January 03, 2022

ஸ்ரீதேவி

 


அடேங்கப்பா! முப்பது வருடத்தில் எத்தனை மாற்றங்கள்! ஜேஜேவென கூட்டத்தின் நடுவில் கொண்டாடப்படும் அம்பாள்.
.
அன்றைக்கெல்லாம் பத்து பேருக்கு மேல் ஒரே நேரத்தில் சேர்ந்தாற் போல் காண்பதரிது.
*
"நிறைஞ்ச வெள்ளிக்கெழமையா இருக்கு. கோவிலுக்கு போயிட்டு வந்துடலாம்டி பாகீ" என்றாள் பாட்டி. கசகசவென்ற வெயிலுக்கு மேலும் குளுமை சேர்க்க, பட்டுப்பாவாடையை இறுக்கி விட்டார்கள். இவ்வளவு மல்லிகைப் பூ அள்ளி குடுமியில் சொருகிக் கொண்டு, பாட்டியுடன் குதித்துக் கொண்டு கிளம்பினேன். கோவிலில் சர்க்கரைப் பொங்கலோ புளியோதரையோ கொடுப்பார்கள் என்று ஆசை காட்டி கூட்டிச் சென்றாள்.
*
கோவிலுக்குப் போக பிடிக்காதென்பது இல்லை. ஆனால் சாமியைப் பார்த்தா பயம். 'சாமி ஊர்வலம் வருது பாரு' என்று அத்தனை பேரும் கன்னத்தில் தபதபவென போட்டுக்கொள்வார்கள். கொஞ்சம் சிரிப்பு வரும். இருந்தாலும் பயம். இருட்டு வேளையில், ஜோதியின் நடுவில், தெரியும் சிரித்த தெய்வத்தின் முகம். யாரோ முகம் பெயர் தெரியாத ஒருவரிடம் / ஒன்றிடம் அனைவரும் காட்டும் பயம். கன்னத்தில் போட்டுக்கொள்ளா விட்டால் அவள் தண்டித்து விடுவாளோ! பயம்.
.
"அம்மா சாமி கண்ண குத்திடுமா"
-
"சாமிக்கு பயப்பட கூடாதுடீ, அவா கிட்ட பக்தி பண்ணணும்" - என்பாள் அம்மா.
-
"Shailu we need to educate our bagi, regarding bhakthi" - அப்பாவின் திட்டவட்டமாகத் தீர்மானித்தார்.
-
ஷைலஜா என்கிற ஷைலு தான் என் அம்மா. அவள் படித்து வளர்ந்த டவுனுக்குத் தான் நான் விடுமுறையைக் கழிக்க சென்றிருந்தேன்.
.
ஏறக்குறைய 35 வருடங்களுக்கு முந்தைய நினைவு.
-
"நீ பிராகாரத்தை சுத்தி ப்ரதக்ஷிணம் பண்ணிண்டு வா, பாட்டி அங்க சித்த உட்கார்ந்து தியானம் பண்றேன்"
*
பிரகாரம் முழுவதும் அழகாக இருந்தது. ஆங்காங்கே சுடர் விடும் தீபங்களைத் தாண்டி இருட்டாக இருந்தது, அதனால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. பெரியதாக சிலா வடிவங்கள். அத்தனையும் கண்ணை சிமிட்டி வா வா என்றழைப்பது போல் இருந்தது.கொஞ்சம் புன்னகை சிந்தியது. வேகமாக நடந்தேன். கிட்டத்தட்ட ஓடினேன். கோவிலில் அதிகம் கும்பலில்லை.
*
தூரத்தில் என்னைப் போலவே வெயிலுக்கு இதமாக பட்டுப்புடவை கட்டிக்கொண்டு ஒரு அம்மா வந்து கொண்டிருந்தாள். அப்பாடாவென்று கொஞ்சம் மனசு அமைதியடைந்தது. பாட்டி பிரதக்ஷிணம் இடமிருந்து வலமாகத் தானே வரச் சொன்னார். இந்த மாமி எதிரில் வருகிறாரே என்று நினைத்தேன்.
-
