January 10, 2021

திருப்பாவை பாசுரம் 26 - பாசுரத்தில் தேடிய முத்து

கோதையின் தாயுள்ளம்


அன்பிற்கினியவனே, என்ன வேண்டும் எங்களுக்கு, உனக்கே பணிபுரியும் பேரானந்தத்தைத் தவிர! எங்களுக்கு முன் சென்ற பெரியோர்கள், ஞானிகள் கூறிய வழிமுறைகளைக் கடைபிடித்து மார்கழி நீராடி நோன்பு நோற்றிருக்கிறோம். நோன்பு நிறைவேற என்னவெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் கொடுத்தருள்வாய்.
.
எங்கள் விரதம் சாதாரண விரதமல்ல. நோன்பு நோற்றது உன்னடி பற்றியிருக்கவே. நீ பெரியவன். பிரளய காலத்தில் ஆலிலையில் ஒட்டுமொத்த உலகத்தை உன் மணிவயிற்றுக்குள் சுருக்கி, பிஞ்சுககாலின் கட்டைவிரலை செவ்வாயில் வைத்து ஞாலத்தின் ஒடுக்கத்தை உணர்த்துகிறாய். அத்தனையும் உன்னுள் அடக்கம். நீயே அம்ருத நிலையில் ஞானத்தின் வடிவான ஆலிலையில் பிரம்மவடிவாக நிற்கிறாய்.
.
பரமபுருஷனாக நீயே இருக்கையில் உன்னிடம் அற்ப விஷயங்களை நாடி வருவோமா?! சின்னச் சின்ன சிற்றின்பங்கள் வேண்டவில்லை. பொன்னும் பொருளும் மண்ணும், ஆட்சிபீடமும் வேண்டுபவர்கள் அல்ல. பெரிய பெரிய விஷயங்களைத் தான் வேண்டப் போகிறோம். என்னவென்று சொல்கிறோம் செவிசாய்த்து திருவருள் புரிவாய்.
.
நீலக்கல் நிறத்து ரத்தினமே, உன் வெண்சங்கினைப் போல பல சங்குகள் வேண்டும். ஞாலத்தையே மங்கலப் பேரொலி கொண்டு எழுப்பும் உன் வெண்சங்கு பகைவர்களை நடுக்கச்செய்யும். உன் சங்கநாதமே பக்தர்களை துயிலெழுப்பி விழிப்பூட்டும். எங்களுக்கும் பல சங்குகள் வேண்டும். பெரிய பறைகள் வேண்டும். உனது ஏற்றத்தை இன்னிசையாக்கி பல்லாண்டு பாட பெரியோர் வேண்டும். மங்கல விளக்குகளும், நாங்கள் உனது திருநாட்டினை அலங்கரிப்பவர்கள் என்று சுட்டிக்காட்டும் கொடியும், வெளியிலிருந்து எமைத் தாக்கும் பனியும் குளிரும் தீண்டாதிருக்க விதானமும் வேண்டும்.
.
இங்கு சுட்டிக்காட்டப்படுவதெல்லாம் பரமாத்ம நிலை. பக்தர்களை மஹான்களே வெண்சங்கும் முரசும் கொண்டு எழுப்புகிறார்கள். திருமாலின் திருப்புகழை பாடியாடி அவன் பெருமையை நமக்குப் புகட்டுகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் கண்டுணர ஞானமெனும் தீபங்கள் ஏந்தியிருக்கிறார்கள். பரமனுக்கே பணியும் வைகுந்தவாசிகள் என்ற அடையாளக் கொடி தாங்கியிருக்கிறார்கள். உட்புறத் தேடலில் ஈடுபடும் போது வெளிப்புறத் தடைகள் தீண்டாதிருக்க, பக்தி எனும் விதானம் கொண்டிருக்கிறார்கள்.
.
இவையெல்லாம் ஆண்டாள் கேட்டுப் பெறுகிறாள். இல்லை. அவளே பூதேவி பிராட்டி. நமக்காக கேட்கிறாள். நமக்காக தூது சென்ற தாயாகிறாள். ஆண்டாளின் திருவடி சரணடைந்து அவள் கருணையை போற்றி நிற்போம்.
****
மாலே! மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருள் ஏல் ஓர் எம்பாவாய்
*****
Rangoli Credit Suganthi Ravi :



No comments:

Post a Comment