November 29, 2020

நாயன்மார்களும் பெரியபுராணமும். (நிறைவுப் பகுதி)



பிற மதநெறிகள் ஓங்கி, சைவம் தடுமாறும் போதெல்லாம் அவதார புருஷர்கள் சைவத்தை நிலை நாட்டி செல்வது பாரத மண்ணின் பெருமை. அவ்வாறு வந்தவர்கள் ஆதிசங்காராச்சாரியார் உட்பட பலர். அறுபத்தி மூன்று நாயன்மார்களில் சிலரும் சைவநெறி மேலோங்க பெரிதும் காரணமாயிருந்தனர்.
.
சைவ சமயத்தை முன்னிருத்தியவர்களுள் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் சைவ குரவர்கள் என்று போற்றபடுபடும் அப்பர், சுந்தரர், நாவுக்கரசர், மாணிக்க வாசகர் எனும் நால்வர்.
.
சுந்தரர் இயற்றிய் திருத்தொண்டர் தொகை
_________________________________________
.
சுந்தரர் வாழ்ந்த காலம் 8 ஆம் நூற்றாண்டு. மாணிக்க வாசகருக்கு முன் தோன்றியதால் அவரைப் பற்றிய குறிப்பு தமது திருத்தொண்டர் தொகையில் எழுதவில்லை. சுந்தரர் எழுதியதை பின்பற்றி பெரியபுராணம் எழுதப்பட்டதால் நால்வருள் மூவரே நாயன்மார்களாக பாடப் பெறுகிறார்கள்.
.
சுந்தரர் திருத்தொண்டர் தொகை பாடுதற்கு, விறண்மிண்ட நாயன்மார் காரணமானார். அடியவர்களுக்கெல்லாம் அடியேன் என்று தமை தாழ்த்தி, அடியவரை வாழ்த்திப் பாடினார். சுந்தரர் அறுபது நாயன்மார்களை தொண்டர்த் தொகையில் குறிப்பிடுகிறார். அவரது திருத்தொண்டர் தொகையை மூல நூலாகக் கொண்டு சற்றே விரிவு படுத்தியவர், நம்பியாண்டார் நம்பி என்பவர்.
.
நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி
_________________________________________________
நம்பியாண்டார் நம்பி திருநாரையூரில் பத்தாம் நூற்றாண்டு அவதரித்தவர். நம்பிகளின் தந்தை வெளியூர் செல்ல நேரிட்ட போது, நம்பிகள் பிள்ளையாருக்கு தானே நிவேதனம் செய்தார். ஆலயத்துள் எழிற்கோலம் கொண்ட பிள்ளையார் பல முறை அழைத்தும், நிவேதனத்தை ஏற்கவில்லை என வருந்தி, தன் பூஜையில் தவறு நேர்ந்ததோ என பதறி சுவற்றில் தலையை மோதி தமை வருத்திக்கொண்டார். தடுத்தாட்கொண்ட பிள்ளையார், நிவேதனைத்தை ஏற்று அருளினார்.
.
இவ்வளவு பெருமைக்குறிய நமது நம்பி, திருவந்தாதி அமைத்த நிகழ்வை சிந்திப்போம். இவரது பெருமை அறியப் பெற்ற அபயகுலசேகரன் என்ற சோழ மன்னன், தமிழும் சைவமும் விளங்க, மூவர் அருளிய தேவாரம், திருமுறைகள், தொண்டர்கள் வரலாறுகளை, தமிழ்கூறும் நல்லுலகமெங்கும் சென்றடைய வேண்டும் என்று\ ஆவல் கொண்டு பிள்ளையாரின் அருள் வேண்டி நம்பியிடம் தமது கோரிக்கையை வைத்தார்.
.
பிள்ளையாரும், தில்லையில் தேவாரத் திருமுறைகள் வைக்கப்பட்டுள்ளதென அருளி திருத்தொண்டர் வரலாறை தாமே நம்பிக்கு உணர்த்தியதாக நிகழ்வு.
.
தில்லையை அடைந்த மன்னரும், நம்பிகளும், தேவாரம் திருமுறைகள் அடங்கிய பூட்டப்பட்டுள்ளா அறையின் கதவை திறக்க வேண்டினர். அந்தணர்களோ மூவர் வந்தாலன்றி அக்கதவு திறப்பது இயலாதென்று உரைத்தனர். மன்னர் மூவரின் திருவுருவங்களை பூஜித்து முறைப்படி கதவின் எதிரே நிறுத்தி, கதவு திறக்கப் பெற்றார்.
.
சமய நூலகள் கறையான் அரித்து புற்று மூடி வீணாகியிருந்ததால் அனைவரும் துக்கித்தனர்.
அப்போது, 'இக்காலத்திற்கு ஏற்ற ஏடுகளை மட்டும் விட்டு வைத்திருக்கிறொம் அஞ்ச வேண்டாம்' என்று இறைவன் அசரீரியாக அருளினார்.
.
அவற்றை எடுத்து நம்பிகள் பதினொன்று திருமுறைகளாக வகுத்து உணர்த்தினார். சுந்தரரின் திருத்தோண்டர் தொகையை, பிள்ளையார் உணர்த்தியதற்கேற்ப நாயன்மார்களின் வரலாற்று செய்திகளையும் சேர்த்து குறிப்பிட்டு, 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்று இயற்றி அருளினார். நம்பிகள் எழுதிய நூல்களும் பதினொன்றாம் திருமுறையில் அடங்கும்.
.
சேக்கிழாரும் இயற்றிய பெரியபுராணம்
_______________________________________
நம்பிகளுக்கு பின் தோன்றி 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சேக்கிழார். சேக்கிழார் அறுபத்தி மூவரைப் பற்றி எவ்வாறு எழுதினார் என்பதும் சுவாரஸ்ய நிகழ்வு. சமண மதத்தின்
கோட்பாடுகளிலும், கேளிக்கை விளையாட்டிலும் தம் மனதை செலுத்திய மன்னரை சைவத்தின் பெருமையை எடுத்துரைக்க ஆசை கொண்டார் சேக்கிழார்.
.
சேக்கிழார், இளமைப் பருவத்தில் இருந்த போது, அநபாய சோழனின் பெருஞ்சந்தேகங்களைத் தீர்த்து, அமைச்சர் பதவியை பெற்ற பெருமை கொண்டவர். இம்மைக்கு மட்டுமின்றி மறுமைக்கும் வழிதேட வேண்டுமென மன்னனுக்கு வலியுறுத்தி,
தொண்டர்கள் பெருமையை விளக்க முற்பட்டார். தில்லை நடராஜர் முன் வணங்கி நின்றார். இறைவனே சேக்கிழாருக்கு "உலகெலாம்" என்று அடியெடுத்துக் கொடுத்து அருளியதாக நிகழ்வு. சித்திரை திருவாதிரையில் இயற்றத் துவங்கி, சரியாக ஒருவருட காலம் எடுத்து அடுத்த வருடம் அதே சித்திரை திருவாதிரையில் பெரியபுராணம் இயற்றி நிறைவு செய்தார். சுந்தரர் நாயன்மார்களை பாடிய வரிசையே பெரியபுராணத்திலும் அமைத்து பாடினார்.
.
சுந்தரர் குறிப்பிட்ட நாயன்மார்கள் அறுபது. சேக்கிழார் பெரியபுராணத்தில், சுந்தரரையும், சுந்தரரின் பெற்றோர் சடையனார், இசைஞானியாரையும் சேர்த்து அறுபத்து மூவர்களாக்கி நமக்கு சமர்பித்தார்.
.
முதல் நூலாக சுந்தரரின் திருத்தொண்டர்த் தொகையைக் கொண்டவர், நம்பிகளின் திருவந்தாதியிலிருந்து குறிப்பெடுத்தார். ஊர் ஊராகச் சென்று கல்வெட்டுகள், செவிவழி செய்திகள், நாட்டுப்புற பாடல்கள், என்று பலவகையில் செய்திகள் திரட்டினார். அச்செய்திகளை எல்லாம் திரட்டி, பெரிய புராணமாக்கி இன்றும் நம் போன்றோர் சிவ சிந்தனையில் க்ஷண நேரமேனும் இருத்தற் பொருட்டு அருளிச் சென்றார்.
.
ஈசனும் நாமும்
_______________
உமையொரு பாகனை வில்வம் கொண்டும், மலர்கள் கொண்டும் அர்ச்சிக்கலாம். வாசனை திரவியங்கள் , குங்கிலியம் போன்றவை சமர்பித்து நம் அன்பை செலுத்தலாம். 'ஆனாய நாயனாரை'ப் போல், இசையால், சிவனையன்றி வேறொன்றை சிந்திக்காது துதிக்கலாம். 'பூசலாரை'ப் போல் 'வாயிலாரை'ப் போல் மனதில் பெரும் சாம்ராஜ்ஜியம் கட்டி, அதில் கொலுவைத்து நம் தந்தையென போற்றி பூஜிக்கலாம்.
.
நால்வரைப் போல், இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதவன் என்றும் உணரலாம். பித்தனே என்றும் அன்பாக அதட்டி உருகலாம்.
.
காயத்தினால் மட்டுமன்றி வாக்காலும் மனதாலும் பேரறிவாலும் சிவனை சிந்தித்து , அவர் அருளால், குருவருளால், பிறவி பெருங்கடல் நீந்தி, அரிதிலும் அரிதான மானுடப் பிறப்பின் பெரும்பயன் உணர்ந்து முழுமை பெறுவோம்.
.
ஓம் நமச்சிவாய.
(நிறைவுற்றது)



