July 21, 2020

பிழைக்கத் தெரியாதவன்






"ரோம் நகரமே தீப்பற்றி எரிந்த போது நீரோ பிடில் வாசித்த கதையா இருக்கு" சரோஜி பாட்டி சந்தடி சாக்கில் பழமொழி எடுத்து விட்டாள். பாட்டிக்கு எங்கிருந்து தான் ஸ்டாக் இருக்குமோ தெரியவில்லை. பழமொழிகளை மனப்பாடம் செய்து வைத்திருந்து, தக்க சமயத்தில் பஞ்ச் டைலாக் பேசுவாள்.
*

தேக்கு மரத்தாலான நாற்காலிகளும் மேஜைகளும், கல்யாணச் சந்தையில் இன்னும் சற்றே நேரத்தில் விற்கப்படும் கன்னியைப் போல் பளிச்சென்று மின்னிக்கொண்டு, தமை வாங்கும் எஜமானனுக்காகக் காத்திருந்தன. கன்னி என்று சொல்வது தப்பு. பல முறை உபயோகப் பட்டுக் கன்னி கழிந்த பழைய சாமான்கள். அழகை பராமரிப்பதையே முழு நேரத்தொழிலாகக் கொண்ட நடுத்தர வயது பெண்ணின் சருமத்தைப் போல், தினமும் கண்ணும் கருத்துமாய் பராமரிக்கப் பட்டதால் இன்னும் பார்க்க அழகாகவே இருந்தன.
*

வாங்கும் கண்ணோட்டத்துடன் இது வரை யாரும் வந்து நோட்டமிடவில்லை. விற்கப்படும் முன் எங்கிருந்தோ மூக்கில் வியர்த்த மாதிரி பக்கத்து வீட்டு சேஷாத்ரி என்கிற சேஷு தான் முதலில் பார்வையால் அளந்தவன்.
-
"என்ன சாம்பு விக்கற ஐடியாவா?" - சாதுவாக சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்த சாம்புவிடம் கேள்வி கேட்க, சந்தியாவந்தன மூடில் ஒரு மார்க்கமாய் தலையாட்டி வைத்த சாம்புவின் தலையாட்டலை தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு..
"வேற யாருக்கும் விக்காதடா, என் ஒண்ணு விட்ட சித்தப்பா ஒருத்தர் சோபா செட்டெல்லாம் வாங்கணம்னு ரொம்ப நாளா சொல்லிண்டு இருக்கார். எதுக்கும் அவரை முதல்ல வந்து பாக்க சொல்றேன்"
*

"இவன் வித்துக்குடுக்க போறானா? வேலியே பயிர மேஞ்ச கதையா ஆயிடும் சாம்பு" என்று சரோஜி பாட்டி முதலிலேயே புள்ளையார் சுழி போட்டாள். "ருக்கு உங்காத்துகாரருக்கு சாமர்த்தியம் போறாதுடி" என்று சாம்புவின் தர்ம பத்தினியான ருக்குவையும் வம்புக்கு இழுத்தாள்.
-
"இந்த மாதிரி வீட்டுக்கு ஒரு கிழவியிருந்தா லோகம் உருப்டுடும்" என்று ருக்கு முணுமுணுத்தது நல்ல வேளை சரோஜி பாட்டிக்கு காதில் விழவில்லை.
*

சேஷுவின் ஒண்ணு விட்ட சித்தப்பா, அவருக்கு சம்பந்தமே இல்லாத ரெண்டு விட்ட மாமாப் பேரனுடன் சோபாவைப் பார்க்க வந்தார். பெண்பார்க்கும் படலம் போல் அதற்கு இல்லாத துடை துடைத்து, ஏற்கனவே இருந்த சோபாவின் சோபையை கூட்டினர் சாம்பு தம்பதியர்.
-
அடுத்தநாள், ரௌடி கெட்டப்பில் இருந்த ஒருவனை கூட அழைத்து வந்து, தங்களுக்குத் தெரிந்த மரக்கடை ஊழியன் என்று அறிமுகப்படுத்தி, சோபாவிற்கு பரிட்சை வைத்தனர். பூதக்கண்ணாடி வைத்து பழுதுகள் தேடினர். சந்தையில் மாட்டை விற்பதைப்
போல இருந்தது சாம்புவுக்கு.
-
"இதுக்கு மொத்தமா ஆறு ஆறதா? கொஞ்சம் ஜாஸ்தியா தோணறது சேஷு. உன் ·ப்ரெண்டுங்கற, கொஞ்சம் ஐஞ்சுக்கு கொறைச்சு குடுக்க சொல்லேன்"
-
சாம்புவுக்கு குரைப்பதுடன் இலவசமாய் கடித்துக் குதறி, அவரை வெளியே துரத்த வேண்டும் போல் ஆத்திரம் மேலிட்டது. "ஆறுக்கு கீழ கம்மி பண்ண முடியாது சார். இது ஹிமாலயன் டீக். இந்த மாதிரி கிண்ணுன்னு இப்போ வுட் கிடைகக்றதில்லை. இன்னும் ஒரு நாளில் உங்க முடிவைச் சொன்னால் எனக்கு வசதியா இருக்கும். இரண்டே நாளில் கேஷாக தரேள்ன்னா ஐநூறு ரூபாய் குறைக்க யோசிக்கறேன்"
*

