November 06, 2011

இராமன் எனும் மனிதன்


(எங்கே பிராமணன் தொடரைத் தழுவியது)



அவதாரங்களில் க்ருஷ்ண அவதாரம் பரிபூர்ண அவதாரம். அதாவது இறைநிலையில் நின்றே, அதனை விட்டு விலகாமல், செயலாற்றிய அவதாரம் என்று சொல்வர்.

ராம அவதாரமோ மனிதனாக வாழ்ந்து, மனிதனாகவே உணர்ந்து நடைமுறை இன்ப துன்பங்களை அனுபவித்து பின் படிப்படியாக இறைநிலையின் பூர்ணத்துவத்தை உள்வாங்கிக் கொண்டவர். ராமன் தன்னை பலவேறு நேரங்களில் சாமான்ய மனிதனாக மட்டுமே உணர்ந்தான் எனக் எடுத்துக்கூறக்கூடிய சம்பவங்கள் பல.



ராமனிடம் குகன் கொண்டிருந்த அன்பும் நீதி வழுவாத சிறந்த அரசனிடம் பிரஜை கொண்டிருந்த மரியாதையை ஒத்திருந்தது. "பாருக்கே அரசனான உன்னை இந்தச் சடை முடியில் பார்த்த கண்ணை புடுங்காமல் இருக்கிறேனே" என்று கற்பித்து எழுதப்பட்டிருக்கிறது. "பாருக்கே அரசன்" என அன்பு மிகுதியில் குறிப்பிடும் குகன், அரசனாக ராமனை வரிக்கிறானேயன்றி இறைவன் என நினைத்து அன்பு செலுத்தியதாகப் புலப்படவில்லை.


குகன் நினைப்பும் புரிதலும் ஒரு புறம் இருக்கட்டும். இராமனே தன்னை சாமான்ய மனிதாக உணர்ந்து தான் வாழ்ந்து முடித்திருக்கிறான். முன்பு சொன்னது போல், இறைநிலையிலிருந்து செயலாற்றிய அவதாரம் க்ருஷ்ண அவதாரம் தான். இராமன் தன்னை மனிதனாகத் தான் உணர்ந்தான். சீதையின் அக்னிப்ரவேசத்தின் பொழுது பல தெய்வங்களும் வந்து மன்றாடுகிறார்கள். "நீ யாரெனவே மறந்தாயா" என்று கேட்பதாகவும், அதற்கு ராமன் "நான் தசரதப் புதல்வன், நான் ஒரு மனிதன்" என்று பதிலுரைப்பதாகவும் தான் புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


இராமனும் துக்கம் உணர்ந்திருக்கிறான். பிரிவை உணர்ந்து வருந்தியிருக்கிறான். சாமன்யன்யனைப் போல் பாசத்திலும் கட்டுண்டிருந்திருக்கிறான். சீதையைக் காணாமல் பரிதவித்து துடித்திருக்கிறான். இலக்குவனை மறுபடியும் நாட்டுக்குச் செல்லப்பணித்து, தன்னால் சீதையின்றி உயிர் தாங்க முடியாதுஎன்றே புலம்புவதாக வால்மீகி எழுதியுள்ளார். அலைகடலில் சிக்கிய படகினைப் போல் தவிக்கும் இராமனுக்கு இலக்குவன் ஆறுதல் அளிப்பதாகவே எழுதப்பட்டிருக்கிறது. பாசமும், பந்தமும், மாயையும் அத்தனை ஷக்தி வாய்ந்தவை. "மாயாதீத ஸ்வரூபிணி"யாக இருக்கும் அவள் விரிக்கும் வலையில் இராமனே சிக்கியிருந்தான் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்.

11 comments:

  1. ராமன் தான் கடவுள் இல்லை, தான் அவதாரம் இல்லை என்பதை அறிந்தே இருந்து இருக்கிறார். மக்கள் தான் அவரை விஷ்ணுவின் அவதாரம் என சொல்லிவிட்டார்கள். அவர் ஒரு மன்னரின் புதல்வர் என்பது தெள்ளத் தெளிவு.

    இதைப்போலவே புத்தர் இறைநிலைக்கு கொண்டு செல்லப்பட்டதையும், பலராமருக்கு பதிலாக இவருக்கு விஷ்ணுவின் அவதார நிலையில் ஒன்று தர வேண்டும் என்றும் கூறப்படுவதை அறிவோம்.

