December 16, 2021

Dear Diary

திருமணத்திற்கு முன்பு வரை நாட்குறிப்பு (diary) எழுதும் பழக்கம் இருந்தது. அது தொடர்பாக சில நிகழ்வுகளும் நிகழ்ந்தது. மறக்க முடியாதவையும் கூட. டைரி பக்கங்கள் சொல்ல மறந்த கதை நிறைய. சொல்ல முடியாத கதைகளும். என் வாழ்க்கையை மாற்றி அமைத்த முக்கியப் பங்கு டைரிக்கு உண்டு. இப்போதெல்லாம் என் டைரி... வெள்ளைக் காகிதங்களாகவே பல இனிய நினைவுகளை சுமந்திருக்கிறது.

பொக்கிஷமான சில நினைவுகளை நமக்காக சிலர் சுமக்கலாம்...அல்லது சுமை என விலக்கலாம். எவரும் நம் உள்ளாடும் உணர்வுகளை செவி மடுக்க்காவிட்டாலும்....Diary செவி மடுப்பாள். உற்ற தோழியவள்.

kOra kagaz tha

என்ற பாடல் கேட்கக் கிடைக்கும் போது diary பற்றிய நினைவுகளும் கோர்வையாக பல நிகழ்வுகளும் வந்து போகும். உடனிருந்த சில மனிதர்களும்.


பின் குறிப்பு: இப்பொழுதெல்லாம் டைரியில் "ஸ்ரீராமஜயம்" மட்டுமே எழுதுகிறேன். என்னைப் போலவே என் டைரியும் மாறிவிட்டாள்.

September 10, 2021

விநாயகர் ஸ்துதி


முழுமுதற் கடவுளே மூத்தோனே!
மோதகப்ரியனே குறை தீர்ப்போனே!
உயர் மறைகள் ஓதி; ஓங்கு புகழ் பாடி,
மாந்தர்கள் தொழுதிடும் மங்களரூபனே.
.
பிரணவத்தின் வடிவான தூயனே,
வேழ முகத்தோடு பேழை வயிறதிர
ஞாலம் வலம்வந்த தீரனே,
ஞானப்பழம் உண்ட சிவபாலனே!
.
பெருந்துயர்களை தினம் செவிமடுத்து
வருவினைகளை சடுதியில் களைந்து
தும்பிக்கையாலே தலைகோதி-நல்
நம்பிக்கையூட்டும் கணநாதனே!
.
தெருகூடும் முச்சந்தி முனைகளிலும் - சிறு
உருதாங்கி அரசாளும் உமைமைந்தனே!
அரசமரமே நீயமரும் அரியாசனம் -அப்பம்
பொரிபோதுமே உந்தன் பசி தீர்க்குமே!
.
மூஷிகத்தின் தேரேறி புலன் ஆண்டவன்-எங்கள்
சித்திக்கும் புத்திக்கும் பிரியமானவன்
எத்திக்கும் புகழ்பாடும் இறையானவன்-ஔவை
தித்திக்கும் பாவிற்கு தமிழ்தந்தவன்.
.
அருகம்புல் மாலையும் அணிசேர்க்குமே-எருக்கம்
பூவும் உன் தோள்சேர மணம்வீசுமே
ஏழைக்கும் வரமருளும் எழில்ரூபமே -சூழும்
பிறவிப் பிணிபோக்கி இருள் நீக்குவாய்!
🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹

September 04, 2021

வணக்கத்துக்குரிய ....




என்னுடைய ஆசிரியர்களில் முதலில் நினைவுக்கு வருபவர், எனக்குப் பாட்டு சொல்லிக் கொடுத்த சுந்தரி அம்மாள். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். தியாகராஜர் கிருதியாகட்டும், பஞ்சரத்ன கீர்த்தனைகளாகட்டும் முதலில் அதன் பொருளைக் கூறிவிட்டு, அதிலிருக்கும் பக்தியின் சாரத்தை மனதில் பதித்த பின்னரே  பாட்டு வகுப்பைத் துவங்குவார்.  பாடலோடு ஊடே பக்தியையும் ஊட்டியவர் என்ற தனிமரியாதையும் பாசமும் அவரிடம் உண்டு.

.

