January 08, 2021

திருப்பாவை பாசுரம் 23 - பாசுரத்தில் தேடிய முத்து

ராஜாதிராஜா

Rangoli by Suganthi Ravi



.
ஊழிகாலத்தில் பிரபஞ்சம் அசைவின்றி பிரம்மத்துடன் ஒடுங்கியிருக்கும். அனைத்தும் ஏகமான நிலை. பிரிவேதும் இல்லாத ஒடுக்கம். சத்தும் அசத்தும் ஒன்றாகிய நிலையில் நல்லது கேட்டது என்ற பேதமில்லை. காலமும் கர்மாவும் கூட செயலின்றி ஸ்தம்பித்துக் கிடக்கும்.
.
அப்படி ஓய்வு கொண்டிருக்கும் ஆதிநாராயணனை போல, தன் பெருமைகளையெல்லாம் யோக நித்திரையில் ஒடுக்கி, விழிமூடிக் கிடந்த கோபாலனின் அழகை பாடிய ஆண்டாள், அவன் உறக்கத்திலிருந்து விடுபடும் திருப்பள்ளி எழுச்சியின் கம்பீரத்தை பாடுகிறாள்.
.
மழைக்காலத்தின் போது குகைக்குள் ஒதுங்கி உறங்கியிருக்கும் சீற்றமிகு சிங்கம் தானும் மானும் ஒன்றெனவே ஒடுங்கியிருக்கும். விழிக்கும் போது சிலிர்த்து எழும். சுயத்தை உணர்த்தும். பிடரியை சிலுப்பும், கண்களில் பொறிபறக்க தன் பெருங்கர்ஜனையுடன் தன் சிறப்பை கானகத்துக்கே எடுத்துரைக்கும். காட்டின் ராஜா தானென்று உணரும், உணர்த்தும்.
.
அது போல் எழுந்த கண்ணனே, மிடுக்குடன் நடை போட்டு உமது சிங்காசனத்தில் எழுந்தருளுங்கள். புவனத்தின் சக்கரவர்த்தி நீரே. எப்பேர்பட்ட சிங்காசனம்! எவரும் வீழ்த்த முடியாத உறுதியான சிங்காசனம். உமையன்றி இன்னொருவர் பிரபஞ்சத்தின் மகாராஜாவெனப் பறைசாற்ற இயலாது. நீரே ஆட்சி புரியும் ஆண்டவன். சிங்காசனத்தில் சிம்மத்தைப் போலவே கொலுவிருந்து, எம் குறைகளைக் கேட்டுக் களைவாய்.
.
கண்ணனே மன்னனாக வீற்று மக்களின் குறைகளைய வேண்டுகிறாள். பள்ளியெழுந்தவுடன் தங்களைப் பற்றி
கூறிவிடவில்லை. நீ ராஜா, நாங்கள் பிரஜை. நீ பிரம்மம், நாங்கள் பொய்யுடல் தாங்கிய ஜீவாத்மா. உமது ஸ்தானத்தில் வீற்றிருந்து எமது குறைகள் போக்குங்கள்.
.
அவர்களுக்கென்ன குறை! பாவை நோன்பு நோற்கும் பெண்களின் சங்கல்பம் பூர்த்தியாக வேண்டுமென்ற விருப்பம். கோதை நாச்சியாரின் விருப்பமோ அவனன்றி வேறில்லை.
.
****
மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலேநீ, பூவைப் பூவண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்
****