விறன்மிண்ட நாயனார்



செங்குன்றூரில் தோன்றிய விறன்மிண்டார் சிவனாரை சிந்தையில் நிறுத்தி , புறப்பற்றுகள் அறுத்து, சிவ பற்றைத் தவிர பிறிதொன்றை எண்ணாதிருந்தவர். சென்ற இடமெங்கும் அடியார்களை பணியும் இயல்புடையவராக இருந்தார். அடியார்களை வணங்கும் பண்புடையவர் என்பதால் ஆலயம் உள் நுழையும் முன்னர், அங்கு திரண்டிருக்கும் பக்தர்கள் கூட்டத்தை வணங்கிவிட்டு பின்னரே ஆலயம் செல்லும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். 
.
நாயன்மார் அவதரித்த செங்குன்றூர் சேரநாட்டில் இருக்கும் திருத்தலம். ஈசனை திருத்தலங்கள் பல சென்று வழிபடும் பேராவல் கொண்டதால் சேரநாட்டு ஆலயங்கள் தரிசித்து முடித்த பின்னர், சோழமண்ணில் துலங்கியுள்ள ஆலயங்களை வழிபடும் ஆவலால் சோழ நாடெங்கும் பயணம் மேற்கொண்டார். 
.
அவ்வாறு பயணிக்கும் காலத்தில், திருவாரூரை வந்தடைந்தார். அப்பொழுது சுந்தரர் அங்கு இறைவனை தரிசிக்க வந்திருந்தார். ஆலய கூட்டத்தை கண்டு சற்று ஒதுங்கியவாறு சென்றவரை சுந்தரரைக் கண்டவர், 'திருக்கூட்டத்தை வணங்காது சென்ற இவனும் புறகு, இவனை ஆளும் சிவனும் புறகு' என்று உரைத்தார். (புறகு என்றால் புறம்பானவன் என்று பொருள்)
.
விறன்மிண்டரின் பெருமை அறியக் கேட்டார் சுந்தரர். ஆலயத்துள் எம்பெருமானை வணங்கி, "இவ்வடியவர்களுக்கெல்லாம் யான் அடியேன் ஆகும் நாளும் என்றோ என்று உருகினார். 'அடியாரைப் பாடு' என்று கருணை கொண்டு எம்பெருமானாரே, "தில்லை வாழ் அந்தணர்" என்று அடியெடுத்துக் கொடுத்தார். அடியார்களைப் போற்றும் திருத்தொண்டர்த்தொகையை "தில்லை வாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று முதலடி அமைத்து மெய்யுருகப் பாடி நின்றார் சுந்தரர்.  திருத்தொண்டத்தொகை அமையக் காரணமானவர் விரன்மிண்ட நாயனார். அடியாரை பாடும் சுந்தரரைக் கண்டு மகிழ்ந்தார் விறன்மீண்டார். 

சிறப்புற வாழ்ந்து சிவ நெறி போற்றி இறுதியில், எம்பெருமான் திருவடி நிழலடைந்து கணங்களுக்கு தலைவரானார்.
.
ஓம் நமச்சிவாய

November 28, 2020

வாயிலார் நாயனார்



அறுபத்து மூவருள் ஒருவராக போற்றபடும் வாயிலார், சென்னையில் மயிலாப்பூரில் அவதரித்தவர். இவர் வாழ்ந்த காலகட்டத்தை சரிவர அறிய இயலவில்லை, பெரியபுராணத்தின் வாயிலாகவும், திருத்தொண்டர் தொகையிலும் இவர் பேசப்படுவதால் இவர் சுந்தரர் வாழ்ந்த எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னமே வாழ்ந்ததாக தோராயமாகக் கொள்ளலாம்.
.
வெளாளர் குடியில் பிறந்ததாக பெரிய புராணம் குறிப்பிடுகிறது.
.
வாழும் காலம் தோறும் மௌனமாக இருந்ததால் வாயிலார். மௌனமாக இருந்ததால் வரலாறும் மிக சுருக்கமானது. சிவன் ஒருவனைத் தவிர சிந்தையில் ஏதுமில்லை. வாயினின்று சொல் ஏதும் தேவையில்லை என சிவ நாமத்தை சிந்தையுள் ஜபித்தே, அகந்தை என்பது மருந்துக்கும் இல்லாதவராக, நான் அகன்ற நிலையில் மெய்ப்பொருளுடன் ஒன்றி வாழ்ந்தார்.
.
இத்தகைய தவ வாழ்வு வாழ்ந்தவர், நெடுங்காலம் சிவனை சிந்தையிலேயே நிறுத்தி தவமியற்றியதற்கு அம்மையும்
அப்பனுமான ஈஸ்வரனும் உமையளவளும் தம் அருகில் சிவபதம் அருளி இணைத்துக் கொண்டனர் என்பது சொல்லினால் அல்லது எழுத்தினால் கூறவும் வேண்டுமோ!
.
சென்னையிலுள்ள திருமயிலை கபாலிஸ்வரர் கொவிலில் தனி சன்னதி அமைக்கப் பெற்று வாயிலார் நாயனார் வணங்கப்பட்டு வருகிறார்.
.
ஓம் நமச்சிவாய

மெய்ப்பொருள் நாயனார்





திருக்கோவலூர் என்னும் ஊரை ஆண்ட குறுநிலமன்னராக இருந்தவர் மெய்ப்பொருள் நாயனார். ஈசன் அடி போற்றுவதும், அவன் பணி செய்து கிடப்பதும், சிவ மந்திரம் ஓதுவதுமே நற்கதிக்கு வழி என்பதை உணர்ந்தவராக இருந்தார். சிறப்புற அரசாண்டு, பகைவர்களால் இன்னல் நேராமல் திருநாட்டை காத்தார். நாடெங்கிலும் சிவ வழிபாடுகளும் பூஜைகளும் ஆகம முறைப்படி நடப்பதற்கு வழி செய்தார். அடியார்களிடத்தே அபரிமிதமான அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார் என்பது இவரது சரித்திரத்தின் மூலம் விளங்குகிறது.
.
தனது நாட்டை கண்ணெனக் காத்தவர், பகைவர் முற்றுகையிட்டால் அவர்களை வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்டுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். பல முறை மெய்ப்பொருளாரிடம் தோற்ற முத்தநாதன் என்ற மன்னன், நாயன்மாரிடம் மிகுந்த பகையுணர்வும் வெறுப்பும் கொண்டிந்தான் . வல்லமையினால் அவரை வீழ்த்த பலமுறை முயன்று தோல்விகண்டவன், வஞ்சத்தால் பழி தீர்க்க எண்ணினான்.
.
சிவனடியார்களை தொழுது நிற்பவரை, அடியார் வேடத்தில் அணுகினான். நீறணிந்த நெற்றியுடன், மேனியெங்கும் நீறு பூசி, சடாமுடி தரித்து, ஆயுதத்தை புத்தக முடிப்பு ஒன்றில் மறைத்து எடுத்துச் சென்றிருந்தான். அரண்மணை அடைந்தவனை சிவனடியார் என்று நினைத்து வாயில் காவலர்கள் அனுமதித்தனர். அரசர் பள்ளியறை வாயிலை அடைந்தவனை தத்தன் என்ற காவலர் தடுத்தும், தாம் மன்னனை காண்பது அவசியம் என்று வலியுறுத்தினான். சிவனடியவரான தம்மிடம் ஆகமம் ஒன்று இருக்கிறது அதனை உரைப்பதற்கே வந்திருப்பதாக கூறினான்.
.
துயில் கொண்டிருந்த அரசரை அரசி எழுப்பினார். எவரும் அறியாத அரிய தகவல் கொண்ட சிவ ஆகமம் கொண்டர்ந்திருப்பதாக உரைத்தான். அவரிடம் அதுபற்றி தனியே பேச வெண்டும் எனக்கூற அரசியாரை அப்புறம் செல்லுமாறு பணித்து, அடியவர் எனக் கருதி மிக மகிழ்வுடன் வரவேற்று மகிழ்ந்தார் நாயன்மார். ஆசனமளித்து அமரச் செய்து தாம் தரையமர்ந்து ஆகமம் கேட்கலானார்.
.
வலிமையில் குறைந்த கொடிய அம்மன்னன் புத்தக முடிப்பில் மறைந்திருந்த உடைவாளை உருவி நாயன்மாரை வீழ்த்தினான். இதை சற்றும் எதிர்பாராதவராக இருந்தவர், குத்துண்டு விழுந்த நிலையில்கும் சிவ வேடத்தினைக் கண்டு மெய்ப்பொருள எனத் தொழுதார்.
.
விழிப்புடன் இருந்த தத்தன், உடனே பாய்ந்து அக்கொடிய மன்னனை வாளால் வீழ்த்த முனைந்த போதும் நாயன்மார் "தத்தா நமரே காண்" என்று தடுத்து முத்தநாதனை பத்திரமாக எல்லை தாண்டி விட்டுவரப் பணித்தார். வழியெங்கும் கொதித்து போயிருந்த மக்களை சமாதானப்படுத்தி அரசரின் ஆணை எடுத்துக்கூறி எல்லை வரை பாதுகாப்பாக விட்டு வந்தான் தத்தன்.
.
அரண்மணை வந்தவன் நாயன்மாரிடம் தம் பணி நிறைவேறியதைக் கூற, மெய்ப்பொருள் நாய்னார், "நீ இப்பொழுது செய்ததை எனக்கு யார் செய்ய வல்லவர்கள் " என்று அன்புடன் உரைத்து நன்றி கூறினார். அரசுரிமையை வாரிசுக்கு வழங்கு, நீறு நெறி போற்றி அரசாளப் பணித்து, ஈசனை நினைந்தார்.
.
இறைவன் அம்மையப்பராக நாயனாருக்கு காட்சிதந்து அருள் செய்து தம் திருவடியில் இடையறாது தொழுதிருக்க இணைத்துக் கோண்டார்.
.
ஓம் நமச்சிவாய

