Showing posts with label சொல்லத்தான் நினைக்கிறேன். Show all posts
Showing posts with label சொல்லத்தான் நினைக்கிறேன். Show all posts

October 13, 2024

வாணி களிநடம் புரிவாய் நீ

 


ஆயக்கலைகளெலாம்,
அம்மா உன் சரணமதில்
தூய மலராகி தூமணம் வீசுதடி.
தேவாதி தேவர்கள்
ஆற்றும் வினைகளெலாம்,
மையப் பொருளான
மதியுனையே பேசுதடி.
.
காயத்தால் தரித்து;
சாயத்தால் திரிக்கும்,
மாயக்கலைகளின்
மனங்கவர் வடிவழகி!
ஆயர்குலத்தழகன்,
நேயக்குழலிசையின் ;
ரீங்காரமாகி நிற்கும்
ஓங்கார உறைபொருளே!
.
இயலிசை காவியத்தை
ஓட்யாண நகையாக்கி,
ஒய்யாரமாகவே
இடைபுனைந்த இனியவளே!
ஞானமெனும் ஊற்றே!
பேறிவின் பெருநிதியே!
பையப்பையவே
பாரெலாம் நிறைந்தவளே!
.
நான்முகன் நாயகியே!
நானுனைப் பாடிடவே,
பாமகளே என்
நாவினில் பூத்துவிடு.
வீணைமீட்டியே
விதவிதமாய்க் கவியெழுது.
திமிதிமியெனவே
என்னுள் நர்த்தனம் ஆடிவிடு.
.
சூக்குமமெல்லாம் குறையறவே
சூதனமாய் ஊட்டி விடு.
நாவடக்கம் வேண்டுமென
நிச்சயமாய் சொல்லிவிடு.
வெண்தாமரை தண்டதனை
தேனில் குழைத்தெடுத்து,
ஊனில் கலந்தே
உதிரத்தில் நிறைத்துவிடு.
- ShakthiPrabha

October 09, 2024

அலைமகளே வருக

 


அலைமகளே! மாலவன் மார்பில்
சீரென விளங்கும் மலர்மகளே!
வளர் சௌபாக்கியம் தரும் அலர்மகளே!
நாராயணன் நாடும் நித்ய சுந்தரியே!
சுகபோகங்கள் சேர்க்கும் சௌந்தரியே!
.
தன-தானியம் தரணியெலாம் நிறைந்திட,
மாங்கல்யம் நிலைத்திட - பொங்கு
மங்கலங்கள் தழைத்திட,
பயம் விலகி பகை அகன்றிட,
ஜயம் கூடி தடை விலகிட - உன்
கரம் பற்றுகிறோம் நலம் நல்கிடம்மா!
.
செருக்குவாரா செல்வம் குவிந்திட;
தரக்குறைவிலாது தழைத்தே ஓங்கிட - எம்
சந்ததியே உனை தினம் துதித்திட;
தளிர் தாமரையில் ஒளிர் திருமகளே,
இணை ஈடில்லா துணை நீயெனவே - பொற்
கழல் போற்றுகிறோம் வரம் தாருமம்மா!

-ShakthiPrabha

October 04, 2024

ஜயஜய துர்கா

 ஆயிரம் நாமங்கள் தாளமிட வரும்

அர்ச்சனைப் பொருளே அம்பிகே!
துக்கங்கள் தூளாக தித்தித்தி ஆடிடும்
தாயவளே ஜயதுர்கையே!
.
முக்காலம் உணர்ந்த ஞானியரும் ஏத்தும்
தூயவளே மூகாம்பிகே !
காரணி உனையே கவியிற் புனைந்தோம்
பூரணியே அபிராமியே!
.
அனந்தம் நீயென அடைக்கலம் கண்டோம்
ஆனந்த பைரவியே!
தோரணங்கள் நாட்டி பாயிரமும் சூட்டி
பாடுகின்றோம் பவானியே!
.
கதிநீயேனவே தினம் போற்றியுந்தன்-சரண்
நாடுகிறோம் சிவகாமியே!
பாரெங்கிலும் மங்கலம் தங்கவே- கண்
பாரடியே மீனாட்சியே!
ShakthiPrabha

நவக்கிரகங்கள்

 #சொல்லத்தான்_நினைக்கிறேன்

கட்டங்களின் கூட்டணியென கிசுகிசுத்தனர்.
கடந்து சென்றேன்..
தசாபுக்தியின் குதியாட்டமே என்றனர்.
புரியவில்லையென புறந்தள்ளினேன்..
மஹாதசையின் பிடியில் தான்
மானுடன் விதியென சத்தியம் செய்தனர்.
மாய்மாலம் எனச் சிரித்தேன்.
எதையுமே செவிமடுக்கவில்லை:
விண்ணையே அளந்த கைகள்
மண்ணில் தவழ,
நிமிர்ந்த நற்பார்வை
நாணி நிலம் நோக்க
ஓங்கியிருந்த செல்வாக்கு
தரதரவென இழுக்கப்பட்டு
தரையில் தள்ளபடும் வரை.

October 01, 2024

அடையாளம்




அடையாளத்தைத் தொலைத்து
அபின்னமாக அடங்கி
அத்வைதமென ஒடுங்காது;
அணிய-அணிய ஆர்பரித்து
அனுக்ஷணமும் ஆடியாடி - புதுப்புது
அடையாளங்களை தேடித்தேடி
அணியும் ஆசைக்கிடங்கு.
-ShakthiPrabha