கையில் தேங்காய், பூ பழக்கூடை சகிதம் மாமி நடந்து வந்து கொண்டிருந்தாள். இந்த மாமியை இதுவரை இந்தத் தெருவில் பார்த்ததில்லை. தெரியாதவர்களிடம் பேசக்கூடாதுன்னு பாட்டி சொல்லியிருக்கிறார். அந்த மாமி எனை நெருங்கி வந்தாள். நான் வேகமாக கடக்க நினைத்தேன். தடுத்து நிறுத்தி புன்னகைத்து, தீர்க்கமாகப் எனைப் பார்த்தாள், என்னால் அப்பார்வையை தவிர்க்க முடியவில்லை. தீக்ஷண்யமான பார்வை. என் உடல் சிலிர்த்தது. அவள் கண்கள், நெற்றித் திலகம், பட்டுப் பீதாம்பரம், அவளைக் காணக் காண உடலெல்லாம் நடுங்கியது. ஓடிவிடவும் முடியாமல் ஸ்தம்பித்து நின்றேன். என் நெற்றியில் மெல்ல திலகமிட்டாள், உடலின் அத்தனை நாடி நரம்புகளும் உயிர்த்தெழுந்தது. அவள் கடந்து சென்றாள்.
-
நான் வேகமாக இப்புறம் ஓடி வந்தேன். பிரகாரத்தின் இந்தப் பக்கம் அந்த மாமியைக் காணவில்லை. பிரகாரம் சுற்றி இப்புறம் வராமல் எப்படி எங்கு சென்றிருக்க முடியும்! மாயமாக இருந்தது! எங்கு சென்றாள்? யாரவள்? அவளை அக்கம்பக்கத்துத் தெருக்களில் தேடினேன். கிடைக்கவில்லை. அதன் பிறகு பல சந்தர்பங்களில் அம்மாவின் சொந்த ஊருக்கு செல்லும் போதெல்லாம் கூட பல தெருக்களில் அவளைப் பற்றி விசாரித்தும், தேடியும் பார்த்தேன். தகவல் ஏதும் கிடைக்கவே இல்லை. ரொம்ப நாளைக்கு இதுபற்றி யாரிடமும் நான் கூறவில்லை.
*
அந்த சம்பவத்திற்குப் பிறகு வாழ்விலும் தாழ்விலும் எதனைக் கண்டும் நான் பயம் கொண்டதில்லை. கோடு போட்டாற் போன்ற அன்றைய நிகழ்வு எனது வாழ்வை திருப்பிப் போட்டதாக நான் உணர்ந்தேன். என்னுள்ளும் புறமும் பல மாற்றங்கள். சுலோகங்கள் சொல்வதும், பூஜைக்கு உதவுவதுமாக மாறிப்போன பாகீரதியை அம்மா, அப்பாவுக்கு ரொமபப் பிடித்தது. பல வருடங்கள் கழித்து பாட்டி இறக்கும் தருவாயில் ஒரு முறை இது பற்றி அவரிடம் மட்டும் கூறினேன்.
-
"போடி பைத்தியக்காரி, அப்போ உனக்கு பத்து வயசிருந்தா அதிகம். அதெல்லாம் பிரமை, யாரானும் பக்கத்து தெரு மாமியா இருக்கும்" எனப் புறந்தள்ளினாள்.
*
சந்தோஷங்கள் மட்டுமே நிலைத்து விடுவதில்லை. நிறைந்து விடுவதில்லை. பல சவாலான நேரத்தில் சஞ்சலப்பட்டு தவிக்கும் போது, கண்மூடி தீர்வு தேடும் போது, அனேக தருணங்களிலெல்லாம் அம்பாள் என்றாலே அந்த முகம் என் மனக்கண் முன் வந்து போகும். சொடக்கு போடும் நேரத்தில் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும், அல்லது மன நிம்மதி நல்கும். எனது நம்பிக்கையால் விளைந்த இந்தப் பழக்கம் இன்றும் வேறூன்றி நிற்கிறது.
*
பாட்டி இறந்த பிறகு அந்த வீட்டிலிருந்த சொத்து பாத்யதைகளை பிரித்துக் கொடுத்ததில் அவ்வூருடன் எங்களுக்கு இருந்து வந்த கொஞ்சநஞ்ச உறவும் விட்டு போயிற்று. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் மீண்டும் சொந்த ஊர் வந்திருக்கிறேன். அதே கோவில், கோபுரம்.. அமைதியான இடம் கொஞ்சம் ஆரவாரமாக மாறியிருந்தது.
