April 01, 2009

திருவண்ணாமலை பயணக்கட்டுரை (பகுதி 4)



[தொடர்ச்சி...]

ஆ: யோகி ராம்சூரத்குமார் ஆசிரமம்

விசிறி சுவாமிகள் என்று சில வருடங்கள் முன்பு பிரபலமான இவரை பலருக்கு நினைவிருக்கலாம। 1918 ஆண்டு, டிசம்பர் மாதம் காசிக்கு அருகே பிறந்தார். சிறுவயது முதல் ஆன்மீக ஈடுபாடு கொண்டவராக இருந்து, பிற்காலத்தில் ரமண மஹரிஷியைத் தேடி தென்னிந்தியா வந்தார். தம் ஆயுள் முழுவதையும் ஆன்மீக விசாரத்திலும், பக்தியிலும், பக்தர்கள் குறை களைவதிலும் ஈடுபட்டு , 2001-ஆம் வருடம் திருவண்ணாமலையில் முக்தியடைந்தார்। செங்கம் சாலையிலிருந்து பிரிந்து சிறிதே தூரத்தில் விஸ்தாரமாக நிமிர்ந்து நிற்கிறது இவரது ஆஸ்ரமம்। தியான மண்டபம், கோவில் உட்பட எல்லாமே பூஞ்சோலைகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது.

ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கும் முன் கட்டப்பட்டிருந்தாலும் இன்றும் கோவிலையும் சுற்றுப்புறத்தையும் நன்றாகப் பாதுகாத்து வருகின்றனர். தியான மண்டபத்தில், நமக்குத் தெரிந்த பல ஆன்மீகவாதிகளின் புகைப்படங்கள் இருக்கின்றது. இரவு நேரமானதால் உடனே கோவிலுக்குச் சென்று புறப்பட வேண்டிய சூழ்நிலை. அதனால் தியான மண்டபத்தில் அதிக நேரம் செலவிட முடியவில்லை. கோவிலில் சிவலிங்க வழிபாடு நடக்கிறது. அதற்கு நேர் எதிரே, யோகியின் முழு உருவச்சிலை அமைத்திருக்கிறார்கள். கோவில் மண்டபம் மிகப்பெரியதாய் இருக்கிறது. நாங்கள் சென்ற பொழுது இருபது பேர் உட்கார்ந்து பஜனை செய்தவாறு, மங்கள ஹாரத்தியை தரிசித்த வண்ணமிருந்தனர்। பாய் அல்லது ஜமுக்காளாம் போடப்படுகிறது, அதில் பக்தர்கள் உட்கார்ந்தபடி இறைவனை தரிசிக்கின்றனர். மண்டபம் பெரியதாக இருப்பதால், இருபது பேர் உட்கார்ந்திருந்தது வெகு குறைவாய்த் தெரிந்தது.ஆசிரமம் முழுதும், பலகைகளில் மஹானின் போதனைகளை எழுதி வைத்துள்ளனர். அவை எல்லாம் இவர் எளிமையையும், அடக்கத்தையும் பறைசாற்றுகிறது. தன்னை 'பிச்சைக்காரன்' என்று சில இடங்களில் குறிப்பிடுகிறார். அவருடைய தந்தை என்று 'சிவனை'க் குறிப்பிடுகிறார். பலகைகள் எங்கும் 'த்வைத' தத்துவங்கள் தெரிந்தன. அத்வைதம் பற்றி அத்தனை கூறப்படவில்லை. பல கூற்றுக்களில் அவர் தந்தையாய் வரிக்கும் சிவனிடம் மிகுந்த பக்தி தென்படுகிறது.

"இந்த ஆஸ்ரமத்திற்கு வந்து போகும் பக்தர்கள் எல்லோரையும் என் தந்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்। இங்கு வந்த யாருமே வெறும் கையுடன் திரும்பிப் போக மாட்டார்கள்। அவர்கள் என் தந்தையின் அருளும், ஆசியும் அள்ளிச் செல்வார்கள். அவர்கள் வாழ்வில் அமைதியும், முன்னேற்றமும் அதிகரிக்கச் செய்வார்." என பொருள் பட ஒரு பலகை ஆஸ்ரம வாசலில் இருக்கிறது. விஞ்ஞானமா? மெய்ஞானமா? என்று வாய்கிழிய பேசும் எனக்கே இதைப் படித்ததும் ஆறுதலும், அமைதியும் சூழ்ந்துது.