November 20, 2020

மூர்த்தி நாயனார்





மதுரையம்ப்தியில் பிறந்தவர் மூர்த்தி நாயனார். சிவப்ரீதியுடையவராக ஈசன் திருவடி பற்றியிருந்தார். குற்றமற்ற பக்தியின் திருவுருவமாக திகழ்ந்தார். சோமசுந்தரருக்கு அன்றாடம் சந்தனக்காப்பு கொடுக்கும் திருப்பணி செய்துவந்தார்.
.
விதி வசத்தால் பாண்டிய நாட்டை கர்னாடக தேசத்து அரசன் முற்றுகையிட்டு வெற்றி கண்டான். பாண்டிய மன்னனை வென்று நாட்டை கைப்பற்றினான். சமண மதம் தழுவியிருந்த அவ்வரசன், சிவனடியர்களுக்கு துன்பம் கொடுத்துவந்தான். பலரும் வேறு வழியின்றி சமண மதத்தை தழுவும் நிலையை உருவாக்கினான்.
.
அவ்வாரே நாய்ன்மாருக்கும் தொல்லைகள் பெருக்கினான். இடர் பெருகி வரினும் தமது நிலையிலிருந்து வழுவாது பணியைத் தொடர்ந்தவண்ணமிருந்தார் மூர்த்தி நாயனார். சந்தனகாப்பு கொடுக்க சந்தனக் கட்டைகள் கிடைகாதவாறு செய்தான். பல இடங்களிலும் தேடி அலைந்து கிடைக்கப்பெறாமல் மிக துக்கம் கொண்டவராக, இவ்வரசன் மரித்து, சைவம் தழைக்கும் நாளும் எந்நாளோ என சிந்தை வருந்தி, தமது முழங்கை முட்டியை கட்டையில் தேய்க்கலானார். எலும்பும் நரம்பும் தோலும் பிறழ்ன்று வருத்தும் அளவு தேய்தார்.
.
இறைவன் அசரீரியாக கருணை பொழிந்தார். அன்பின் மிகுதியால் இவ்வாறு தேய்த்தலை விட , நீயே இந்நாட்டை கைபற்றி கொடுமை நீங்கச் செய்து நாடெங்கும் சிவபரிபாலனம் செய்வாய் என்று பணித்தார். மூர்த்தியார் அதைக் கேட்டு தேய்த்தலை நிறுத்தினார். அவர் மேனி குற்றமற்று முன்போல் ஒளிர்ந்தது.
.
அன்று இரவு அரசன் உயிர் துறந்து சிவபாதகம் செய்தமையால் நரகில் விழுந்தான். மந்திரிகள் கூடி அரசர்க்கு வாரிசு இல்லாமையால், யானையால் தேர்ந்தெடுக்கப்பட்டு அது ஏந்திவரும் பெருமகனை அரசர் என கொள்ள முடிவு செய்தனர். யானையானது மதுரையம்பதி வீதியெங்கும் திரிந்து இறைவனை அன்புப் பெருக்கினால் வணங்கி கோவில் முன் நின்ற நாய்ன்மாரை தேர்ந்தெடுத்தது. இதுவே கடவுள் சித்தமெனில் நான் சிறப்புற நாட்டை ஆள்வேன் என்று உறுதி பூண்டார் மூர்த்தி நாயனார்.
.
மறை முழக்கம் ஒலிக்க திருநீற்றை அபிஷேகத் தீர்த்தமாக்கி, ருத்ராக்ஷத்தை ஆபரணமாக்கி, சடாமுடியே முடியென சூடிக்கொண்டார். மதுரையிலும் பாண்டி நாடெங்கிலும் முன்போல் சிவ நாமம் ஒலிக்கத் துவங்கியது.
.
பெண்ணாசை பொன்னாசை வெல்லப்பெற்றவராக, துறவொழுக்கத்துடன் புலன்களை வேற்றி கண்ட அரசர், பலகாலம் சிறப்புற நாடு காத்து தொண்டுகள் புரிந்து உய்ந்தார். ஆயுட்காலம் முடிந்ததும் உடல் உகுத்து இறைவன் திருவடியில் நீங்கா இடம் பெற்றார்.
.
ஓம் நமச்சிவாய

November 12, 2020

மூர்க்க நாயனார்




திருவேற்காடு எனும் தொண்டை நாட்டிலுள திருத்தலத்தில் வாழ்ந்து வந்த நாயன்மார் இருந்தார். வேளாண் குடியில் பிறந்தவர். தமது பொருளையெல்லாம் கொண்டு சிவனைத் தொழுதிருத்தலும், அடியவர்களுக்கு விருந்தளிப்பதும் முக்கியமான நோக்கமென கொண்டு வாழ்ந்தார். திருநீற்றின் மகிமை கொண்டாடி சிவ பூஜை செய்து வந்தார்.
.
பெரும் விருந்தளித்து அடியாரை பேணும் இவர் பெருமைக்கு நாளும் பலப் பல அடியவர்கள் பெருகிக் கூடினர். தம் செல்வத்தை எல்லாம் செலவழித்தார். மேலும் வறுமை வந்த பின்பு, தமது பொருளத்தைனையும் விற்று அச்செல்வம் கொண்டு விருந்தளித்தார். பொருளீட்டுவதற்கு ஏது வழி என சிந்தித்து, தனக்கு பெரிதும் உதவும் சூது விளையாடி பொருளீட்டினார். சூது விளையாட்டில் மிக வல்லவராக திகழ்ந்தவராகையால், பெருவெற்றி ஈட்டி, அதனால் பொருள் திரட்டிவிடுவார். திரட்டிய பொருளையெல்லாம சிவ பூஜையிலும் அடியவர்களுக்கு வேண்டியவற்றை அன்புடன் வழங்குவதிலும் செலவிடுவார். அடியவர் உண்ட பின்பே தாம் உண்ணும் வழக்கம் தவறாது கடைபிடித்தார்.
.
முதல் சூதில் தோற்றும் பின்னர் அடுத்தடுத்த ஆட்டங்களில் வெற்றி பெற்றும் சூதில் பொருளீட்டினார். தான் ஆடும் சூதில் அதற்குறிய ஒழுக்கம் கடைபிடித்தார். கள்ளாட்டம் ஆடக் கூடாதென்ற நியமம் கொண்டிருந்தார். தோல்வி உறுதி எனத் தெரிந்ததால் அவருடன் சூதாட பலரும் தயங்கினர். மேலும், எவரேனும் பொய்யாட்டம் ஆடினால் அவர்களை உடைவாள் கொண்டு குத்திவிடுவதால், மூர்க்க நாயனார் என்று வழங்கப்பட்டார்.
.
இவ்வாறு பல காலம் சிவபூஜை செய்து அடியவரை வணங்கப்பெற்றதால் இடரும் குற்றமும் களையப் பெற்று சிவபதம் எய்தினார்.
.
ஓம் நமச்சிவாய

முனையாடுவார் நாயனார்



.
சோழநாட்டிலுள்ள திருநீடூரில் அவதரித்து, வேளாளர் முனையாடுவார் நாயனார் அவ்வூருக்கு பெருமை சேர்த்தார். 
.
முக்கண்ணனாம் எம்பெருமானிடம் மாறாத பற்றுடன் அவர் திருத்தொண்டில் அதிகம் ஈடுபாடு கொண்டு, பெருநிதி திரட்டி அவற்றையெல்லாம் அடியார்களை பேணுதற்கே செலவிட்டார். 
.
பகைவரை போரில் வென்று அதனால் ஈட்டிய பொருளைக் கொண்டு இறைவனின் அடியவர்களுக்கு ருசிமிக்க உணவை அன்புடன் அளிக்கும் நெறியை போற்றி வந்தார். பகைவரிடம் தோற்றவர்கள் செல்வம் தந்து, இவரது துணை வேண்டி நிற்பாரெனில், நடுநிலை மாறாது பாரபக்ஷமின்றி பகைக்குரிய காரணம் அறிந்து, அவருக்காக போர் முயற்சியில் ஈடுபடுவார். அதனால் பெற்ற கூலியை பெருஞ்செல்வமாகினும் அதனை அடியவர்களுக்கே கொடுத்து மகிழ்ந்தார்.
.
திறனுடன் போர் புரிந்து வெற்றி வாகை சூடியதால் முனையாடுவார் என்று திருப்பெயரின் சிறப்புக்கு உரியவர் ஆனார்.
.
பல காலம் திருத்தொண்டு புரிந்து, ஈசன் திருநீலகண்டனின் அருளுக்கு பாத்திரமான நாயன்மார், சிவ லோகம் சென்றமர்ந்து அங்கு மீளாத இன்பம் அமையப்பெற்றார். 
.
ஓம் நமச்சிவாய

முருக நாயனார்



.
திருப்புகலூரில் பிறந்த அந்தணர் குலத்தவர். அறுபத்து மூவருள் ஒருவர் முருக நாயனார்.
.
சிவனாரிடம் கொண்ட பேரன்பினால் நீராடி அன்றாடம் நந்தவனத்தில் நறுமலர்கள் கொய்வார். பல்வகைப் பூக்களை செகரித்து கூடைகளில் கொணர்ந்து, தனித்தனியே வகை வகையாக வண்ணவண்ண மாலைகள் தொடுப்பார். வர்த்தமானீச்சரம் எனும் ஆலயத்தில் இருக்கும் ஈசனுக்கு மாலைகள் சூட்டி அழகு பார்ப்பார். நறுமணம் கமழும் எழில் வண்ண மலர்களால் அர்ச்சனை செய்வார். பஞ்சாட்சர மந்திரம் ஜபித்து ஈசனுடன் இடையறாது இணைந்திருந்தார்.
.
பூக்களில் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ நிலப்பூ என நால்வகைகள் உண்டென குறிப்பு. நீர்ப்பூ நீரில் முகிழ்ப்பன. நிலப்பூவும் கொடிப்பூவும் முறையே நிலத்திலும் (செடிகளில்), கொடியிலும் பூக்கும் வகைக்கள். கோட்டுப்பூ என்பன மரக்கொம்புகளில் பூக்கும் பூக்கள்.
.
திருஞானசம்பந்தர் வருகையில் அவருடன் அன்பு பூண்டு கொண்டாடினார். சம்பந்தருடன் வர்த்தமானீஸ்வர ஈஸ்வரனை வழிபடும் பேறு பெற்றார். நாவுக்கரசரை சந்திக்கும் பாக்கியம் பெற்றார். நாவுக்கரசரும், சம்பந்தரும் சில காலம் முருகனாருடன் தங்கியிருக்குங்கால், நீலநக்கர் மற்றும் சிறுத்தொண்டர் நாயன்மார்களும் அங்கு வந்தமையால் அனைவருடனும் அளவளாவி இறைபக்தியில் ஈடுபட்டு இன்பத்தில் திளைத்திருந்தார்.
.
தாம் செய்த பூஜாபலனால், சம்பந்தருக்கு இனிய நண்பராகும் பெருமை பெற்ற முருக நாயனார், அவர்தம் திருநல்லூர் பெருமணத்தில் கலந்துகொண்டு, ஜோதியில் இணைந்து இறைவனடியில் மீளா இன்பம் அடைந்தார்.
.
ஓம் நமச்சிவாய

