June 19, 2020

பதினாறு வயதினிலே (சிறுகதை)





அதோ அங்க தெரியுதே ஒரு இளஞ்சிவப்பு கட்டடம், அதில் மூன்றாவது மாடியில் தான் பிரீதி வசிக்கிறாள். அதே போல் எட்டு அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பு.

*
நிறைய மனிதர்கள், அவர்களுடனான நட்பு, பேச்சு, வம்பு என்று பொழுது பயனுள்ளதாக (!) ஓடிப்போகும். அடிக்கடி 'கிட்டி பார்டி' நடக்கும். பிரீதிக்கு சமையலில் அத்தனை ஆர்வம் இல்லாத பட்சத்திலும், நட்பு தேடுவதற்காகவே அவளும் இணைந்திருந்தாள்.
*
பஞ்சாபி, சிந்தி, துளூ, தெலுங்கு, கன்னடம் என பலதரப்பட்டவர்களாக இருப்பதால், பேசுவதற்குப் பொதுவான விஷயங்கள் நிறைய உண்டு. நாடுநடப்பு, பொதுஅறிவு, புத்தகம் தவிர, அடுத்தவர் வீட்டு நடப்புகளைப் பற்றிய செய்தியும் இலவசமாகக் கிடைக்கும்.
*
"உனக்கு சமையல் டிப்ஸ் பிடிக்காது, வம்பு தும்பு வேண்டாம். அப்புறம் பிடிக்காம ஏன் போற பிரீதீ " என்ற 'கௌஷிக்'ன் கேள்விக்கு -- "எல்லா விஷயத்தையும் லைஃப்ல பிடிச்சா செய்யறோம்!" என்று பெரிய தத்துவத்தை உதிர்த்து அகன்றுவிடுவாள்.
*
கீழ் வீட்டு அம்புஜம் மாமி தினமொரு முறை பிரீதீ வீட்டுக்கு விஜயம் செய்வார். அன்றைக்கு சுடச் சுட ஒரு செய்தியுடன் வந்தார்.
-
"பிரீதி, உங்காத்துக்கு கீழ புதுசா குடிவராளாமே! "என் வயசுக்குத் தோதா வந்தா நன்னா இருக்கும், சின்னவா நீங்களெல்லாம் ஒரே வம்பு பேச்சு தான்." மெல்லச் சிரித்தாள் பிரீதி. மாமிக்குக் கூட வயதானாலும் வம்பு அதிகம்.
*
அது ஒரு அழகான காலைப்பொழுது. பிரீதீ வீட்டின் கீழ் மாடியில், ஒரே தட்டுமுட்டு சாமான் ஏற்றும் சத்தம்... யாரோ ஹிந்திக்காரார்கள் குடிவருவார்கள் என்று வீட்டு சொந்தக்காரர் ராவ் சொல்லியிருந்தார். அவர்கள் வீட்டு சாவி தன்னிடம் இருந்தது பிரீதிக்கு நினைவு வந்தது. கீழே சென்று அறிமுகப்படுத்திக்கொண்டாள்.
-
அவள் பெயர் பாயல், வீட்டுக்காரர் ரிஷப், வங்கியில் மேலாளராகப் பணிபுரிபவர். எட்டு வயது மகள், ஷீதல், பதினாறு வயது மகன் ரோஷன். அழகான குடும்பம்.
-
வந்திறங்கிய பாதி சாமாங்கள் புத்தகங்கள்! 'அட சிறிய, பெரிய வயதுடையர்கள் படிக்கும் நிறைய புத்தகங்கள் இருக்கே' என்று பிரீதி நோட்டமிடுகையில்....

"எனக்குப் புத்தகம் உயிர், எனிட் பிளைடன் முதல், ரிச்சர்ட் பாக் வரை எல்லாம் படிப்பேன் ஆன்டீ' என்றான் ரோஷன். தானும் புத்தகப்புழு என்று இவள் கூறவும், 'உங்கள் வீட்டு லைப்ரரி வந்து பார்க்கலாமா' என்று தயங்காது பளீர் என்ற புன்னகையுடன் கேட்டான்.
.
நீரைக் கண்ட வாடிய பயிர் போல் அவள் மனம் குதித்தது. அட தனக்கு பிடித்ததைப் பேச நட்பு கிடைத்ததே!
.
அன்று ஆரம்பித்தது நட்பு. பள்ளி முடிந்தவுடன், பல நாள் பிரீதீ வீட்டுக்கு ஓடிவிடுவான். அவன் படித்த, படிக்காத புத்தகங்களை அலசுவார்கள். அன்று பள்ளியில் நடந்த சில பல, விஷயங்களைக் கூறிச் சிரிப்பான். நெருங்கிய தோழர்கள், தோழிகள், ஆசைகள் , லட்சியங்கள் என்று பேசப் பேச நேரம் சிட்டென பறந்தது.
.
இப்படித்தான், வெகுளியாய் ஆரம்பித்த நட்பு.
.
"உங்களுக்கு ஐடெக்ஸ் இன்று நான் தான் போட்டு விடுவேன்" என்று அடம் பிடிப்பான். பிரீதி சமைக்கும் போது பின்னால் வந்து கண்மூடுவான்.
.
'ஏன் ஆன்டீ நீங்க என்னை விட பெரியவங்களா பிறந்தீங்க? என் வகுப்பில் இருந்தால், நீங்க என் best friend ஆகி இருக்கலாமில்ல!" -- குட்டிக் குட்டி கவிதையாகக் கழிந்தபொழுதுகள்! பிரீதிக்கு அவன் செயலில் பாசம், பரிவு, குழந்தைத்தனம் தெரிந்தது.

கௌஷிக் மட்டும், "சின்னப்பையன்னு நினைச்சு, ரொம்ப இடம் கொடுக்காத!" என்ற முறைப்புடன் பார்ப்பது அவளுக்கு ஏனென்று புரியவே இல்லை.
.
"wow ஆன்டீ உங்களுக்கு இந்த ஜீன்ஸ் அழகா இருக்கற மாதிரி வேற யாருக்கும் இருக்காது." என்று கூடை ice வைத்து பிரீதியை குளிரச் செய்வான்.

ஒரு நாள் ஷேர்வானி அணிந்து கொண்டு பெரிய மனுஷத்தோரணையில், வீட்டுக்கதத் தட்டி,

"நண்பர்களோட பார்டி போறேன். dress நல்லா இருக்கா?"

"உன் பாஷைலை சொல்லணம்னா, wow!" என்றாள். மத்தாப்பூவாய் சிரித்தான்.
*

ஒரு நாள் இறுக்கமாய் முகம் வைத்திருந்தான். கேட்டதற்கு உடம்பு சரியில்லை, ஒரே தலைவலி என்று ஒற்றையாய் பதில். திடீரென்று, முழித்துக் கொண்டது போல் "ஆன்டீ, நீங்க 'மேரா நாம் ஜோக்கர்' படம் பார்த்திருக்கீங்களா! நிகழ்வுகளைத் தான் படமாக்கறாங்க இல்லையா".. பேச்சில் தடுமாற்றும். எங்கே எப்போது அவன் நடவடிக்கை மாறிப் போனது என்பது பெரிய புதிராகவே இருந்தது.

அதன்பிறகு அவன் ஐடெக்ஸ் போடுவது, விளையாட்டாய் கண்களை மூடிவது, இரு குடும்பங்களும் வெளியே செல்கையில், பிரீதி பக்கத்தில் தான் உட்காருவேன் என அடம் பிடிப்பது, என எதுவும் செய்யவில்லை. ஆனால் தினம் வருவான், பெரிய மனுஷன் போல் பேசுவான். பிரீதிக்கு மட்டும் ஏதோ குறைந்தது போல் இருந்தது. ஒரு சிறு தயக்கம் அவன் தோரணையில், பேச்சில், செயலில்.
*

கௌஷிக்கிடம் இது பற்றி பேசிய போது

"நீ கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோ, அது சின்ன பையன்"

"நான் என்ன கௌஷிக் செஞ்சேன்! சின்ன பையன்னு தானே பழகறேன்"

"சின்னப்பையனும் இல்லை... பெரியவனும் இல்லை..."

"அப்டீன்னா? நான் என்ன செய்யணும்?"

"உன்னை அவன் irritate பண்றானா?"

"சீச்சீ, நல்லவன், எனக்கு அவனைப் புடிக்கும் கௌஷிக்!"

"நல்லபையன் தான், சில காலம் அப்டித்தான் இருக்கும். வயசுதானே..."

"எனக்குப் புரியலை"

கௌஷிக் புன்னகைத்து விட்டு அகன்றான்.
*

ஒரு ஆகஸ்ட் மாதத்தின் மழை நாளில், தாங்கள் வந்து ஒரு வருடம் ஆனதால் வேறு இடம் மாற்றல் ஆகியுள்ளது எனக்கூறி, அடுத்த வாரம் காலி செய்ய இருப்பதை தெரிவித்தாள் பாயல். குடும்பமே ரொம்ப நெருங்கிப்பழகியதால், பிரீதிக்கும் கௌஷிக்கிற்கும் அவர்களின் பிரிவு சங்கடப்படுத்தியது.

அப்புறம் அடுத்த நாள் ரோஷன் வந்தான்.

"என்ன ரோஷன், கிளம்பறீங்களாமே?"

"ம்"

"நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ரோஷன்"

பதிலில்லை.....

"ஆன்டீ, சின்ன குழந்தையாவே இருந்தா நல்லா இருக்குமில்ல! ..."

"ஏன்"

"சும்மா சொன்னேன் ஆன்டீ"

""எங்களை எல்லாம் மறந்துடாத ரோஷன்"

"உங்களை மாதிரி எனக்கு friend கிடைப்பாங்களா ஆன்டீ.. இனிமே?"

"நிச்சயமா கிடைப்பாங்க.. "

"ஆனா அது நீங்களா இருக்காதே!"

"..."

"சில விஷயங்கள் life ல ஏன் நடக்குதுன்னே புரியறதில்லை ஆன்டீ"

திடீரென, குழந்தையாய்க் கேவிக்கேவி அழுதான். பிரீதி அவனை தோளணைத்து சமாதானம் செய்தாள். அப்படியே அவள் மடியில் சாய்ந்து, மீண்டும் கேவிக்கேவி அழுதான்...

"ரோஷன் என்ன இது சின்ன பிள்ளையாட்டம்!"

"தெரியாம ஏதாவது தவறு செஞ்சிருந்தா என்னை மன்னிப்பீங்களா?"

"நீ ஒரு தவறும் செய்திருக்க மாட்ட, நீ தான் நல்ல பையனாச்சே!"

"நாங்க இங்க வந்திருக்க கூடாது..."

"Meeting and parting is the way of Life! ரோஷன், இது படிக்கற வயசு, நல்லா படி, இப்போது அது மட்டும் தான் குறிக்கோளா இருக்கணும். புரியுதா?"

"நான் உங்களை மறக்க மாட்டேன்.. எப்பயும் மறக்க மாட்டேன்!"