    கிருஷ்ணர் இறைநிலையில் இருந்து செயல்படவில்லை. மனிதராகவே செயல்பட்டார், ஆனால் அவர் சில சித்து வேலைகள், மாய தந்திரங்கள் அறிந்து வைத்து இருந்தார்.

    அவதாரங்களோ, இறைதூதர்களோ எல்லாருமே ஒருவிதத்தில் மனிதர்கள், அவ்வளவே. இவர்கள் ஒருபோதும் இறைவன் ஆக முடியாது என்பது உலகம் அறிந்த உண்மை.

    நன்றி.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி v.radhakrishnan. :)

    அவதாரங்கள், யேசு முதல், க்ருஷ்ணன் வரை பிறப்பிலேயே அதிசயங்கள் சூழப்பிறந்தவர்கள். இறைத்தன்மை அல்லது god principle சாமான்யனை விட அதிகம் இருக்கக்கூடியவர்களே.

    முழுமையான whole entity "god" உருவமற்ற ஒருமைத் தத்துவம். அது வடிவம் பெறும் போது இறைத்தன்மையை சாமன்யனை விட அதிகமாக ப்ரதிபலிக்கும். ஒவ்வொருவரும் பிரதிபலிக்கும் முறையும் சதவிகிதமும் மாறுபடும் என்று நான் நம்புகிறேன்.

    கருதுக்கும் மிக்க நன்றி. :)

    ReplyDelete
  3. நான் அவதாரக்கதைகள் என்ற தலைப்பில் ஒன்பது அவதாரக் கதைகளையும் எழுதி இருக்கிறேன். நண்பர் ஒருவர் ஒரு பின்னூட்டத்தில் அவை கடவுளின் அவதாரம் என்னும்கருத்து தெரிவித்திருந்தார். என்னைப் பொறுத்தவரையில் அவைகள் கதைகளே. ஆனால் நம் கலாச்சாரத்தை விளக்கும் கதைகள். பல அரிய கருத்துக்கள் கொண்ட கதைகள் . நன்னெறிகள் கொண்ட கதைகள். அவற்றிலும் சில நம்பமுடியாதவையாகவும் விமரிசனத்துக்கு உட்பட்டதாகவும் இருக்கிறது. அண்மையில் ஒரு பல்கலைக் கழகத்தில் இப்படி விமரிசனத்துக்குள்ளான ஒரு பதிவையே நீக்கி விட்டார்கள். நம்பிக்கை சம்பந்தப்பட்டது, என்பதால் பல கருத்துக்களைக் கூறத் தயக்கம் ஏற்படுகிறது. நானும் ஒரு சாதாரணன் ராமாயணம் பதிவிட்டிருக்கிறேன். இது ஒரே வாக்கியத்தில் ஆறு காண்டங்களையும் உள்ளடக்கியது. படித்துப் பாருங்களேன்.

    ReplyDelete
  4. கருத்துக்கு நன்றி ஜி.எம்.பி சார்.

    என்னுடைய தனிப்பட்ட கோணத்தில் என்னால் இதுவரை புரியப்ப்பட்டது....

    1. இறைவனின் நிலையை உயர்ந்த மனிதன், ஞானி, இறையருள் நிரம்பப்பெற்றவன் எய்த நினைக்கும் போது அவன் அவதாரமாக கருதப்படுகிறான்.

    2. ரொம்ப அபூர்வமான தருணங்களில் இறைதத்துவம் அரிய பல கருத்தை சொல்லவோ அல்லது நல்லனவற்றை பேணவோ இறங்கி வருவதுண்டு என்றும் நான் நம்புகிறேன். அல்லது ஏதேனும் ரூபம் கொண்டு(வெறு ரூபத்திலும்) அரூப தத்துவமானது அதை நிறைவேற்ற முற்படலாம்.

    3. பலருக்கு நம்பிக்கை குலைப்பது போல் கருத்து பிடிப்பதில்லை.

    இதில் பிடிப்பதற்கோ பிடிக்காமல் போவதற்கோ ஒன்றுமே இல்லை.

    நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது. அது பெயரற்றது. விளக்கமுடியாதது.
    எனினும் நம்பிக்கையிலும், நம்பிக்கையின்மையிலும் எங்கும் எதிலும் பரவி இருக்கிறது.
    அந்த ஒருமைத் தத்துவக் கடலின் குமிழ்களே அனைவரும். இதில் பேதம் ஏது!

    ReplyDelete
  5. // நானும் ஒரு சாதாரணன் ராமாயணம் பதிவிட்டிருக்கிறேன். இது ஒரே வாக்கியத்தில் ஆறு காண்டங்களையும் உள்ளடக்கியது. படித்துப் பாருங்களேன்.
    //

    நிச்சயம் படித்துப் பார்க்கிறேன் :)

    ReplyDelete
  6. //பாசமும், பந்தமும், மாயையும் அத்தனை ஷக்தி வாய்ந்தவை. "மாயாதீத ஸ்வரூபிணி"யாக இருக்கும் அவள் விரிக்கும் வலையில் இராமனே சிக்கியிருந்தான் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்.//

    மிகச்சரியாகச் சொன்னீர்கள். ஸ்ரீராமன் மனிதனாகவே அவதாரம் எடுத்து, சத்தியத்துக்கும், தர்மத்திற்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவரே! நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள். அன்புடன் vgk

    ReplyDelete
  7. வாருங்கள் vgk. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  8. இந்தவார தமிழ்மண நட்சத்திரப்பதிவரான என் படைப்புகளுக்குத் தொடர்ந்து வருகை புரிந்து கருத்துக்கூறிவருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    மொத்தம் 27 இல் இதுவரை 25 வெளியிடப்பட்டுள்ளன. மீதி இரண்டு இன்று 13.11.2011 மதியம் 1 மணிக்கும், மாலை 4 மணிக்கும் வெளியாகும். அதுபோல இன்று இரவு சுமார் 9 மணிக்கு 28 ஆவது வெளியீடாக “Happy இன்று முதல் Happy" என்ற தலைப்பில் நன்றி அறிவிப்பு ஒன்றையும் வெளியிட உள்ளேன். அதில் உங்களுக்காகவே ஒரு சிறிய பகுதி கொடுத்துள்ளேன்.

    அவசியம் அனைத்துக்கும் வருகை தந்து உற்சாகப்படுத்த வேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

    அநேக ஆசீர்வாதங்களுடன் vgk

    ReplyDelete
  9. நன்றி வை.கோ சார். நிச்சயம் வருகிறேன்.

    ReplyDelete
  10. ////என்னுடைய தனிப்பட்ட கோணத்தில் என்னால் இதுவரை புரியப்ப்பட்டது....

    1. இறைவனின் நிலையை உயர்ந்த மனிதன், ஞானி, இறையருள் நிரம்பப்பெற்றவன் எய்த நினைக்கும் போது அவன் அவதாரமாக கருதப்படுகிறான்.

    2. ரொம்ப அபூர்வமான தருணங்களில் இறைதத்துவம் அரிய பல கருத்தை சொல்லவோ அல்லது நல்லனவற்றை பேணவோ இறங்கி வருவதுண்டு என்றும் நான் நம்புகிறேன். அல்லது ஏதேனும் ரூபம் கொண்டு(வெறு ரூபத்திலும்) அரூப தத்துவமானது அதை நிறைவேற்ற முற்படலாம்.

    3. பலருக்கு நம்பிக்கை குலைப்பது போல் கருத்து பிடிப்பதில்லை.

    இதில் பிடிப்பதற்கோ பிடிக்காமல் போவதற்கோ ஒன்றுமே இல்லை.

    நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது. அது பெயரற்றது. விளக்கமுடியாதது.
    எனினும் நம்பிக்கையிலும், நம்பிக்கையின்மையிலும் எங்கும் எதிலும் பரவி இருக்கிறது.
    அந்த ஒருமைத் தத்துவக் கடலின் குமிழ்களே அனைவரும். இதில் பேதம் ஏது!////

    அத்வைத தத்துவமே இது தானே... ஆஹா.. அருமை.. அருமை..
    இது தான் சத்தியமான உண்மை... அற்பதம் அருமை...

    ReplyDelete
  11. நன்றி தமிழ்விரும்பி.

    உங்களுடைய "கடவுள் என்பவர் யார்" எனக்கு பிடித்தது. அதனுடன் ஒத்துபோகிறேன் :)

    ReplyDelete