மானக்கஞ்சாற நாயனார்


சிவபக்தியில் சிறந்து விளங்கிய மானக்கஞ்சாற நாயனார் கஞ்சாறு எனும் ஊரில் வேளாளர் குடியில் பிறந்தார். மானக்காந்தன் என்பது இயற்ப்பெயர், இவருக்கு கல்யாண சுந்தரி என்ற மனைவி இருந்தாள். சிவன் தாள் பணிதலும், அவன் புகழ் நினைந்தலும், அடியார் தொண்டில் ஈடுபடுவதும், வீடுபேற்றை அருளும் என்ற பேருண்மை உணர்ந்தவராக இருதார். அரசர்க்கு சேனாபதியாகப் பணியாற்றும் குலத்தினர். ஆகையால் மன்னர்க்கு பணி செய்திருந்தார். வேளாண்மை தந்த செல்வத்தால், செல்வம்  வளம் உடையவராக பெருவாழ்வு வாழ்ந்திருந்தார். அடியார்கள் குறிப்பறிந்து சேவை செய்தார்.
.
பேறுகள் பல பெற்றிருந்தும், நெடுநாள் பிள்ளை வரம் இல்லாது வாடிய இத்தம்பதியினர், அரிய பல உபாசனைகளும் பூஜைகளும் உகந்தளித்து சிவனாரை திருப்தி செய்தபின்னர், அவர் அருளால் அழகிய பெண் குழந்தை அருளப் பெற்றனர். அப்பெண் குறைவற்ற செல்வத்துடன் சிறப்பற வளர்க்கப்பட்டாள். சிவ நேறிகளை போதித்து, அறிவுடன் வளர்தனர். எழிலுருவானவள் மணப்பருவம் எய்தினாள்.
.
சிறந்த சிவபக்தரான ஏயர்கோன் கலிக்காம நாயனார் பெண்ணின் அறிவு அழகை கேள்வியுற்று, மானக்கஞ்சாற நாயனாரின் பெருமை உணர்ந்தவர், முதியோர் சிலரை அனுப்பி அப்பெண்ணை தனக்கு மணமுடிக்க விண்ணப்பம் செய்ய, அவருக்கே மணம் பேசி நற்திங்களில் முகூர்த்த நாள் குறித்தனர். சுற்றம் சூழ ஏயர்கோன் கலிக்காம நாயனார் சுபதினத்தில் கஞ்சாறுக்கு புறப்பட்டார்.
.
அவ்வாறு திருமணம் நாள் நெருங்கும் நேரத்தில், உலகுக்கு மானக்கஞ்சாற நாயனாரின் பெருமையை உணர்த்த திருவுள்ளம் கொண்டான் இறைவன். ஈசன் மாவிரதி கோலம் கொண்டு மானக்கஞ்சாற நாயனார் வீட்டை அடைந்தார். மாவிரதி என்பவர்கள் சிவனாரின் அடியவர்கள். ஆண்டிக்கோலம் பூண்டவர்கள். மாவிரதி அங்கு நடைபெறும் திருவிழாக் கோலத்தை கண்ணுற்று அங்கு என்ன விழாவிற்கான ஆயுத்தம் என்று வினவ, தமது மகளுக்கு திருமணம் என்று பணிவுடன் எடுத்துரைத்தார் மானக்கஞ்சாறர். அனைவரையும் ஆசீர்வதித்த மாவிரதி முன், தமது மகளை கொணர்ந்து நிறுத்தி அவரை பணியும் படி செய்தார் நாயனார். வணங்கி எழுந்த பெண்ணின் நீள் கருங்கூந்தலை கண்டு ஆண்டியார், "இப்பெண்ணின் நீள் முடி எமது பஞ்சவடிக்கு ஆகும்" என்று மொழிந்தார். பஞ்சவடி என்பது முடியினால் பட்டையாக செய்யப்பட்டு மார்பில் பூணூலைப்போல் தரிக்கப்படுவது.
.
மகிழ்ந்த நாயனார், உடன் வாளை உருவி, அலங்கரிக்கப்பட்ட அவள் நீள்முடியை வெட்டி "என்ன புண்ணியம் செய்தோமோ" என்று பூரித்து ஈசனிடம் சமர்பிக்க, இறைவன் ரிஷப வாகனனாகத் உமாதேவியான கௌரியுடன் தோன்றி அனைவருக்கும் அருள்பாலித்து "உம் புகழ் விளங்கச் செய்தோம்" என்றருளினார். நெடிது வணங்கி எழுந்த நாயனார் பரவசமிகுதியில் கட்டுண்டிருந்தார். இறைக்காட்சி மறைந்த சில கணங்களில் ஏயர்க்கோன் கலிக்காமர் திருமணம் கோலத்தில் வந்து சேர்ந்தார்.
.
அங்கு நடந்த நிகழ்வை கேட்டறிந்து மகிழ்ந்து ஆனந்தித்தார். துக்கித்தார். இறைவனின் கோலத்தை நான் காணாது போனேனே என வருந்தினார். அசரீரியாக இறைவன் அருளி நல்வார்த்தைகள் மொழிந்த பின் துக்கம் நீங்கப்பெற்றார். மணப்பெண்ணும் மீண்டும் நீள்முடி வளரப்பெற்றவளாகி எழில்ரூபம் கொண்டவள் இனிதே திருமணம் நிகழப்பெற்று சிறப்புற வாழ்ந்தாள்.
ஓம் நமச்சிவாய

November 09, 2020

மங்கையர்கரசியார் நாயனார்



.
சோழ இளவரசியாக பிறப்பெடுத்த மங்கையர்கரசி, பாண்டியன் நின்றசீர் நெடுமாறனைத் திருமணம் செய்து இருவரும் சிறப்புற சிவதொண்டாற்றினர். ஞான சம்பந்தரை தமது வழிகாட்டியாகவும் குருவாகவும் வரித்து அவர் வகுத்த பாதையில் பயணித்து நெடுங்காலம் சைவம் தழைக்க பெரிதும் பணியாற்றினார்.
.
இடைப்பட்ட காலத்தில், பாண்டிய மன்னன் சமணத் தொடர்பினால் சைவத்தை பெரிதும் வருத்தினார். இதனால் மங்கையர்க்கரசியார் பெரிதும் மனம் வெதும்பி வாடினார். தமது அமைச்சர் குலச்சிறையார் துணை கொண்டு சைவத்திற்கு தம்மாலான தொண்டு ஆற்றிய வண்ணமிருந்தார். சம்பந்தர் பாண்டிய நாடு வந்தது கேட்ட மங்கையர்க்கரசியார், குலச்சிறையாருடன் அவரை நெடுது விழுந்து வணங்கி பக்திப்பெருக்குடன் வரவேற்று உபசரித்தார்.
.
சமண துறவிகள் மன்னரின் ஆணை பெற்று ஏவிய தீயானது, மன்னனுக்கே வெப்பு நோயாக வந்திரங்க, அதனை "மந்திரமாவது நீறு" என்று பதிகம் பாடி சம்பந்தர் விரட்டினார். அனல் புனல் வாதத்தில் சமணர்களை வென்று கூன்பாண்டியனை நின்றசீர் பாண்டியனாகி அருளினார் சம்பந்தர். வேற்று சமயத்தின் தாக்கத்தால் சைவம் குன்றியிருந்த நிலமையிலும் தொண்டாற்றிய மங்கையர்கரசியாரை வாழ்த்தினார் சம்பந்தர். சைவம் தழுவி திருநீறணிந்தார் பாண்டிய மன்னன் (இன்னிகழ்வுகளை சம்பந்தர் வரலாற்றில் விரிவாக பார்த்தோம்)
.
சம்பந்தர் எங்கெல்லாம் சென்று சிவபெருமானை வழிபட்டாரோ அவ்விடமெல்லாம் அரசியாரும் சென்று சம்பந்தர் திருவடிகளை பற்றி இறைவனை பக்தி செய்துய்ந்தார். திருத்தலங்கள் பலவற்றிற்கு மங்கையர்க்கரசியாரும், மன்னரும், குலச்சிறையாரும் பிள்ளையுடன் சேர்ந்து வழிபட்டு வந்தனர். தாம் விடை பெரும் வேளையில் பாண்டி நாட்டை சிவநேறி தழைத்தோங்க ஆள அருளிச் சென்றார் சம்பந்தர். அதன் வழியொழுகி, மதுரையம்பதியில் நிலைகொண்டு பாண்டி நாடெங்கும், சைவம் தழைக்கச் செய்தனர். ஆலய வழிபாடுகளும் ஆகம நெறிகளும் வளர்த்தனர்.
.
திருநாவுக்கரசரை தரிசித்து பாதம் பணியும் பாக்கியமும் பெற்றார். நெடுங்காலம் குறைவிலா அரசாட்சி புரிந்த மன்னருக்கு துணையிருந்து மன்னரோடு சிவனார் திருவடி எய்தினார்.
.
ஓம் நமச்சிவாய

