December 31, 2020

திருப்பாவை பாசுரம் 16 - பாசுரத்தில் தேடிய முத்து

நுழைவாயில்

Rangoli Credit : Suganthi Ravi :: Photo Source: Internet






இறைவனைப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் நோன்பு நோற்கும் பாவையர் அனைவரும், கோவில் வாயிலை அடைந்தனர். தலைவனாம் இறைவனின் இல்லத்தை நோக்கிய பயணம். பரமாத்வும் ஜீவாத்மாவும் இணைவதென்பது படிப்படியாக நிகழவேண்டியது.
.
நமது உள்ளத்தே எழும் தடைகள், இல்லத்தில் எழும் இடர்கள், சுற்றுப்புற சூழலால் வரும் தாமதங்கள், இவற்றை கடக்க வேண்டியுள்ளது. அப்படியே கடந்தாலும், அருள்சுரக்க வேண்டுமென்றால் தெய்வங்களை அடைய தேவதைகளை வெண்டி நிற்கவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
.
தேவதா ஸ்வரூபங்கள் தெய்வத்துக்கு பணி செய்து கிடப்பவர்கள். இறைவனின் தலையாய பக்தர்கள். இறைவனின் தரிசனத்துக்கு இவர்களிடம் பணிவுடனும் அன்புடனும் அனுமதி வேண்ட வேண்டும். வாயிலை அடைந்த பெண்கள் வாயிற் காப்பானிடம் இனிமையாக உரையாடிய செய்தியை இப்பாசுரம் சொல்கிறது.
.
தோரணங்கள் அசைந்தாடும் அழகிய இல்லத்து வாசல். தலைவனாம் இறைவனின் இல்லம். எப்படிப்பட்ட இல்லம்! மணிகள் பொருந்திய கதவைத் தாங்கிய இல்லம்! கதவுக்கு மணிகள் ஏன்? நமது எளிய வீடுகளுக்குக் கூட அழைப்பு மணி இருக்கிறதே. அவன் வீடு என்பது பரமபதம். அப்பரமபதத்தை கோடானகோடி பக்தர்கள் அனுகூணமும் அணுகிக் கொண்டே இருக்கும் பெருவீடு. இல்லத்து வாயிலில் அனேக மணிகளைத் தாங்கியிருக்கும் மணிக்கதவு. ஒவ்வொரு மணியும் இறைவனை அழைக்கக் கூடிய அற்புத கிண்கிணிகள். தொட்ட மாத்திரத்தில் இறைவனின் கவனத்தை ஈர்க்ககூடியது கதவு. அந்த மணிக்கதவோ மூடியிருக்கிறது.
.
அனுமதியின்றி அதனுள் நுழைய முடியாது. கதவைத் தொடக் கூட சாத்தியமில்லை. பெண்களெல்லாம் தங்களுக்கு மாதவனை முன்னமே தெரியுமென்று எடுத்துரைக்கிறார்கள். மாயங்கள் செய்பவனாம், நீலமணி வண்ணனாம் எங்கள் கண்ணன் நேற்றே வாக்களித்திருக்கிறான். பறைமுரசை எளிய ஆயர்சிறுமியரான எங்களுக்கே பரிசளிப்பதாக சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான் தெரியுமா! எங்களை அனுமதியளியுங்கள். நம்பிக்கையுடன் வந்திருக்கும் எங்களுக்கு இல்லையென்று அவசரப்பட்டு மறுத்து, அவனை வாக்கு தவறச் செய்யாதீர்கள். புனித நீராடி பரிசுத்தமாக வந்திருக்கும் நாங்கள், சுப்ரபாதம் பாடி அவனைத் துயிலெழுப்ப வந்துள்ளோம், நிலைக்கதவை திறவுங்கள்.
.
திறக்கட்டும். காத்திருப்போம்.
****
நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ!
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!
****

