August 17, 2009

Pablo Neruda`s - Saddest poem - சோகத்தின் வரிகள் [மொழிபெயர்ப்புக் கவிதை]

Pablo Neruda-வின் இந்தக் கவிதை என் மனதை மிக அதிகமாய் பாதித்தது. பிசைந்து எடுத்த நெகிழ்வை, வலியை, வேதனையை தமிழில் மொழியாக்கும் சிறு பிரயத்தனத்தின் மூலம் சற்றே குறைத்துக் கொள்ள ஆசைப்பட்டேன். மறுபடி மறுபடி நினைத்ததாலோ என்னவோ மொழிபெயர்த்து முடித்த பிறகும், வலிமட்டும் எஞ்சியது. இல்லை, இல்லை இன்னும் அதிகமாய் மிஞ்சியது.


இனி என்னைப் பாதித்த அந்தக் கவிதை உங்களுடன்...



சோகத்தின் வரிகள்


சோகத்தில் தோய்ந்த கவிதையொன்று இன்றென்னால் எழுதமுடியும்.

இப்படிக் கூடத் துவங்கலாம்..

"வான்முழுதும் நட்சத்திரங்கள்
நீலமாய்,
தூரமாய்,
நடுங்கும் நட்சத்திரங்கள்"

காற்றின் ஓம்காரம் வானெங்கும் எதிரொலிக்கும் இரவு.
சோகத்தில் தோய்ந்த கவிதையொன்று இன்றென்னால் எழுதமுடியும்.

நான் அவளை நேசித்தேன்.
சில நேரங்களில் அவளும் கூட என்னை.

இது போன்ற இரவுகளில்,
எல்லையற்று விரியும்
வானக் குடையின் கீழ்
அவளை அணைத்து முத்தமிட்டிருக்கும்
எல்லையற்ற கணங்கள்..

அவள் என்னை நேசித்தாள்.
சில நேரங்களில் நானும் கூட அவளை.
ஜீவனற்று பெரிதாய் விரிந்திருக்கும் அந்தக் கண்களை
என்னால் எப்படி நேசிக்காமல் இருக்க முடியும்?



அவள் எனதில்லை என்ற எண்ணம்.
அவளைத் தொலைத்து விட்ட உணர்வு..
அதனால் தான்..
சோகத்தில் தோய்ந்த கவிதையொன்று இன்றென்னால் எழுதமுடியும்.

இரவுகளின் அடர்த்தி
அவளின் இல்லாமையால், இன்னும்கூட அடர்கிறது.
பனித்துளிகள் புல்லில் படர்வதைப் போல்..
கவித்துளிகள் இன்றென் நெஞ்செங்கும்.

இருத்திக்கொள்ள முடியாத காதலாய் இருந்தால் தான் என்ன?
தொலைந்த காதலின் ஊடே தொலையாத உணர்வுகள்...
நட்சத்திரங்களைத் தாலாட்டும் இவ்விரவின் மடியில்
தன்னந்தனியாய் நான் மட்டும்.

தூரத்தில் பாடலொன்று பட்டுத் தெறிக்கிறது.
தூரத்தில்..
ஆன்மாவை அவளிடமே விட்டுவிட்டு ஒற்றையாய் நான்.

கண்கள் அவள் அருகாமையை நாடத் துடிக்கிறது
நெஞ்சம் அவளைத் தேடிக் களைக்கிறது
இருப்பினும்..
அவள் என்னோடு இல்லை.

இதே இரவு..
இரவுப் பனியில் குளித்த இதே மரங்கள்...
நாங்கள் மட்டும் 'நாங்களை'த் தொலைத்து.

காதல் துறந்த பின்னும் கூட
காற்றில் கலக்காத காதல் உணர்வுகள்..
என் குரல்
காற்றின் தோளேறி அவள்
காதுகளைத் தேடியது.

அவள் வேறொருவனுடையவள்.
என் முத்தங்களில் தோய்ந்த அவள்..
அவள் மெல்லுடல்
அவள் குரல்
அவள் விரிந்த கண்கள்....

அவளுக்கான காதல் இறந்தேவிட்டிருப்பினும்..
அவளைக் காதலிக்கிறேன்.
காதலின் ஆயுள் சிறிது
அதன் மயக்கத்தின் நீளம் மட்டும் நீண்டுகொண்டே...

அவள் அருகாமையை உணர்ந்த இது போன்ற ஒரு இரவால்,
ஆன்மா தொலைக்கப்பட்டிருக்கிறது.