பெருமிழலைக் குறும்ப நாயனார்



.
காவிரிக்கரையின் வடகரையில் இராஜேந்திர சிம்ம வளநாட்டில் உள்ள மிழிலை நாடு என்றொரு இடத்தில் மிழிலைக்குறும்பர் அவதரித்தார். இது சங்க காலத்து ஊர். தற்போது இவ்வூர், மானபாடிக்கு தென்மேற்கே கோவிலாச்சேரி என்ற கிராமத்தின் அமைந்த சிறு உட்கிராமமாக உள்ளது.
.
குறும்பனார் தமது காலத்தில் பெருமிழிலை என்ற இவ்வூரில் தலைவராக விளங்கினார். சிவனடியார்களை நெஞ்சகத்தே அன்பொழுக நிறுத்தி அவர்களுக்கு செவ்வனே பணி செய்வதை தமது நல்வழிக்கு உகந்தது என்று உணர்ந்திருந்தார். சிவநாமம் தனை க்ஷணப்பொழுதும் மறவாமல் மனதுள் நிறுத்தி சிவபக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். சிவனடியார்களைப் போற்றும் இயல்புடையவர் குறும்ப நாயனார், ஆரூரரின் புகழைக் கேள்வியுற்று வாளாயிருந்திருப்பாரா?
.
நம்பியாரூரரை தனது ஆசானாக்கிப் பணிந்தார். சிவனடியர்களைத் தொழுதல் முக்திக்கு வழி என்று உணர்ந்தார். ஆரூரர் திருவடியை வணங்கி வாழ்த்தி சிவ நெறியில் வழுவாமல் நின்றார். நம்பியாரூரர் என்ற சுந்தரரின் திருவடியை நினைந்து சிவ நாமம் நிறுத்தியதால் அணிமா மஹிமா முதல் அஷ்டமா சித்திகளை தமது வசமாக்கினார்.
.
சுந்தரமூர்த்தி நாயனார் மறுநாள் கயிலை அடையும் பெரும்பேறு பெறப்போகிறார் என்பதை தமது யோக சக்தியின் மூலம் ஒரு நாள் முன்பே உணர்ந்து, அவரைப் பிரிந்து நான் வாழேன் என்று மனதால் உறுதி செய்து, ஒரு நாள் முன்பே, தவ நெறியில் கருத்தை நிறுத்தி, பிரமநாடி வழியே உடலினின்று உயிரை உகுத்து, யோக சித்தியால் சிவன் தாள் சென்றடைந்தார்.
.
நமச்சிவாய

பூசலார் நாயனார்


.
திருநின்றவூரில் அவதரித்தவர் பூசலார். மறையோதும் அந்தணர் குலத்தோன்றல். அடியார்களுக்கு பணி செய்வதும், ஐயன் அடி போற்றுவதும், இறைவனை சிந்தையில் சதா இருத்துவதும் பிறவிப்பயனென கருதினார். பெரும் செல்வந்தாராக இருந்திருந்தால் இன்னும் பொருட்களை வாரி வழங்கும் வள்ளலாக விளங்கியிருப்பார். ஆனால் இறைவன் அவரை மிகக் கொண்ட செல்வந்தராக பணிக்கவில்லை. பெரும் பொருளில்லாவிடினும் ஈட்டும் சிறு பொருளை அடியவர்க்கு ஈந்தார்.
.
இப்படிப்பட்ட பெரும் பக்தருக்கு இறைவனுக்கு ஆலயம் எழுப்ப வேண்டுமென்ற பேரவா எழுந்தது. எப்படித் தேடியும் பொருள் தேரவில்லை. சிறுகக் கட்டி சேர்க்க நினைத்தாலும், அத்தனை பெரிய நிதி பெற இயலாதவர் ஆனார். சிவன் ஆலயம் எழுப்பும் ஆவல் பெருகிக் கொண்டே போனதால், தமது தூய மனத்தின் அரும் பீடத்தில், கோவில் எழுப்பி, இறைவனை எழுந்தருளச் செய நினைத்தார்.
.
தினம் சிறு சிறு வேலைகளை மனக்கண் செய்யத் துவங்கினார். ஆலயப்பணிக்கென தேவையான ஆட்களை சேர்த்தார், கருங்கற்களை, கட்டும் பொருட்களை சேர்த்தார். நாள் குறித்தார், ஆலயம் எழுப்பும் கிரமப்படி, பணியைத் துவங்கினார்.
அஸ்திவாரம் இட்டார். விமானம் அமைத்தார், சிகரம் செதுக்கினார். ஸ்தூபி நட்டார். பின்னர் கிணறு, திருக்குளம், மதிலும் கூட எழிலுற அமைத்தார். இவ்வாறு இரவு பகலென தினமும் பணிகளை பக்தியுடன் செவ்வனே நினைந்து ஆலயம் கட்டி முடித்த பின், இறைவனை எழுந்தருள ஒரு நல்ல நாளும் தேர்வு செய்தார்.
.
சூட்சுமமான மனதின் மேன்மையை, மனத்தூய்மையின் முக்கியத்துவத்தை, மனம் உடலைக் காட்டிலும் உயர்ந்தது என்பதை பக்தர்களுக்கு தெளிவிக்கும் சித்தம் கொண்டார் இறைவன். அந்நாட்களில் பல்லவ வேந்தரும் நாயன்மார்களில் ஒருவருமான ஐயடிகள் காவர்கொன் காஞ்சி நகராண்டு கொண்டிருந்தார். மன்னர், காஞ்சியிலே இறைவனுக்கு பெரும் ஆலயம் எழுப்பியிருந்தார். பெரும் பொருட்கள் கொண்டு எழுப்பப்பட்ட ஆலயம் இறைவன் எழுந்தருள்வதற்கு தயாராக பட்டொளி வீசிக் கொண்டிருந்தது. மன்னரும் தமது நகரத்தில் ஆலயத்திற்கு இறைவனை எழுந்தருளச் செய்து குமபாபிஷேகம் செய்ய பூசலார் குறித்த நாளையே தேர்வு செய்திருந்தார். உமையொருபாகன் மன்னார் கனவில் தொன்றி, " திருநின்றவூர் அன்பன் பூசலார் அமைத்த ஆலயத்தில் நாளை புகுவோம், நீ பிறிதொரு தினம் எமை எழுந்தருளச் செய்வாய்" என கூறியருளினார்.
.
மன்னர் பூசலாரின் ஆலயத்தை காண பேராவல் கொண்டு திருநின்றவூர் சென்றார். அங்கு பூசலார் அமைத்த கோவில் யாதெனக் கேட்க, அனைவரும் அப்படி ஒரு கோவில் இங்கில்லை என்று மறுத்தனர். பின்னர் பூசலார் யார் என்று கேட்டு, அவர் வீடு தேடிச் சென்று உமது திருக்கோவில் எங்குள்ளது இறைவன் அக்கோவிலில் முதலில் எழுந்தருள்வதாக எமக்கு உரைத்தனுப்பினார், அக்கோவிலை காண பெரும் விருப்பம் கொண்டிங்கு வந்தேன் என்றார். அதைக் கெட்டு வியப்புற்ற பூசலார், நெகிழ்ந்துருகி பரவசமானார். என்னையும் கருணா மூர்த்தி தம் கடைக்கண்ணால் கருதினாரே என்று ஆனந்தித்தாடினார். தான் மனதால் பக்தியுடன் தினமும் கட்டிய ஆலயம் என்றுரைத்து, இறைவனை நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கினார். ஆடிப் பாடினார். அரசரும் ஆச்சர்யமும் பேரன்பும் பெருக ஈசனையும் நாயனாரையும் வணங்கிப் புறப்பட்டார்.
.
நிச்சயித்த நாளில் அவர் கட்டிய மனக்கோவிலில் சிவன் எழுந்தருளி அனுக்ரஹித்தார். பூசலார், சிறப்புடன் பல வருடம் வாழ்ந்து சிவப்பணிகள் செய்து உய்ந்து, நற்பேறு பேற்றார்.
.
ஓம் நமச்சிவாய

புகழ்த்துணை நாயனார்.



.
சிவவேதியர் குலமெனும் குலத்தின் தோன்றல்கள் வழி வழியாக ஆகம விதிப்படி சிவனுக்கு பூஜை செய்யும் சிவாச்சாரியர்கள் ஆவர். இவர்களை ஆதிசைவர்கள் என்றும் சிவப்பிராமணர் என்றும் குறிப்பிடுகின்றனர். சைவ பக்தர்களுக்கு சிவதீக்ஷை அளிப்பது, பூஜை செய்வது, செய்விப்பது, சிவ பரிபாலனம் அனைத்தும் இம்மரபினரின் தொண்டாகும். அது வழி வந்த சிவவேதியரே புகழ்த்துணை நாயனார்.
.
பூஜையும் ஆகமமும் சிவ வழிபாடும் பிரியமாக செய்து வந்தார். சிவபெருமானை தத்துவ நெறிப்படி வழிபட்டு வந்தார். பஞ்சம் வந்து ஊரெங்கும் துவண்ட போதும் சிவ வழிபட்டை கைவிடாமல், நறும்பூக்கள் கொண்டும் தூய நீர் கொண்டும் வழிபட்டு வந்தார். ஓரு சமயம் பசியால் நலிந்த அவர் மேனி, சுமந்து வந்த கலசத்தின் பாரம் தாங்காமல் கை தவற, திருமஞ்சனம் செய்ய கொணர்ந்த நீர்குடம் இறைவன் திருமுடியின் மேல் விழுந்தது. சிவ அபராதம் செய்தோமென்று அஞ்சி, வருந்தி, மயக்கமுற்றார். அப்போது நித்திரை அவரை ஆட்கொண்டது.
.
பக்திக்கு இரங்கி, நித்திரையில் எழுந்தருளிய ஈசன், 'பஞ்சம் ஏற்பட்டிருக்கும் காலம் முழுதும் உணவுக்கென ஒரு காசு தருவோம்' என்று கூறியருளினார். நித்திரை கலைந்த எழுந்த நாயன்மார் பீடத்தின் மீது திருக்காசு ஒன்று இருப்பது கண்டு களித்தார். அவ்வாறே பஞ்சம் போகும் வரை இறைவன் நாள்தோறும் காசு அளித்தமையால் பசி நீங்கப்பெற்று நெடுங்காலம் சிவ அடிமை செய்திருந்து,  பின்னர் இறையுலகில் இன்பம் எய்தினார்.
.
ஓம் நமச்சிவாய
.