அனுபவங்கள்



மூன்று நாட்களில் சில சுவாரஸ்யமான அல்லது மறக்க முடியாத அனுபவங்களும் சேர்ந்தது। ரமணாஸ்ரமத்தில் சரியாக காலை ஏழு மணிக்கு சிற்றுண்டி। சரியாக ஏழு மணிக்கு, குளித்துத் தயாராகி ஆஜாராக வேண்டும்। இல்லையேல் சிற்றூண்டியை எதிர்பார்க்க முடியாது. எங்கள்மகளை ஏழு மணிக்கு குளித்து தயாராகி இட்டுச் செல்வது என்பது சிரமாக இருந்ததால், காலைச் சிற்றுண்டியும், இரவுச் சாப்பாடும் வெளியே உண்ண நினைத்தோம். முதல் நாள் இரவே உணவுவிடுதியின் வேட்டையை ஆரம்பித்தோம்.நம் சென்னையை விடவும் ஏன் பெங்களூரை விடவும், தெருக்கள் மேடுபள்ளமின்றி நன்றாக போடப்பட்டிருந்தது. பல உணவு விடுதிகளின் வெளித் தோற்றங்கள் சாப்பிடத் தூண்டுவதாய் இல்லை. இரு முறை திருவண்ணாமலையின் முக்கியத் தெருக்களைத் சுற்றிக் களைத்த பிறகு 'சரவண பவன்- உயர்தர சைவ உணவகம்' என்ற பலகை கண்ணில் பட்டது.சரவண பவன் என்றால் உடனே நமக்கு சென்னை சரவணபவன் நினைவில் வந்துவிடுகிறது. எக்கச்சக்கமாய் கனவு வளர்த்த என் மனதை அடக்கி, இதற்கும் அதற்கும் பெயரளவு பொருத்தம் மட்டுமே என்று மூன்று முறை சொல்லிக் கொண்டு உள்ளே நுழைந்தேன். சுத்தமாக இருந்தது. அதாவது....நிஜமாகவே சுத்தமாக இருந்தது. எங்களைத் தவிர ஹோட்டலில் யாருமே இல்லை.இதனால் அங்கிருந்த ஐந்து சர்வர்கள், உணவு தயாரிக்கும் செஃப், கல்லாவில் பில் போடுபவர்கள், என கிட்டத்தட்ட எட்டு பேர் எங்கள் மேஜையைச் சுற்றி நின்று கொண்டனர். லேசாக அரைக்கண்ணில் பார்த்தால் ஒருவரின் வேட்டி கூட வெள்ளையாக இல்லை. கண்ணை இறுக்க மூடிக்கொண்டு, 'வேட்டிக்கும் சுத்தத்துக்கும் சம்மந்தமில்லை' தறிகெட்டு ஓடும் எண்ணத்தை, கட்டையால் அடித்து நிறுத்தினேன். இந்த சர்வர்களில் ஒருவர் பிராமணர் போலும். இதையெல்லாம் யாரும் பொருட்படுத்துவதில்லை என்பது அவருக்குப் புரியவில்ல. அவர் எங்களிடம், 'வாங்கோன்னா, சூடா தோசை இருக்கு, இட்லி இருக்கு, பணியாரம் இருக்கு, என்ன சாப்படறேள்?' என்றார். அவரின் பேசும் தொனியும், எரிச்சலூட்டியத. இப்படிப் பட்ட பேச்சு வழக்கு தற்போது யாருமே உபயோகிக்காத ஒன்று. மேலும், பொதுவிடத்தில் சாதிகளையும் பிரிவினைகளையும் நினைவுப்படுத்தும் வகையில் பேச்சு இருப்பது தேவையற்றது. அவரவர் சாதிக்காரர்கள் பேசிப் பரிமாறினால் இரண்டு இட்லி அதிகம் சாப்பிடுவோம் என கற்பனை செய்துகொள்கின்றனர்.

ஆர்டர் செய்த உணவை ஐந்தே நிமிடத்தில் சுடச்சுட கொண்டு வந்தனர்। உணவின் தரம் சொல்லி மாளாது। அத்தனை ருசி!!! இப்படிப்பட்ட சாதாரண உணவகத்தில் இப்பேற்பட்ட ருசி எதிர்பாராத ஒன்று। மீண்டும் எனக்கு பாடம் "Looks are deceptive"।

நாங்கள் பாதி சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் வேறொரு நபர் நுழைந்தார் அவரிடம் அதே சர்வர் "என்னப்பா என்ன சாப்படற? தோசை சூடா ஊத்த சொல்லவா? இல்லை வேற எதனாச்சும் வேணுமா?" என்றாரே பார்க்கலாம்! பொதுவிடத்தில் சாதி நினைவூட்டும் பேச்சுகளை 'மார்க்கெட்டிங் டெக்னீக்'கிற்காக உபயோகிக்கும் அவரை என்ன சொல்வது?

அடுத்த இரண்டு நாட்களும் விசுவாசமாய் அதே உணவகத்தில் எங்கள் தேவையை பூர்த்தி செய்துகொண்டோம். திடீரென அத்தனை சர்வர்களின் வேட்டிகளும் சற்றே சுத்தமாக இருந்தது மனபிரமையாக இருக்கலாம். ஆனால் கவனிப்பின் தரம் குறைந்தது. கடைசி நாளன்று, ஊசிப் போன தேங்காய்ச் சட்னியை பறிமாறும் அளவு சென்று விட்டது. நாங்கள் குறையைச் சுட்டிக் காட்டியவுடன், புதிதாய் அரைத்து, இரண்டே நிமிடத்தில் சாப்பிடக் கொடுத்து அதை ஈடுகட்டி விட்டது பாராட்டப் பட வேண்டிய விஷயம்.

(அடுத்து பகுதியில் நிறைவு)

No comments:

Post a Comment