July 29, 2022

Glories of Guru -Excerpts from Deivathin Kural

 Meaning of upadesam

‘உப’ என்பதோடு ‘தேசம்’ என்பதைச் சேர்த்திருக்கிறது. ‘தேசம்’ என்பதை வினைச் சொல்லான ‘திச்’சிலிருந்து derive பண்ணினால், ஒருத்தர் செய்ய வேண்டியதைச் சொல்வது. prefix சேர்த்துக் கொண்டு தான் ‘தேசம்’ என்பது வரும் என்றும் சொன்னேன், அவற்றில் ‘உப’ வைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
.
‘உப’ என்பது பல அர்த்தங்களைக் கொடுப்பது. பல அர்த்தங்களில் ஒன்று, “கிட்ட”, “அருகில்” என்பதாகும். ‘உபநயனம்’ என்று பூணூல் கல்யாணத்தைச் சொல்வதற்கு அர்த்தம் “அருகில் கொண்டு போய் சேர்ப்பது”.
.
உப’ என்பது ஒன்றின் கிட்டே போயிருப்பதைக் காட்டும். குருவின் ‘கிட்டே’ என்னும்போதே ஒரு நெருக்கம், ப்ரியம், ப்ரேமை உண்டாகிவிடுகிறது.
‘உபதேசம்’ என்னும்போது, குரு எதைச் செய்யச் சொல்கிறாரோ அதை சிஷ்யனே செய்யும்படி விட்டுவிடாமல், அவரும் கிட்டத்தில், பக்கத்தில்
நின்று ஸஹாயம் பண்ணிச் செய்விக்கிறார் என்று தொனிக்கிறது.
.
அன்பினால் சிஷ்யன் ஹ்ருதயத்தில் குரு கிட்டேயிருந்து சொல்லிக் கொடுப்பது ‘உப’தேசம்.
.
அவர் ஒன்றைச் செய்யச் சொல்கிறார் என்றால் அந்த ஒன்று என்ன? அதுதான் முக்யமான விஷயம். ‘வாழ்க்கைப் பாதையில் இன்ன டைரக்ஷனில் போ!’ என்பதுதான் அவர் கொடுக்கும் டைரக்ஷன்! உத்தம குரு கொடுக்கும் உபதேசம் இந்த லோகத்திற்கான அநித்யமான வாழ்க்கைப் பாதையோடு முடிந்து விடாது. இதைக் கொண்டே நித்ய வாழ்க்கையான பிரஹ்ம அநுபவத்தில் சேர்வதில்தான் அவர் முடிப்பார். அதற்காக சிஷ்யன் செய்ய வேண்டியதைச் செய்யும்போது அவரும் ஸ்தூலமாகவோ ஸூக்ஷ்மமாகவோ கூடவேயிருந்து அவனுக்குப் பக்க பலம் கொடுத்துத் தாம் சொல்வதை ‘உப’தேசமாக்குவார்.
.
Role of a SadGuru