புகழ்ச்சோழ நாயனார்



உறையூர் அரசர் புகழ்சோழர், படைகள் பல கண்டு, தேசங்கள் பலவும் வென்று செங்கோலாட்சி் நடத்தி வந்தார். சிவபக்தராக திகழ்ந்த மன்னர், ஆலய திருப்பணிகள் செவ்வனே நடக்க வழி செய்தார். அடியார்கள் நலம் நல்கினார். சிவநெறி சோழ நாடெங்கும் பரவச் செய்தார். அவர் வென்ற நாடுகள் தோறும் அற நெறி தழைக்கச் செய்தார்.
.
சிவகாமி ஆண்டார் என்ற அடியவர், இறைவனுக்கு சூட கொணர்ந்த மாலையை, புகழ்சோழரது பட்டத்து யானையும் அதன் பாகனும் செருக்கின் மிகுதியால் இடறி விட, அவர்களை எதிர்த்து கொன்ற எறிபத்த நாயனாரின் செயல் புரிந்து மனம் வருந்தி, அடியவர் மனம் கோண தமது யானையும் பாகனும் நடந்ததற்காக  தமையே பலியிடத் துணிந்தார். பின் ஈசன் அருளால் வினை தீர்க்கப்பெற்றார் (இதன் நிகழ்வை எறிபத்த நாயனார் வரலாற்றில் படித்தோம்)
.
புகழ்சோழன், தமது கீழ் அரசாளும் சிற்றரசனாகிய அதிகன் என்பவனை திறைவரி செலுத்தாத காரணத்திற்கு முற்றுகையிட்டு சேனை திரட்டி தாக்கினார். அதிகன் தப்பிவிட்டாலும், பல வீரர்கள் மடிந்தனர். வெற்றி கண்ட சோழப் படையினர், ஜய பேரிகை கொட்டி யானைகளை குதிரைகளை கைபற்றி வெட்டுண்டவர்கள் தலைகளை அரசர் முன் கொணர்ந்தனர். அக்குவியலில் சிவனடியார் ஒருவரின் சடாமுடி தரித்த தலை தென்பட்டது. மெய்யுடல் நடுங்கி, தான் பெருந்தீங்கு இழைத்ததை உணர்ந்தார் சோழ மன்னர்.
.
புகழ்சோழர் என்ற பேருக்கு இலங்க சிவத்தொண்டில் சிறந்து விளங்கிய நாயன்மார், சிவ அபராதம் செய்ததை பொறுக்காது, தனது மகனுக்கு முடிசூட்டி, போரில் உயிர் துறந்த சிவனடியாரின் தலையை பொன்தட்டில் இட்டு, அதனை தனது தலை மேல் சுமந்து, செந்தீ வளர்த்து, அதுனுள் தானும் புகுந்து இறைவன் திருவடியில் இணைபிரியாது இணைந்தார்.
.
ஓம் நமச்சிவாய

November 08, 2020

நேச நாயனார்



காம்பீலி என்னும் ஊர் கர்நாடகா மாநிலத்தில் பெல்லாரி அருகே உள்ளது. துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்த செழிப்பு மிகுந்த இவ்வூரின் விருபாக்ஷீஸ்வரர் கோவில் அப்பர் பெருமானால் பாடப்பெற்றது. இத்தலமே நேசர் எனும் நேச நாயனார் பிறந்து, இருந்து வழிபட்டு தொண்டாற்றிய ஊர். தமிழின் பெருமை எங்கெல்லாம் பரவி இருந்திருந்தது என்பதற்கு இவையெல்லாம் சான்று.
.
நேசர் செல்வ செழிப்பு மிக்கவராக இருந்தார். சாலியர் குலத்தில் தோன்றி தம் குலத் தொழிலைக் கொண்டே இறைவனுக்கு தொண்டு செய்தார். தமது வழக்கப்படி ஆடைகளும் கீழ்கோவணமும் நெசவு செய்து சிவனடியார்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். நாளும் ஈசன் நாமம் சிந்தையாலும் வாக்கினாலும் உரைத்திருந்தார். நீளாயுள் சிறப்பற வாழ்ந்து, தமது பணிவாலும் பக்தியாலும் உயர்ந்து இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறினார்.
.
(குறிப்பு: சாலி என்றால் துணி. துணி நெய்தல், உருவாக்குதல், தைத்தலை குலத்தொழிலாக கொண்டவர்களை சாலியர் என்று குறிப்பிடுகிறார்கள்)
.
ஓம் நமச்சிவாய

நின்றசீர் நெடுமாற நாயனார்



.
சீரும் சிறப்புமாக மதுரை ஆண்ட பாண்டிய மன்னனின் இயற்பெயர் நெடுமாறன். நீதி தவறாத ஆட்சியும் உயிர்களிடத்தில் அன்பும் கொண்டு திகழ்ந்தார். இவருக்கு முதுகு கூன் விழுந்ததால் கூன் பாண்டியன் என்று வரலாறு குறிப்புகள் கூறுகின்றன. வடநாட்டிலிருந்து போர் முரசு கொட்டி வந்த பகைவர்களை திருநெல்வேலியில் தோற்கடித்த பெருமைக்கு நெல்வேலி வென்ற நெடுமாறன் என்று போற்றபட்டார். சோழ இளவரசி மங்கையர்கரசியை தமது அரசியாக்கினார். 
.
மங்கையர்க்கரசியாரும், நெடுமாறனின் நீதி தவறாத அரசின் அமைச்சரான குலச்சிறை நாயனாரும் சிவ பக்தர்களாக சைவத்தின் பால் ஈடுபட்டிருக்க, மன்னன் நெடுமாறன் சமணர்களின் கருத்துடன் மெல்ல மனம் மாறி சமண மதத்தை தழுவியிருந்தார். அரசன் மதம் மாறியதால், மெதுவே குடிகள் சிலரும் சமண மதத்தை தழுவினர். சைவம் தழைத்தோங்கிய மதுரை மாநகரம் சமணத்தை தலைவணங்கி வரவேற்றது.
.
திருஞானசம்பந்தர் பாண்டி நாடு எழுந்தருளிய போது மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் அவரை நாடி சைவம் தழைத்தோங்க வேண்டிக்கொண்டனர். ஞானசம்பந்தரின் வருகை அறிந்த சமணர்கள் அரசரிடம் ஒப்புதல் வாங்கி, அவர் தங்கியிருந்த மடத்திற்கு தீ வைத்தனர். அத்தீயை ஏவியவருக்கே திருப்பியனுப்ப பதிகம் பாடியதால், அரசருக்கு சுரநோய் வந்து அவதியுற்றார். சமணர்களால் தீர்வு காண முடியாமல், சம்பந்தர் "மந்திரமாவது நீறு" என்று பாடி திருநீறு பூசி குணமாக்கினார். சைவத்தை தழுவிய மன்னனின் கூனை நிமிர்த்தி 'நின்றசீர் நெடுமாற' நாயனார் ஆக்கினார் சம்பந்தர். சமணர்களை அனல் வாதம் புனல் வாதம் மூலம் வென்ற சம்பந்தருக்கு பெரும் மரியாதை செய்தார். (இதனையொத்த கதையை விளக்கமாக சம்பந்தர் வரலாற்றில் பார்த்தோம்) சிவ ஆகம முறைகளும் பூஜைகளும் ஆலயத்திருப்பணிகளும் முன் போல் நடைபெற ஆவன செய்தார்.
.
உடன் மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் துணை நிற்க, அடியார்களை உபசரித்து, சிவத்தொண்டுகள் பல காலம் புரிநதிருந்து, அவனருளாலே அவன் தாள் பணிந்து நற்கதி எய்தினார்.
.
ஓம் நமச்சிவாய

November 07, 2020

நரசிங்கமுனையரைய நாயனார்

.
இவ்வடியார் திருமுனைப்பாடி நாட்டின் குறுநில மன்னர் ஆவார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக துதித்தேற்றப்படுபவர். சிவனடியார்களை பணிந்து போற்றிக் காத்தலை தவறாது செய்து வந்தார். பகைவரிடமிருந்து நாட்டினை காத்து ரக்ஷித்து சிறப்புற பேணி வந்ததுடன், சிவ நாமம் உரைக்கும் அடியவருக்கெல்லாம் வள்ளலாக விளங்கினார். கோவில் செல்வங்களை சிறப்புற பேணச் செய்து, அவற்றை அற வழியிலும் ஆகம வழியிலும் செலவிடப் பணித்தார். அடியார்களின் குறிப்பறிந்து தொண்டாற்றினார். அடியார்களுக்கு பொன்னும் பட்டும் வழங்கி சிறப்பிக்கும் வழக்கம் கொண்டிருந்தார்.
.
ஒரு முறை சிவபூஜை முடிந்த பின், அங்கு வந்திருக்கும் அடியார்க்கு பொன் வழங்கி அமுதளிக்கும் தருவாயில், காம நோயினால் பீடிக்கப்பட்டு பிறரால் அருவெறுத்து ஒதுக்கப்பட்ட ஒருவரும் அடியவராக வந்திருந்தார். சசிசேகரனிடம் கொண்ட அன்பின் பெருக்கால் அவரையும் ஆரத்தழுவி வரவேற்றார். நல்லொழுக்கம் பேணாதவராயினும் திருநீறு துலங்கும் அவரது நெற்றியைக் கண்டதும் அன்பொழுக அமுதளித்து அவருக்கு இரட்டிப்பு பொன்னளித்து, விருந்தோம்பல் செய்து கவுரவித்தார்.
.
நரசிங்கமுன்னரைய நாயானர் வீதி வலம் வரும் பொழுது, எழில் ரூபனாக தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சுந்தரரை கண்டார். மிகுந்த பிரியத்தினால் ஆட்கொள்ளப் பட்டு, சடையனாரிடம் கொண்ட நட்பின் உரிமையில், சுந்தரரை வளர்க்கும் பெரும்பேற்றை கேட்டுப் பெற்றார். சுந்தரரின் திருமணப்பருவம் வரை அரச போகத்துடன் சீறும் சிறப்புமாக தாமே வளர்த்தார்.
.
நம்பியாரூரரான சுந்தரரை வளர்த்த பெருமைக்கும், சிவனடியார்களை பேணிப் போற்றிய சிறந்த பக்திக்கும் இறைவனைப் பிரியாது உடனுரையும் கையிலாயம் பெற்றார்.
.
.
ஓம் நமச்சிவாய