இது அவளால் எனக்குண்டாகும் கடைசி வலி என்றபோதும்...
இது அவளுக்கான என் கடைசிக் கவிதை என்றபோதும்...



மூலம்:

SADDEST POEM

Pablo Neruda.

I can write the saddest poem of all tonight.

Write, for instance: "The night is full of stars,
and the stars, blue, shiver in the distance."

The night wind whirls in the sky and sings.

I can write the saddest poem of all tonight.
I loved her, and sometimes she loved me too.

On nights like this, I held her in my arms.
I kissed her so many times under the infinite sky.

She loved me, sometimes I loved her.
How could I not have loved her large, still eyes?

I can write the saddest poem of all tonight.
To think I don't have her. To feel that I've lost her.

To hear the immense night, more immense without her.
And the poem falls to the soul as dew to grass.

What does it matter that my love couldn't keep her.
The night is full of stars and she is not with me.

That's all. Far away, someone sings. Far away.
My soul is lost without her.

As if to bring her near, my eyes search for her.
My heart searches for her and she is not with me.

The same night that whitens the same trees.
We, we who were, we are the same no longer.

I no longer love her, true, but how much I loved her.
My voice searched the wind to touch her ear.

Someone else's. She will be someone else's. As she once
belonged to my kisses.
Her voice, her light body. Her infinite eyes.

I no longer love her, true, but perhaps I love her.
Love is so short and oblivion so long.

Because on nights like this I held her in my arms,
my soul is lost without her.

Although this may be the last pain she causes me,
and this may be the last poem I write for her.

14 comments:

  1. வணக்கம்

    பாப்லோ நெருடாவின் கவிதையை மிக அழகாக மொழிபெயர்து இருக்கின்றீர்கள்.

    ம்ம்ம் சோகம் பரவிக்கிடக்கும் வரிகள்

    இராஜராஜன்

    ReplyDelete
  2. //என் மனதை மிக அதிகமாய் பாதித்தது. பிசைந்து எடுத்த நெகிழ்வை, வலியை, வேதனையை தமிழில் மொழியாக்கும்//

    யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்...ம்ம்ம்ம்... நல்லா இருக்குங்க இந்த போங்கு ஆட்டம்.... (ஹலோ...இது சொம்மா டமாசு...)

    //வலிமட்டும் எஞ்சியது. இல்லை, இல்லை இன்னும் அதிகமாய் மிஞ்சியது. //

    சரிதான்...ஓவர் சோகம்னா பின்ன இப்படி கூட இல்லேன்னா எப்படி?

    //நான் அவளை நேசித்தேன்.
    சில நேரங்களில் அவளும் கூட என்னை.//

    நல்லா இருக்கே....

    //வானக் குடையின் கீழ்
    அவளை அணைத்து முத்தமிட்டிருக்கும்
    எல்லையற்ற கணங்கள்..//

    ஜிலீர்........

    //ஜீவனற்று பெரிதாய் விரிந்திருக்கும் அந்தக் கண்களை
    என்னால் எப்படி நேசிக்காமல் இருக்க முடியும்?//

    சோகமா இருந்ததால ஜீவனற்று, ....அந்த கண்களை??

    //நட்சத்திரங்களைத் தாலாட்டும் இவ்விரவின் மடியில்
    தன்னந்தனியாய் நான் மட்டும்.//

    காதலி பிரிந்ததாலேயோ?

    //இது அவளால் எனக்குண்டாகும் கடைசி வலி என்றபோதும்...
    இது அவளுக்கான என் கடைசிக் கவிதை என்றபோதும்...//

    நெஞ்சை நெகிழ வைக்கும் அட்டகாசமான முடிவு...

    இந்த டிரான்ஸ்லேஷன் கூட நல்லா இருக்கு.... இவ்ளோ சோகம் பிடிக்குமா உங்களுக்கு?

    வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  3. வருகைக்கும் தருகைக்கும் நன்றி ராஜராஜன்.