December 30, 2020

திருப்பாவை பாசுரம் 15 - பாசுரத்தில் தெடிய முத்து

பக்தர்களுடன் இணைவோம்


Rangoli Credit : Suganthi Ravi :: Photography source: Internet







பகவானுக்கே பணி செய்து கிடக்க நமக்கு தாகமிருக்கிறது. ஆனாலும் லோகத்து இச்சை விடவில்லையே! இங்கே இந்தப் பெண்ணைப் பாருங்களேன்! அனைத்து தோழியரும் திரண்டு வந்து எழுப்புகின்றனர். அவள் ஒன்றும் ஆழ்ந்து உறங்கவில்லை. ஆழ்நிலைத் தூக்கத்திலிருந்து விழித்து விட்டவள். உறக்கம் தெளிந்தாலும் மயக்கம் தெளியவில்லையே!
.
கிழக்கும் வெளுக்கத் துவங்கி விட்டது. பாவை நோன்பு நோற்கும் எல்லா ஆயர்ப் பெண்களும் திரண்டு வந்துவிட்ட நிலையில், மயக்கம் தெளியாத நிலையில் இருக்கும் இந்தத் தோழி ஒரு வாயாடிப் பெண். கோபியர் பாடும் தேமதுரப் பாசுரமும், இதமாக உறங்கிக் கிடந்த செவிக்கு, பளீரென்ற கூச்சலாக செவிப்பறையில் தெறிக்கிறது. மார்கழிப் பனியைப் போல சில்லென்று ஊடுருவுகிறது.
.
அடடா! சில்லென்று அழைக்காதீர்கள். இதோ வருகிறேன், என்று சற்றே படபடப்புடன் கூடிய துடுக்குத்தனமான பதில். வாயாடிப் பெண்! இப்பெண் எழுந்தும் விட்டாள், நன்று பதிலளிக்கிறாள். புறப்படுவதைத் தான் தள்ளிப் போடுகிறாள்.
.
உன் துடுக்குத் தனத்தையும் நீ கூறும் சாக்குப் போக்குக் கதைகளையும் நாங்கள் அறிவோம். அவர்கள் வம்பிழுக்க, நீங்கள் தான் வாய்ச்சொல் வலிமையுடையவர்கள். எனக்கென்ன, பெசவே தெரியாது எனப் பேச்சை நீட்டுகிறாள்.
.
இன்னும் வேளை வரவில்லை சிலருக்கு. இவளுக்கும் அப்படியே, தட்டிக் கழிக்கிறாள். சோம்பலால் தள்ளிப் போடுகிறாள். நேரமாகிறதே, சீக்கிரம் வா என்று உற்சாகப் படுத்தும் பக்தர்கள். எல்லாரும் வந்தாகிவிட்டதா என்ற எதிர்வினா விடுக்கிறாள். ஆம் நீயே வந்து கணக்கெடுத்துக் கொள்ளேன்! உனைத் தவிர உலகமே இங்கு இருக்கிறது, நீ ஒருத்தி தான் இன்னும் வராமல் அடம் பிடிக்கிறாய்!
.
வலிமை மிகுந்த குவலயாபீடம் எனும் யானையை வென்றவனை, பகைவர்களை அழிக்க அற்புத லீலைகள் புரியும் மாயவனை, மாதவனைப் பாடுவதே உன் வேலையாக இருக்க வேண்டும். வேறென்ன வேலையுனக்கு! புறப்பட்டு வா. அவள் அடம்பிடிப்பது இனி செல்லுபடி ஆகாது.
.
கோதை நாச்சியார் முதலில் ஆழ்ந்து தூங்குபவர்களை தட்டி எழுப்புகிறாள். பின்னர் அரை மயக்கத்திலிருப்பவர்களுக்கும், விழித்தும் கூட சோம்பலுக்கும் ஆசைக்கும் ஆட்பட்டு உய்ய மறுக்கும் பக்தர்களுக்கும் பொறுமையாக அழைப்பு விடுக்கிறாள்.
.
பக்தனுக்குத் தான் எத்தனை கருணை. தான் மட்டும் உய்வதை ஒருபோதும் அவன் விரும்புவதில்லை. உலகமெலாம் உய்யவேண்டும். பகவான் நாமத்தை ஊரெல்லாம் பரப்பி உச்சரிக்கத் தூண்டுவான். எல்லோரும் இன்புற்றிருக்க நினைக்கும் பரந்த குணம். இதுவே அவர்களை இறைவனை நோக்கு விரிவடைவதற்கான சாட்சி.
.
இதோ எல்லோருமாக கிளம்பிவிட்டனர். நாமும் சேர்ந்து செல்வோம்.
****
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயானை பாடு ஏல் ஓர் எம்பாவாய்.

***

December 28, 2020

திருப்பாவை பாசுரம் 14 - ( பாசுரத்தில் தேடிய முத்து )