நமிநந்தியடிகள் நாயனார்



ஏமப்பேறூரில் பிறந்த அந்தணர் குலத்தவர் நமிநந்தியடிகள். மகேஸ்வரனின் ஐந்தெழுத்தை அன்புடன் உணர்ந்து இடைவிடாது சிந்தித்திருப்பதும் பூஜிப்பதும் தொண்டுகள் செய்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தார். நாள்தோறும் திருவாரூர் பெருங்கோவிலில் குடிகொண்டுள்ள பெருமானை தரிசித்து வழிபடுவதை தமது தலையாய
திருப்பணியாகக் கொண்டிருந்தார்.
.
எழுந்த அன்பின் பெருக்கால், ஒரு மாலைப்பொழுதில் ஈசனுக்கு விளக்கேற்றி துதிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஏமப்பேறூர் வரை தமது இல்லம் சென்று எடுத்த வர தாமதமாகிவிடும் என்பதால் அங்கு குடியிருக்கும் வீடுகளில் வேண்டிப்பேற்றுக்  கொள்ள எண்ணி, அருகிலுள்ள ஒரு வீட்டை அணுகினார். அவர் சென்ற வீடு சமணர்கள் வாழ்ந்த வீடு. "விளக்கேற்ற நெய் தாருங்கள்" என்று விண்ணப்பித்தவரிடம், "அனலேந்தி நிற்கும் உங்கள் சிவனாருக்கு விளக்கு ஏற்ற வேண்டுமென்றால் நீரை ஊற்றி ஏற்றுங்கள்" என்று பரிகசித்தார்கள்.
.
மனம் பொறுக்க மாட்டாமல் இறைவனிடம் முறையிட்டழுத அடிகளை இறைவன் கருணை கொண்டு "அருகேயுள்ள குளத்தில் நீரெடுத்து வந்து ஏற்றும்" என்று ஆகாயமார்க்க அசரீரியாக அருளினார். தமது பாக்கியத்தை எண்ணி பேருவகை அடைந்து, குளத்தில் நீர் அள்ளி, ஐந்தெழுத்தோதி திருவிளக்கேற்றினார். சுடர்வீட்டு ஜோதியென ஒளிர்வது கண்டு ஆலய்ம் முழுவதும் ஊரெல்லாம் அதிசயிக்க விளக்கேற்றி இறைவனின் பெருமையை உலகறியச் செய்தார். சமணத்தவர்கள் வெட்கி தலைகுனிந்தனர்.
.
இந்நிகழ்வுக்குப் பிறகு தொடர்ந்த நாட்களிலும் நீரூற்றி ஆலயமெங்கும் விளக்கேற்றும் திருப்பணி செய்து, பின்னர் தமதூர் சென்று பூஜைகளில் ஈடுபடுவதை வழக்கமெனக் கொண்டிருந்தார். இப்பெருமை ஊரெங்கும் பரவ, சோழ மன்னன் பெருங்க்கொடையளித்து ஆகம விதிப்படி பூஜைகளும் நித்ய ஆராதனைகளும் பங்குனி உத்திர விழாவும் நடைபெறுவதற்கு வழி செய்து அதற்கு தலைமை ஏற்க நந்தியடிகளை நியமித்தார்.
.
ஒரு சமயம் பங்குனி உத்திரப் பெருவிழாவின் போது மணலி என்ற ஊரில் உலா எழுந்தார். அங்கு பலதரப்பட்ட மக்களும் பல்வேறு ஜாதி இனத்தவர்களும் சிவனாரை வணங்கிச் சென்றனர். அடிகள் இறைவனை மகிழ்ந்து பூஜித்த பின், தமது ஊரை அடைந்தார். வீட்டினுள் செல்லாமல் வெளித் திண்ணையில் தங்கிவிட்டார். மனைவியார் வீட்டினுள் வந்து அர்ச்சனை பூஜை செய்ய நினைவூட்டினார்கள். மணலியில் நான் இறைவனின் உலா கண்டு சேவித்திருந்தேன். அங்கு பல ஜாதியினர் வந்து வழிபட்டதாலும், தமக்கு தீட்டு உண்டாயிற்று அதனால் நீராட ஏற்பாடு செய்யப் பணித்தார்.
.
மனைவியார் அகன்றதும் மீண்டும் திண்ணையில் படுத்தவருக்கு எம்பெருமான் கனவில் காட்சிதந்தார். "திருவாரூரில் பிறந்த அனைவரும் கணங்கள். அதை நீ உணர்வாய்" என்று அறிவூட்டினார். உறக்கம் கலைந்தவர் தாம் செய்த பிழையால் வருந்தனார். உடன் சென்று பூஜைகள் தொடர்ந்தார். மறு நாள் பொழுது புலர்ந்ததும் திருவாரூர் சென்றார் அங்கு அத்தனை பக்தர்களும் சிவ ஸ்வரூபமாக தோன்றுவதைக் கண்டு, பிழை பொறுக்க இறைவனை இறைஞ்சி, ஜாதி வேறுபாடுகளை கடந்தார்.
.
நெடுங்காலம் இறைவனுக்கும் அடியவர்களுக்கும் திருத்தொண்டுகள் புரிந்து, சிறப்புற வாழ்ந்து இறைவன் திருவடி சேர்ந்தார்.
.
ஓம் நமச்சிவாய
.

திருமூலர்

                                                     



.                  
பதினெண் சித்தர்களில் தலையாய சித்தராக அறியப்படுபவர். அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர் எனும் பேறு பெற்றவர் ஆகிறார்.
.
இவரது பிறப்பின் மூலத்தை அறிய முற்படுவோம். நந்தித்தேவரின் அருள் பெற்ற மாணவர்களுள் சுந்தரநாதர் என்ற சிவயோகி ஒருவரும் இருந்தார். இவர் அணிமா லகிமா முதலிய அஷ்டமா சித்திகளை கையாளும் அருள் பெற்றிருந்தார். அகத்திய மாமுனியின் நண்பராக இருந்தார். இவர் கைலாய பரம்பரையில் வருபவர். ( இவருடைய பதினாறு சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலை சித்தரும் வெகுவாக அறியபடுபவர்கள். காலங்கி சித்தரின் சீடரே பழனியில் நவபாஷாணத்தால் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்த போகர் ஆவார் )
.
சுமார் 8000 வருடங்களுக்கு முன்னர், அகத்திய மாமுனியை கண்டு அவருடன் சில காலம் இருந்து வர தென் திசையை நோக்கிப் புறப்பட்டார். தெற்கே காஞ்சி வந்து, தில்லையை தரிசித்து, பல தலங்களில் சிவனை நினைந்து அன்பொழுக பக்தி செய்து, காவிரியில் நீராடி, பின்னர் உமையவள் பசுவின் வடிவில் இறைவனை நோக்கி தவமியற்றி கோமுக்தீஸ்வரரால் ஆட்கொள்ளப்பட்ட திருவாடுதுறை வந்தடைந்தார்.
.
இறைவனை தரிசித்து விலக இயலாதவராய் சில காலம் தங்கினார். திரும்பச் செல்லும் காலத்தில் காவிரி கரையின் சோலையில் இரை மேய்திருந்த பசுக்கள் வருந்தி அழுவதைக் கண்டார். சாத்தனூரில் இடைக்குலத்தவனான மூலன் அப்பசுக்களை மேய்த்து ரக்ஷித்து வருபவன். அவன் தன் உடலை உகுத்து விண் புகுந்ததால், பசுக்கள் வருந்தி அழுவதை உணர்ந்தார்.
.
பசுக்களின் மேல் கருணைக் கொண்டதனால், மூலனின் உடலில் தம் உயிரை செலுத்தி, தம் உடலை பாதுகாப்பாக வேறிடத்தில் விட்டு, கூடு விட்டு கூடு பாய்ந்தார். பசுக்கள் வீடு சென்றடைய, நெடு நேரமாகி வீடு திரும்பாத கணவனை எண்ணி கவலையுற்றிருந்த மூலனின் மனைவி, திருமூலரை தன் பதியென்றெண்ணி மகிழ்ந்து அழைத்தாள். தமை தீண்ட அனுமதி மறுத்த மூலர் தாம் திருமூலர் என்பதை ஆட்டின் உடலில் புகுந்து நிரூபித்தார். மூலனின் மனைவியை ஊரார் தேற்ற, திருமூலர் தமது மேனியில் புகுதற்கு தாம் பாதுகாப்பாக விட்டுச்சென்ற உடலைத் தேடினார். அது அங்கில்லாமல் மறைந்திருக்கவே அதன் காரணத்தை யோகத்தின் மூலம் அறிந்து, அதுவே இறைவன் சித்தமென தெளிந்தார்.
.
சாத்தூரிலிருந்து மீண்டும் திருவாடுதுறை அடைந்து பல காலம் அங்கு தங்கி தவமியற்றினார். கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் அரச மரத்தடியில் தவமியற்றியவர் ஆண்டுக்கொரு முறை கண்விழித்து பாடல் இயற்றி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். இவ்வாறு மூவாயிரம் வருடங்கள் தவமியற்றினார். இவர் தொகுத்த பாடல்கள் "தமிழ் மூவாயிரம்" என்று வழங்கப்பட்டது. பின்னர் வந்த சான்றோர் இதனை திருமூலர் அருளிய திருமந்திரம் என வகை செய்தனர்.
.
இவ்வாறு திருமந்திரம் அருளியவர் அதனை வெளியிடாமல் ஆலயத்தின் கொடிமரத்தின் அடியில் புதைத்து, அங்கிருந்து சிதம்பரம் சென்று தமது குரு நந்தீசரைப் ( நந்தி பகவான்) பணிந்து, தில்லையம்பதியுடன் கலந்தார்.
.
பல்லாயிரம் வருடங்கள் பின்னால் தோன்றிய சம்பந்தர், பெருமான் அருளால் இங்கு தமிழ் மந்திரங்கள் உளதென்று உணர்ந்து, அதனை உலகிற்கு வெளியிடச் செய்தார்.
.
இவரின் பெயர், பிறப்பு முந்தைய நிலை எதுவும் பெரியபுராணம் தொகுத்த சேக்கிழாராலோ, திருத்தொண்டர் திருவந்தாதி இயம்பிய நம்பியாண்டார் நம்பியாலோ குறிப்பிடப்படவில்லை. எனினும், இவரே நாயன்மார்களில் மூத்தவர் பல காலத்திற்கு முன்னவர், சைவத்திற்கு முதல் நூலைத் தந்தவர் என்று கூறலாம். இவர் எழுதிய நூலை திருமந்திரம் எனும் பத்தாம் திருமுறையாக நம்பியாண்டார் நம்பி தொகுத்தார்.
.
இவர் நந்தியின் சீடர் என்பது அவர் எழுதிய
"நந்தியருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர்
என்றிவ ரென்னோ டெண்மரு மாமே” (திருமந்திரம்-67)