"நானும் தான் ரோஷன்"...

அவன் சென்ற பின் பிரீதிக்கு மனம் பாரமானது.அவனை மீண்டும் சந்திப்பாள். இன்றோ நாளையோ அல்லது இன்னும் ஒரு ஐந்து அல்லது பத்து வருடங்களுக்குப் பிறகோ சந்திப்பாள். அவளைப் பற்றி அவன் மறக்கலாம். மறக்காமலும் போகலாம். இல்லை இதையெல்லாம் நினைத்து சிரிக்கலாம். வெறும் நட்பு என்று உணரலாம்.

"ஒரே பதில் தான் கண்ணம்மா" என்றான் கௌஷிக்

"என்ன?"

"விடலைப்பருவம்!"

"..."

"நீயும் நானும் கூட அதைக் கடந்து தானே வந்திருக்கிறோம்!"

..... கௌஷிக் புன்னகை இப்போது அவளுக்குப் புரிந்தது.

இந்த நட்பு தந்த இனிய நினைவுகளுடன் மீண்டும் கிட்டி பார்டி ஜோதியில் கலக்க ஆயுத்தமானாள்.

**முடிந்தது***



எனக்காக ஒரு கொலை (படக்கதைப் போட்டிகாக எழுதியது )




.


'மாட்டேன்னு எப்படி சொல்றது! அந்த ஆள் சும்மாவே முறைச்சுக்குவான். ஒரே பிரச்சனையாப் போச்சு.

ராத்திரிக்கு ஜில்லுன்னு மோரைக் குடிச்சுட்டு படுத்திருந்தா, வசந்தி வந்து நொய்யி நொய்யின்னு கழுத்தறுத்தா.

"இங்க பாருங்க, எப்படியாச்சும் பணத்துக்கு ஏற்பாடு செஞ்சே ஆகணும். காலையில எந்திரிச்சா கடங்காரங்க தொல்ல தாங்க முடியல"

"கடனை அடைக்க புதுக்கடன் வாங்க சொல்றியா. இது சரியான யோசனையா எனக்கு தோணல வசு"

"பின்ன நீங்களே நல்ல யோசனையா நைட்டு முழுக்க யோசிச்சு, நாளைக்கு விடியையில என்ன பண்ணலாம்னு சொல்லுங்க."

மதிவாணன் சொன்னதை ஏத்துக்க வேண்டியது தான். நம்ம விதி அப்படி!
____

மதி...

சொல்லுடா

நாளைக்கு நைட்டு வரவா?

வேணாம். நீயே ரெண்டு நாளுல வேலைய முடிச்சு குடு. செய்ய வேண்டியத சொல்லிட்டேன். இனி உன் சாமர்த்தியம்.
___

என்ன செய்வது. பேசாமல் கொலை செய்துவிடலாமா! சேச்சே எனக்கே இளகிய மனசு. கொலையைப் பத்திய எண்ணமெல்லாம் எப்படி வரும்! அமானுஷ்யமாக ஒரு சாமியாரை வரவழைச்சு...மந்திரிச்சு....அட மகமாயி நினைச்சாலே நடுங்குதே. இதுக்கு என்ன தான் வழி. அந்தாளு மூணே நாளுல முடிக்க சொல்லிருக்கானே. ஆமாம் 'டைகர் தினகரன்' தான் சரியான ஆளு.

தினகரா எனக்கொரு உதவி வேணும். தினகரன் தன்னை செருப்பாச் தெச்சு குடுக்கவும் தயங்காதவன்.

பிரபாகர் நீ கேட்டபடி ரெடி பண்ணிட்டேன்- என்றான்.

நான் எனப்படும் பிரபாகர் அவனை காணத் தயாரானேன். இருந்தாலும் எனக்கும் இதற்கும் எப்படிப் பொருந்திவரப் போகிறது என்ற தயக்கம்.

_

ஹோட்டல் 'சூரியகாந்தி'க்கு நான் சென்ற போது நேரம் அஞ்சு மணி இருக்கும். சர்வர் சுந்தரம் போல் ஒருவன் பத்து டபரா டம்பளரை அலேக்காக தூக்கி சென்று கொண்டிருந்தான். சிரிப்பு வந்தது எனக்கு. என்ன கலைத்திறன் இவனுக்கு! இதையெல்லாம் ரசிக்க முடியாத மனநிலையில் இருக்கிறேனே! என்னைப் போய் கொலை.... என்னை நானே திடப்படுத்திக் கொண்டேன். வேறு வழியே இல்லை களத்தில் இறங்கிவிடும் கணம் நெருங்கிக் கொண்டிருந்தது.
.
தினகரனிடமிருந்து பெற்ற பையில் அந்தத் "தலை"யை வைத்திருந்தேன். எப்படியாவது மதியை இங்கு வரவழைத்து வந்த காரியத்தை முடித்து, பணம் வாங்கி விடவேண்டும்.
.

மதிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்த பிறகு....நேர்த்தியாக அந்தத் தலையை எடுத்து டேபிளில் பரப்பினேன். யாரும் இங்கு வந்து விட மாட்டார்கள் என ஊர்ஜிதம் செய்த பின், அந்தத் தலையை கூர்ந்து கவனித்தேன். கண் கொஞ்சம் பயம் கலந்த மாதிரி இல்லாமல், 'சின்னப்பாப்பா' கண்ணு மாதிரி குழந்தைத் தனமாக இருப்பதாகப் பட்டது. வாயில் வழிந்து கொண்டிருந்த ரத்தம் கொஞ்சம் காய்ந்திருந்தது. பல் சீராக இருந்தது. தவறு. பல்லை அடையாளம் தெரியாதபடி உடைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் தப்ப முடியும். மதி வந்து விடட்டும், ஒரு முடிவு கட்டி விடலாம்.
.
மதி வந்து விட்டதாக ரிசெப்ஷனிலிருந்து கால் வந்தது. இதோடு ஆறாவது சிகரெட். சின்ன வயசில் என் பக்கத்து விட்டு காதலி பர்வதம் சிகரெட்டை விட்டுவிடு என்று தினத்துக்கு பத்து முறை சொல்லியும் இன்னும் என்னால் விட முடியவில்லை. வசந்தி கூட பல தரம் எடுத்துச் சொல்லி அலுத்துவிட்டாள். இன்றோடு இதை விட வெண்டும். ஒரு விரக்தியில சிகரெட்டை அழுத்தி அந்தத் தலையை தடவினேன்...
.
"முய்க்" என்றொரு சத்தம் வந்தது. முட்டாள் தினகர் எத்தனை முறை சொல்லியிருப்பேன் தொழிலில் கவனம் வேண்டுமென்று!
.
சரியாக அதே நேரம் சர்வர் சுந்தரம் போன்ற அந்த நபர் டீ கொண்டு வந்தான்.
.
திடுக்கிட்டு திரும்பிய நேரம்.... பத்தூருக்கு கேட்கும்படி அலறி டீயெல்லாம் தரையில் சிந்தியதில் நான் பயந்து வெலவெலத்துப் போனேன்.
.
அடுத்த அரை மணி நேரத்தில் நான் பேசிய எதுவும் எடுபடவில்லை. அருகிலிருக்கும் ஸ்டேஷனில் முட்டிக்கு முட்டி தட்ட திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்.
-
வேண்டாம் சார் முட்டிக்கு முட்டி அலுத்து விட்டது. எனக்கு முதுகில் இடதுபக்கமா சுளுக்கு, அங்க கொஞ்சம் இதமா அடிச்சீங்கன்னா....என்று சொல்லத் தோன்றியது. இருப்பினும் சொல்லாமல் அடக்கிக் கொண்டேன், இது சரியான நேரமல்ல.
.
அரை மணி கழித்து ஆசுவாசமாக வந்துத் தொலைத்தான் மதி.

அப்புறம் இன்ஸ்பெக்டர் நாகசுந்தரத்திடம் ஆதி முதல் அந்தம் வரையிலான கதையை ஒப்பிக்க வெண்டியிருந்தது.

"சார் நான் அப்பவே சொன்னேனே சார். இவர் தான் வளர்ந்து வர டைரக்டர் மதி."

"யார் இவரா? வளர்ந்ததாகவே தெரியலையே!"
-
ஐஞ்சடி ஆறங்குலம் இருந்த மதி, கோபமாக குதித்தார். என்னுடைய "ரதிவசம் வந்த அதிரசம்" நூறு நாள் ஓடிச்சே நீங்க பார்க்கலையா!
.
சரி சார் விஷயம் இது தான். எனக்கு க்ரைம் அல்லது ஹாரர் கதை எழுத சொல்லி ரூம் புக் பண்ண சொல்லிருந்தார். இது வரை பிழிய பிழிய சென்டிமென்ட், காதல் கதைகள், இப்படியே எழுதின பஞ்சுக் கைகள் சார் இது. யோசிச்சு யோசிச்சு ரெண்டு
நாளில் கொஞ்சம் திரைக்கதை எழுதியிருந்தேன். அதுக்கு உபயொகமா இதை தருவிச்சிருந்தேன்.... அதை இந்த ஹோட்டல் சர்வர் பார்த்து கொலைன்னு நினைச்சு.........ஹி ஹி... என்றேன் நான்.
-
நீ கதாசிரியரா?

ஆமாம் சார்.

பெயர்?

பிரபாகர். பிரபான்னு செல்லமா கூட கூப்டுக்கோங்க சார், ஆனா என்ன ரிலீஸ் பண்ணிடுங்க. மதி சாரோட "முகநூலில் தொடுத்த முல்லைமலர்" படம் பார்க்கலியா...நான் தான் திரைக்கதை வசனம் எல்லாம்...

அந்த கிராதகன் நீ தானா! அதைப் பார்த்துட்டு என் சம்சாரம் படம் பார்க்குறதையே விட்டுடுச்சுப்பா. நல்ல சமூக சேவை.

ஹிஹி சார்.

என்னை ரிலீஸ் செஞ்சத்துக்கு அன்பளிப்பா இந்த படம் வெளிவந்ததும், உங்க குடும்பத்துக்கு முதல் ஷோவுக்கு மூணு டிக்கட் ஃப்ரீ சார்.

ஆ...! அட ராமா! என்று மயங்கி விழுந்தார்.

இவ்வளவு தங்கமான மனுஷனா இருக்காரே, இவரை வைத்து காமெடி எழுதலாமா, இல்லை பயமுறுத்தி ஹாரர் எழுதலாமா என்று குழம்பிக் கொண்டிருக்கிறேன் நான்.

***சுபம்***


குறிப்பு: கணேஷ் பாலா அவர்கள் நடத்திய படக்கதைப் போட்டிக்கு எழுதியது. நன்றி கணேஷ்பாலா சார். 

தீர்ப்புகள் திருத்தப்படலாம் (ஓவியப் போட்டிக்காக எழுதியது)



டிங் டாங்க் என்று பத்து முறை அலறி ஓய்ந்தது கடிகாரம். கண்ணாடியை சரிசெய்து கடிகாரத்தை பார்த்தவருக்கு திக்கென்றிருந்தது. குளுகுளு ஏ.சி அறையிலும் உடம்பெல்லாம் வியர்வையில் நனைந்திருந்தது. இன்றுடன் சரியாக பத்து நாளாகிறது. இன்றும் அது வந்துவிடுமோ என்ற அவஸ்தையில் நெளிந்தார் செந்தில்நாதன். இரவு கடக்கவேண்டுமே என்ற கவலையில் ஒரு முழுங்கு விஸ்கி. குடியைை விட்டு விட்டால் எல்லாம் சரியாகி விடுமோ என்று நினைத்தார். ஒரு வேளை அத்தனையும் பிரமையா? மனம் நடத்தும் நாடகமோ!
*

நீண்ட நேரம் உறங்காமல் வலைதளங்களில் ஏதேதோ குப்பைகளையும் சில நல்ல விஷயங்களையும் புரட்டிக்கொண்டிருந்தார். இப்படியும் அப்படியும் புரண்டு படுத்தார். எப்பொழுது உறங்கினார் என தெரியவில்லை...
*

புகை மாதிரி கண்ணுக்கு சட்டென புரியாத சூழ்நிலை. சடக்கென்று அந்த உருவம் நுழைந்தது. உடலெங்கும் கருப்பு அங்கி அணிந்து தன்னை மறைத்திருந்தது. ஆணென்றோ பெண்ணென்றோ கூற முடியவில்லை. பேய் பிசாசு மாதிரி அந்தரத்தில் ஆடுகிறதே, ஒரு வேளை மனப்பிராந்தியோ? மெல்ல மெல்ல நெருங்கிய உருவம், அங்கியை விலக்கியது. விலக்க விலக்க இருதயம் ஓட்டபந்தய வேகத்தில் ஓடத்துவங்கியது. அய்யோ என அலறி எழுந்தார் செந்தில். கண்டது கனவு என எளிதில் புறந்தள்ள முடியவில்லை.
*

பத்து நாட்களாக இதே கனவு. ஒவ்வொரு நாளும் அந்த உருவம் மெல்ல மெல்ல தன்னை விளக்கிக் காட்டுகிறது. முதல் நாள் குழப்பமாக மங்கலாக தெரிந்த அதே உருவம் தன்னை வெளிப்படுத்த கொண்டே வருகிறது. அரை வழுக்கை மண்டை. நீண்ட கிருதா....ஒன்றொன்றாக விலக விலக.... அட இது நான் அல்லவா? அப்படியானால் நான் கொல்லப்போகிறேனா? யாரை? எனக்கு பகையாளிகள் யார் உள்ளனர்! சிந்திக்க சிந்திக்க தலைவலி மண்டையை பிளந்தது.

*

அன்றும் கனவு வந்துவிடும் என்று நிச்சயமாக நம்பினார். படுக்க பயந்தவர் இறுதியில் அய்யோ என அலறி எழுந்தார். நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. இனி தாமதிக்கக்கூடாது நாளையே டாக்டர் விவேக்கை சந்திப்பதென முடிவு செய்தார்.
*
வாங்க நீதிபதி அவர்களே.... கிண்டலுடன் கை குலுக்கினான் விவேக்.
--
கிண்டலெல்லாம் அப்புறம். நான் ஒரு பேஷண்டாத்தான் உன்ன பார்க்க வந்திருக்கேன்.
--
ஓ.. இந்தியவின் மிக உன்னத தலைமை நீதிபதிக்கு உதவ காத்திருக்கிறேன் சொல்லுங்க என்ன பிரச்சனை.
*

தொடர்ந்து வந்த பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே பொனார். விவேக் நீ ஒரு மனோதத்துவ நிபுணன் நீ சொல்லு நான் என்ன செய்யட்டும். தினம் படுக்கவே பீதியா இருக்கு.
.
உங்களுக்கு தெரிஞ்சு யாராவது விரோதி? பொறாம புடிச்சவங்க? இப்டி யாராவது?
.
நான் நினைவு தெரிஞ்சு யாருக்கும் வஞ்சம் எண்ணியதில்லை. ஹைகோர்ட் நீதிபதியா பணியாற்றிய போது கூட முறையா தீர்ப்பு வழங்கிருக்கேன். சில கேசுல சரியான சாட்சி இல்லாததால தவறியிருக்கலாம். என் நெஞ்சு அறிஞ்சு தப்பு செஞ்சதில்லை விவேக்.
.
புரியுது சார். சும்மாவா உங்கள தலைமை பதவில உக்காரவெச்சிருக்காங்க. ஒட்டுமொத்த ஆதரவும் உங்களுக்கு இருந்தது. தமிழன் என்கிற முறையில
எங்களுக்கெல்லாம் பெருமை.
.
சரி எப்படி உதவ முடியும்ன்னு நினைக்கறீங்க.
.
விவேக், ஒன்பது நாளா இதே கனவு. இன்னைக்கு ஏன் உன்ன பார்க்க வந்தேன் தெரியுமா?
.
சொல்லுங்க.
.
அந்த உருவம் மெல்ல மெல்ல தன்னை யாரென்று காட்டத்துவங்கி, நேற்று முழுவதுமாக அங்கி விலகிடுச்சு. உள்ளிருந்தது சாட்சாத் நான் தான். நான் யாரையாவது கொலை செஞ்சுடுவேனோன்னு பயமா இருக்குப்பா. குற்றவுணர்வும் பீதியும் கலந்து விவேக் கண்களை சந்திக்க துணிவின்றி
தலை குனிந்தார்.
.
யாரை கொல்றீங்கன்னு தெரியுதா சார்?
.
தெரியலைப்பா. தினம் த்ரில்லர் படம் பார்க்க போற மாதிரி திக்குதிக்குங்குது. இன்னைக்கு தூங்கினா அதும் தெரியுமோ என்னவோ. எனக்கு நடுக்கமா இருக்கு.
----
முதலில் படபடப்பு குறைய மன-அமைதிக்குன்னு சில மருந்து தரேன். ரொம்ப basic stuffs. அதிகம் பயப்படாதீங்க. மூச்சுப்பயிற்சி செய்யுங்க. இரவு படுக்கும் முன்ன நல்ல விஷயங்கள படிங்க, கேளுங்க. இரண்டு நாளில் சரியாகிடும்னு தோணுது. தொடர்ந்து அதே கனவு வந்தா அடுத்த கட்டத்தை யோசிப்போம்.
*