தடக்கையனை வணங்குவோம்


Photography source: Internet :: Rangoli Credit : Suganthi Ravi








புழக்கடையில் தோட்டம் என்பதெல்லாம் சென்ற தலைமுறையுடன் கனவாகி விட்ட விஷயம். ( புழக்கடை என்ற தூய தமிழ்ச் சொல்லை இன்றும் பலர் கையாளுகின்றனர். ) அந்த புழக்கடையிலுள்ளது எழில் மிகுந்த வாவி, அதாவது குளம். அக்குளத்தில் சூரியனைக் கண்ட தாமரை மலர்ந்து, சந்திரனைத் தொலைத்த அல்லி மூடுவதெல்லாம் ராஜாகாலத்து அரண்மணையின் நந்தவனக்காட்சி போல விரிகிறது. புழக்கடையே துர்லபம். அதில் வாவியும் மலர்களும் இனி கற்பனையில் மட்டுமே.
.
காவியுடை தரித்த அம்முனிவர்கள் வெண்மையானவர்கள். தூயத் துறவிகள். துறவிகளில் ஏறக்குறைய பலரும் தூய்மையாக இருந்த காலமது. சங்கு ஊதி தரணிக்கு விடியலை உணர்த்தப் புறப்பட்டு போகின்றனர். புழக்கடை வாவியில் அல்லி மூடி, தாமரை மலர்ந்து விட்டது. எல்லோருக்கும் முன்னமே எழுந்து, அனைவரையும் தான் எழுப்புவதாக இனிக்க இனிக்க பேசிச் சென்றவள், சொன்ன பெருமை மறந்து, நாணமற்றவளாகிப் போனாள்.
.
வாவியிலுள்ள தாமரையைப் போன்ற பங்கஜ நேத்திரத்தை உடைய கண்ணன். சங்கும் சக்கரமும் ஏந்தும் பெரிய கையுடையோன். ஏன் பெரிய கைகள் ? அந்தக் கைகளே நமை ரக்ஷிக்கின்றன. தடுத்தாட்கொள்கின்றன. கோடான கோடி ஜீவராசிகளை பராமரிக்க, அணைத்து அபயமளிக்க, சங்கும் சக்கரமும் தாங்கி, நமை நோக்கி நீளும் பெரிய கைகள் அவனுடையது. அவனைப் பாட எழுந்து வாராய் தோழியே.
*****
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்
*****

December 27, 2020

திருப்பாவை பாசுரம் 13 - பாசுரத்தில் தேடிய முத்து

அசுரர்களை வீழ்த்தும் பரந்தாமன்



Rangoli Credit : Suganthi Ravi ;; Photography source: Internet





தேவர்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் அரக்கர்களால் பெரும் தொல்லை. முந்தைய யுகங்களில் அரக்கர்களுக்கென்று தனி உலகம் இருந்தது. அடையாளம் இருந்தது. சத்திய யுகத்தில் அரக்கர்கள் வேறு லோகங்களில் வசித்ததாக சொல்லப்படுகிறது. திரேதா யுகத்தில் இதே பூலோகத்தில் வெவ்வேறு இடங்களில் வசித்ததாகவும், துவாபர யுகத்தில் ஒரே குடும்பங்களிலே அசுர-சுர குணங்களை உடையவர்களாகவும் இருந்தனர் என்றும் கருத்து.
.
கலியுகத்திலோ அரக்கர்கள் ஒவ்வொரு ஜீவனுள்ளும் அரூபமாக, நமது குணங்களாக, வியாபித்திருக்கிறார்கள். கோபம், மோகம், மதம், மாத்சரிய குணங்களின் வழியே நம்மை கட்டுப்படுத்துகிறார்கள். ஒவ்வொன்றும்
நாம் வெல்ல வேண்டிய பெரும் அரக்க வடிவங்கள்.
.
நாரை வடிவில் இருந்த பகாசுரன் எனும் அரக்கனின் வாய்பிளந்து கிழித்தெறிந்தான் கண்ணன். ராவணனின் தலையை கிள்ளி எறிந்தான் ராமன். கண்ணனும் ராமனும் நாராயணன் வடிவங்கள். ராவணன் அகங்காரத்தின் உருவம். பகாசுரன் அஞ்ஞானத்தின் வடிவம். இவற்றை நாமாக வெல்வது ஒருபுறமிருக்க, நாராயணனான ஆதிமூலனை, சரணம் என்று திரௌபதியைப் போல் அழைத்தால், அரக்கர்களை பிளந்தழிக்கவும், கிள்ளி எறியவும் உடனே நம் உதவிக்கு வருவது திண்ணம்.
.
வியாழன் மறைந்து விடிவெள்ளி முளைத்தது. இனி விடியல் துவங்கும். பறவைகள் அந்த நற்செய்தியை பாடிக் கொண்டாடுகின்றன. விடியலுக்கான பொழுது என்று ஆழ்மனம் உணர்ந்திருக்கிறது. ஆனாலும் சற்றே
மலர்ந்த கண்ணில், அரைகுறை மயக்கமென தூக்கத்தின் மிச்சம் விட்டு விலகாமல் பற்றியிருக்கிறதே! அழகுப் பதுமையென உறங்குகிறாள். பதுமை என்ன செய்யும்? அதன் அறிவுக்கண் திறக்காததால், யாருடைய சங்கத்தில் இருக்கிறதோ அவரின் கைப்பாவையாக மாறும். ஆயர்க் குலப்பெண் பதுமையைப் போன்ற அழகுடையவள் அரைக்கண் மலர்த்தி உறங்குகிறாள். தோழிகளெல்லாம் நற்சொற்கள் உரைத்து, இறைவன் புகழ் பாடி அவளை எழுப்புகின்றனர். அவள் புண்ணியம் செய்தவள். சத்சங்கத்தில் இணைந்துவிட்டாள்.
******
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தே லொரெம்பாவாய்
*******

December 26, 2020

திருப்பாவை பாசுரம் 12 - ( பாசுரத்தில் தேடிய முத்து )

 பாசுரத்தில் தேடிய முத்து (12)

ஸ்ரீ ராமகீர்த்தனம் பாடுவோம்
.
(Picture source: Internet) (Rangoli credit : Suganthi Ravi)
.