*
"நில்லும்மா, பிரசாதம் வாங்கிட்டு போ" என்ற குரல் என்னை நிகழ்காலத்துக்கு கொணர்ந்தது. மூதாட்டி ஒருவர் நின்றிருந்தார்.
-
"எம் மகளுக்கு கல்யாணம் நடந்ததும் சௌதரவல்லி அம்பாளுக்கு புஷ்ப அலங்காரம் நேர்ந்துகிட்டோம். இன்னைக்குத் தான் நேர்த்திக் கடன் முடிஞ்சது. இந்தா தாம்பூலம் வாங்கிக்கத் தாயீ." என் கால்கள் அவளை நோக்கி தனிச்சையாக நடந்தன.
-
கை நிறைய குங்குமம் எடுத்து என் நெற்றியில் வைத்தாள். வயதானவள். நரைதட்டியிருந்தது, முப்பு கண்களில் தங்கியிருந்தது. எனினும் கண்கள் சூர்யகோடி பிரகாசத்துடன் ஜொலித்தது. நீலபுடவை கட்டியிருந்தாள்.
-
"நீ நல்லா இருப்ப தாயீ" தாம்பூலத்தை கையில் திணித்து விடுவிடுவென நடந்து கோவிலுள் சென்றாள், கூட்டத்தில் புள்ளியாய் மறைந்து போனாள்.
*
அர்ச்சகரிடம் விசாரித்தேன். இன்றைக்கு புஷ்ப அலங்காரம் செய்த உபயதாரர் யார்? இல்லைம்மா இன்றைக்கு யாரும் அலங்காரத்துக்கு நேர்ந்துக்கலை. இன்றைய தினம் விசேஷ பிரார்த்தனையின்னு யாருமே வரலையே. அம்பாளுக்கு இன்னிக்கு குங்கும அர்ச்சனை தான். புஷ்ப அலங்காரம் நாளைக்கு.
*
இங்குமங்கும் ஓடினேன். சரசரக்கும் நீலப் புடவையைக் காணவில்லை. வயது முதிர்ந்தவள். அதற்குள் கோவிலை விட்டு வெளியேறியிருக்க வாய்ப்பில்லை.
*
அதே சௌந்தரவல்லித் தாயார். நின்று நிம்மதியாக சேவிக்கிறேன். அந்த பிரகாரம், அவள், அவளின் நீலப்புடவை, வாத்ஸல்யமான புன்னகை, என்னுடனேயே தங்கிப் போன அவள் நினைவு. இதோ இன்றைக்கும் அந்த பிரகாரமெங்கும் அவள் ஓம்காரம் ஒலிப்பதாகவே உணர்ந்தேன்.
*
வீடு வந்து பல நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் தியானம் செய்த நேரம், நீலப் புடவை சரசரக்க, பூச்சூடி உத்யத்பானுவைப் போன்ற அவள் அழகு முகம் பளீரென முன் நின்று சிரித்தது, மெல்ல என் அம்மாவின் முகமாக மாறி எனை அணைத்தது, அரை நொடியில் அம்முகம் மூப்பேறி நரைதிரண்டு எனை கேலி செய்தது. எல்லாம் கரைந்து ஒரே ஓம்காரமாக உயர்ந்து "பாகீரதி" என அழைத்தது...
.
எங்கோ தூரத்தில் சஹஸ்ர நாமம் ஒலித்துக் கொண்டிருந்தது...
.
".....நவ சம்பக புஷ்பாப நாஸா தண்ட விராஜிதா. தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா. கதம்ப மஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மனோஹரா....."
.
ஆம். அது அவள் தான்...
.
(முற்று பெறாதது)

2 comments:

  1. புது வருடத்தில் ஒரு சிறந்த கதை. மனதை தொட்டது, அந்த அம்பாள் அருள் எனக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்!

    ReplyDelete
  2. நன்றி. அவள் அருள் சகலருக்கும் கிடைகட்டும்.

    ReplyDelete