    ReplyDelete
  4. // (ஹலோ...இது சொம்மா டமாசு...) //

    நான் கூட நிஜமோன்னு நினைச்சு பதறிப்போயிட்டேன் :O

    ////நான் அவளை நேசித்தேன்.
    சில நேரங்களில் அவளும் கூட என்னை.//

    நல்லா இருக்கே....//

    ஹிஹி எனக்கும் பிடித்த வரிகள். சில வரிகளுள் ஆழச்சென்று வாசம் செய்தாலே கற்பனைக்கேற்ப மேலும் ஆழ்ந்த பரிணாமங்கள் கிடைக்கலாம் :D

    //சோகமா இருந்ததால ஜீவனற்று, ....அந்த கண்களை??//

    பிரியத்தான் போகிறோம் என்றதால், உணர்ச்சியற்று ஜீவனற்று இருந்திருக்கலாம்.

    //இவ்ளோ சோகம் பிடிக்குமா உங்களுக்கு? //

    சோகம் மகிழ்ச்சி எல்லாமே அற்புதமான உணர்வுகள். ஒவ்வொன்று ஒவ்வொரு உணர்ச்சியை நம்முள் எழுப்புகிறதல்லவா? பிடிக்கும் பிடிக்காது என்பதில்லை. எதையும் ஆழ்ந்து படித்தால், பிடித்தால், ரசிப்பேன்.

    தொடர் வருகைக்கு நன்றி கோபி. விலாவரியாக நீங்கள் எழுதும் விமர்சனம் எனக்குப் பிடித்திருக்கிறது.

    ReplyDelete

  5. மிக சிறந்த மொழி மாற்றம். நிஜமாவே பேப்லோ வை படித்து போல இருந்தது.

    ReplyDelete
  6. //Someone else's. She will be someone else's//

    இதெல்லாம் வெகுவாகப் பழக்கப்பட்ட ஒரு நாட்டிலேயே, ஆழ்ந்த அன்பு இப்படிப்பட்ட ஒரு சோகத்தை உள்ளத்தின் ஆழத்தில் புதைக்கச் செய்யும் என்றால்..

    இதெல்லாம் அவ்வளவு பழக்கப்படாத நம் நாட்டில், ஒருவனுக்கு ஒருத்தியே என்றுத் தீர்மானமான நம் நாட்டில் எந்தளவுக்கு காதல் இழப்பில் சோகம் இருக்கும் என்று நினைத்தால்...

    இந்த அளவீட்டு அளவுகோலே தவறென்ற எண்ணமே மேலோங்கியது..

    காதல், வாழும் நாட்டின் சமூக அமைப்பை பொறுத்ததல்ல.. பழக்க வழக்கங்களையும் பொறுத்ததல்ல..

    அது, மனிதர்களைப் பொறுத்தது..
    நேசிப்பில் தோய்ந்து வெடித்துச் சிதறும் மனித மனங்களைப் பொறுத்தது...

    இந்தியாவோ, இங்கிலாந்தோ, அயர்லாந்தோ அல்லது வேறு எந்த தேசமோ...

    தேசம் எதுவாய்த்தான் இருந்தால் என்ன...








    வேறு வகைத்தான நெரூடாவின் கவிதைகளை வாசித்திருக்கிறேன்.
    இப்பொழுது தான் இந்தக் கவிதையைப் படிக்கிறேன்.

    ReplyDelete
  7. நெருடாவின் மொழிபெயர்பு அருமை. நீங்கள் தான் இதை மொழிபெயர்த்தது என்றால் hatsoff you.

    ReplyDelete
  8. ரொம்ப இயல்பான மொழி பெயர்ப்பு...மொழிபெயர்க்கும் கவிதைகளையும் பிற படைப்புகளையும் இங்கு பதியலாமே..

    http://ettuththikkum.blogspot.com

    ReplyDelete
  9. நல்ல தமிழாக்கம்,

    இரா வெங்கடாசலபதி மற்றும் கவிஞர் சுகுமாரன் அவர்கள் கூட நெரூதா கவிதைளை மொழிபெயர்த்து தொகுப்பாக வெளிவந்திருக்கிறது,

    \\இன்றிரவும் நான் எழுதக்கூடும் துயர்மிகு வரிகளை\\

    இந்த வரிகள் மட்டும் அப்படியே நினைவிலிருக்கிறது.

    ReplyDelete
  10. நல்லதொரு பதிவு.. சோகத்தில் சிறிதாய் நானும் சிக்கித்தான் போனேன்.ஆங்கில மூலம் படிக்கவில்லை.

    ReplyDelete
  11. மிக்க நன்றி indy, ஜீவி, D.r.ashok, தமிழ்ப் பறவை, யாத்ரா, ரௌத்ரன்

    அனைவருக்கும் நன்றி. :)


    //காதல், வாழும் நாட்டின் சமூக அமைப்பை பொறுத்ததல்ல.. பழக்க வழக்கங்களையும் பொறுத்ததல்ல..