பொன்னும் பொருளும் மட்டுமல்லாது, நஞ்சை புஞ்சை நிலங்களும், வேளாண்-தொழிலுக்கு உதவும் பசுக்களும் எருமைகளும் செல்வச் செழிப்பை குறிப்பாக உணர்த்த உதவுகின்றன. நிறைவான செல்வமாம் பசுக்களும் எருமைகளும் நிறைந்துள்ள வீட்டு மக்களாக இருந்தால்,
சீமான் வீட்டுப் பிள்ளைகள் தானே!
.
எருமைகள் தங்கள் கன்றுகளை நினைத்த மாத்திரத்தில் பால் சுரக்கிறது. செழுமையாக வளர்க்கப்பட்ட எருமை. பால் சுரந்தோடியதால் வீட்டைச் சுற்றி நீராலன்றி பாலால் சேறாகிக் கிடக்கும் செல்வந்தரின் செல்லத் தங்கை.
எருமைகள் சொரிந்த பால் இல்லத்து வாசலை சேறாக்குகின்றது. நிலையாக நின்றிட முடியாமல், சேறு வழுக்கிவிடும் என்றஞ்சி வாயிற்கட்டையை பற்றியிருக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். மார்கழிப் பனிப்பெய்து அவர்கள் தலையெலாம் குளிர்ந்தேவிட்டது. இவளோ இன்னும் எழுந்தபாடில்லை. தமது அசௌகரியங்களையும் மீறி, இன்னொருவரின் நலனில் அக்கரை கொண்டுள்ள ஆயர்க்குலப் பெண்கள். எத்தனையோ இடர்பாடுக்களையும் தாண்டி கடைபிடிக்கப்படும் நோன்பு.
.
புள்ளினம் எனும் பறவைகள் கூவியாகிவிட்டது. சங்கு ஒலித்தது. ஆனைச்சாத்தன் பேசரவமும் துவங்கிற்று. எருமைகள் பொறுமைக்கு உதாரணமானவை. அவையும் மிகப் பொறுமையாக மேய்ந்து வந்தாகிவிட்டன. பின்னர் தமது கன்றை நினைத்து பால்சுரந்து, அது வாசலிலும் முற்றத்திலும் ஆறாக வழிந்தோடி சேறாகவே ஆகிவிட்டது. அவ்வளவு நேரமும் இவள் எழுந்திருக்கவில்லை! இவர்கள் கூவிக் கூவி அழைப்பதை அனைத்து மக்களும் அறிந்து அவர்களும் வாசலில் கூடிவிட்டனர். யாருக்காகவோ விடுக்கப்படும் அழைப்பு வேறு யாரையெல்லாமோ எழுப்பும் அற்புதமிது!
.
இலங்கைத் தலைவனை கடுஞ்சினத்தினால் வீழ்த்திய ஸ்ரீராமனது புகழை இவர்கள் கீர்த்தனை செய்கிறார்கள். அதைக் கேளாமல் அவள் உறங்குகிறாள். இள நங்கைக்கு ஆழ்ந்த உறக்கம்! இன்னும் எழவில்லையாம். கண்டிப்பாக எழுந்து விடுவாள்.
*******
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
*******

திருப்பாவை பாசுரம் 11 - ( பாசுரத்தில் தேடிய முத்து)