ஒரு நாள் கொடுத்த கெடுவுக்கு, கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு நாளாகியும் ஒரு தகவலும் வராததால் சாம்பு வேறு இடத்தில் ஆறரைக்கு விலை பேசினான். ரொம்ப நல்ல மேக் என்று சிலாகித்து இன்னும் இரண்டு நாட்களில் தகவல் சொல்வதாகக் கூறிச்சென்றனர். சேஷு பார்வையில் படாமல் இருந்தால் வெளியே இன்னும் நல்ல விலைக்கு போயிருக்கும். இவனின் ஒன்று விட்ட சித்தப்பாவுக்கு நான் மொய் அழ வேண்டுமா என்று எரிச்சலில் இருந்தான் சாம்பு.
*

ருக்கு வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்தாள். "சோபாவெல்லாம் யாரோ அசோக் நகர் பார்டிக்கு விக்கறதா முடிவே பண்ணிட்டேளா? சேஷு பொண்டாட்டி மைத்ரேயி ரொம்ப வருத்தத்தோட கேட்டா. அவா சித்தப்பாக்குன்னு வாக்கு குடுத்துட்டு இப்படி பண்ணிட்டேள்ன்னு குத்தி காமிச்சு பேசறா"
-
பதிலே சொல்லாமல் விட்டேத்தியாக டிவி பார்க்கும் சாம்புவின் மேல் சரோஜி பாட்டிக்கு ஆத்திரமாக வந்தது. ரோம் நகரத்து பழமொழியை உதிர்த்துவிட்டு, "சொல்லேண்டா சாம்பு, அவாளுக்கு என்ன வாக்கா குடுத்தோம்? ரெண்டு நாளுல சொல்லணம்னு பொறுப்பும் சொரணையும் அவாளுக்கு இருக்கணம்" பொரிந்து தள்ளியப்படி இருந்தாள்.
-
சாம்பு சில மணி கழித்து சேஷு விட்டு வரை சென்று வந்தான். "நாளைக்கு சேஷு சித்தப்பா சாமானெல்லாம் எடுத்துண்டு போக வருவா. ஆறு குடுக்கறதுக்கு ஒத்துண்டுட்டாளாம்"
*

"ஏண்டா அசோக் நகர் பார்ட்டி ஆறரை தரதா சொன்னியேடா அசமஞ்சம்" என்றாள் சரோஜி பாட்டி தாங்க முடியாமல்.
-
"போனாப் போகட்டம் நமக்கு வாக்கு தான் முக்கியம். ஒருத்தர் மனவருத்தி வர பணம் வேண்டாம்" என்றான் சாம்பு.
-
"குடிக்க கஞ்சியில்லாதவன் கோவணத்தையும் தானம் செஞ்ச கதையா இருக்கு. பணம் கொட்டிக் கிடக்கு பாரு" முணுமுணுத்தாள் பாட்டி
-
அசோக் நகர் பார்டி, பேரம் பேசி ஐந்துக்கு கேட்டதை கடைசி வரை யாருக்கும் சொல்லவேயில்லை சாம்பு.
***

