்று வைத்தால் திருப்தியான நல்ல உணவு கிடைக்கும். பொருள் மீது பற்று கொண்டால் பொருள் சித்திக்கும். புகழைத் தேடினால் புகழ்சேரும். பகவானிடமும் அளப்பரிய பற்று கொண்டால் படிப்படியாக அவனை அணுகலாம். கோபியர்கள் தெளிந்த ஞானிகள். இதுவரை பறைதரும்படி பகவானிடம் பிராத்தித்துக் கொண்டிருந்தனர்.
.
பறை வேண்டியவருக்கு பரிசு தரப்போகிறான். அவரவர் அபிலாஷைகள் நிறைவேறப் போகின்றன. அது நிலைத்து நிற்குமா? என்ற எண்ணம் ஐயத்தை கிளப்புகிறது. நிலையற்ற எதையாவது கேட்டுவிட்டோம் என்று நினைத்து அதனை வரமருளி கபட விளையாட்டு விளையாடுவானோ! கள்வனவன்.
.
கண்ணா எங்கள் கோரிக்கைகளை இப்போது தெளிவாகவே சொல்லிவிடுகிறோம். வைகறைப்போழுதில் நீராடி நியமங்களோடு நோன்பு நோற்று உன் பாதாரவிந்தங்களை சரண் புகுந்தோமே...ஆநிரை மேய்க்கும் ஆயர்க்கொழுந்தே, பசுக்களான நாங்களே நீ பாதுகாக்கும் ஜீவாத்மா. எங்கள் அறிவுக்கு எட்டிய சிறு சேவைகளை புரிந்து உமை அணுகுகிறோம். நீ எங்களை பாராமல் போகாதே. எங்களுக்கு அபயக்கரம் நீட்டாமல் விட்டுவிடாதே.
.
இன்று நீ தரும் பரிசுக்கு மகிழ்ந்து விரதம் முடிக்கும் எண்ணமில்லை. இன்றைக்கு மட்டுமான பரிசு எதுவும் கோரவில்லை. எங்களுக்கு நிலையான பறை வேண்டும். ஏழேழு பிறவிகளுக்கும், உம்முடனேயே சாஸ்வதமான உறவு பூணுவோம். உமக்கே சேவை செய்து, உனக்கே தாசி(தாசன்)யாகி இருப்போம்.
.
எங்களுக்கு வேறேதேனும் அறிந்தோ அறியாமலோ அபிலாஷைகள் இருக்குமாயின் அதனை நீக்கிவிடு. நிலையற்ற இன்பத்துக்கும் துன்பத்துக்கும் உழல வைக்கும் காம- க்ரோத- மோஹ- மத- மாத்சர்யங்களை போக்கிவிடு. ஆசைகள் துறந்திடவே வழிநடத்து.
.
எங்களுக்கு பறையாக, நித்தியமானதொரு பரிசாக நீயே வேண்டும்.... நீ மட்டுமே.
.
***
சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய்
***
Rangoli Credit: Suganthi Ravi
Photography Source: Internet


No comments:

Post a Comment