February 14, 2026

அன்புள்ள எனது காதலர்களுக்கு



கண்டதை எழுதி
கணப்போழுது கழியாது
காதலர்தினத்துக்கெல்லாம்
கவிதை எழுத முடியாது
..
உள்ளமதை விரித்து
உனையே எங்கும் காணும்
உன்னத நிலையதனை
தேடிப் போகிறேன்
காதலர்தினத்துக்கெல்லாம்
கவிதை எழுத முடியாது
..
அபின்னமாகவே
அனைத்தயும் அளக்கும்
அற்புத கலைக் கண்ணை
நாடி போகிறேன்
காதலர் தினத்துக்கெல்லாம்
கவிதை எழுத முடியாது
..
ஆங்கோர் உலகில்
அனந்தமென நிலைத்து
ஆனந்த வெள்ளத்தை
சுவைக்கப் போகிறேன்
காதலர் தினத்துக்கெல்லாம்
கவிதை எழுத முடியாது
..
கண்டவர் மேல் கொள்ளும்
அன்பும் பாசமும்
காதலும் நேசமும்,
காலணா காசுக்கும்
காட்சிப் பெறாதே!
கண்ணனவன் நெஞ்சமதே
தஞ்சமெனப் போகிறேன்
காதலர் தினத்துக்கெல்லாம்
கவிதை எழுத முடியாது
..
கால வெள்ளத்தின் கரையில்
தொலை தூரத்தில்;
தூய மாடத்தில்;
தோரணம் நாட்டி
காத்திருப்பேன்..
உனை எதிர்பார்த்திருப்பேன்...
காதலர் தினத்துக்கெல்லாம்
கவிதை எழுத முடியாது
..
வந்து சேர்ந்துவிடு
வராமல் மறுப்பவரை
வருந்தி அழைத்துவிடு
கமலக் கண்ணனுடன்
காதலாகிக் கலந்திடுவோம்
சிறுசேவைகள் சாதித்து
பணி செய்திடுவோம்
மலர்களால் மாலைகட்டி
அணி செய்திடுவோம்
..
வாடித் துவளும்
பிறவியைச் சாடுவோம்
மாதவன் மட்டுமே
மாதவம் என்றே
பாடிப் பணிவோம்
ஆடிக் கொண்டாடுவோம்
.....
காதலர் தினத்துக்கெல்லாம்...
இதோ எனது கவிதை
உனக்கும்- எனக்கும்
அவனுக்கும் அவளுக்கும்
அன்னைக்கும் தந்தைக்கும்
பிள்ளைக் குலத்துக்கும்
அறிந்துமறியாத
அத்துனை உயிருக்கும்
புனைந்த கவிதை
💐 ShakthiPrabha 💐

No comments:

Post a Comment