July 21, 2020

கோரோனாவுக்கு கேள்வி






ஓடியாடி உழைப்பவர்கள்
ஓய்ந்து ஒதுங்க
ஆடிப்பாடி அடங்காது திரிபவர்கள்
வாய்மூடி முடங்க
அடுக்களையை அண்டாதவர்களும்
அறுசுவைகூட்டி அதில்சுகம் ஈட்ட
யோசித்தும் புலப்படவில்லை...
கோளின் வினையதை
தோளில் தாங்கி
கோரநடமிட்டு கொன்று குவிக்கும்
கொரோனாவெனும் காலதூதனே!
நீ நல்லவனா கெட்டவனா
*
*
பூமித் தாயை ஏறி மிதித்து - அவள்
பூமடி முழுதும் மலம்-வாரி இறைத்து
கேவியழும் அவள் குரலை தவிர்த்து
பாவியாகி நல்மதியும் இழந்தோம்!
மாரி தொலைத்த தரிசு மண்ணில்
காடுமலையும் கட்டிடங்களாக
காணும்யாவும் பசிக்கிரையாக
கேடுகெட்ட உலகமிதற்கு
கெடுவைக்க வந்த உனக்கே
இக்கேள்வி...
நீ நல்லவனா கேட்டவனா
*
*
நாளும் நலிந்து - உடல்
மேலும் மெலிந்து
தனமும் குன்றி
மூலதனமும் இன்றி
வாடும் ஏழைகள்
வீசாத சிரிப்பில் - நாம்
நாடும் இறைவன்
நீள மௌனத்தில் கரைய....
வீதியில் இறங்கினால் - உயிர்
பாதியும் போகுமென
பதுங்கி பயந்து;
தொற்றும் வினையது - நமை
பற்றுமெனப் பதறி
காலை முதல் மாலை வரை
காணும் யாவையும் சுத்திகரிக்கும்
சீரான வாழவே மேலானதென்ற
சுடும் நிலைமையை கடும் சொற்கொண்டு
கட்டளையிடும் நீ
நல்லவனா கெட்டவனா
*
*
குடும்ப உறவுகள் நேசம் நாட,
கூடிக் களித்து பாசம் கூட,
பூமித் தாயின் வெப்பம் நீங்கி
பூகோளத்தின் மாசு மறைய;
இளமஞ்சள் பூசிய இனிய விடியலில்
பட்சிகள் கீச்சொலி புதுமெட்டுகள் கூட்ட,
அந்தி வானத்து ஆரஞ்சு ஆதவன்
ஆதங்கத்துடன் அப்புறம் அகன்றபின்
கதிரொளியைக் கடன்வாங்கி
மினுக்கும் தண்மதியிடம்
இரவின் மடியில் கிசுகிசுக்கும்
இலட்சம் நட்சத்திரங்களை
இன்று கண்டு ரசிக்கும் அவகாசம் - சற்றே
நின்று சுவாசிக்கும் நொடிநேரம்
நானும் குழம்புகிறேன்
நாடுகளையெல்லாம் சூறையாடும் நீ
நல்லவனா கெட்டவனா

***

ShakthiPrabha

No comments:

Post a Comment