பக்தர்களின் உறக்கம்

Rangoli Credit : Suganthi Ravi;; Picture Source: Internet




குற்றமற்ற கோபாலர்கள் குலத்தில் பிறந்த செல்வச் சீமாட்டி. குணசீலர்களின் பரம்பரை. பெரியோர்கள் சிறந்த குணவான்கள். பசுக்களும் கன்றுகளும் ஜீவனைக் குறிக்கும். அதை மேய்ப்பவன் இறைவன். நமை கண்காணிப்பவன். அப்படிப்பட்ட இடையர் பரம்பரை. வீரப் பரம்பரையாம். பசுக்கூட்டங்களை நல்முறையில் மேய்த்தவர்கள். தமது ஆன்மாவை நல்முறையில் வழி நடத்திச் சென்ற குணவான்கள். புகழ்மிக்க அத்தகைய குடியில் பிறந்த சுவர்ண கொடிபோன்றவள். இவளே ஒரு பாகவதப் பெண்.
.
மயில் போன்ற சாயலும், மெல்லிடையும் உள்ள அழகி. மயிலும் பாம்பும் கூட பெருமாளிடம் மிகுந்த அன்னியோன்னியம் உடையவை. இவளும் உள்ளத்திலும் சிறந்தவள், உருவத்தாலும் செயலாலும், பகவானுக்கு உகந்ததொரு நடத்தையுடையவள்.
.
எத்தகைய குணவானும் சிறப்புடையவனும், சமயத்தில் மோக-மாய வலையில் சிக்குவதைப் போல், சிறந்த புகழுடைய இப்பெண் தூங்குகிறாள்.
.
கண்ணைன் கார்மேக வண்ணனின் பெயரைப் பாடக் கேட்டும் நித்திரை கொண்டுள்ளாயே! அசையாமலும் பேசாமலும் இருக்கும் செல்வச் சீமாட்டியே, இந்த உறக்கம் தகுமா! இனி துயிலெழுதலே முறையன்றோ!
.
***
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம்ஒன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வபெண்டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
***

திருப்பாவை பாசுரம் 10 - ( பாசுரத்தில் தேடிய முத்து )

சொல்லும் செயலும்


Rangoli Credit : Suganthi Ravi;; Picture Source: Internet



மனம் என்னென்னவோ விரும்புகிறது. வாயும் தயக்கமின்றி அதைச்சொல்லி விடுகிறது. ஆனாலும் வைராக்கியம் வர மறுக்கிறது. சொன்னசொல் காப்பதில்லை. துயரம் வரும் போது பகவானை நாடுகிறோம். உனையன்றி வேறு யாரையும் நினையேன் என்றே சத்தியமும் செய்கிறோம். துயர் நீங்கி மகிழ்ச்சிப் பெருகும் போதோ, மகிழ்ச்சியிலே திளைத்துப் போகிறோம். உலக இன்பம் எனும் புதைகுழியில் விழுவது தெரிவதில்லை, மூழ்குவது உணர்வதில்லை. சொன்ன சொல்லையும் காப்பதில்லை.
.
இங்கேயும் ஒருத்தி, சொன்ன சொல் மறந்து
துயில்கிறாள். நோன்பு நோற்று பணி செய்திருப்பேன் என்றாள். அவனுக்காக இல்லாவிட்டாலும் தன் பொருட்டு நோன்பு நோற்று சுவர்க்கம் புகுவேன் என்றெல்லாம் அலங்காரச் சொற்கள் சொன்னாலும் உறக்கம் அவளை மீறி ஆட்கொண்டுவிட்டது.
.
நோன்பு நோற்பது நமக்காக. நாம் பக்தி செய்வதும் நம் நலனுக்காகவே. அவனைப் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும், அதனால்
அவன் பாதிக்கப்படுவதேயில்லை. முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவனவன். நமது பிம்பத்தையே அவன் பிரதிபலிக்கிறான். நாம் பணிந்தால், அவன் செவி சாய்ப்பான். இவள் தூங்கிக் கொண்டிருப்பதால் தோழிகள் அழைப்பிற்கு பதில் பேசவில்லை. வாயிற்கதவை திறக்கவில்லை.
.
அளவிடமுடியாத பெரும் தூக்கத்தை உடையவளே! அந்த நாராயணன் ஸ்ரீராமனாக அவதரித்து, கும்பகர்ணனை ஆட்கொண்ட போது, கும்பகர்ணன் தன் தூக்கத்தை உன்னிடம் விட்டுப் போனானோ என்று கரிசனத்துடன் கிண்டலும் செய்கிறார்கள் ஆயர்க்குலப் பெண்கள். அழகிய ஆபரணத்தைப் போன்று பக்தர் குழாமுக்கு எழில் சேர்ப்பவளே, உறக்கம் தெளிந்து வந்து கதவைத் தாள்திறவாய்!
.
கும்பகர்ணனை விஞ்சும் நம்முடைய தூகத்தை அந்த ஸ்ரீராமனே வீழ்த்தட்டும்.
****
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற
அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
****

திருப்பாவை பாசுரம் 9 - (பாசுரத்தில் தேடிய முத்து )