அடுத்து என் ஆங்கில ஆசிரியை. Ms.Louward . Shakespeareல் துவங்கி, அவர் பாடம் எடுக்கும் ஒவ்வொரு  கதையிலும் கவிதையிலும் இலக்கிய ரசனையை மாணவர்களுக்கு ஊட்டினார்.  எங்களை பாவத்துடன் நடித்தும் பேசியும் பழகச் செய்தார். ஆங்கில கவிதைகள் கதைகளின் பால் பெருந்தாக்கம் இந்த ஆசிரியையால் உருவானது.  ஆங்கில வகுப்பு என்றாலே எங்களுக்கெல்லாம் அவ்வளவு சந்தொஷமாக இருக்கும்.

ஆசிரியர்களில்  சிலர் என் மனதிலும் ஆன்மாவிலும் கலந்து நீங்கா இடம் பெற்றவர்கள். 

என்னுடைய அப்பாவும் அம்மாவும் கூடவே இருந்து வாழ்ந்து காட்டிய (காட்டும்) ஆசிரியர்கள். Contentment, Simplicity, Humility, Humanity, அத்தனைப் பேருக்காகவும் சந்தோஷப்படும் குணம்,  இன்னும் பலப்பல  நற்குணங்களை போதித்தும், அதன்படி வாழ்ந்தும் என் மனதில் பதியவைத்தவர்கள். September ஐந்து என் பெற்றோர் திருமண தினம். 

இவர்கள் மட்டுமா!!  நம்மைசுற்றி எத்தனை ஆசிரியர்கள்! தத்தாத்ரேயர்   ஏற்கனவே வழிகாட்டியதைப்  போல,   பாரில் உள்ள  ஒவ்வொன்றும் பாடம் கற்றுத் தரும்.  பறவைகளும், விலங்கும், புலன்களும், பஞ்ச பூதங்களும், பிரபஞ்சமும்,  பேரண்டமும்,.. இன்னும் எத்தனை எத்தனை ஆசிரியர்கள்! பட்டியலிட்டு முடியுமா!

எனக்கு தெய்வமும், குருவும், ஆச்சார்யருமான மஹாபெரியவா  "உபாத்யாயர்" என்ற ஸ்தானத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதால் இந்தப் பதிவில் அவரை  சேர்க்கவில்லை.

August 19, 2021





 பாலருந்தி பளிங்குத்தரையில் தவழும்போது
உனையே இறுகப் பற்றியிருந்தேன்.
தாவணி அணித்துவங்கும் முன்பே
உன்னைத்தான் கண்டெடுத்தேன்
பாடும் பாடல்களில் உனையே இசைத்தேன்
மனமேடையில் உனக்கெனவே நடமாடினேன்.
பற்றேதுமின்றியே உனைப் பற்றியிருந்தேன்
.
நாற்பது பேரும் மேலும் - தரதரவென
நாற்திசையும் பற்றியிழுக்க
சிதறிப் போனேன்.
உடைந்த துகளிலும்
உன் தங்கமுகமே தேடுகிறேன் ..
...
பாசமென்னும் புழுதி மறைக்கிறது
அகந்தையெனும் அழுக்கு அடைத்திருக்கிறது
ஆசையெனும் பூதம் சற்றும் உனை
அண்டவிடாமல் அப்புறம் தள்ளுகிறது
நீயின்றியே தேம்புகிறேன்
.
எங்கிருந்தாலும் வந்துவிடு
எனைக் கண்டெடுத்து உன்
பூங்குழலில் பதுக்கிவிடு
மயிற்சிறகால் மறைத்துவிடு
பிரபஞ்சப் பார்வையிலிருந்து அகற்றிவிடு
பிறவாமல் செய்துவிடு
பற்றிய திருக்கரத்தை உதறாமல்
முற்றிய பக்தியை எனக்களித்து - என்றும்
பிரியாமல் இருந்துவிடு
மற்றே என் காமங்களை
மிச்சமேதுமின்றி மாற்றிவிடு
.
©ShakthiPrabha

August 15, 2021

Short - nilaa kaaigiradhu (song)