© ஷக்திப்ரபா

மாதவம் செய்த மகளிர்

Equal jobs and equality for men and women - A distant dream

தெய்வமெனக் கருதி
நெஞ்சகத்தே உயர்த்திப் போற்றாவிடினும்
செய்த பாவத்தின் வினையென்றே தூற்றாதே!
நஞ்சகத்தே புகட்டி பிஞ்சதனை புறம்வீசி
பஞ்சமா பாதகந்தான் சேர்க்காதே!
பள்ளிப் பருவத்தில்
துள்ளி விளையாடும் சேயவளை
எள்ளி நகையாடுமே ஊரெனவே - புறந்
தள்ளி வைத்து படிப்பதனை தடுக்காதே!
ஆணுக்கொரு நீதியும் இணை
பெண்ணுக்கு இன்னொன்றென்றே
மாற்றிப் பேசாதே.
- ShakthiPrabha 

கங்கை




புலன்களால் புழுதியேறி
படர்ந்திருந்த அடர் கறையை
படித்துறையிலே துலக்கி,
சினம் தொலைத்து; மோகம் களைந்து,
பக்தியெனும் கடலில் மூழ்கி,
முக்தியெனும் நல்முத்தெடுக்க,
தமது முறைக்காக
வரிசையில் காத்திருக்கும்
கட்டிடங்கள்.
– சக்திப்ரபா
(வல்லமை படப்போட்டிக்கு எழுதியது)

மாதவனே ! மாலவனே!




அஷ்டபத்தினி கொண்டாயோ
அச்சுதா! ஆண்டவனே
பதினாறாயிரம் பெண்டிருடன்
பலகோடியுந்தான் சேரட்டுமே!
இன்னுமொன்றைக் கூட்டிவிடு..
மாதவா மாலவனே,
மங்கையெனை மார்பில்வாங்கி- நல்
மங்கல நாண்பூட்டி - எழில்
மலர்மாலை தனைச்சூட்டி
மாதெனையும் சேர்ததுக்கட்டு!
...
ShakthiPrabha

கணினிக் காதல்




அடுத்த மகாமகத்தில்
ஆயுசும் கூடிவிடும்
கடுத்த வெயிலில்
காய இனி ஆகாது
*
வீசும் காற்றே
வேள்வித் தீயாக
மாசும் போகவே
மாசிமகம் போதுமென
காசியென்றெண்ணியே
கணினியை கையிலேந்தி
முங்கித்தான் எழுந்து...
*
'சீச்சீ' என விரட்டி
தூரம் போக சொல்லி
'போ போ' என்றே
புறந்தள்ளி வீசி
மேனிதுவட்டி மேலெழும்போது,
சின்னதும் பெரியதும்
பொல்லாததும் அல்லாததும்
அனைத்தும் அற்றிருக்க,
ROMல் பின்னிப் பிணைந்து
ராகமிசைக்கும் கிராதகன் நீ
*
இருந்துவிட்டுப் போ! இனி
தொடரும் மகாமகங்களுக்கு
தொடரா தென்கவிதை
இருவருமே தோற்றுப் போனோம்!
-ShakthiPrabha

கோரோனாவுக்கு கேள்வி






ஓடியாடி உழைப்பவர்கள்
ஓய்ந்து ஒதுங்க
ஆடிப்பாடி அடங்காது திரிபவர்கள்
வாய்மூடி முடங்க
அடுக்களையை அண்டாதவர்களும்
அறுசுவைகூட்டி அதில்சுகம் ஈட்ட
யோசித்தும் புலப்படவில்லை...
கோளின் வினையதை
தோளில் தாங்கி
கோரநடமிட்டு கொன்று குவிக்கும்
கொரோனாவெனும் காலதூதனே!
நீ நல்லவனா கெட்டவனா
*
*
பூமித் தாயை ஏறி மிதித்து - அவள்
பூமடி முழுதும் மலம்-வாரி இறைத்து
கேவியழும் அவள் குரலை தவிர்த்து
பாவியாகி நல்மதியும் இழந்தோம்!
மாரி தொலைத்த தரிசு மண்ணில்
காடுமலையும் கட்டிடங்களாக
காணும்யாவும் பசிக்கிரையாக
கேடுகெட்ட உலகமிதற்கு
கெடுவைக்க வந்த உனக்கே
இக்கேள்வி...
நீ நல்லவனா கேட்டவனா
*
*
நாளும் நலிந்து - உடல்
மேலும் மெலிந்து
தனமும் குன்றி
மூலதனமும் இன்றி
வாடும் ஏழைகள்
வீசாத சிரிப்பில் - நாம்
நாடும் இறைவன்
நீள மௌனத்தில் கரைய....
வீதியில் இறங்கினால் - உயிர்
பாதியும் போகுமென
பதுங்கி பயந்து;
தொற்றும் வினையது - நமை
பற்றுமெனப் பதறி
காலை முதல் மாலை வரை
காணும் யாவையும் சுத்திகரிக்கும்
சீரான வாழவே மேலானதென்ற
சுடும் நிலைமையை கடும் சொற்கொண்டு
கட்டளையிடும் நீ
நல்லவனா கெட்டவனா
*
*
குடும்ப உறவுகள் நேசம் நாட,
கூடிக் களித்து பாசம் கூட,
பூமித் தாயின் வெப்பம் நீங்கி
பூகோளத்தின் மாசு மறைய;
இளமஞ்சள் பூசிய இனிய விடியலில்
பட்சிகள் கீச்சொலி புதுமெட்டுகள் கூட்ட,
அந்தி வானத்து ஆரஞ்சு ஆதவன்
ஆதங்கத்துடன் அப்புறம் அகன்றபின்
கதிரொளியைக் கடன்வாங்கி
மினுக்கும் தண்மதியிடம்
இரவின் மடியில் கிசுகிசுக்கும்
இலட்சம் நட்சத்திரங்களை
இன்று கண்டு ரசிக்கும் அவகாசம் - சற்றே
நின்று சுவாசிக்கும் நொடிநேரம்
நானும் குழம்புகிறேன்
நாடுகளையெல்லாம் சூறையாடும் நீ
நல்லவனா கெட்டவனா

***

ShakthiPrabha

Number 13





எத்துடன் எதனை பெருக்கினும்
கைக்கெட்டாக் கனியவள்
அத்துடன் அதனை வகுத்தும்
வாரா பத்தினியவள்
பத்துடன் மூன்றை பக்குவமாய்க் கோர்த்தால்
பாவையவள் பட்டென்றே
பக்கத்தில் வந்திடுவாள்
பக்தரைக் கண்டால் ஒதுங்குபவள்
பத்தடி தள்ளியே பத்தியம் காப்பவள்
பாடல்களை இசைக்காதவள்
கணக்குக்குப் பிழையானவள்
சகுனத்தின் சகுனியவள்!
இத்தனை ஏளனத்திலும்
காரியத்தின் கண்ணாகி
முன்னோர்க்கு முக்தியளிக்கும்
சக்தியவள் பதிமூன்றே!

ShakthiPrabha

July 18, 2020

தண்டியடிகள்


தண்டியடிகள் நாயனார் | Dinamalar

திருவாரூரின் பெருமைக்கு இன்னொரு மணிமகுடம் தண்டியடிகள் பிறப்பு. பிறவியிலேயே கண்பார்வை இழந்தவர், சிவனை அகக்கண் கொண்டு தரிசித்து பூஜித்து வரலானார். சதா பஞ்சாட்சரம் ஓதி திருவாரூர் பேராலயத்தில் குடி கொண்ட தியாகராஜரை வலம் வந்து இடையறாது பக்தி செய்து வந்தார். 
.

திருவாலையத்தின் மேற்கு திசையில் குளத்தங்கரை எங்கும் சமணர்களின் ஆட்சி பெருகி வந்தது. மடங்கள் கட்டிக்கொண்டும் தமது கொள்கைகளை பரப்பிக்கொண்டும் இருந்தமையால், ஆலய திருக்குளமருகே பெருகி வரும் சமணர்கள் ஆதிக்கம் கண்டு அஞ்சி, தம்மாலான திருத்தொண்டு புரிதற்கு கமலாலய திருக்குளத்தை மேலும் தூர் வாறி, அதன் ஆழம் பரப்பளவை முன் போல் பெரிதாக்க திருவுள்ளம் கொண்டார்.
.

கண்பார்வையற்ற நாயன்மார், குளத்தின் மேட்டில் ஒரு தறி நட்டு, நடுக்குளத்தில் இன்னொரு தறி நட்டு, இரண்டையும் கயிற்றில் இணைத்து, மண்வெட்டியால் மண்ணை வாறி கயிற்றின் உதவியுடன் கூடையில் சுமந்து சுமந்து மேலேற்றி கொட்டி சீரமைக்கும் பணியினை தனியொருவராக செய்து கொண்டிருந்தார். இதனை கண்ணுற்ற சமணர்கள், மண்வெட்டியால் தோண்டுவதால் அங்கு உயிர்வாழும் சிறு உயிரினங்கள் இன்னலுக்கு உட்பட்டு இறந்து போகும் என்று அறிவுறுத்தினர். சிவத்தொண்டின் அருமை உங்களுக்கு விளங்காது என்று மறுத்துக்கூறி தண்டியடிகள் பணியை தொடர்ந்தார்.
.