ஏமப் பெருந்துயிலில் மந்திரப்பட்டோமே


Picture Source: Internet ;; Rangoli Credit : Suganthi Ravi





வளங்கள் நிறையப் பெற்ற மாளிகை. அதில் வளர்ந்த செல்லச் சிறுமி. மணிமாடத்து சுற்றத்தில் விளக்கு எரிகிறது. நறுமணப்புகை நாசியைத் துளைக்கிறது. இனிய வாழ்வு அள்ளித் தந்த கிறக்கத்தில் மேலும் உறக்க்திற்கு ஆட்படுகிறாள்.
.
இன்பம் பெருகப் பெருக, அது தரும் மாயையில் கட்டுண்டு கிடப்பதும், ஜனனமெடுத்த நோக்கத்தை மறந்தே போவதும் நிகழ்வது தானே!
.
மாமன் மகளே! மணிமாடத்து செல்வ மாளிகையின் மணிக்கதவை திறவாயோ! அடடா! பெரியவர்கள் பக்கத்திலிருந்தும் ஏன் உறங்குகிறாள் ? பெரியவர்களே நல்ல புத்திமதிகள் சொல்லி அவளை எழுப்ப மாட்டீர்களா! நற்பாதையைக் காண்பிப்பது பெரியோரின் கடமை. மாமி அவளை எழுப்பு.
.
அவள் ஊமையா? இவ்வளவு கேள்வி கேட்கிறோம். பதில் சொல்ல மறுக்கிறாளே! இல்லை செவிடாக இருக்கும். செப்பிய எதுவும் செவிக்கெட்டவில்லை. ஒருவேளை சோம்பலுக்கு உட்பட்டாளோ! மந்திரத்தால் கட்டுண்டது போல் மயக்கத்தில் சிறையுண்டிருக்கிறாளே! மாதவனே வைகுந்தனே என்றவன் நாமங்களைச் சொல்லி உய்யவேண்டுமென்று உணர்வாளோ! அவளை எழுப்புங்களேன்!
.
எழுவது நமக்குத் தான் சிறப்பு. நாமாகவே எழ முயல்வது அரிது. நாச்சியாரே கருணை கொண்டு எழுப்பும் போது உறக்கத்திலிருந்து விடுபடுவது கூட எளிதாகிறது. இனியதாகிறது. எழுவோம்.
.
*****
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.
*******

December 23, 2020

திருப்பாவை பாசுரம் 8 - (பாசுரத்தில் தேடிய முத்து)

கிழக்கும் வெளுத்தது!

Picture Source: Internet ;; Rangoli Credit : Suganthi Ravi







நாச்சியார் தாயாருக்கே உரிய தயையுடன், கொஞ்சிக் கொஞ்சி எழுப்புகிறார்கள். எத்தனை வகையான மனிதர்கள்! எப்படியெல்லாம் உறங்குகிறோம்! ஆழ்ந்து உறங்கும் அழகிய நங்கை, கோதுகலமானவளாம். களிப்புடைய பாவையவள்.
.
கிழக்கு வெளுத்தேவிட்டது. எருமைகளும் மேய்ச்சலுக்கு வந்துவிட்டன. நீராடித் தூய்மை பெறும் எண்ணத்துடன் பலர் தயாராக உள்ள நிலையில் அவர்களையெல்லாம் காக்கச் செய்து, உனையே எழுப்ப வந்தோம். நீ இன்னும் உறங்கலாமா? நேரமாகிப் பொழுதும் போய்க்கொண்டே இருக்கிறதே!
.
கேசி எனும் அரக்கனை அழித்தவனவன். கேசி என்ற அரக்கன் மாயவடிவங்கள் எடுக்க வல்லவன். மாயாவிகளின் ரூபங்களை உணர்ந்து நொடிப்பொழுதில் மாய்க்க பராமாத்வினால் மட்டுமே முடியும். கேசியின் வாயைப் பிளந்த கேசவன். கம்சன் ஏவிய மல்வீரர்களை அழித்தவன். எப்பேர்ப்பட்டவன் என்று உணர்ந்தாயா! உனக்குள் உன்னையும் அறியாமலே பலவித வடிவமெடுக்கும் அரக்க குணங்களை க்ஷணத்தில் சாய்க்க வல்லவன்.
.
மாவீரன் என்று மட்டுமா நினைத்தாய்! தேவாதி தேவனவன். அவனை வணங்கினால் நம் குறைகளை களைந்து பெரருள் சித்திக்கும். எழுந்திரு. அவனைப் பாடிப் பணிவோம்.
.
******
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
******

December 22, 2020

திருப்பாவை பாசுரம் 7 - ( பாசுரத்தில் தேடிய முத்து )

நாயகப் பெண்பிள்ளாய், பேயுறக்கம் தகுமோ!