Nila kaaygirathu (short version) Thanks to co-singer Sumesh for the invite 















February 01, 2021

சேரமான் பெருமான் (கழற்றி அறிவார்) நாயனார்



மகோதை என்று பெயர்கொண்டு திகழ்ந்த கொடுங்கோளூரில் சேரர் குலம் தழைக்க அவதரித்தார் கழற்றி அறிவார் நாயனார். பெருமாக்கோதை என்ற பெயருடன் விளங்கிவந்தார். அரசாட்சி செய்ய உதவும் பயிற்சிகள் எதையும் கொள்ளாமல் சிவ வழிபாட்டில் கவனம் செலுத்தினார். நந்தவனம் அமைத்து, மலர் கொய்து மாலைகள் சாற்றி, திருவெண்ணீரணிந்து இறைவனை பாடிப் போற்றும் பணியிலேயே மனம் செலுத்தினார். சேரகுலத்து அரசன் செங்கொற்பொறையன் அரச வாழ்வை துறந்து துறவரம் மேற்கொள்ளும் பொருட்டு கானகம் சென்றான். மந்திரிகளின் விண்ணபத்தின் பேரில், பெருமாக்கோதையார், அரச வாழ்வால் தம் தவத்துக்கு ஊறு விளையுமோ என முதலில் தயங்கினாலும், பிறகு சிவபெருமானின் ஆக்ஞை ஏற்று சேர அரியணையை அலங்கரித்து, சேரமான்பெருமான் ஆனார்.
அரியணை ஏற்று நகர் உலா வரும் நேரம், வண்ணான் ஒருவன் உடம்பில் வியர்வையுடன் கலந்து படிந்திருக்கும் உவர்மண் வெளுத்திருக்க, அது திருவெண்ணீர் சாற்றிய சிவனடியாரைப் போல் காட்சியளிப்பதென மிக்க மகிழ்ந்து மன்னன் யானையை விட்டு கீழிறங்கி அவனை வணங்கி சிறப்பித்தான். இப்படிப்பட்ட ஒரு சிவப்பேரருளானை அரசனாகப் பெற்றமைக்கு மக்களும் சிவபக்தர்களும் அமைச்சர்களும் பேருவகை கொண்டனர்.
இவர் அரசு செலுத்தும் காலத்தில் பகைமை அற்று சிவநெறி தழைத்தோங்கும்படி அரசாட்சி செய்தார். சோழரும் பாண்டியரும் நண்பர்களாயிருந்தனர். பல தேசத்து சிற்றரசர்கள் மிகுந்த மதிப்புடன் கப்பம் கட்டி வந்தனர்.
நாள் தவறாது தூப தீபம் சந்தனம், திருநீறு அளித்து அமுது படைத்து, சிறந்த முறையில் பூஜை செய்து வந்த பக்தியிலும் அன்பிலும் மெய்மறந்த சிவனார், அன்றாடம் பூஜை முடியும் தருணம் தனது கால் சிலம்பொலியின் திருவோசையை கேட்டு அரசர் மகிழுமாறு அருளினார். ஈசன் சிலம்பொலியை கெட்டதால் "கழற்றி அறிவார்" என்று பெருமைப்படுத்த பட்டார். (கழறுதல் என்றால் உறுதி செய்தல் என்று இவ்விடத்தில் பொருள் கொள்ளலாம்)
பாணபத்திரர் என்ற புலவரின் கனவில் தோன்றி சேரமான்பெருமானிடம் ஸ்ரீமுகம் (அறிமுகம்) கொண்டு வேண்டிய பொருள் பெற்றுக்கொள்ளும்படி அருளினார் ஈசன். அறிமுக ஓலையை கொண்டு சென்று மன்னரிடம் நிதி கேட்க, 'இறைவன் தன்னை பணித்த கருணை தான் என்னே' என்று பரவசம் அடைந்த மன்னன், நவநிதியும் யானையும் குதிரையும் தன் பொருளனைத்தையும் மூட்டை மூட்டையாய் கட்டி யானையிலும் குதிரையிலும் வாகனங்களிலும் தர முற்பட, மன்னனின் கொடையை வாழ்த்தி தனக்கு தேவையானவற்றை எடுத்துச் சென்றார் பாணபத்திரர். இன்னிகழ்ச்சி, மன்னர் ஈசன் மேல் கொண்ட பக்தி, அன்பு மற்றும் செல்வத்தின் மேல் கொள்ளாத அபிமானத்தை எடுத்துரைக்கிறது.