அவர் பண்ணும் உபகாரம் யாரும் பண்ண முடியாது. “கடைத்தேற வேண்டுமானால் அம்மா நமக்கு சரணமாக மாட்டாள். அதாவது அம்மாவிடம் அடைக்கலம் புகுந்தால் அவளால் நம்மை மாயைக்கு அந்தண்டை தூக்கிப் போட முடியாது. நம்மிடம் எவ்வளவோ ப்ரியம் காட்டி நமக்காக எத்தனையோ த்யாகங்களெல்லாம் செய்கிறவள்தான் அவள் என்றாலுங்கூட அவளும் மாயைச் சேற்றில்தான் இருப்பவளாகையால் அதிலிருந்து நம்மை அவளால் தூக்கிப் போட முடியாது. தூக்கினால் பளு கூடுவதில் இரண்டு பேரும் இன்னம் புதைவதாகத்தான் ஆகும்.
.
அதே மாதிரிதான் அப்பாவும் சரணமாக மாட்டார். கூடப் பிறந்தவர்கள், மற்ற பந்து மித்ராள் எவரும் சரணமாக மாட்டார்கள். குருபாதம் தான் சரணம்”
என்று ஆசார்யாள் நெஞ்சைத் தொடுவதுபோலச் சொல்கிறார்.
.
தாயார் தகப்பனார்கள் இஹ லோகத்தில் ஜன்மாவைக் கொடுத்து, இந்த லோகத்தில் நன்றாக வாழப்பண்ணி, இந்த லோகத்துக்கான ஸொத்தைக் கொடுப்பார்கள். ஆனால் இதெல்லாம் நிலையில்லாதவை. நிலையான ஸொத்தை – என்றும் அழியாத பிரஹ்ம அநுபவத்தைத் தருபவர் குருதான். “சொந்தப் பிள்ளையாட்டமா நெனச்சு ஆத்ம வித்யையை உனக்குக் கொடுத்திருக்கேம்பா’, என்று குரு சிஷ்யனிடம் உபதேச முடிவில் சொல்வதாக ரொம்பவும் touching-ஆக ‘விவேக சூடாமணி’யில் ஆசார்யர் சொல்லியிருக்கிறார்.
.
Mercy of Sadguru

சிஷ்யனுக்குப் புரிகிறமட்டும் திரும்பத் திரும்ப உபதேசிக்க வேண்டியது ஆசார்ய தர்மம் என்று ஆசார்யாள் அபிப்ராயப் பட்டிருப்பதை கீதா பாஷ்ய முடிவிலேயும் தெரிவித்திருக்கிறார்.
.
"" “நான் சொன்னதையெல்லாம் மனசு குவிந்து சரியாகக் கேட்டுக் கொண்டாயா?” என்று பகவான் கீதையில் விசாரிக்கிறார். ஏன் அப்படிக் கேட்டாரென்றால், தாம் சொன்னதை சிஷ்யன் பிடித்துக் கொண்டானா, இல்லையா என்று தெரிந்து கொள்வதற்காகவே பகவான் இப்படிக் கேட்பது. அப்படி இவன் பிடித்துக் கொள்ளவில்லையானால் நாம் மறுபடி வேறேதாவது உபாயம் பண்ணியாவது பிடித்துக் கொள்ளப் பண்ணணும் என்ற அபிப்ராயத்தில் தான் கேட்கிறார் """ என்று ஆச்சாரியர் பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.
.
தாயார் எப்படிச் சாப்பாடு இறங்காத குழந்தைக்கு விளையாட்டு கிளையாட்டு காட்டி எப்படியாவது உள்ளே ஆஹாரத்தைப் போட்டுவிடுகிறாளோ அப்படி உபதேசம் இறங்காத சிஷ்யனுக்கும் குருவானவர் எப்பாடு பட்டாவது உள்ளே இறக்குகிறார் என்றால் அவருடைய அபார கருணை தெரிகிறது. அம்மா போடும் சாப்பாடு அந்த வேளைக்குத்தான் பிரயோஜனமாவது. அடுத்த வேளை மறுபடி பசி வந்துவிடுகிறது, பலம் குறைகிறது. குரு செய்யும் உபதேசமோ அம்ருதமாக, சாச்வதமான ஆத்ம புஷ்டியைக் கொடுத்து விடுகிறது.
.
அம்மாவின் சாப்பாட்டை விட சாச்வதமானது, அப்பாவின் ஸொத்தைவிட சாச்வதமானது குரு கொடுக்கும் உபதேசம்தான்.
.
ச(sa)ரணம் தேசிக ச(cha)ரணம்’. Saranam என்றால் அடைக்கலம்; Charanam என்றால் பாதம். “அடைக்கலம் குரு பாதமே” என்பதை “ச(sa)ரணம் தேசிக ச(cha)ரணம்” என்று சொல்லியிருக்கிறார்.
.
Chapter: ‘உப’ என்பதன் உட்பொருள்
Chapter: அன்னை தந்தைக்கும் மேல் ஆசானே !
chapter: ஆசாரிய தர்மம் :
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment