Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

July 18, 2024

சிங்காபுரத்து சீலன் (short story) ( தேர்தல் 24)

 சிங்காபுரத்து சீலன் (short story) ( தேர்தல் 24)

*********************************************
The following story didn't bag any prize, but it was sent for the contest. (Please read on..) (Story was penned for the picture attached)



சிங்காபுரத்து சீலன்
*********************************
(I)
வாங்க, சிங்காபுரம் தர்மசீலன்ப்பத்தி தெரிஞ்சுக்கலாம். ஏன்னு கேக்கறீயளா? காரணம் இருக்கு….
---
காலையிலிருந்து அவருக்கு பெரிய கொழப்பம். அங்கன பாருங்க கிணத்தடியில இருக்குற ஒத்தைக் கல்லு மேல தர்மசீலன் உட்கார்ந்து கிட்டத்தட்ட நாப்பது நிமிசமா தீவிரமா சிந்திச்சிட்டு இருக்காரு. கிணத்தடி தொவைக்குற கல்லுதேன் அவருக்கு போதிமரம். எந்த பிரச்சனைக்கும் தீர்வு அந்த கல்லுலதேன் இங்கயும் அங்கயுமா பொறிச்சு வச்சிருக்கும்.
.
இருந்தாலும் முத்தையன் கொஞ்சம் ஓவராத்தான் ஏத்திவிடுறான். இப்படி ஒரு சூழ்நிலையில சீலன் சிக்கிக்குவாருனு ரெண்டு மாசம் முன்ன, அவரே கூட நெனைச்சதில்ல. எல்லாம் மொகராசி.
முந்தா நாளு என்னாச்சு தெரியுங்களா……..
..
“அண்ணே நீங்க உம் சொன்னா மொத்த சனமும் ஓங்கபின்னாடிதேன்”. - நம்ம முத்துப்பய
...
“எதுக்குடா? என்னய வச்சு செய்யவா?”
..
“உங்க மவுசு உங்களுக்குத் தெரியலண்ணே. தங்கமனசுக்காரரு நீங்க!”
..
“அது முரளி நடிச்சப்படம்’ டா சொந்தமா நாலு வார்த்த புகழ்ச்சியா பேசு பாப்பம்“
..
‘கொழாயடி-குணசீலா!’, ‘சிலேட்டு-சிங்காரத்தேவா!”
..
“போதும்டா போதும், நிப்பாட்டு”.
__
ஒட்டுமொத்த ஊரு சனத்துக்கும் தர்மசீலன் மேல பிரியமுண்டு. அதுக்கு காரணம், சுயநலமில்லாத கொஞ்சமே கொஞ்சம் நல்ல மனுசன் அப்டீங்கற போதுவான அபிப்ராயந்தேன். கொஞ்சம் வருசத்துக்கு முன்ன கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு மனு கொடுத்து அலைஞ்சு திரிஞ்சு, ஊருக்கு கொழாயடி நீர் கொண்டு வந்தாரு. பொதுநல வசதில பிரச்சனையினு வந்தா, பொதுசனம் சார்ப்பா புகார்மனு கொடுத்து, முதுகெலும்பு ஒடிய முன்ன நின்னு, சிக்கலத் தீத்துட்டு தான் மறுவேலய பாப்பாக.
-
“போன வருசம் தேர்தல்ல நின்ன கட்சிக்காரங்க எல்லாம் மாடிவீடு கட்டிக்கிட்டாக, நமக்கு என்னத்த செஞ்சாக? நல்ல பேர சம்பாதிச்சுருக்கீக. நீங்க நில்லுங்கண்ணே தேர்தல்ல”
--
விண்டு வாயில் போட்ட இட்லி விக்கி வெளியே வந்து விழுந்திருச்சு.
..
“என்னதே விளையாடுறியா!”
..
“நெசமாத்தாண்ணே. எந்த கட்சி சார்ப்பாவும் நிக்க வேணாம். தனியா சுயேச்சயா நில்லுங்க!”
..
“நின்னு?”
..
“பெறவு, நாற்காலி கிடைச்சா உட்காரலாம்!” மகிழினி சிரிச்சாங்க.
..
“ஏடி உனக்கு கேலியாபோச்சுதில்ல?!”-நையாண்டியா பேசுறாகன்னு சீலனுக்கு சந்தேகம்.
..
“இல்லீங்க, தம்பி சொல்லுறதும் ஒருவகையில சரியாத்தான் இருக்கு. முயற்சி பண்ணி பாப்பமே. நாலுபேருக்கு நல்லது நடக்கணுமுனு நினைக்குறவக நீங்க, அதுக்குச் சொன்னேன்”.
--
மகிழினியே சொன்னப்ப சீலனுக்கே ஆச்சரியமா இருந்துச்சு. -“பாருங்க உங்க பேர முன்மொழிய பத்து பேர புடிச்சு கொண்டாந்துட்டானே!”
.
“ஒங்கபேர பத்தென்ன பத்தாயிரம் பேரு சொல்லுவோம்…எம்புட்டு பேருக்கு சிலேட்டு குச்சி வாங்கி குடுத்து நல்லது பண்ணிருகீய, அதெல்லாம் வோட்டா வந்து விழுகப்போகுது. எந்த கட்சி பின்னாடியும் சீட்டு கேட்டு நிக்காதீய. தனியா நில்லுங்கண்ணே சிங்கம் மாதிரி!”
.
சீலனுக்கு சிலுசிலுன்னு ஆகிருச்சு. “”சிங்கம்!””
.
பவளக்கொடி பள்ளிக்கூடக் காலத்துல செல்லமா சீண்டுன வார்த்தை. “சிங்கம் மாதிரி.சிலுப்பிகிட்டு முடியப் பாரு”
..
நெனக்கையில தித்திப்பா இருந்துச்சு “இந்த மஞ்சசட்டை உனக்கு நல்லா இருக்கு சீலா….”
..
சின்னபருவத்துல பள்ளிக்கூடத்துல ஒண்ணா படிச்ச பவளக்கொடி. சிலேட்டு குச்சி.கொண்டுட்டு வராதன்னைக்கு சீலன் தன்னுடையத கொடுத்து உதவி செஞ்சது, நெடுநெடுனு நல்ல சினேகமா வளந்து பன்னண்டாங்கிளாசுல பிறந்தநாளுக்கு பேனா பரிசு கொடுக்குறதுல வந்து நின்னுச்சு. திடீருனு பவளக்கொடி ஊரவிட்டு போனதுல, பேனாவும் பாதியிலேயே எழுதறத நிப்பாட்டிடுச்சு. சீலனுக்கு ருசியே நின்னுருச்சு, வாழ்கையே ஒருமாதிரி சப்புன்னு போயிருச்சு. ஊடால இருந்தது நட்புதானா, அதுக்கும் மேலயானு யோசிக்க நேரமில்ல. அடுத்தடுத்து படிப்பு, உத்தியொகம்ன்னு நாட்கள் ஓடிருச்சே!!
--
மகிழினிய மொத முறை கொழயடியில பாத்தப்ப, மத்தாப்பூ மாதிரி அவுக சிரிச்சது எப்படியோ பவளக்கொடிய நியாபகப்படுத்த. குடிநீர்-கொழா பழுதானப்ப மகிழினிக்காகவே முன்ன நின்னு பிரச்சனைய தீத்து வெச்சவரு. அப்புறம் நடந்தது ஊருக்கே தெரிஞ்ச விசயம்.
--
நல்லநாளு போதுன்னா அன்னதானம் செய்யுறது, பிள்ளைங்களுக்கு சிலேட்டு குச்சி வாங்கித்தர்றது (மகிழினி கிட்ட சிலேட்டப் பத்தி சொல்லிடாதீய), நல்ல மதிப்பெண் வாங்குற பிள்ளைகளுக்கு பேனா பரிசா கொடுக்குறது (பேனா! இதயும்-தேன்…இதெல்லாம் நமக்குள்ளாற ரகசியம்) இது போல நல்ல காரியம் செஞ்சு, அக்கபக்க சனத்து மனசுல ஆணி அடிச்சாப்ல நின்னுட்டாரு.
..
“சரிப்பா முத்து, நீ சொல்லுறத யோசிக்கறேன்”
****
(II)
நேத்தே ராத்திரி முழுக்க தூங்காம கொட்டகொட்ட முழிச்சிருந்தாப்ல. ஒருவித படபடப்பு.. கண்ணசந்த கொஞ்ச நேரத்துல கனவில சிங்கம் விசில் அடிச்சு சிரிச்சுது. ஒரு சிங்கத்தை இன்னொரு சிங்கம் தொரத்தித் தொரத்தி கல்யாணம் கட்டிகிச்சு. டீவி சீரியல் பார்க்கறாப்ல இருந்துச்சு. சிங்கத்தையே நம்ம சின்னமா அறிவிச்சா என்ன! சீலனுக்கு புத்தியில பல்பு எரிஞ்சுச்சு. பிரச்சார பேச்செல்லாம் அடுக்குமொழியில சும்மா தூள் கிளப்பலாம்…
...
மதங்கொண்ட யானைகள் என்ன செய்யும் தெரியுமா?
..
சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்!
..
இது சாம்பிளு தான், இதப்போல நாலஞ்சு பஞ்சு டைலாக் மனப்பாடம் செஞ்சு வெச்சிருந்தாரு.
--
மஞ்சக்கலர் சட்டை தான் போடுவேனு அடம்புடிச்சு, அதே கலருதேன் கட்சி ஆதரவாளங்களும் போட்டே ஆகணும்னு அடாவாடி செஞ்சாரு.
--
ஆனா பாருங்க, பிரச்சாரத்தனைக்கு மொதோ நாளு, சினங்கொண்ட சிங்கத்துக்கு தொண்டகட்டி போச்சு, முழுங்கின விக்ஸ் மாத்திரைக்கு டிமிக்கி குடுத்து, சீறும் சிங்கம், கதவிடுக்குல மாட்டின பூனையாட்டமா மைக்கப் புடிச்சு முழங்க, மொத்த ஊரே மொகத்தைப் பொத்தி சிரிச்சுதே!
--
எல்லாம் தேர்தல்ல ஜெயிக்குற வரைதேன். அதுக்குப்பெறவு அவர் மஞ்ச-சாயம் வெளுத்துப் போச்சு. எப்பேர்பட்ட நல்லமனுசன்!! ஊருக்கு நல்லது செய்யுறேனு அளந்துவுட்ட வாக்குறுதிகள காத்துல பறக்கவுட்டு, வில்லங்கமான அரசியல்வாதியா மாறுவாருனு கனவுலகூட ஒருத்தரும் நெனக்கல!
--
தனிப்பட்ட சலுகைய பயன்படுத்தி, ஊழல்லயே ஊறி, சொந்தபந்தத்து மச்சானுக்கும் மாமனுக்கும் கம்பேனி வச்சு கொடுத்தத கூட மன்னிச்சு வுட்டுடலாம்…..ஆனா இந்த் பக்கமும் அந்தப் பக்கமுமா அஞ்சு-பத்துன்னு ஏகத்துக்கு கையநீட்டி சொத்து-பத்த பெருகிக்கிட்டு, நல்ல வெளயுற நஞ்சை நெலங்கள, சினீமா கம்பேனிக்கு வித்துட்டுடாக.
---
ஆத்தீ! பணமும் பதவியும் இப்படியுமா எம்ஜியாரா இருந்தவர, நம்பியார் ரேஞ்சுக்கு வில்லனா மாத்திப்புடும்!?
தொகுதிக்காரவுங்க கொதிச்சு போயிருந்தாங்க. பெரியப்பெரிய பேனருங்கள தூக்கிட்டு சீலனுக்கு எதிரா கூட்டம் கூட்டினாங்க.
--
சிங்கமாமுல்ல சிங்கம்!
.
சீச்சீ-சீலா நீ ஒரு அசிங்கம்! அப்டீன்னு ஒருத்தரு கொடி புடிச்சிருந்தாரு.
..
சீலனையும் அவருக்கு துணையா நின்ன அக்குணி துக்கிணி பசங்களயெல்லாம், நாலஞ்சு சிங்கங்க பாஞ்சு வந்து காயப்படுத்துற மாதிரி கேலிச்சித்திரம் வரஞ்சு, அந்தப் போஸ்டர வீதிக்கு வீதி ஒட்டிட்டு இருந்தாங்க.
--
மறுநா “சிங்கம் சின்னத்துல போட்டியிட்டு வெற்றி பெற்ற சீலன், வாக்குறுதிகளை நிறைவேற்றாததால, அவையனைத்தும் சிங்கங்களாக மாறி அவரைக் கொன்று தின்றன”
--
– செய்தி சேனல்கள் சீலனுக்கே சீல் வெச்சுருச்சு.
“சீலன் போட்டியிட்ட சின்னம் சரியில்ல. கொய்யாக்கா, வேர்க்கடல, பூசணிப்பூ, கனகாம்பரம்…இது போல சின்னம் வெச்சிருந்தா இந்த ஆபத்து வந்திருக்காது.“- அரசியல் ஆய்வுகள் சூடு பறந்திச்சு. ஒவ்வொரு செய்தி ஊடகத்துலயும் இதே பேச்சு.
---
“இல்லயில்ல அது நா இல்ல…நா இல்ல….”
..
அலறிப்புடைச்சு எழுந்தாரு சீலன். வியர்த்து வழிந்திருந்திச்சு.
..
சிங்கம்னதும் சிலுத்துகிட்டியா சீலா’- கிண்டலடிச்ச மைண்டு-வாய்ஸ அதட்டி உக்காரவெச்சு. அடுத்து என்னன்னு யோசனைலதான் காலையிலிருந்து கிணத்தடில வந்து உக்காந்துட்டாப்ல ….. நாஞ்சொன்ன மாதிரியே கிணத்தடி கல்லு பிரச்சனைக்கு தீர்வு சொல்லிருச்சு. இப்ப முழுவேகத்தோட முத்தையனப் பாக்கத்தான் கிளம்பிட்டாக. வாங்க நாமளும் பின்னாடியே போவோம்.
….
இல்லடா முத்து எனக்கு சரிப்பட்டு வராது, நா நிக்கல
..
முன்வச்ச கால பின் வக்காதண்ணே, அரசியல்ல குதிச்சிடு
..
நான் எங்கடா கால வெச்சேன். காலையிலிருந்து கிணத்தடில தான் உக்காந்துட்டு இருந்தேன்!
..
பத்து பேராண்ட கையெழுத்து வாங்கிட்டு வந்தா, இப்டி நக்கல் பண்றியே தலைவா!
..
என்னென்னவோ சொல்லிப்பார்த்தாக, ஆனா முத்தையன் மசியல.
..
சரிடா ஆனா ஒண்ணு, எனக்கு “சிங்கம்” தேர்தல் சின்னமா வேணாம்.
..
சிங்கத்தை சின்னமா தரதா எவஞ்சொன்னான்? தேர்தல் ஆணையம் இலவசமா சில சின்னங்களத் தாண்ணே குடுக்கும். அதுலருந்து உங்களுக்கு தோதா தோணுற மூணு சின்னத்த தேர்ந்தெடுத்துடுவோம். அதுல ஒண்ண உங்களுக்குன்னு ஒதுக்கிருவாங்க. சிங்கமெல்லாம் ஏற்கனவே பெரிய கட்சிங்க வெச்சிருக்காங்கண்ணே!
..
அய்யய்யோ … கடிச்சே கொன்னுடுமேடா. சீலன் மனசுல கனவுரீலு மறுகா வந்துபோச்சு..
..
என்னண்ணே சொல்லுதீய?
__
சீலன் சடக்னு இடத்த விட்டு பழையபடி கிணத்தடிக்கே நழுவிட்டாரு.
**
(III)
மறுநா சொன்னபடியே முத்து ரெண்டாளுங்கள கூட்டி வந்தான். வேட்பாளர் மனு கொடுக்க நல்ல நேரம் பார்த்து கெளம்பினாரு.
..
டே முத்து இன்னையிலிருந்து நீயும் , உங்கூட வந்த இவங்க ரெண்டு பேருந்தேன் எனக்கு சிஷ்யகோடிகங்க. தனியா விட்டுப் போயிறாதீக.
நம்மத் தொகுதில நீங்கதாண்ணே. தைரியமா வேட்புமனு தாக்கல் பண்ணுங்க.
..
டெப்பாசிட்டே போயிறாம இருந்தாச்சேரி.
..
தேர்தல் ஆணயம் வெளியிட்ட சுயேச்சை சின்னங்களோட மாதிரிய, உள்ளாட்சி அமைப்பு அறிவிப்பு பலகையில ஒட்டியிருந்தாங்க.
..
தர்மசீலனுக்கு சிரிப்பு தாங்கல. என்னடா இது, டீ.வி. பிரிட்ஜு, பொம்பளைங்க காதுக்கு போடுற கம்மலு, பாட்டிலு, சீப்பு கண்ணாடின்னு பலசரக்கு கடையாட்டமா எல்லா சின்னமும் இருக்குதே?
..
மெதுவா பேசுங்கண்ணே! எம்புட்டு வேட்பாளருங்க நிக்கறாங்க, ஆளுக்கொரு சின்னம் வேணாமா? எங்க போவுறது!
..
வேட்பு மனுவை நிரப்பிட்டே வந்தவரு எந்த சின்னம் சரியாவரும்னு யோசிச்சு, ஆளுக்கு நாலு இலவசமா அள்ளிக்கொடுத்து பிரசாரத்துல பட்டைய கிளப்ப, இதுதான் சரின்னு ‘பேனாவையும்’, ‘புத்தகத்தையும்’ தேர்ந்தெடுத்தாரு. ஆனா மொதோ தேர்வா அவர் குறிப்பிட்டிருந்தது தண்ணீர்-பம்பு, அடிக்குழாய்!.
“தலையெழுத்தை மாற்றியமைக்கும் தலைமைப் பேனா”
..
“அகத்து இருளை அகற்றும் புத்தகமே நமது சின்னம்”- எப்புர்ரா? சூப்பரா இல்ல?
..
“தண்ணியடிப்போம் தங்கங்களே!” நல்லாருக்காணே? சீலன் முறைக்க, சரிசரி இப்படி வச்சுக்குவோம்….
..
“மறக்காம வாக்களியுங்கள்….உங்கள் தாகம் தீர்க்கும் தண்ணீர்பம்பு”
..
சூட்டோட சூடா, எம்பது பக்க நோட்டு ஒண்ணு புதுசா வாங்கி, அவருடைய வாக்குறுதிகள வரீசயா எழுதிட்டு இருக்காரு.
* 1. எக்காரணத்தக் கொண்டும் ஊழலுக்கு துணை போக மாட்டேன்
* 2. வாக்குறுதிகள நெறவேத்த என்னென்ன முயற்சி செய்யணுமோ செய்வேன்
* 3. வெளயுற நெலத்துக்கும் விவசாயிக்கும் தூணா நிப்பேன்
*4. கிராமத்துக்கு பேருந்து வசதிய அதிகரிச்சு, நெடுஞ்சாலை திட்டப்பணிய துவக்கி வெப்பேன்.
* 5. பழுதான கொழா-பம்ப சரிசெஞ்சு தண்ணி பிரச்சனைய தீப்பேன்.
___
இதத்தவிர, செய்யவே கூடாத விசயங்கள பட்டியலிட்டு அந்தப் பேப்பர அஞ்சா மடிச்சு, ரகசியமா பொட்டிக்குள்ள பூட்டி வெச்சிருக்காரு. தெனம் ஒருகா மனப்பாடம் செஞ்சிட்டிருக்காரு.
__
* 1. சொந்தபந்ததுக்கு சல்லிக்காசு கெடையாது
* 2. பவளக்கொடி ஜாடையில நடிகைங்க போஸ்டரு இருந்தாலும் சினீமா கம்பேனிக்கு நஞ்சைய விக்கமாட்டேன்
* 3. சிங்கம் என் சின்னம் கிடையாது
* 4. இனி எனக்கு நீலக்கலருதான் புடிக்கும்
....
‘ரொம்பவே நல்லவனா இருக்கியேடா தர்மா’ - மனசு உருகிச்சு.
..
அடுத்தடுத்த ராத்திரி கனவுல ‘தண்ணீர்-பம்பு’ கண்ணடிச்சு தண்ணி-தண்ணியா சிரிச்சுது. பேனாவும் புத்தகமும் இறக்கைகட்டி பறந்துச்சு. தேர்தல்ல தர்மசீலன் நிக்குற சேதி அம்புட்டு சனத்துக்கும் எட்டி, தெரிஞ்சவங்க தெரியாதவங்க எல்லாரும் கையெடுத்து கும்பிட்டுகிட்டாங்க. ராசா மாதிரில்ல வீதியில நடந்தாரு!
...
“சீலனைய்யா, எங்க பள்ளிக்கூட கணக்கு வாத்திக்கு வேற ஊருக்கு மாத்தல் வாங்கிக்கொடுங்க.…வாத்தி ஒரே சிடுமூஞ்சி”.
சீலன் சிரித்தார். "வாத்தியார மரியாதக் கொறவா சொல்லக்கூடாதுப்பா,".அவன் தலய கோதிவிட்டு ரெண்டு பேனாவ கையில திணிச்சாரு.
..
வாரக்கடசீயில எந்த சின்னம் ஒதுக்கியிருக்கிறாங்கனு தெரிஞ்சுரும். வீடுவிடா போயி ரெண்டு பேனாவோ, ஒரு பாட்டில் தண்ணியோ, வள்ளுவர் எழுதின புத்தகமோ கொடுக்கணும். பிரசாரகெடு முடியுற வரை சின்னத்தை பாக்கெட்டிலேயே வச்சுகிட்டு அலையலாம். ஜாடமாடயா நினைவுபடுத்திட்டே இருக்கலாம்.
..
எட்டாங்களாசு படிக்குற சின்னப்பய மொத, வயசானவங்க வரை, எத்தன கனவு வெச்சிருக்காங்க. எல்லாத்துக்கும் வசதிகள செஞ்சு கொடுத்து, அவுங்கள சந்தோசப்படுத்தணும். - தர்மசீலங்கற பேருக்கேத்தாப்ல சிந்திச்சுட்டுருந்தான்.
..
சீலன் நடந்து போற வயக்காட்டுப் பக்கமா நானும் கூடவே நடக்கேன். ஒத்தையடி பாதையில நல்லதொரு தலைவன் நடந்து போறதா எங்கண்ணுக்குத் தெரியுது. எங்க கிராமம் உதாரணமா நிக்கப்போவுதுன்னு உள்மனசு சொல்லுது.
........
தேர்தல் நேரமும் நெருங்கிருச்சு. அடுத்த ஒரு மாசத்துல முடிவு தெரிஞ்சுரும். நீங்களும் தேர்தல் முடிவுகள கண்டிப்பா பாருங்க. ....
..,,,
இனி எனக்கு வசந்தகாலம். வயலோரத்துல பச்சைப்பாவாட கட்டி நிப்பேன். பூக்களால அலங்காரம் பண்ணிக்குவேன். தண்ணி பாயற இடமெல்லாம் ஜிலுஜிலுன்னு ஓடுவேன்…
❤
❤
நா யாருன்னு கேக்கறீயளா? நான் இந்த ஊரு கிராமதேவதை…என் பேரு, ‘சிங்கமுகீ’. 😮 அட நில்லுங்க….ஏன் ஓடுதீய?!

❤ சுபம் ❤
ShakthiPrabha





September 28, 2022

தேவை ஒரு துளசிச் செடி





சமீர்  வருவதாகச் சொன்ன ஐந்து மணியைத் தாண்டி நாற்பத்தியெட்டு நிமிடங்கள் ஆகியிருந்தன .  கூடவே சஞ்ஜயைக் கூட்டி வருவதாக சொல்லியிருந்தானே, அதனால் நேரமாகிறதோ!

.

நேற்றையிலிருந்தே நெஞ்சத்தை உழப்பிக் கொண்டிருந்த விஷயம். இது கனவா நிஜமா? நூலைப் பிடித்து, தொடரலாமா வேண்டாமா? ஒரே மன உளைச்சல்.   இன்றைய தேதியைச் சேர்த்தாலும், பதினெட்டு வயது நிரம்பாதவள் ரசிகா. தேவிகா அப்படி அல்ல. அவளை விட இரண்டு

வருடம் பெரியவள்.

.

"தேவி அவங்க வர இவ்வளவு நேரம் ஆகுதே, நாம கிளம்புவமா?" என்று கிசுகிசுத்தாள். வங்கிக்கு சென்றிருந்த அம்மா வருவதற்கு எப்படியும் ஒரு மணி நேரம்  ஆகலாம். அதற்குள் இவர்கள் திட்டத்தின் முக்கியப் பகுதியை நெருங்க வேண்டும்.

..

யார் இவர்கள்?

தேவிகா

ரசிகா

சமீர்

சஞ்ஜய் என்ற நால்வர் தான்.

..

இருவரும் உறிஞ்சிக் குடிக்கும் டீயின் சுவை கூட மனதில் பதியவில்லை. குறுஞ்செய்தி சிணுங்கியது.

.

"நாங்கள் பூங்காவின் அருகே வந்துவிட்டோம். உடனே புறப்பட்டு வரவும். சர்வ ஜாக்கிரதை!"

 

கிடைத்ததை பையில் திணித்துக் கொண்டு அவசரமாக  ஓடினார்கள்.  'இன்னும் இரண்டு மணி நேரத்தில் பாலாற்றங்கரையருகே இருக்க வேணும்.' சமீரும் சஞ்சயும் படபடத்தனர். மோட்டர் பைக் பறந்தது. இருபதே நிமிடத்தில் ஆற்றங்கரையை நால்வரும் நெருங்கினர்.

.

சஞ்சய் தன் கைப்பையைத் திறந்தான். இரண்டு உருட்டுக் கட்டைகள், ஒரு சைக்கிள் செயின் உட்பட ஐந்தாறு தற்காப்பு கருவிகள்.  ‘எப்படி என் திறமை’ என்று கண்களாலேயே பெருமை பேசினான்.

.

"நாம எங்க போக போறோன்னு தெரியுமில்ல!  இதெல்லாம் எதுக்குடா?"

.

"உனக்குத் தெரியாது. எல்லாம் தேவை தான். முதலில் எல்லாரும் செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுங்க" . ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  அவர்கள் எடுத்த முடிவு தவறானதா என்ற குழப்பம்.   பயமாக இருந்தது. இனம்புரியாதொரு சிலிர்ப்பும் குறுகுறுப்பும் ஓடியது.   

.

குறிப்பிட்ட இந்த டகுத்துறைக்கு பொதுமக்களின் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. 

.

"சமீர் அங்க பாரு, சொன்ன மாதிரியே படகு தயாரா இருக்கு"  படகொன்று அவர்களை நெருங்கவும்,  திடீர் சோதனை உத்தரவின் பேரில் படகுத்துறைக்கு வந்திருந்த முத்துகுமார்  கண்களில் இவர்கள் மாட்டவும் சரியாக இருந்தது.  யார் இவங்க! முதலில் இந்தத்துறையில் எப்படி படகு செலுத்தபடலாம்? என்ற குழப்பத்துடன் சிலர் பார்த்திருக்க....

.

மலரைப் போல மெல்ல மிதந்து வந்த படகில் நால்வரும் கால்பதித்து ஏறினர்.   முத்துகுமார் அவசரமாக தளக் புளக்கென்று தண்ணீரில் தள்ளாடி படகை  நெருங்கத் துவங்கினார்.    சமீரும் சஞ்சயும் குபீரென குதித்து அவரை பின்னாலிருந்து வளைத்து   தடுக்க முற்பட்டனர். 

.

"கொஞ்சம் நான் சொல்றத நிதானிச்சு கேளுங்க" ....  என்று கூவிக் கொண்டே படகை நோக்கி வேகமாக நீந்தினார்.  அவர் நெருங்குவதற்குள்,  மெல்லமாக சுற்ற ஆரம்பித்த படகு,  கண்ணிமைக்கும் நேரத்தில் அதிவேகமெடுத்தது. அவரது இருகைகளும் படகை பற்றிவிட்ட சமயம்,  ரசிகா கட்டையை ஓங்கினாள்.  நெற்றியில் ஒரே அடி.      தேவிகா கதற,   பின் தொடர்ந்த   சஞ்சய், இன்ஸ்பெக்டர் கால்களை இழுக்க, அவர் நிலை தடுமாறி  குப்புற விழுந்தார். 

.

அவரை அப்புறமாகத் தள்ளி, மின்னல் வேகத்தில் சமீரும் சஞ்சயும் படகில் ஏறியதும்,  காற்றை விட வேகமாக  மிதந்த படகு, சடுதியில் தொலை தூர தொடுவானத்தை எட்டி, புள்ளியாய் மறைவதை  பார்த்துக் கொண்டே முழுவதுமாக மயங்கினார் முத்துகுமார்.  அல்லது மயங்கியது போல நடித்தார். தெளிந்து எழுந்த போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள் தொடர்பின்றி இருந்தது.

.

 

“எப்படி தாக்கப்பட்டீங்க?

‘நினைவில்லை... ‘

‘யார் தாக்கினாங்க?

“யாருமில்லையே! “

“பொதுமக்கள் புழங்குவதற்கு தடைசெய்யப்பட்ட படகுத்துறையில் படகு இருக்குறதா சத்தம் போட்டாங்களே! “

“அப்படியா?

....

அவர் அருகில் இருந்தவர்களை பேட்டி கண்டனர்.

“நீங்க படகை பார்த்தீங்களா?

“அப்படி பார்த்ததா எங்களுக்கு நினைவில்லை சார்”.

.

"மர்மமான முறையில் தாக்கபட்ட முத்துகுமார்" - அலறியது மீடியா.

 

***

 

சுழன்று  சுற்றிய படகு சீர்பட்டது. நெஞ்சம் படபடத்து, தலைசுற்றி விழுந்துவிடுவது போலிருந்தாள் தேவிகா. ரசிகாவை விட தேவிகாவுக்கு  எதிலும் தயக்கமும் பயமும் அதிகம். 

.

சென்ற வாரத்தின் வியாழக்கிழமை, சாதாரணமாகத் துவங்கி, அசாதாரணமாக முடிந்தது.

.

"கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே"   என்று தொலைக்காட்சியில் ஆண்டாள் எழுப்பிக் கொண்டிருந்ததையும் மீறி ரசிகா தூங்கிக் கொண்டிருந்தாள். குளித்து முடித்திருந்த தேவிகா பக்கத்து மேஜையில் ஒப்பனை செய்து கொண்டிருந்த போது முணுக் முணுக்கென்று சிணுங்கியது செல்ஃபோன். சமீர் கூப்பிட்டிருந்தான்.

.

"அவசர சந்திப்பு. இன்னும் ஒரு மணி  நேரத்தில் தெருகூடும் இடத்திலுள்ள "சுதந்திரப் பூங்கா"வில் சந்திக்கவும். இன்றைய தினசரி பத்திரிகை எடுத்துவா" என்னவாக இருக்கும் என்று குழம்பி, ரசிகாவையும் உலுக்கினாள். இவர்களின் சந்திப்புகள் பற்றி பெரிய அளவில் பெற்றோர்களுக்கு தெரியாது. ஏதோ சாக்குபோக்கு உளறிவிட்டு, இருவரும் பூங்கா விரைந்தனர்.

 

.

'இதப் பாரு.'  என்றான் சஞ்சய். அவனுடன் சமீரும் வந்திருந்தான். அவர்கள்  சுட்டிக்காட்டியது  அன்றைய தினசரி பத்திரிகையின் ஒரு சின்ன விளம்பரத்தை.

.

"உடன் விரைந்து வருபவர்களுக்கு தக்க சன்மானம் உண்டு. தேவை ஒரு துளசிச் செடி" பெயர் விலாசம், தொடர்பு எண், முகவரி எதுவுமே மருந்துக்கும் குறிப்பிடப் படவில்லை. ஆச்சரியமாக இருந்தது. அதை விட பன்மடங்கு ஆச்சரியம் அவசரமாக தங்கள் பிரதியை பிரித்தபோது காத்திருந்தது...... அப்படிப்பட்ட விளம்பரம் அவர்களது பிரதியில் தென்படவில்லை. ரசிகாவுக்கு

அட்ரினலைன் ஜிவ்வென்று ஏறியது. 'என்னடா இது. யார் இவங்க?  ஒண்ணுமே புரியலையே.  உன் கைல இருக்குற பிரதில மட்டும் இருக்குதே! '

.

அடுத்த நாள் வெள்ளியன்று வந்த தினசரியை அவசரமாக பிரித்து அங்குலம் அங்குலமாக படித்தனர். "பாலாற்றங்கரையின் படகுத்துறைக்கு அடுத்த வியாழன் விரைந்து வரவும். துளசிச் செடியை மறக்காதே!" - இப்போது  இவர்கள் தினசரியில் மட்டும் பளிச்சிட்ட செய்தி, சமீர் பிரதியிலும் சஞ்சய் வீட்டு தினசரியிலும் காணப்படவில்லை.  தேவிகா பயந்தாள். 

.

நால்வர் கூடியும், கூடாமல் குறுஞ்செய்தி மூலமாகவும், நாற்பது முறை அலசினார்கள். ஏதோ மந்திரவாதி விரிக்கும் வலை என்று அறுதியிட்டு  தீர்மானத்து, ''பின் தொடர வேண்டாம்'' என்று முதலில் முடிவெடுத்து, செய்தியைக் கடாசினாலும்... அடுத்தடுத்து ரசிகா மற்றும் சமீரின் ஆர்வக்கோளாறுக்கு இணங்கி, நால்வருமே இச்செய்தியின் ஆழம் வரை சென்றுவர முடிவெடுத்தனர்.

.

***

 

காற்றைக் கிழித்து புள்ளியாய் மறைவதாகத் தோன்றிய படகு உள்ளபடி, இன்னும் அதிக வேகமெடுத்தது. தேவிகாவுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.  அதே வினாடியில் படகு ஒரு விண்கலமாக  விரிந்து,  நாலாபுறமும் மூடிக்கொண்டு, விண்ணில் உயர்ந்தது. 

.

"கொரோனா கவசம் போல இது என்னடி"  - என்றாள். அவள் குரல் பத்து விதமாக எதிரொலித்தது. முகத்திற்கு  நேரே சுவாசக்குழாய் தானே இணைந்து கொண்டது. இத்தனையும்  கண்சிமிட்டும் நேரத்தில் அதிரடியாக நடந்தது.

.

குறிப்பிட்டு சொல்ல முடியாத  நேரத்திற்குப்  பிறகு சின்ன குலுக்கல் கூட இல்லாமல் மெத்தென்ற வெண்ணிற மண்ணில் இறங்கிய போது அது வேறு ஒரு பிரபஞ்சம் என்று யாரும் சொல்லாமலே அவர்களுக்கு புரிந்தது.

.

மூச்சுக்குழாய் அகன்றது. அட! சுவாசிக்க முடிகிறதே. பூமியைப் போலே பிராணவாயு எங்கும்  நிறைந்திருந்தது. பூமியை விட அழகாக, பச்சை, நீலம் சிவப்பு என்று வண்ண வண்ண மணல் மேடுகள், விவரிக்க முடியாத வண்ணத்தில் தாவரங்கள், பூக்கள். நால்வரும் திறந்த வாய் மூடவில்லை.

.

பெரிய பறவை போலொன்று பறந்து வந்தது. இல்லை. இல்லவே இல்லை. அருகே பறந்து வந்த பறவையைப் போல ஒரு நங்கையைக் கண்டு  பேச்சிழந்தனர்.

.

"கேலக்ஸி-16க்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் பாலவீதிக்கு மிக அருகில் இருக்கும் கேலக்ஸி எங்களது. என் பெயர் சுவஸ்திகா" என்றது.

.

'உங்களால் எப்படி எங்கள் மொழியில் கதைக்க முடிகிறது.'

.

“நான் எனது மொழியில் பேசினால் உங்களது மொழியில் கேட்கச் செய்யும் இணைப்பு கருவி எங்களிடம் இருக்கிறது” என்றது. தவறு என்றாள் சுவஸ்திகா.

.

சுவஸ்திகாவின் வண்ணச் சிறகைக் கண்டு கிறங்கிய சமீர் மெல்ல மீண்டு "உங்களால பறக்க முடியுதே"  என்று வழிந்தான்.

.

“எங்களால் பஞ்சபூதங்களினால் ஆகப்பட்ட எதனுள்ளும் பயணிக்க முடியும்” என்றாள். 

.

“உங்க உலகம் அற்புதமாகவும் விந்தையாகவும் இருக்கு.... வண்ணப் பூக்களும், வகைவகை பழங்களும்,  வண்ண நீர்நிலைகளும்... “

.

“நீர்நிலைகள்!!!!  உங்கள் துளசிச் செடியை அதற்குத்தான் விரும்பியிருந்தோம். எங்களது நீர்நிலைகளின் பசுந்தன்மை குறைந்து நீலமாகிக் கொண்டிருக்கிறது. உங்கள் தாவரங்கள் அதிலுள்ள அமிலத்தன்மையை அழித்து, புத்துணர்வூட்டுவனவாக இருக்கும். நீர் நிலைகளின் தன்மை மாசு ஏற்பட்டதால் எங்கள் தேவதைகள் வலு குன்றி காணப்படுகிறார்கள். எங்களது செயலாற்றும் திறன் குறைகிறது.,....

.

“செயலாற்றுவதா?  அப்படியென்றால் உங்க  பணி   என்ன?

.

பெரிதாக நகைத்தாள். அவள் பற்கள் வசீகரமாக பளிச்சிட்டது. “உங்களது பூவுலகின் மானிடர்களுக்கு இடர் ஏற்படாமல் காக்கும் தேவதைகள் நாங்கள்!”

.

இமைக்க மறந்தனர் நால்வரும். சஞ்ஜய் முதலில் வாய் திறந்தான். "அப்டீன்னா  நீங்க தேவதையா?"

.

"உங்களைப் பாதுகாக்கும் தேவதைகள், தேவர்கள், ஏஞ்சல்ஸ், எப்படி வேண்டுமென்றாலும் விளிக்கலாம்"

.

“தேவலோகத்தில் பாரிஜாத மலரை எங்கள் உலகுக்கு கொணர்ந்த பாமாதேவியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்பேற்பட்ட தேவலோகத்தில்  துளசிச்செடி இல்லையா!” களுக்கென்று சிரித்தாள் தேவிகா.

.

“அதன் மூலப்பிரதியான "ப்ரோடோடைப்" தொலைந்து விட்டது. பூலோகத்திலிருந்து  வரவழைத்து இங்கு மாசு களைந்தபின், அதன் பிரதிகளை இங்கு பரவ விடுவோம்.... “  என்றாள்.

.

தன் பையிலிருந்து பத்து துளசிச் செடிகளை எடுத்த ரசிகா புன்னகைத்தாள். நால்வருக்கும் சுவஸ்திகாவை மிகவும் பிடித்துவிட்டது.

.

அடுத்த சில வினாடிகளில் விதவிதமான வண்ண அலங்காரத்துடன், பல தேவதைகள் கூடி, துளசிச் செடிகளை சில மூல நீர்நிலைகளில் முக்கி எடுத்தனர்.  சற்று நேரத்தில் நீர்நிலைகள் இளம் பச்சை நிறத்தில் மிளிர்ந்தன.  துளசிச் செடிகளை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பிய சுவஸ்திகாவிடம்....

.

"நீங்க தான் இங்கு தலைமை தேவதையா? இந்திரன் மாதிரி இந்திராணி" என்றான் சமீர்.

.

"என் பேயர் சுவஸ்திகா. மேலும் தேவ ரகசியங்களை வெளியிட எங்களுக்கு உரிமையில்லை"...

.

“அதிருக்கட்டும்...இவ்வளவு கெடுபிடிகளைத் தாண்டி உங்க பிரபஞ்சத்திற்கு வந்த எங்களுக்கு என்ன பயன்? ஒரு காவலதிகாரியை வேறு  தாக்கியிருக்கோம்....அப்பா அம்மா தேடுனா என்னத்த ....ஆஹா! நாங்கள் திரும்பி போனா பல யுகம் முடிஞ்சிருக்குமோ! இந்த மாதிரி கதை எத்தன படிச்சிருக்கோம்! "

.

“அதைப்பற்றிய கவலை வேண்டாம்.  உங்களது நேரத்திற்கே  உங்களை திரும்ப செலுத்தும் ஆற்றம் எமக்குண்டு.  உங்களை படகுத் துறையில் கண்ட நினைவு அங்கிருந்த பலருக்கும் மறக்கடிக்கப் பட்டிருக்கிறது. மேலும்... அவர் நீங்கள் நினைப்பது போல அங்கிருந்தவர் காவலாளி இல்லை ....அவர்...அதிருக்கட்டும்... நீங்கள் நால்வரும் துப்பறியும் நண்பர்கள் தானே"

.

அசடு வழிய இளித்தனர்... "ஆமா... "ஃபேமஸ் ஃபைவ்" , சீக்ரெட் செவன்"  கேள்விப்பட்டிருப்பீங்களே...அதைப் போல எங்களது "பெண்டாஸ்டிக் ஃபோர்".  எங்க மொழியில "நம்பிக்கை நால்வர்"  பெயர் சூட்டியிருக்கோம். இதைத் துப்பறியும் ஸ்தாபனமாக்குற எண்ணம் உண்டு.    - தெளிவாக விளக்கினாள் தேவிகா.

.

“அது தான் எங்களது பரிசு, நான் ஒரு  களிம்பு தருகிறேன். அதைப் பூசிக்கொண்டால்  சில மணி நேரங்களுக்கு உங்களை யாராலும் பார்க்க முடியாது.  நாளை உங்கள் பூமியில், தமிழகத்தின் உயர் அதிகாரி ஒருவரை, தீவிரவாதியினர் தாக்க முற்படுவார்கள். நீங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இது ஒரே முறை தான் பயன்படும். “

.

விண்கலம்  வெண்ணிற மண்ணில் ஊன்றி அவர்களை ஏற்றுக் கொண்டது. அவர்கள் விடைபெற்றுக் கொண்டதை தூரத்தில் ஒரு முகம் கவனித்துக் கொண்டிருந்த்து.  அந்த முகத்தை நால்வருமே வனிக்கவில்லை.

.

***

கனவு போல் முடிந்தது. எப்படி சென்றனரோ, அதே வழியில், சுழன்று சுற்றி நின்ற விண்கலம், படகாக மிதந்து அவர்களை கரை சேர்த்தது. வீட்டுக்கு வந்த தேவிகா சகோதரிகளுக்கு பெரும் ஆச்சரியம்.

.

