January 08, 2021

திருப்பாவை பாசுரம் 24 - பாசுரத்தில் தேடிய முத்து

திருமாலின் திருவடியே போற்றி போற்றி

.
எப்பேர்ப்பட்ட வீரன் நீ. உனைக் கொண்டாடுவது நாங்கள் செய்த பெரும்பேறு. முன்னோர்கள் செய்த வினைப்பயனே உன்னை நினைந்து உருகும் பாக்கியம் பெற்றிருக்கிறோம். ஆண்டாள் பாடிய பாசுரமுத்துக்கள் ஒவ்வொன்றும் எம்பிரானின் பெருமைகளை உரைத்துக் கொண்டே இருக்கிறது.
.
பகவானின் பாதத்தைப் போற்றும் பாசுரம். எப்படிப்பட்ட பெருமையான பாதங்கள்! பாத அரவிந்தங்களை சரண் அடைதவர்களுக்கு பிறப்பற்ற சூழலைத் தந்து காத்தருளும் கவசம். பாதபூஜை, பாதுகா ஸ்லோகங்கள் மற்றும் குருமாரின் பாதத்துளிகளின் பெருமைகளும் ஞானிகள், மஹான்களின் பாதங்களே நமக்கு அபயமளிக்கும் ரக்ஷை என்று உணர உதவுகிறது. வீட்டிலும் கூட பெரியவர்களின் பாதம் பணிதல் நம் செருக்கை மட்டுப்படுத்த உதவும். பெரியோரின் ஆசிகளைப் பெற்றுத் தரும்.
.
பாதங்களுக்கு அத்தனைப் பெருமை. உலகளந்தவனின் பாதங்களின் விசேஷம் சொல்லிலடங்கா. ஓங்கி உலகளந்தவனிடம் தனி அபிமானம் அவளுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட பாசுரத்தில் கொண்டாடுகிறாள். பிஞ்சுப் பாதங்களால் செருக்கை அடக்கியவன். மஹாபலியின் ஆணவத்தை கால்களால் அடக்கிய திருவடிகளே போற்றி. அதே போல் எம் ஆணவம் கொன்று ஆட்கோள்வாய். மூன்றே அடிகளால் மூவலகம் அளந்த பெருமைக்குரிய பொன்னடிகள் போற்றி.
.
இராவணனை ஜெயித்து ஆட்கொள்ள அழகிய லங்கைக்கு நடந்தே சென்ற வலிமையுடைய பூம்பாதங்களுடைய வெற்றிச்செல்வனுக்கு வந்தனம். எத்தனை பெருமைக்குறிய கால்கள். பாதுகையையும் பரதனுக்கு அளித்து, முட்களிலும் கற்களிலும் கால்வைத்த ஸ்ரீராமனின் திருப்பாதங்கள் சரணம்.
.
சக்கரவடிவம் தாங்கிய சகடாசுரனை பிஞ்சுக்கால்களால் உதைத்து துவம்சம் செய்த புகழ்மிக்க பொற்றாமரையடிகளை போற்றுகிறோம்.
.
வத்ஸாசுரனை சுழற்றியடித்தவன் திருவடியின் திருக்கழலே போற்றி. வத்ஸாசுரனும் கபித்தாசுரனும் கம்சனால் ஏவப்பட்டவர்கள். வத்ஸாசுரன் இளங்கன்றின் வடிவம் பூண்டு, ஆயர்களின் பசுக்களுடன் இணைந்தான். கண்ணனை வீழ்த்தும் எண்ணத்தின் மடமை. கபித்தாசுரன் அங்கே விளாமர வடிவமெடுத்து ஊன்றிக்கொண்டான். இருவரும் மாயாரூபம் தரிப்பதில் தேர்ந்தவர்கள். கண்ணன் வத்சாசுரனைக் கண்டுகொண்டான். கன்றின் பின்னங்கால்களையும் வாலையும் பிடித்து தட்டாமாலை சுற்றி வீசியெறிந்தான். வத்ஸாசுரன் விளாமரத்தில் போய் விழுந்து பெரும் சத்தத்துடன் மடிந்தான். அவன் இடித்த வேகத்தில் விளாமரமாக இருந்த கபித்தாசுரனும் வேரற்று சாய்ந்தான். இருவரும் அசுர உருவத்துடன் பூமியதிர வீழ்ந்து மாண்டனர். அந்த வத்ஸாசுரனின் கால்களை சுழற்றி அடித்த வீரன் பிஞ்சுத்திருவடியின் திருக்கழல்களை போற்றுகிறோம்.
.
ஸ்ரீக்ருஷ்ணனின் திருவடியைப் போற்றிய கோதை, அபயளிக்கும் அவன் கைகளை நமஸ்கரிக்கிறாள். கைகால் பிடிப்பது புவியில் மானிடப் பிறப்பெடுத்த சாதாரணருக்கு செய்ய வேண்டியதை விடவும் இறைவனின் கைகால் பிடித்தால், அவன் நமை கைவிடாது அழைத்துச் செல்வான். கைபிடித்து உயர்த்தி வைப்பான்.
.
இந்திரனின் கோபத்துக்கு ஆளான ஆயர்குலத்தை கோவர்தனை கிரியை சிறு சுட்டுவிரலால் அபயமளித்த திருக்கரங்களை உடையவனின் காருண்யத்துக்கு தலைவணங்குகிறோம். பகைவர்களை பந்தாடி வெற்றிகண்ட உன் திருக்கை வேலை நமஸ்கரிக்கிறோம்.
.
உன்னை, உன் வீரத்தை பாடியாடிக் கொண்டாடி திருவடி பணிந்து, சேவகம் செய்யவே உன்னருள் வேண்டி வந்திருக்கும் எங்களுக்கு உன் அபயக்கரம் நீட்டு.

****
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
****

Rangoli Credit : Suganthi Ravi




No comments:

Post a Comment