அன்று கோர்ட்டுக்குப் போகவில்லை. வீட்டில் ஏதேதோ யோசித்தார். அந்த கொலை வழக்கில் சாட்சியில்லை என்று ஜாமீன் கொடுத்துவிட்டோமே அதுல செத்துப் போனவன் ஆவியா இருக்குமோ? இன்னும் ரெண்டு நாளில் யாரென்று கனவே சொல்லிவிடும். ஒருவேளை விவேக்காக இருக்குமோ!!! சீச்சீ என்று தன்னை நொந்துகொண்டார். அதீதமான கற்பனை.
*

நான்கு மணி வரை உறங்காமல் சட்டம் சம்மந்தபட்ட புத்தகங்கள், சமீபத்திய வழக்குகள் என ஒவ்வொன்றாக புரட்டினார். சட்டென பொறிதட்டியது. ஒருவேளை அதுவாக இருக்குமோ? ஆம் அதுவே தான். அன்று உறங்கப்போன போது மணி ஐந்து. இரண்டு மணி நேரம் உறங்கியிருப்பார்.
வித்தியாசமான காது, பொருந்தாத கண்-மூக்குடன் ஒரு குழப்ப உருவம். அதை நோக்கி அவர் கத்தியுடன் நகர்கிறார். சுற்றி கூச்சலும் குழப்பமும். ஒரே கலவரம். பின்னால் சிகப்பாய், பச்சையாய் மஞ்சளாய் பல வர்ணங்கள் காற்றில் ஆடியது
சட்டென முழித்தார்.
.
தெளிவுடன் எழுந்தார். 'தாமஸ் உடனே என்னை வந்து பாரு'
*

அன்றைக்கு தீர்ப்புக்காக ஆறு பேர் காத்திருந்தனர். ஒவ்வொருத்தனும் தன் உணர்வுகளை கட்டுக்குள் வைத்து உணர்ச்சியற்ற முகத்தை ஒட்டிக்கொண்டிருந்தனர்.
--
அவர்களைச் சேர்ந்தவர்களேன்று யாரும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள அறுவெறுத்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்நோக்கி நாடே காத்திருக்கிறது. ஆறு பேரும் ஒரே குற்றத்திற்காக தண்டனை வேண்டி காத்திருந்தனர். அவளுக்கு 38 வயது. இரண்டு மாதம் முன்பு வரை குடும்பம், அலுவலகம், நண்பர்கள் என்று சிறிய குறுகிய உலகத்தில் நிம்மதியாக வாழ்ந்திருந்தாள். அவள் ஒருத்தி. அவர்கள் ஆறு பேர். மறுநாள் சின்னாபின்னமாகி சிதறியிருந்தாள்.
*

ஓநாய்களும் பன்றிகளும் வெவ்வேறு வயதொத்த
ஆண்வேடமிட்டு தீர்ப்புக்கு காத்திருந்தன. அதில் ஒருவனுக்கு வயது பதினேழு. வாய்தா மேல் வாய்தா என்று ஒரு வழியாக இன்றைக்கு படிக்கப்படும் தீர்ப்பு நாடு முழுவதும் இத்தகைய குற்றம் செய்பவர்களுக்காக எழுதப்படும் சாசமென அமைய காத்து நின்றது.
*
இரண்டு மாதமாக எழுதப்பட்டு , ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சு ஒப்புதல் வழங்கியது.
--
அன்னியன் திரைப்படம் போல கும்பீபாகம் கம்பீபாகம் இப்படி கொடூரமாக கொல்லணும் - பெண்கள் குமுறினர்.
.
இனிமே பொம்பளைங்களுக்கு துப்பாக்கி வெச்சுக்க லைசன்ஸ் குடுங்க - தவறு. தவறான நபர் கையாண்டால் அநீதியில் முடியும். - ஆளுக்கொரு ஆலோசனை.
.
ஆணித்தரமாக தீர்ப்பு வாசிக்கப்பட்டது
*

