January 09, 2021

திருப்பாவை பாசுரம் 25 - பாசுரத்தில் தேடிய முத்து

தேவகீநந்தனுக்கே சேவகம்

Photography Source Internet:
Rangoli Credit : Suganthi Ravi




என்ன வேண்டும் உங்களுக்கு! என்றானாம் கண்ணன். புகழ்ந்தேத்திப் பாடிக்கொண்டே இருக்கும் இவர்களுக்கு என்ன வேண்டுமென்று அவனுக்குத் தெரியும்! பக்தர்கள் வாயினாலேயே தங்களுக்குப் பிரியமானதை வரமாக கேட்டுப் பெறட்டும் என்றே நிதானிக்கிறான்.
.
எத்தனையோ பக்தர்கள், முனிவர்கள், தேவர்கள், அசுரர்கள் தவம் செய்கின்றனர். தவத்தின் பயனாக வரம் வேண்டுவதும், அதனை வழங்குவதும் இறைவன் சித்தப்படியே நடக்கிறது. யாது வரம் வேண்டப் போகிறார்கள் என்று மும்மூர்த்திகளுக்கோ முழுமுதல் கடவுளுக்கோ தெரியாததல்ல.
.
என்ன வேண்டும் உங்களுக்கு! என்ற கிடைத்தற்கரிய தருணத்தை முழுவதுமாகப் பாழ்படுத்தி, தன் சுயநலத்தின் பொருட்டு சாகாவரம் பெற்ற சகலபுவனத்தையும் அராஜகம் செய்த அசுரர் குலத்தவர் ஏராளம்.
.
காலநேமி என்ற அசுரன் முற்பிறப்பில்ம ஹாவிஷ்ணுவால் சம்ஹரிக்கப்பட்டவன் மறுபடி கம்சனாக பிறந்திருக்கிறான். கம்சனை கஞ்சன் என்று விளிக்கிறாள் ஆண்டாள். கயவன். சுயநலமிக்கவன். கடும்பற்றுக்கு ஆட்பட்டு தன்னலத்தை தவிர பிறர் நலம் கருதாதவன். ஆசைத் தங்கை தேவகியின் மைந்தனைப் பற்றி அசரீரி ஒலிக்கக் கேட்டதும் தன் அன்பைத் துறந்தவன். பிஞ்சு பாலகர்களைக் கொல்லத் துணிந்தவன். அன்பை வழங்கத் தெரியாத கஞ்சன், கம்சன்.
.
கண்ணன் பிறந்தபின்னும் கொடுத்த தொல்லைகள் ஏராளம். ஒளித்து வளர்க்க வேண்டிய கட்டாயம். ஒளிந்து வளரவேண்டிய திருச்சித்தம். யசோதையும் நந்தகோபரும் வரம் பெற்றிருந்தனர். பகவானின் பிள்ளை விளையாட்டை கண்டுகளிக்கும் பாக்கியம். தேவகி வசுதேவரின் வேண்டுதலையும் நிறைவேற்றி, தேவகியின் திருவயிறு உதித்தார். ஏராளமான பக்தர்களின் கோரிக்கைகள். தவமாகப் பெற்ற வரங்கள்.
.
மரீசி மகரிஷியின் புதல்வர்களின் சாபம் நீக்குதல், சிசுபாலனை வதம் செய்து, துவார பாலகர்களை ஆட்கொள்வது, காளிங்கனுக்கு விடுதலை, வீடுபேறு விரும்பிய ஞானியர் கோபிகைகளாக, ஜீவ-பரமாத்ம ஐக்கியத்தின் ஆனந்தத்தை அவர்களுக்கு வரமளித்தல், பூதகியின் முக்தி, பூபாரம் குறைக்க பூதேவிக்கு அளித்த வரம், ஒரே அவதார நிகழ்வின் பாத்திரங்களாக இத்தனை பேரையும் நுழைத்து, தக்கதொரு பொம்மலாட்டம் நிகழ்த்தி, அவரவர்களுக்கு ஏற்ற வரத்தை வழங்கி மகிழ்ந்தான். சிலருக்கு முக்தி, வேறு சிலருக்கு பக்தி.
.
வேண்டிய வரத்தை புத்திசாலித்தனமாக யாசிக்க வேண்டும். பக்தியோடு குழைத்து பெறவேண்டும். கோதை இப்பாசுரத்தில் எப்படிப்பட்ட வரம்பெறுவது என்று சாதாரணர்களாகிய நமக்கு உணர்த்துகிறாள்.
.
தேவகி என்ற ஒருத்தியின் மைந்தனாகப் பிறந்து யசோதையிடம் ஒளிந்து வளர்ந்தாய். முலைப்பால் அருந்தும் அரும்புப் பருவத்திலே கம்சன் ஏவிய இடர்களை தகர்த்தெறிந்து, உன் உயர்ந்த இருப்பை நிலைநாட்டினாய். நீ யார் என்பதை அவன் உணரத்துவங்கியதும் வயிற்றில் பயமெனும் நெருப்பு. பக்தர்கள் வயிற்றில் கருவாக ஜனித்து பால்வார்த்த நீ, பகைவர்க்கு தீவார்க்கிறாய்.
.
உன்னிடம் நாங்கள் யாசகம் பெறவே வந்தோம். உன் உயர்ந்த குணத்தை, நீங்கா செல்வத்தை போற்றிப் புகழ்ந்தபடிசேவை செய்தே நிற்பதால், எங்கள் வருத்தம் தொலைந்து போகும் நிலையருள்வாய். நீங்காபக்தியை கேட்டுப் பெறுகிறாள். சேவை செய்தே உய்யும் நிலையை வேண்டி நிற்கிறாள்.
****
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கிலானகித் தான்தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே? உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருகி யாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
*****








No comments:

Post a Comment