சிறப்பாக பூஜை நடந்த பின்னும் ஒரு நாள் சிலம்பொலி கேட்காதிருக்க, மிக துன்பப்பட்டு, தனது பிழையை பொறுத்தருள வேண்டி, பூஜையினால் சிவனை மகிழவைக்காத வாழ்வு தமக்கு வேண்டாமென தன் உயிரை மாய்த்துக்கொள்ள முனைந்தார். சிவனார் அதிவேகமாக சிலம்பொலியை தொடர்ந்து ஒலிக்கச் செய்து தடுத்தாட்கொண்டார். சுந்தரர் (சுந்தரமூர்த்தி நாயனார்) எனும் தன் தோழரின் இனிய தென்தமிழ் பாடல்களில் தமை ஒரு கணம் மறந்துவிட்டதாக இறைவன் உரைத்தார்.
இத்தகைய பக்தரைக் காணாத வாழ்வும் வீணே என நினைத்து சுந்தரரை தரிசிக்கும் பேராவல் கொண்டார் சேரமான். அரசாட்சியை அமைச்சர்களிடம் ஒப்படைத்து சுந்தரைக் காண புறப்பட்டார். வழியில் பல சிவஸ்தலங்களையும் தரிசித்து பாக்கள் இயற்றினார். சுந்தரரை திருவாரூரில் கண்டு மகிழ்ந்து இருவரும் பெரும் அன்பில் கட்டுண்டிருந்தனர். இறைவனை பாடி பக்தி செய்வதில் மகிழ்ந்திருந்தனர்.
சுந்தரரும் சேரமானும் பல சோழ, பாண்டிய சிவத்தலங்களை சேர்ந்து தரிசித்து, பாக்கள் இயற்றி துதித்தனர். சுந்தரர், சேரமான் விருப்பத்திற்கிணங்கி சேரமான் அரசாளும் கொடுங்கோளூரையும் அடைந்து அங்கு மன்னருடன் பல காலம் தங்கியிருந்த பிறகு, திருவாரூர் புறப்பட்டார். சுந்தரரின் பிரிவாற்றலைத் தாங்க முடியாத சேரமான் பெருமான் போகாதபடி தடுத்தும் சுந்தரர் கேளாததால், சுந்தரரை என்றும் மறவாத சிந்தையினராக அவர் ஆணைப்படியே கொடுங்கோளூரை சிறந்த முறையில் ஆட்சி புரிந்தார்.
பல காலத்திற்குப் பிறகு சுந்தரர் திருக்கையிலாயம் போக சிவபெருமானால் அனுப்பபட்ட வெள்ளை யானை மேல் ஆகாயவழியில் புறப்படுவதை அறிந்து, தாமும் தம் குதிரையின் செவியில் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து ஆகாய மார்க்கமாக சென்றதாக ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர். அரசர் கண்முன் ஆகாய வீதியில் மறைந்ததை கண்ட படை வீரர்கள் சிலர் உடன் உயிர் துறந்து அவர்களை பின் தொடர்ந்து கைலாயம் சென்றனர் என்றும் கருத்து. சுந்தரர் சிவனை வணங்கி நிற்க, பின்னே சென்ற சேரமானை "நாம் அழையாதிருக்க நீ எங்கனம் வந்தாய்" என பெருமானார் கேட்க, ஈசனிடமும் கொண்ட அன்பை உரைத்து "திருக்கைலாய ஞான உலா" பாடினார் சேரமான் நாயனார். "திரு வுலாப் புறம்' என்று
இன்னூலை பெரிய புராணம் குறிப்பிடுகிறது. பாடலை கேட்டு அகமகிழ்ந்த பெருமான் சேரமான் பெருமான் நாயன்மாரை தமது கணங்களுக்கு தலைவராக்கினார்.