" கொடும் வன்புணர்வு வழக்கில் சாட்சியும் ஆதாரமும் தெள்ளத்தெளிவாக நிருபிக்கபட்டுள்ள நிலையில், வயது வித்தியாசமின்றி குற்றவாளிள் அறுவரையும் கூண்டில் ஏற்றி நாட்டின் முக்கிய நகரங்களின் முக்கிய தெருக்களிலெல்லாம் இழுத்துச் சென்று பொதுமக்களின் பார்வைக்கு நிறுத்தப்பட வேண்டும். இத்தருணத்தில், சட்டத்தை தம் கையில் எடுத்து, குற்றவாளிகளை கொன்றுவிடும் முயற்சியில் ஈடுபடும் எவரும் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்பதையும் உணர்த்துகிறோம். அடுத்த ஒரு மாதம் அவர்கள் தற்கொலை முயற்சியில் இறங்காவண்ணம் பாதுகாக்கப்படுவர். ஒரு மாத காலம் உயிரை தக்க வைத்துக்கொள்ள போதுமான உணவும் நீரும் மட்டுமே வழங்கப்படும். ஒரு மாத கால கெடுவிற்குப் பிறகு, காற்றுப்புகா சிறிய அறையில் அடைக்கப்படுவர். உணவும் நீரும் நிறுத்தப்படும்.
-

தீர்ப்பு படித்து முடித்ததும் இத்தனை கொடுமை அவசியமோ என்று மனம் பதறியது. தவறு செய்து விட்டோமோ என அஞ்சினார். நீதிமன்றத்திற்கு வெளியே ஒரே ஆரவாரம். பச்சையும் மஞ்சளும் சிவப்புமாக பல வர்ணங்களில் அவர்கள் அணிந்த சேலைகளும் காற்றில் சலசலத்து தீர்ப்பை ஆமோதித்தது.
--

ஆறு பேருக்கும் நா-வரண்டது. தண்ணீர் மறுக்கப்பட்டது. தூக்கு தண்டனை எதிர்பார்த்தனர். அல்லது சுட்டுத்தள்ளிவிடுவார்கள் என்று நினைத்தனர். மனதை தயார்படுத்தியே வந்திருந்தனர்.
.
அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டார்கள்
"கொல்லத்தானே கூடாது...எங்க அந்த மிளகாய்த்தூளு அத குடு" - என்றாள் ஒருத்தி.

"இனிமே இன்னொருத்தன் இப்படி நினைக்கவே பயப்படணும்" - ஒரு பெண் வீரமாக முழங்கினாள்

.
'அய்யா அய்யா எப்படியானும் தூக்கு தண்டனை வாங்கி குடுத்துடுங்கய்யா....'எங்கள தெருவில நிறுத்தாதீங்க என்ற ஓலம் கேட்டுக்கொண்டிருந்தது.

--
உன்னிப்பாக கவனித்தார். ஒருவனின் காதும் இன்னொருவனின் மூக்கும், இதுவரை இப்படிப்பட்ட வழக்கில் தப்பித்த அல்லது தப்பிக்காத பலரின் அங்கங்கள் ஒட்டுமொத்தமாக திரண்டது....

அவர் கனவில் வந்த "அவன்"

--

காரில் ஏறியவர் கண்ணை மூடி அமர்ந்தார்.

"ஏதாச்சும் பாட்டு போடுப்பா"

"அயிகிரி நந்தினி நந்தித மேதினி....."

நெடுநாள் களைப்பு, சுகமாக உறங்கிப்போனார்.

கனவு வரவேயில்லை.


**சுபம்**


குறிப்பு:  கணேஷ் பாலா அவர்கள் நடத்திய ஓவியப் போட்டிக்காக எழுதியது.
நன்றி கணேஷ்பாலா

எனக்கென்றும் நீயே சொந்தம் (ஓவியப் போட்டிக்காக எழுதிய சிறுகதை)








காலையிலேயே வீடு பரபரப்பை உடு
த்திக் கொ
ண்டிருந்தது. ஆதித்யா இன்று குடும்ப சகிதம் வீட்டிற்கு வருகிறான். பத்து முறை ஒத்திகை பார்த்தாகி விட்டது இருந்தாலும் வனிதாவுக்கு முகமெங்கும் பதட்டம் ஒட்டியிருந்தது.
.

சின்ன குடும்பத்தை ஏற்றிக்கொண்டு சிக்கென வந்து இறங்கியது கார். எல்லோரும் வளவளவென்று பேசினார்கள். ரசித்து சிரித்தார்கள். ஆதித்யாவுடன் பேச ஒன்றுமில்லை. ஆறு வருடங்களாக என்னவெல்லாம் பேச வேண்டுமோ அத்தனையும் பேசியாகிவிட்டது. திருமணம் முடிந்த பிறகு, பேச ஒன்றுமேயில்லாமல் மோட்டுவளையை பார்த்துக்
கொண்டு உட்கார்ந்து விட நேர்ந்தாலும் நேரலாம்.
.

பரஸ்பர பேச்சுக்கள் முடிந்ததும், மெல்ல ஆரம்பித்தாள் ஆதித்யாவின் அம்மா. என்ன நகை-நட்டு சீர் செனத்தி என்ற கேள்வியை நாசூக்காக இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் பட்டும் படாமலும் கேட்டாள்.
.
சீர் செஞ்சாத்தான் கல்யாணம் என்று இல்லை சும்மா தெரிஞ்சு
க்கத் தான் கேட்டோம். நாங்களும் அதையே
வாங்கிட கூடாதுல்ல.
,

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நிம்மதி. சின்னவள் ரோகிணியும் அக்காவுக்கு கல்யாணம்
என்று குதித்தோடிக் கொண்டிருந்தாள்.
.