Rangoli Credit : Suganthi Ravi;; Picture Source: Internet




நாயகப் பெண்பிள்ளாய் என்று விளிக்கிறாள். தலை சிறந்தவளே! சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் நீயே பேயுறக்கம் கொள்ளலாமா? பேய் உறக்கம் என்பது விடிந்தபின் உறங்கும் உறக்கம். நள்ளிரவில் விழித்திருந்து, அதிகாலை அழைப்புக்கு நேரத்தே எழாத உறக்கம்.
.
பிரகாசமான முகத்தை உடையவளாம். கெஞ்சியும் கொஞ்சியும் ஆண்டாள் எழுப்புகிறாள். நீயே உதாரணமாகத் திகழ வல்லவள், நீ பேயுறக்கம் உறங்கலாமா?
.
இறைவனிடத்தே அபிமானம் கொண்டவர்களுக்குரிய லக்ஷணங்களும் அடையாளங்களும் சிலரிடத்தில் மிகுந்திருக்கும். ஆண்டவனிடம் மாறாத சினேகம் கொண்டு இலக்கணமாகத் திகழ்பவர்கள். இன்னும் முயன்றால் எழுந்துவிடுவார்கள். ஏனோ சமயத்தில் பேயுறக்கம் ஆட்கொள்கிறது.
.
வலியன் குருவிகள் கீசுகீசென்றே இனிய ஒலியெழுப்பி ஒன்றோடொன்று அளவளாவுகின்றன. நமை எழுப்ப முயலுகின்றன. இடைக்குலப் பெண்களும்
மங்கல நாண் ஒலியெழுப்ப, மத்து கொண்டு தயிரைக் கடைகின்றனர்.
.
பாலைப் பதமாகத் தயிராக்கி, அதனைக் கடைந்து வெண்ணை திரண்ட பின் மீதம் இருப்பது மோர். மோர் என்பதே பரமாத்ம நிலையைக் குறிக்கும். அதுவே இறுதி நிலை. இன்னொன்றாக மாற்றமடையாத பிறவியற்ற உயர்ந்த நிலை. அதனை உணர்த்தும்படி மங்கல ஒலி எழுப்பி, உறங்கும் ஜீவனை எழுப்புகின்றனர் என்ற பொருளிலும் உணரலாம்.
.
கேசவா, நாராயணா என்று நாங்கள் பாடுகிறோமே!! கேட்டும் நீ உறங்கலாகுமா! எழுந்திரு. உன் கூட்டுக் கதவைத் திற.
//(பரமாச்சாரியார் மோர் என்ற உதாரணம் எவ்வாறு உயரிய நிலையைக் குறிக்கும் என்று விளக்கியுள்ளார்)//
.
*******
கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்.
******

December 21, 2020

திருப்பாவை பாசுரம் 6 - (பாசுரத்தில் தேடிய முத்து )

விழித்தெழு.. பிள்ளாய் விழித்தெழு


Rangoli Credit : Suganthi Ravi;; Picture Source: Internet




பறவைகளுக்கு அலாரம் தேவையில்லை. நேரத்திற்கு ஓய்வெடுத்து, அதிகாலை இனிய நாதம் எழுப்பி, வைகரை விடியலை கானம் பாடியே வரவேற்கும். உறங்கும் நமக்குத்தான் பொழுதே தெரிவதில்லை. ஆழ்ந்த உறக்கம். பிறப்பு-இறப்பு சுழற்சியில் மாட்டிக்கொண்டு எழும்ப வேண்டும் என்ற எண்ணமே இல்லாத புத்தி தெளிவற்ற மயக்கம்.
.
சங்கம் ஊதியதும் இறைவனே நமை ஆட்கோள்ள வாவென்றே அழைப்பதை உணர்வதில்லை. உறங்கிக் கொண்டிருக்கிறோம்.
.
பிள்ளையே எழுந்திரு என்றே அன்னை நமை உறக்கத்திலிருந்து எழுப்புகிறாள். பூதகியின் முலைப்பால் உண்டு அவளை சமஹாரம் செய்தவன். சகடாசுரனை பிஞ்சுக் கால்களால் உதைத்து சமஹரித்தவன். அறிவாளிகளான யோகிகளும் முனிவர்களும் ஹரியென்றே தொழுது பணியும் நமது நாதன்.
.
அவனைப் பணிந்தால் நமதுள் விதையூன்றியிருக்கும் அசுரர்களும் க்ஷணத்தில் நமை நீங்குவர். துயர் நீங்கும். உறங்காதே! விழித்தெழு. ஹரி ஓம் என்றே துதித்தெழு.
.
*******
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
*******

திருப்பாவை பாசுரம் 5 - (பாசுரத்தில் தேடிய முத்து)