    அது, மனிதர்களைப் பொறுத்தது..
    நேசிப்பில் தோய்ந்து வெடித்துச் சிதறும் மனித மனங்களைப் பொறுத்தது...//

    ஜீவி,

    மிகச் சரி !

    ReplyDelete
  12. ஆங்கிலம்+தமிழ் இரண்டிலும் தங்களுக்கு உள்ள நல்ல புலமையாலும், வாசித்தல், வாசித்ததை கிரஹித்தல், கிரஹித்ததை எழுத்தில் வடித்தல், வடித்ததை சிறப்பாக அந்த மொழிக்கேற்றவாறு சற்றே செதுக்குதல், செதுக்கியதை அழகாக உணர்வு பொங்கப் பரிமாறுதல் என அனைத்துத் திறமையும் ஒருங்கே பெற்றுள்ளீர்கள் என்பதை உணர்கிறேன். This is nothing but God's Special Gift to you, only! வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.


    எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:-

    //இருத்திக்கொள்ள முடியாத காதலாய் இருந்தால் தான் என்ன?
    தொலைந்த காதலின் ஊடே தொலையாத உணர்வுகள்...//

    ஆஹா, இந்த வரிகளிலேயே எல்லா உணர்வுகளும் அடங்கி விட்டதே!

    இதே உணர்வுகளை அனுபவித்து நான் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வாசித்துக் கருத்துக் கூறுங்கள்.

    “மறக்க மனம் கூடுதில்லையே” என்ற தலைப்பில் Just 4 சின்ன பகுதிகள் மட்டுமே. முதல் பகுதி மட்டும் சற்றே கொஞ்சம் போர் அடிக்கலாம்.

    இருப்பினும் அதிலிருந்தே படிக்க ஆரம்பிக்கவும். அப்போது தான் மற்ற பகுதிகளின் விறுவிறுப்பினை முற்றிலுமாக உணர முடியும்.

    http://gopu1949.blogspot.com/2011/06/1-of-4_19.html

    http://gopu1949.blogspot.com/2011/06/2-of-4_20.html

    http://gopu1949.blogspot.com/2011/06/3-of-4_22.html

    http://gopu1949.blogspot.com/2011/06/4-of-4_26.html

    அவசரமே இல்லை. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படித்துவிட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியே கருத்துக்கள் எழுதுங்கள். அது எனக்கு மிகப்பெரிய பரிசளித்தது போன்ற மகிழ்வினைத்தரும்.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  13. வருகைக்கு ரொம்ப நன்றி vgk sir. என்னோட ரொம்ப ஃபேவெரிட் இடுகை இது. I am not sure if I did justice ஆனா உருகி எழுதிய ஆக்கம்.

    பிடித்த வரிகள் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

    //Someone else's. She will be someone else's. As she once
    belonged to my kisses.
    Her voice, her light body. Her infinite eyes.

    Although this may be the last pain she causes me,
    and this may be the last poem I write for her.//


    although this may be the last pain and last poem ன்னு சொல்லும் போது நெஞ்சு கனப்பது தவிர்க்க முடியவில்லை.

    என்னுடைய பெயர்ப்பில் எனக்கு திருப்தி தந்தது...

    //காற்றின் ஓம்காரம் வானெங்கும் எதிரொலிக்கும் இரவு.


    நான் அவளை நேசித்தேன்.
    சில நேரங்களில் அவளும் கூட என்னை.

    அவள் என்னை நேசித்தாள்.
    சில நேரங்களில் நானும் கூட அவளை.

    இது போன்ற இரவுகளில்,
    எல்லையற்று விரியும்
    வானக் குடையின் கீழ்
    அவளை அணைத்து முத்தமிட்டிருக்கும்
    எல்லையற்ற கணங்கள்..


    நாங்கள் மட்டும் 'நாங்களை'த் தொலைத்து.

    இது அவளுக்கான என் கடைசிக் கவிதை என்றபோதும்...

    //

    :)

    மிக்க நன்றி.

    ReplyDelete
  14. மேற்கூறிய வரிகள் எனக்குப் பிடித்தவை.

    உங்கள் கதையை சிறிது நாட்களில் நிச்சயம் படிக்கிறேன். கருத்து கூறுகிறேன்.

    ReplyDelete