திருமூலர் வாய்மொழியாலேயே நன்கு தெளியப்படும்.
.
ஓம் நமச்சிவாய

திருநீலநக்க நாயனார்



.
சோழமண்டல சாத்தமங்கை எனும் ஊரில் அந்தணராக பிறந்தார் திருநீலக்கர். அந்தணராகப் பிறந்தவர் வேதத்தின் உட்பொருளான சிவனை பூஜித்தல், அர்ச்சிதல், தொழுதல், அவனடியார்களை சிறபித்தல் அமுதளித்தல் முதலியனவையே உய்யும் வழி என்றுணர்ந்து தினமும் வேதாகம முறைப்படி சிவனை பூசித்து பல இறைத்தொண்டு ஆற்றி வந்தார்.
.
ஒரு சமயம், அவர் பிறந்த திருவூரான சாத்தமங்கையிலிருக்கும் அவயந்தி என்ற கோவிலில் அருளிச் சிறப்பிக்கும் பரமேஸ்வரனை பூஜிக்க விரும்பி, பூசனைக்குறிய பொருட்களுடன் தம் மனைவியாருடன் ஆலயம் சென்று மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்தார். அச்சமயம் சிலந்தி ஒன்று சர்வேஸ்வரனின் லிங்கத் திருமேனியில் விழுந்தது. பூஜைக்கு அழுக்கு நேருமோ என்றேண்ணிய மனைவி, அதனை தமது வாயினால் ஊதி போக்கினார்.
.
இதனைக் கண்டு வெகுண்ட நாயனார், எங்கனம் கீழ்மையான இச்செயலை செய்யத்துணிந்தார். வேறொரு வகையில் நீக்காமல் எச்சில் கொண்டு ஊதி நீக்குவது பெரும்பாவச் செயல். அச்செயல் புரிந்த உம்முடன் இனி நான் வாழுதற்கில்லை, உமைத் துறந்தேன் என்று உரைத்துச் சென்றார். அது கேட்ட மனைவியும் வருந்தி அஞ்சி ஒதுங்கி ஆலயத்தில் தங்கி விட்டார்.
.
அந்த இரவு துயில் கொண்ட பின் கனவில் இறைவன் எழுந்தருளி தம் திருமேனியை காட்டினார். உமது மனைவி ஊதிய இடம் நீங்கலாக மற்ற இடமெங்கும் சிலந்தியினால் ஏற்பட்ட கொப்புளம் என்று கூறியருளினார். விழித்த நீலநக்கர் இறைவனின் கருணையை வள்ளல்தன்மையை மனதில் கொண்டவராக ஆடிப்பாடி கூத்தாடி, ஆலயம் சென்று மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
.
சம்பந்தரைப் பற்றி கேட்டுணர்ந்து, அவரை தரிசிக்கவும் திருப்பாதம் தோழவும் ஆவல் மேலிட்டவரானார். அப்பொழுது சம்பந்தர் பல்வேறு ஸ்தலங்களுக்குச் சென்று இறைவனை பாடி, சாத்தமங்கையை வந்தடைந்தார் என்று அறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டவராக, தமது சுற்றம் சூழ அவரை அழைத்து, விருந்தோம்பல் செய்து திருவமுதளித்து மகிழ்ந்தார். அவருடன் வந்த திருநீலகண்ட யாழ்பாணருக்கும் அவரது துணைவி மதங்கசூளாமணியாருக்கும் நடு வீட்டில் தாம் வேள்வி செய்யும் வேதிகை அருகே இடம் கொடுத்து உயர்ந்த மரியாதையை செய்தார். இவரது செயலால் அகமகிழ்ந்த சம்பந்தர் மறு நாள் பெருமானை பாடிய பதிகத்தில் இவரையும் சிறப்பித்து பாடினார்.
.
ஞானசம்பந்தரிடம் பெரும் பக்தி பூண்டு அவருடன் தாமும் புறப்பட முயன்றார் எனினும் சம்பந்தர் அவரை அவயந்தி பெருமானை பூஜித்து அத்திருத்தலத்தில் இருக்கும்படி பணித்தமையால் அதனை மீறாமல் அவரது ஊரிலேயே தங்கி விட்டார். சம்பந்தரிடம் பெரும் பக்தி கொண்டதால் அவரை தினம் அன்புடன் தினமும் நினைந்தார். திருஞானசம்பந்தரின் திருக்கல்யாணத்திற்கு வேதியராக புரோகிதம் செய்தவர் அப்பெருஞ்சோதியில் தாமும் கலந்து இறைவனுடன் உறைந்தார்.
.
ஓம் நமச்சிவாய

திருநீலகண்ட யாழ்ப்பாணர்





யாழ் இசைத்தல் பாணர் குலத்தின் சிறப்புக் கலை. யாழ் இசைத்த பாணர் என்பதால் யாழ்ப்பாணர் எனப்படுகிறார். திருஎருக்கத்தம்புலியூர் எனும் தலத்தில் பாணர் குலத்தில் பிறந்து சிவனாரின் அரும்புகழை யாழ் மீட்டி, பண் இசைத்து, தொண்டாற்றினார். திருத்தலங்கள் தோறும் யாத்திரை செய்து இவர் யாழ் இசைக்க, இவரது மனைவியார் மதங்கசூளாமணி, திருப்பாடல்கள் பாடி இருவரும் இறைவனுக்கு இசைமாலை சூட்டி வழிபட்டனர். அக்கால வழக்கப்படி பாணர்கள் கோவிலினுள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனால் ஆலயத்தின் புறத்தே நின்றே இறைவனை துதித்து வந்தனர்.
.
சோழ நாடெங்கும் தலயாத்திரை செய்தவர்கள், பாண்டி நாட்டின் மதுரையை அடைந்து திருவாலவாய் கோவிலில் இறைவனுக்கு பண் இசைத்தனர். இறைவன் தொண்டர்கள் கனவில் தோன்று அவர்களை தம் முன் அழைத்து வரும்படி ஆணையிட்டார். பாணரும் இறைவன் விருப்பப்படி திருவாலவாய் கோவிலில் இறைவன் புகழை இசைக்க, தரையிலமர்ந்து  பண் இசைத்தால் சீதம் தாக்கி, யாழ் நரம்பு தளர்ந்துவிடுமென்று பலகை கொண்ரும்படி அசரீரி ஒலித்தது. அவ்வாக்கை சிரமேற்கொண்டு நிறைவேற்றிய தொண்டர்கள் பலகையில் பாணரை அமரச்செய்ய, பாணரின் இன்னிசை ஆலயமெங்கும் முழங்கியது.
.
பின்னர் திருவாரூரை அடைந்த பாணர் தம்பதியர் தமது மரபுப்படியே புறத்தே நின்று வழிபட்டனர். இன்னிசைக்கு இரங்கிய இறையனார், வடத்திசையில் வேறு வாயில் அருளி நாயனாரும் மனைவியும் அதனுள் சென்று யாழ்ப்பண் இசைத்து மகிழ்ந்தனர்.
.
யாழ்பாண நாயனார் திருஞானசம்பந்தரின் மேலான சிறப்பை உணர்ந்து அவரைக் காணும் ஆவல் கொண்டார். அவர் இயற்றும் பதிகத்திற்கு யாழ் இசைக்கும் விருப்பமும் கொண்டவராகி, சம்பந்தர் சென்ற இடமெல்லாம் உடன் சென்று இன்னிசை தொண்டாற்றினார்.
.
யாழ்பாணர் இசையினால் தான் சம்பந்தர் பாடல்கள் திறம்பட அமைகிறது என்ற சுற்றத்தினரின் பேச்சினால் மனம் ஒடிந்தவர், தம்மால் வாசிக்க முடியாதபடி பதிகம் இயற்ற சம்பந்தரை வேண்டினார். அவ்வாறே சம்பந்தர் "மாதர் மடப்பிடியும்” என்ற பாடல் பாட, அதன் நுணுக்கங்களை யாழில் இசைக்க முடியாமல் யாழை முறிக்க முயன்ற நாயன்மாரை தடுத்து தேறுதல் சொன்னதாகக் குறிப்பு. இவ்வகைப் பண்ணை யாழ்முறிப்பண் என்று கூறிவந்தனர். அதனையே இப்பொழுது நீலாம்பரி என்று சிலரும் அடாணா என்று சிலராலும் வழங்கப்படுகிறது என்ற கருத்து நிலவுகிறது.
.
திருநீலநக்க நாயனார், சம்பந்தர் சொல்லுக்கிணங்கி தமது வீட்டின் நடுவில் வேள்வி செய்யும் நித்தியாக்கினி வேதிகை அருகே யாழ்பாணருக்கும் அவர் மனைவியாருக்கும் இடம் அமைக்க, வெள்வித்தீ மேலும் சுடர் விட்டெரிந்து இவர்களை பெருமைப்படுத்தியது.
.
இவ்வாறு ஈடில்லா இசைத்தொண்டாற்றியவர் தமது துணைவியார் மதங்கசூளாமணியுடன் சம்பந்தர் திருமணத்தில் கலந்து பெருஞ்ஜோதியில் கலந்து ஈஸ்வரன் திருவடியில் இணையிலா பெருவாழ்வு பெற்றார்.
.
ஓம் நமச்சிவாய