January 20, 2021

பெரியது எது

 


பொம்மைகள்,
குச்சிமிட்டாய்,
பெப்பர்மின்ட்,
சின்னச் சின்னக் கனவுகளை
இறுக்கமாகப் பிடித்திருந்த
பிஞ்சுக் கைகளை
வலிக்க வலிக்க விரித்ததில்,
ஒவ்வொன்றாய் சரிந்தது.
பொம்மைக் கனவுகள் வீழ்ந்து போனது....
சும்மா இருக்கும் சுதந்திரக் கைகளில்,
பெரிய குறிக்கோள்
பெரிய கனவுகள் பெரிய இலக்குகள்
எல்லாமே உயர்ந்ததாய் பெரியதாய்
பட்டியலிட்டு படாடோபமாக ஏறிக்கொண்டன.
அவை கூட ஒரு நாள் வீழுந்து போகுமோ!
அல்லது நிலையில்லாதொரு சுழற்சியில்
வீழ்ந்தும் எழுந்தும்...
வீழ்ந்தும் எழுந்தும்
மீண்டும் மீண்டும்..
...மீண்டும் மீண்டும்...

கண் கெட்ட பின்னே....

 


ஈடு செய்ய முடியாத இழப்பு...
ஏடு சொல்லித் தராத பாடம்.
மூடனாய் மயங்கிய மனமும்,
கேடு வரும் என்று தெரிந்தே
ஓடிய குணமும்,
மேடும் பள்ளமும் சூழும் பாதையில்
தேடிய சுகமும், சுவையும்,
ஆடி அடங்கிய பின்பு
வாடி நிற்பதென்ன! பின்
கூடிக் கூத்தாடும் கூட்டத்தை
சாடி உமிழ்வதென்ன!

Clueless

 


Maze of unanswerd questions..
assumptions, evaluations..
clogging my muddled mind
.
Was I mistaken?
or Were you?
What went wrong?
Was anything ever right at all?
.
searching the answers
amidst polluted surroundings..
biased opinions...
.
I may never find the answer,
Questions never cease to exist.
.
Paranoid of future
I lay,
closed in a dark cubicle,
depressed and lifeless..
to be lit by a ray of hope!
.
To be cherished,
kissed..
To shine like a queen
in the kingdom of praise.
.
In a fantasy world
I live, laugh, and
exhaust my existence...
In delusions
I mingle, merge and collapse.
.
Thoughts dwindling as pointless nothing
to become pointless nothing...

எங்கள் நடிகர் திலகம் - சிவாஜிகணேசன்

 


எளிய சொற்கள் கிறுக்கி வைக்கும்
குறையறிவுள்ளப் பேதை நான்
வலிய சொல்லும் தலைவணங்கி ஏற்கும்
சொல்வளம் செழிக்கும் மேதை நீ
*
ஏட்டில் வடிக்காத எண்ணங்களையும்
கண்களால் தீட்டிய கலைஞனே! - உனை
கவிதையாக்கத் துணிந்து - பின்
காவியம் அன்றோ நீ என உணர்ந்து,
சொல்லில் சிக்காமல் நழுவும் உன்
சாமர்த்தியத்தையும் சேர்த்தே ரசிக்கிறேன்.
*
இறைவன் அளித்த வரமோ!
கலையுலக நிலவோ! சிகரமோ!
உன் திறமைக்கு உவமை சேர்க்க மறந்து
செந்தமிழ் மொழியும் மௌனம் கொண்டதோ!
*
கள்வன், கணவன், காதலன்,
கொற்றவன், பெற்றவன், மற்றவன்,
நல்லவன், சற்றே பொல்லாதவன்,
தலைவன் அவன் போற்றும் இறைவன்,
இறைவன் அவன் தேடும் தொண்டன்.
இன்னும் எண்ணற்ற முறை பிறந்தாய்..
வீழ்ந்தும் எம் நெஞ்சத்தில் நிறைந்தாய்.
கணேசன் என்பதை மறந்து
சிவாஜியென உனை செதுக்கிக் கொண்டாய்.
நடையும், அதைத் தாங்கும் உடையும்,
சிரிப்பும் பொல்லாத கண்-விரிப்பும்
துடிப்பும் கம்பீர உச்சரிப்பும்
பல கோடி நெஞ்சங்களில் நின்று வாழும்.
உன் இமாலய வெற்றியின் பெயர் கூறும்.
.



மற்றே நம் காமங்கள் மாற்றேலொரெம்பாவாய்

 



ஏறிவிட்டதாக இறுமாந்திருக்கும் போது
எங்கோ பிறழ்கிறேன்
சற்றே நெகிழ்கிறேன்
இறக்கைகள் முளைக்க - என்
இதயம் இழக்கிறேன்
.
கால்கள் தடுமாற
கைகள் நடுங்க
பிடி தளர்கிறேன்
கீழே கீழே கீழே
விழுந்து கொண்டே....
.
பரந்தாமா!
என் பிடி தளர்ந்தாலும்
நீ எனை இறுகப் பற்று.
புத்திகெட்டு மயக்கத்தில்
நான் உனைவிட்டு அகன்றாலும்
சட்டென தூர விலகாதே
சற்றும் எனை விலக்காதே

விரயம்




நீ பகிர்ந்த முகவரியை
உதறித் தள்ளினாலும்
உனது முக வரிகள்
அனுமதியின்றி
அத்துமீறி நுழைந்து
எனது அகமெங்கும்
தமை எழுதிக் கொண்டன
.

தொலைத்த
முகவரி வேண்டியே
எங்கும் அலைகிறேன்
நீ சுமந்த
முக வரிகளின்
தடயங்கள் தேடுகிறேன்
என் முக வரி
மண்ணில் புதைவதற்குள்...
குரல் கொடு!
-