"என்னடி லைப்ரரிக்கு போய் வர மூணு மணி நேரமா!" - என்னது மொத்தம் மூணு மணி நேரமா? ரசிகா கண்ணடித்தாள்.

 

**

மறுநாள்  அதிசுறுசுறுப்பாக விடிந்தது.  அதிகாரி வீட்டை நெருங்க தடையேதுமில்லை. களிம்பைப் பூசிக் கொண்டதும் கடவுளாகி விட்டது போலத் தோன்றியது.  "மிஸ்டர் இந்தியா படத்துல அனில்கபூர் இப்படித்தான்...." இழுத்தான் சஞ்சய். "ஷ்ஷ்...அங்க பாருங்க அவங்க நடவெடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருக்கு. கண்டிப்பா அவனுங்க தான்."  மானாவாரியாக படமும், காணொளியும் பதிவாகிக் கொண்டிருந்தது. நால்வரையும் கண்களால் கண்டு  யாரென்று கேட்க  ஆளில்லை.

.

அடுத்த மாதங்களுக்கு "நம்பிக்கை நால்வர்" பற்றிய செய்தி, வைரலாகியது. பெரிய விருதுகளும் பாராட்டுகளும் குவிந்தன. இவர்களுக்கு எஸ்காட்டாக எப்போதும் "முத்துகுமார்" . பெற்றோருக்கும் மற்றோருக்கும் இவர்கள் திறமை திண்ணமாக வெளிப்படத் துவங்கியது. சின்னதும் பெருசுமாக பல சில்லறை துப்பறியும் கேசுகள் குவியத்  துவங்கின.  ஒவ்வொரு கேசிலும் இவர்களுக்குத் துணையாக ஆங்காங்கே முத்துகுமாரும் நுழைந்து விடுவதால் ஏறக்குறைய இவர்கள் நண்பராகி விட்டார்.

.

***

வேலூர் சிறையில்...

.

"எப்படிடா? அவ்வளவு சாக்ரதையா திட்டம் போட்டிருந்தமே. எங்கியிருந்து இதையெல்லாம் படம் புடிச்சுதுங்க!" –

.

"அதை விடு.... யாரோ முத்துக்குமாராம் அவரை மர்மமா தாக்கினதா வேற குற்றம் சுமத்திருக்காங்க, யாரவன்? என்னடா நடக்குது!"-யோசித்து மண்டை வெடித்தது.

 

***

“எல்லாம் என்னோட புத்திசாலித்தனம் தான். எப்படி கரெக்ட்டா துளசிச் செடியை எடுத்து வெச்சிருந்தேன் பாத்தீங்களா!”- ரசிகா

.

சமீர் இடியிடியெனச் சிரித்தான். “அந்த பேஸ்ட் மட்டும் இல்லையின்னு வையி.... நம்ம கதை கந்தல்....எல்லாம் அந்த சுவஸ்திகா....அந்த தேவதை..”.அவன் கண்களில் சுவர்கம் தெரிந்தது... 'சே! நான் அங்கயே செட்டில் ஆகியிருக்கலாமோ!'

.

"போதும் ரொம்ப பேசாத ... மூடு'  என்றாள் தேவிகா.

 

.

முணுக்முணுக் என்றது செல்ஃபோன்  இளநீலத்தில் மிளிர்ந்து,  நால்வர் தொலைப்பேசியும் "வணக்கம்" என்று கிசுகிசுத்தது....

.

'யாராவது விளையாடுறாங்களா இருக்கும். மே பீ அ ப்ராங்க் '  என்றாள் தேவிகா. ரசிகாவின் அட்ரினலைன் ஜீவ்வென்றி ஏறி.....இல்லை என்றது, ஏனெனில்  நால்வர் செல்ஃபோனிலும் அடுத்தடுத்த செய்திகள் குரல்வழி செய்திகள் ஒலித்த வண்ணமிருந்தன

.

"நம்பிக்கை நால்வர்...நம்பிக்கை நால்வர்... நம்பிக்கை நால்வர்..... வணக்கம். தொடர்பு கிரகம் "வீனஸ்டோ".  உங்களது பாலவீதியிலேயே உள்ளது.  உங்களது  இணைப்பு உடனே தேவை"......... திரையில் தெரிந்த  சுவஸ்திகாவின் முகத்துக்குப் பின், மங்கலாகத் தென்பட்ட தெளிவற்ற முகத்தை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே!  

.

***

அந்த உருவம் சின்னதொரு சாக்லேட் அளவு காந்தக் கருவியை இயக்கியது...

.

"வீனஸ்டோ திட்டத்துக்கு அவர்கள் தயார் - நானும்"  என்ற செய்தியை சுவஸ்திகாவுக்கு அனுப்பியது. மோட்டார் பைக்கை விருக்கென்று செலுத்தி  ரோட்டோரக் கடையருகே நிறுத்தி "ரெண்டு இட்லி குடுப்பா"  என்றது.

.

"இன்ஸ்பெக்டருக்கு சார் சூடா ரெண்டு செட்டு இட்லி" என்ற கடைப் பையனை பார்த்து முத்துகுமார் மெல்லப் புன்னகைத்தார்.

 

***

.

“முகுந்த் இருக்காருங்களா!”

..

“சார் நான் ஸ்ரீநாத்.”

..

“ஆகிடுச்சு சார். இன்னும் பத்து நிமிடத்தில் அனுப்பிவிடுகிறேன். ...”

..

“கண்டிப்பாக. பத்து அல்லது பதினைந்து பகுதிகள் வரும்னு நினைக்கறேன் சார்.”

.

சிறுவர்களுக்கான தொடர் Famous Five சாயலில் இதை மினி தொடர்களாக தொகுக்க திட்டமிட்டு..... (இவர்கள் பயணம் தொடருமோ?).... என்ற கேள்வியுடன்,  கதைக்கான sequelஐக்  குறிப்பிட்டு,  கணினியில் சேமித்தான் ஸ்ரீநாத்.   நாளையே "வீனஸ்டோ" எழுதத் துவங்க வேண்டும். 

.

சரியாக எட்டு நிமிடங்களில் பதிப்பாசிரியர் முகுந்த்  மின்னஞ்சலுக்கு "துளசிச் செடி"  வந்து சேர்ந்தது. 

 

(முற்றும்)

 

ShakthiPrabha


(Story was written for "Short story writing contest for given pic)