January 11, 2021

திருப்பாவை பாசுரம் 27 - பாசுரத்தில் தேடிய முத்து

 சூடிக்கொடுத்து சூட்டிக்கொண்டாள்


தன்னிடத்தில் பற்று இல்லாதவரையும் அன்பினாலே வெல்லும் கோவிந்தனே, நோன்பு நோற்ற பலனைக் கண்டு நாடே எமைப் புகழவேண்டும். திருமிக்க பரிசுகளை எமக்கு வழங்குவாய். அதன் பெருமையை ஊர் புகழ, இதுவரை பாலும் நெய்யும் கொள்ளாமல், கண்மை தீட்டாமல், மலர் அலங்காரத்தை ஒத்தி வைத்திருக்கும் நாங்கள் இனி மகிழும் வண்ணம் எமக்குப் பெருமை சேர்ப்பாய்.
.
நீ அளிக்கும் சன்மானத்தால் குளிர்ந்து நாங்கள் விரதம் முடிப்போம். தோள்வளை, கைவளை, செவிப்பூ, தோடு, பாடகம் என்ற அழகிய அணிகலன்களை கொண்டாடி அணிவோம். உயர்ந்த ஆடைகள் உடுத்தி, சோறே தெரியாத அளவு பசுநெய்யூற்றி பக்குவமாக சமைக்கப்பட்ட பால்சோற்றை கூடியிருந்து உண்டு மகிழ்வோம். குளிர்வோம்.
.
பாவை நோன்பு நோற்ற பலரும் சீமாட்டிகள். செல்வந்தர் வீட்டு செல்லப் பெண்கள். ஆனாலும் நோன்பிற்காக பாலும் சோறும் உண்ணாமல் நலிந்திருந்தனர். நோன்புதனை முறைப்படி முடித்து அதன் பலனை இறைவன் அளித்தால் மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.
.
ஆண்டாளும் நெய்வாரிப் பெய்யும் பால்சோறு உண்டு அணிகலன்கள் அணிவதைக் கேட்கிறாள். கிடைத்ததா? அவளது கோவிந்தன் ஆண்டாளை திருமணக் கோலத்தில் பெருமைப் படுத்தி தன்னிடம் சேர்த்துக் கொண்டபோது கிட்டியது.
.
எவ்வித அணிகலன்கள் அணிகிறாள்? அவன் நாமத்தையே தோடாக அணிந்து மின்னுகிறாள். கோவிந்தனுக்கு சொல்லப்படும் ஸ்துதி செவிப்புவாகி மலர்கிறது. அவனுக்கு செய்யும் கைங்கர்யங்களை கைவளையாக, வங்கியாக அணிகிறாள். கோபாலனை நோக்கியே நடந்த பாதங்களுக்கு பாடகம் அணியாகிறது. ஸ்தூலமாகிய இப்பூவுடலை உதிர்த்து கோலோகம் செல்லும் புத்தாடை அணிகிறாள். அவள் உண்ணுவதெல்லாம் அவனைப் பற்றிய எண்ணமே, கொண்ட பிரேமையே நெய்யாக மிதக்க பாலன்னம் இனிக்கிறது. அனைத்து பக்தர்களோடும் கூடிக் குளிர்க்கிறாள்.

****
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்
பாடி பறை கொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்
*****
Rangoli Credit : Suganthi Ravi



No comments:

Post a Comment