September 04, 2009

ஒன்றானவன் - உருவில் இரண்டானவன்

'நீ' இல்லாத பொழுதுகளில்
'நான்' என்பதும் புலப்படாது ஒழிந்துவிட வேண்டும்
என் இயக்கங்கள் நொறுங்கிவிட வேண்டும்.

'நாம்' மட்டும் வெட்டவெளி எங்கெங்கும்
ஆதாமாய் ஏவளாய் பிரிந்து
பற்பலவாய் பெருகாமல் இரண்டாய் நின்றுவிட வேண்டும்
மூன்றென ஏதும் முளைக்காமல் முடங்கவிட வேண்டும்

எதேனுமொரு பரிமாணாத்தில்
'நீ' என ஒன்று உதிக்காமலிருக்குமானால்
'நான்' என வேறொன்றும் நிலைக்காமல் நசிந்துவிட வேண்டும்.

'நீ' மட்டுமே எங்கும் எதிலும் என்றென்றும்...
ஐம்புலன்களாக
மனமாக
ஆன்மாவாக
அதனினும் உயர்ந்த அறிவாக

'நீ' மட்டும் என்றென்றும் - என்
ஒட்டுமொத்த இருப்பாக
உணர்வாக உயிராக
காதலாக காமமாக
முதலாக
முடிவாக

5 comments:

  1. எல்லாமே நீ என நாம் சொன்னால், எல்லாமே நீ என அவனும் சொல்வான்.

    நீ யும் நான் உம் போராடும் தருணங்கள் அதிசயமானவை.

    அருமை ஷக்தி அவர்களே.

    ReplyDelete
  2. //வெ.இராதாகிருஷ்ணன் said...
    எல்லாமே நீ என நாம் சொன்னால், எல்லாமே நீ என அவனும் சொல்வான்.

    நீ யும் நான் உம் போராடும் தருணங்கள் அதிசயமானவை.
    //

    மிக்க நன்றி இராதாகிருஷ்ணன் :)
    இங்கு சொல்லப்படுவது பிரம்மம்-ஜீவன் சம்பந்தப்பட்ட காதல். அடடா! புரிகிறாற் போல் எழுதியிருந்தேன் என்பதே போதுமானது.

    நன்றி :)

    ReplyDelete
  3. //'நீ' மட்டும் என்றென்றும் - என்
    ஒட்டுமொத்த இருப்பாக
    உணர்வாக உயிராக
    காதலாக காமமாக
    முதலாக
    முடிவாக //

    இந்த வேகம் தான் என்னை அசத்தியது. மெதுவாக ஆரம்பித்த ஆரம்பிப்பு, தீர்மானமான இந்த முடிப்பில் இருந்தது தெரிந்துவிடுகிறது என்றாலும், 'வேறு எதுவும் வேண்டிடுவேனோ' என்று ஒருபுறம் கிளர்ந்த அச்சத்தை அவசர அவசரமாக மறுக்க வேண்டித்தான் இப்படி அதீத வேகமெடுத்தது போலும்.

    தலைப்பும் சரி, கையாண்ட 'நேக்'கும் சரி, அற்புதம். எழுதியதை எக்காலத்தும் புரட்டிப் பார்த்தால்
    ஆனந்தம் அளிக்கும்.

    ReplyDelete
  4. நல்லாயிருக்குங்க shakthi

    ’விடவேண்டும்’ பல இடங்கள்ல வருது அதை விடவேண்டும் :)

    ReplyDelete
  5. நன்றி அஷோக். இம்புட்டு நாள் கழிச்சு என் பதிவுகளை ஒருத்தர் படிச்சு பதில் எழுதுவதே பெரிய சந்தோஷத்தை தருது. மிக்க நன்றி.

    //’விடவேண்டும்’ பல இடங்கள்ல வருது அதை விடவேண்டும் //

    உண்மை தான்.... ஹ்ம்ம்.... I thought that would add to the intensity of the wants :? .... உங்கள் கருத்து யோசிக்க வைக்கிறது. இனி கவனம் வைக்கிறேன் :) நன்றி :)

    ReplyDelete