******

அப்பா சீர் கேட்டாங்களாப்பா?
,

இல்லடா சும்மா தெரிஞ்சுக்கத் தான் கேட்டாங்க. நாம என்ன செய்யறோம்னு சொல்றது நம்ம கடமை இல்லையா?
,

அவங்க எவ்வளவு செய்யறாங்கப்பா?
,

என்னம்மா இது! அவங்க என்னத்துக்கு செய்யணும்?
,
எனக்கும் ஆதித்யாவுக்கும் கல்யாணம். நாம எப்படி செய்வோம்னு அவங்க எதிர்பார்க்கறாங்க. அதான் அவங்களும் என்ன செய்வாங்கன்னு கேட்டேன்.
,
நீ இப்படி வாய் துடுக்கா பேசக்கூடாதும்மா.
,

ஆகட்டும்ப்பா. எனக்கு ஆஃபிஸ் டைமாச்சு அப்புறம் பேசலாம்.
,

*****
அலைபேசியில் அன்றைக்கெல்லாம் ஆதித்யா தன்
அம்மாவுக்கு உள் நோக்கம் ஏதுமில்லை என சத்தியம் செய்தான். இதுக்காக கல்யாணமெல்லாம் நிக்காது. அப்படியே நின்னா என்னை கடத்திட்டு போயிடு. உன் கூடவே வந்திடறேன் என்று சிரித்தான்.
.

சேச்சே...அதுக்கெல்லாம் அவசியமிருக்காது உன்ன அப்படியே ஊர் பார்க்க....
,

அய்யய்யோ! ஊர் பார்க்க?
,

கட்டி இழுத்துட்டு வந்துடுவேன்னு சொன்னேன் என்று கலகலத்தாள்.
,

*****
,

அப்பா இதுவரை எத்தனப்பா செல்வாகியிருக்குது.
,
ஏண்டா கண்ணு இதெல்லாம் கேக்குற?
,

சொல்லுங்கப்பா...
,
அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையில்ல. முன்னமே சில நகைங்க கூட சேர்த்து வச்சிருந்தோம். சாமான் செட்டு வகையறா, சத்திரம், வந்தவங்களுக்கு பரிசு, அலங்காரம், துணிமணி, சாப்பாடு எல்லாமே எதிர்பார்த்த செலவுல முடிஞ்சிடும்மா.
.

நான் பையனா பொறந்திருந்தா படிக்க வெக்கற செலவோட நின்னிருக்கும்....மொத்த செலவும் நம்முதா?.இது என்னப்பா நியாயம்!
.

அதெல்லாம் பரவாயில்ல. அவங்க ஒண்ணும் வற்புறுத்தல. உலகம் ரொம்ப மாறிப்போச்சும்மா, முன்ன மாதிரி இல்லை.
,

****
பூக்கள் எங்கும் அலங்காரமாய் தோரணம் அமைக்க, மணக்கும் விருந்து, ஜொலிக்கும். உடைகள் என குறைவின்றி திருமணம் சிறப்புற நடந்தது. தண்ணியாக ரூபாய் நோட்டுக்கள் செலவழிந்தன. சுபயோக தினத்தின் காலை முகூர்த்தத்தில் ஆதித்யா வனிதாவை சொந்தமாக்கிக் கொண்டான். இல்லை. அவள் தான் அவனை தனதாக்கிக் கொண்டிருந்தாள்.
.

*****

சில தினங்கள் சிரிப்பும் சந்தோஷமுமாக இரு வீடும் கல
லத்தன. வந்திருந்த உறவுகள் எல்லாம்
விடை பெற்று பொன பின்,

போகலாமா ஆதித்யா? என்றாள்
.

எங்க?
.

என் செலவுல வீடு பார்திருக்கேன். பக்கத்துல தான். பயப்படாத. அதிர்ந்து போயிருந்தனர் அனைவரும். இவன நான் வாங்கிருக்கேன். லட்சங்கள் செலவு பண்ணி எனக்கே சொந்தமாக்கிட்டேன்.
.

என்னம்மா இப்படி பேசுற? உங்கள ஒண்ணும் செலவு செய்ய நாங்க வற்புறுத்தலையே!
.

ரொம்ப சிக்கனமான திருமணம் கூட செலவு செய்யாம நடக்காது அத்தை. நாங்க விழாவை சிறப்பாயில்ல செஞ்சிருக்கோம். உங்க மகனுக்கும் திருமணம் தானே, நீங்க இதுவரை எவ்வளவு செலவு செஞ்சிருப்பீங்க? உங்க மகன் திருமணத்துக்கும் சேர்த்து நானே தான் ஆபிஸ்ல லோன் போட்டிருக்கேன்.
.

பதிலில்லை.
.

அவன் எனக்குத் தான் சொந்தம். என்னுடைய பொருள். என் உடைமை. நான் விலை கொடுத்து வாங்கியிருக்கேன்.
.

யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் விறுவிறுவென அவனை இழுத்
து சாமானோடு சாமானாக கட்டினாள்.
.

என்னடி வனிதா இது.

.

சும்மா வாடா. உனக்கு கால்கட்டு போட்
டாச்சு, கார்லையும் கட்டி போட்டா சரியாகிடும். நியாயப்படி நான் உனக்கு தாலி கட்டிருக்கணும்.
.

இந்த ராக்ஷசியை எப்படி சமாதானப்படுத்துவது என்று விழிபிதுங்கியபடி ஆதித்யா காரில் கட்டுண்டான்.
.

பாதிக்கு பாதி செலவை ஏற்றுக்கொண்டால் தன் மகனை கண்ணில் காட்டுவாளா என்று கேட்க தூது அனுப்பியிருக்கிறாள் ஆதித்யாவின் அம்மா. அனேகமாக சுமூகமாக முடியலாம்.
.

சுபம்.

குறிப்பு: கணேஷ்பாலா அவர்கள் நடத்திய ஓவியப் போட்டிக்கு எழுதியது
நன்றி: கணேஷ் பாலா.