January 12, 2021

திருப்பாவை பாசுரம் 28 - பாசுரத்தில் தேடிய முத்து

 பக்தியோகத்தின் பெருமை


பாசுரம் மொத்தமும் பக்திப்பெருக்கில் உருகி, நமை உருக்குகிறது.
.
அறிவற்றிருக்கிறோம். உன்னுடைய உறவைத் தவிர வேறு எதுவுமே நாங்கள் சம்பாதித்த பொக்கிஷமாகக் கருதவில்லை. பசுக்களை மேய்ப்பதும், கானகத்தில் கூடி, உணவு உண்ணுவதுமாக பொழுதைக் கழிக்கும் எளியவர்கள். எங்களுக்கு மறைகளோ, ஞானமோ, வேதாந்தமோ பிரம்ம-தத்துவமோ தெரியாது. ஆராய்ந்து பார்க்கும் இயல்பும் திறனும் இல்லை.
.
பிரபஞ்சமும், படைப்பும், பெரியதும், புவனமும் புரியவில்லை. புத்திக்கு எட்டவில்லை. நாங்கள் இடைகுலத்தவர். எமக்கு தெரிந்ததெல்லாம் நீ வந்து எங்கள் இடைக்குலத்தில் பிறந்த பெருமை மட்டுமே. எங்களோடு இருந்தாய், வளர்ந்தாய். உனக்கும் எமக்குமான உறவு இன்று நேற்றோடு முடிவு பெறுவதல்ல. நீயின்றி நாங்களும், நாங்களின்றி நீயும் இருக்க இயலாது.
.
அறிவுப் பேதைமையால் உன்னை மரியாதையற்று ஒருமையில் அழைத்திருந்தால், பழகியிருந்தால், விளையாடியிருந்தால், அதனை அன்பின் வெளிப்பாட்டாக கருதி, பிழை பொறுத்தருள் பரந்தாமா.....
.
மானிடகுலம் எனும் இடைக்குலத்தில் தோன்றிய பரம்பொருள். ஆதியந்தமில்லா அரும்பொருள். ரூபமில்லா பெரியோன். நாமெல்லாம் சம்சாரம் எனும் பெருங்காட்டுக்குள் உறவுகளை, ஆசைகளை மேய்த்து, உணவுண்டு உடல்வளர்க்கும் எளிய ஜீவாத்மா.
.
ரூபமேதுமில்லாத பரப்பிரம்மம், நமைப் போன்ற மானிடனாக அவதாரம் தாங்கியது. கருணையின்பால் நம்முடன் விளையாடியவனை, நாம் ஒருமையில் அழைக்கிறோம். உரிமையோடு சாடுகிறோம். அன்பினாலும் அஞ்ஞானத்தினாலும் நாங்கள் மரியாதையற்று நடந்திருந்தால் அவற்றை மன்னித்து எம்மையும் எம் சிறு நோன்பினையும் ஏற்று அருள்வாய்.
.
பாசுரம் பாடியாடும் கோபிகைகள், பக்தியெனும் நல்முத்தினைப் பெற்ற பாக்கியசாலிகள். வேதமும் வேதாந்தமும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் கொஞ்சம் வழிவிட்டு, பின்னர் அவையே பக்தியோகமாகப் பரிமளிக்கிறது.

****
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா! நீ தாராய் பறை ஏல் ஓர் எம்பாவாய்
*****
Rangoli Credit: Suganthi Ravi




No comments:

Post a Comment