மந்தபுத்தியுடன் கூடிய நீ கண்ணற்றவன், அதனுடன் காதும் கேளாமல் போனதோ என்று இடித்துரைத்து கேலி செய்தனர். மனம் வருந்திய நாயன்மார், சிவனாரின் திருவடியன்றி எதனையும் நான் காணேன். அவர் திரு நாமத்தை காதால் கேட்கிறேன். என் ஐம்பொறிகளாலும் அவரையே துதிக்கிறேன் அவர் அருளால் என் கண்கள் ஒளிமிகுந்து உங்களுக்கு கண் அற்று போனால் என்ன செய்வீர்கள் என்று வினவினார். அவ்வாறு நேர்ந்தால் தாங்கள் திருவாரூரை விட்டு அகலுவதாக உரைத்த சமணர்கள் அவரது மண்வெட்டி கயிற்றை பிடுங்கிக்கொண்டு அவர் செய்யும் தொண்டிற்கு ஊறு விளைவித்தனர். 
.

பெரும் வருத்தம் கொண்டு திருக்கோவிலை நாடி, இறைவனிடம் முறையிட்டார். இரவு கனவில் காட்சி தந்தருளிய பெருமானார், தண்டியடிகளுக்கு பார்வை அருளி, அவரது தொண்டிற்கு துணை நிற்பதாகவும் திருவாய்மொழிந்து மறைந்தார். அன்றிரவே சோழமன்னர் கனவிலும் தோன்றி, தண்டியடிகளுக்கு துணை நின்று நியாயம் வழங்குமாறு கூறி மறைந்தார். 
.

ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்ற ஆவன செய்த மன்னன், தண்டியடிகளையும் சமணர்களையும் அழைத்து நடந்ததை இருசாராரும்\ சொல்லக் கேட்டு அறிந்தார். சமணர்கள் சபதத்தில் தாங்கள் தோற்றால் ஊரை விட்டு அகலுவதாக மீண்டும் உறுதி செய்தனர். சிவபக்தரான தண்டியடிகள் பஞ்சாட்சர மந்திரம் ஓதி, திருக்குளத்தில் மூழ்கி எழுந்தார். ஒள்வீசும் கண்கள் பெற்றவராய் கோபுரத்தை வணங்கி அன்பின் பேருக்கால் கண்ணீர் மல்க இறைவனை துதித்தேற்றினார். சமணர்கள் கண்கள் இழந்தவர்களாக அரசாணையை ஏற்று அனைவரும் ஊரை விட்டு விலகினர்.
.

தண்டியடிகள் மன்னர் பேராதரவுடன், திருக்குளத்தை கட்டி முடித்து மேலும் பல தொண்டுகள் புரிந்து பல காலம் சிறப்புற்று வாழ்ந்து பொன்னார் மேனியன்
திருவடி நிழலில் நற்கதி அடைந்தார்.

.
ஓம் நமச்சிவாய

July 06, 2020

சோமாசிமாற நாயனார்



திருவம்பர் என்பது சோழபெருநாட்டிலுள்ள நல்லூர். இவ்வூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் சோமாசிமாற நாயனார். சிவமந்திரம் அன்போடு ஓதி வெள்விகள் யாகங்கள் வளர்த்து ஈசனிடம் மிகுந்த அன்புகொண்டொழுகினார். மந்திர ஜபங்கள் , நித்திய வழிபாடுகள் எதுவும் குற்றமற்றவராக புரிந்து நல்வாழ்வு வாழ்ந்திருந்தார். எக்குலமாயினும், எக்குணம் கொண்டிருந்தாலும், சிவனடியார்கள் என்று இறைவன் பெயரை அன்புடன் ஓதுவார்க்க்கு திருவமுது செய்வித்து பணிந்தார். புகழின் மயக்கத்தில் வீழாமல் பயனெதுவும் கருதாமல் கர்மயோகம் செய்து காம க்ரோதம் முதலிய குணங்களை விட்டொழித்தவராய் விளங்கினார். 
.

இந்த நாயனார் சுந்தரமூர்த்தி நாயனார் திருவடிகளை பக்தியுடன் பணிந்து அதனால் மேலும் சிறப்புற்று ஈடு இணையில்லா சிவபதம் அடைந்தார். 
.
ஓம் நமச்சிவாய