பாடுவோமே பாசுரம் பாடுவோமே


Picture Source: Internet ;; Rangoli Credit : Suganthi Ravi



விசேஷ நாட்களில் நமக்குப் பிடித்த உணவுவகைகள் சமைக்கப்படும் போது கவனமெல்லாம் அதன் மீதே இருக்கும். அலுக்கவே அலுக்காதது உணவு. இறைவனுக்கு படைத்துவிட்டு நாம் உண்ணும் வரை சிந்தனையெல்லாம் அதன் மீதே இருக்கும். இதுவே சாமான்னியன் நிலை.
.
ஒன்றன் மீது பற்று வைத்து விட்டால் கவனம் சிதறாமல் அங்கேயே ஒருமித்து விடுகிறது. காதல் நினைவில் வாடும் காதலர்களுக்கும் இதுவே பொருந்தும். பிரிவின் ஆற்றாமையைத் மட்டுப்படுத்த ஒருவரைப் பற்றி இன்னொருவர் சிந்தித்திருப்பதே தித்திப்பு. அன்புக்குரியவர்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதே ஆனந்தம்.
.
இறைவன் ஒவ்வொரு தனிப்பட்ட ஜீவனிடத்திலும் தூய அன்பைப் பொழ்கிறான். அதனை உள்வாங்கி திரும்பவும் அவனிடம் அதீத அன்பு செய்வதே பக்தி. பக்தர்களைப் பற்றி பகவான் சிந்திப்பதும், பகவானைப் பற்றியே பக்தர்கள் சிந்திப்பதும் அளவிலா ஆனந்தம்.
.
பூமகளே தனது துணைவனான பெருமானைப் பற்றிப் பேச பூமியில் அவதரித்தார் என்பதே நமது பெரும் பாக்கியம். ஆண்டாள் வாயார தமது நாதனைப் புகழ, அதனை நாம் உணர்ந்து போற்றி நின்றோமேயானால் பிறப்பின் பெரும்பயன் பெற்றவர்களாகிறோம்.
.
நாச்சியாரே நமது குருவாகி ஒவ்வொரு நாளும் மாதவனைப் பற்றி பாமாலை சூட்டப் போகிறார். சீடர்களாகி நாமும் அதன் பொருளை நுகர்வோம்.
.
மதுரா நகரில் பிறந்தவனை, யமுனையாற்றங்கரையில் தவழ்ந்த இடையர் குலத்து விளக்கை, தாயாருக்கு பெருமை சேர்த்தவனை, வயிற்றில் கயிறு கட்டிய சுவடைத் தரித்ததால் தாமோதரன் என்று பெயர் பெற்றவனை, தூய நீராடி, நல்மலர் தூவி, வாயார அவன் புகழைப் பாடி, சிந்தையில் அவனையே அலங்கரித்து, தியானித்திருக்கச் சொல்கிறாள். அப்படி செய்தால் செய்த பாவங்களும், அணுகவிருக்கும் தீவினைளும் இல்லாமலே பொசுங்கிப் போகும்.
.
***
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்
***

December 19, 2020

திருப்பாவை பாசுரம் 4 - (பாசுரத்தில் தேடிய முத்து )

கேட்கும் ஒலியிலெல்லாம், நிந்தன் கீதமே


Rangoli Credit : Suganthi Ravi;; Picture Source: Internet




 
பளீரென்ற நீலவானத்தின் நடுநடுவே வெண்ணிற மேகத்திட்டுகள். பார்த்துக் கொண்டிருக்கும் போதே மேகங்கள் கருத்து, வானம் கருநீல வண்ணம் உடுத்தும் தருணம் எழிலானது. கவித்த்துவம் நிறைந்த காட்சியின் அழகை கண்கள் உள்வாங்கும் போதே, "கண்ணனின் கருநீல வண்ணம்" என்ற எண்ணமே எழுகிறது. நம்மைப் போன்ற முதிர்ச்சி அற்றவர்களுக்கே இந்தச் சிந்தனை இருந்தால், பூதேவியின் அம்சமான பூமகளல்லவா ஆண்டாள்.
.
காணும் காட்சியிலும், பேசும் பேச்சிலும், நெஞ்சத்து நினைவிலும், வாரணம் ஆயிரம் சூழ திருமணம் புரிந்த கனவிலும் கூட கண்ணனையே காணும் கோதைக்கு, ஆழிக்கடலும் கண்ணன். மேலேகி அதுவே பரந்தாமனின் நிறத்தையொத்த கருமேகமென உருக்கொண்டு, பொழியும் மழையாகக் கண்ணன். மின்னும் மின்னலும், முழங்கும் இடியும் மாதவனே.
.
பிரகாசமான சுதர்ஸன சக்கரத்தையோத்தது மின்னல். சங்கின் முழக்கமே இடி. அவனது சார்ங்க வில்லிலிருந்து பொழியும் அம்புகளாக மழை மண்ணைத் துளைக்கிறது. கண்ணனே மழையாகி மகிழ்விக்கிறான். அவனை வணங்கவும் அவனே அருள்செய வேண்டுமென இறைஞ்சுகிறோம்! "அவன் அருளாலே அவன்தாள் வணங்கி" -- என்கிறது திருவாசகம்.
.
அருளை மழையாக்கி, அன்பை மழையாக்கி, சியாமள வண்ணனே நீர் பொழிவான். அதில் நனைவோம், நீராடி நோன்பு நோற்போம் வாருங்கள்.
.
***
ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
***
.