January 05, 2021

திருப்பாவை பாசுரம் 22 - பாசுரத்தில் தேடிய முத்து


கண்ணாமூச்சி விளையாட்டு

அகண்ட உலகத்தையே தமது குடையின் கீழ் அரசாட்சி புரிவதாக இறுமாந்திருந்த அரசர்கள் என்று இங்கு புவியரசர்கள் மட்டுமல்ல, பிரபஞ்சத்தை ஆளும் தேவதேவர்களையும் குறிப்பிடுகிறாள். தங்கள் அகங்காரங்களை தொலைத்த பின்னரே, பெருமைகளைத் தூர எறிந்து, பெருமாள் அடி தொழுது
சிரம் கூப்பி பணிந்து நிற்கின்றனர்.
.
அவர்களைப் போலவே இங்கு திரளாகக் கூடியிருக்கிறோம். சங்கமாகத் திரண்டு வந்திருக்கிறோம். எண்ணிலடங்கா பக்தர்களெனக் கூடி தூயபக்தியை பெய்து நிற்கிறோம்.
.
கிண்கிணிகள் வாய் எவ்வாறு பாதி மூடியும், மீதி திறந்தும் இருக்குமோ அதுபோல், உனது சிவந்த மலர்க்கண்கள் சற்றே குவிந்தும், மெல்லத் திறந்துமிருக்கும் தாமரை முகையைப் போல் கிடக்கிறதே! அழகிய விழிகளை மெல்ல மெல்ல மலர்த்தி எமைக் காணக் கூடாதா!
.
சூரியனின் தேஜசும் சந்திரனின் குளிர்ச்சியும் ஒருசேர உதிக்கும் உனதிரு கண்களால் எமை நோக்கினால், பற்பலகோடி பிறவிகளின் பாபங்களும் சாபங்களும் ஞாயிறு கண்ட பனிபோல் விலகிப் போகுமே!
.
யோக நித்திரையிலிருக்கும் அவனுக்கு அவர்களின் தேமதுரப் பாசுரம் ஒலிக்காமலா இருக்கும். விளையாடிப் பார்க்கிறான். சோதிப்பதும் புடம்போட்டு பொன்னாக்குவதும் பகவானுக்கு பிடித்த பொழுதுபோக்கு என்பதல்ல. அவன் கல்நெஞ்சத்தவனும் இல்லை. செம்மைப்படுத்தவும், உரமிட்டு உறுதிசேர்த்து நமை செதுக்குவதன் நோக்கம், அவனது நெஞ்சில் நீங்கா இடமளித்து துன்பமில்லா வீடுபேறு வழங்குதற்கே.
****
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல், வந்து தலைப்பெய்தோம்.
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்,
அங்கண் இரண்டுங் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
****
Picture Source: Internet :
Rangoli Credit : Suganthi Ravi








Like
Comment
Share

January 04, 2021

திருப்பாவை பாசுரம் 21 - பாசுரத்தில் தேடிய முத்து

பக்தரிடம் சிக்கிய பகவான்


யானைகளை, எருதுகளை, அஞ்ஞானத்தின் வடிவான நாரை முதலிய அசுரர்களை தோள் வலிமையாலே வீழ்த்தும் இறைவன், பசுக்களை மட்டும் மேய்க்கிறான்.
.
பசுக்கள் அடியவர்களை குறிக்கும். சாதுக்களை, முக்தியடையத் துடிக்கும் ஜீவனைக் குறிக்கும். இவற்றை மேய்ப்பவனாக இறைவன். பசும்புற்கள் மேயச் செய்து, பசியாற்றி, அவற்றைத் தட்டிக்கொடுத்தே மேய்ப்பவன். அவற்றிற்காக குழலூதி ஞானம் வழங்குபவன். அவன் ஊதும் குழலில் மயங்கியிருப்பவை பசுக்கள்.
.
கண்ணனின் கைபட்டதாலேயே கோகுலத்துப் பசுக்களெல்லாம் ஞானப்பால் சுரக்கிறது. பால் சுரந்து பொங்கி வழிகிறது. இன்னுமின்னும் அதிகம் பால் சுரக்கும் வள்ளல் பசுக்களை உடைய நந்தகோபன் மகனே!..நாங்கள் உங்கள் பக்தர்கள் என்று உணர்ந்து எழுவாய்.
.
உலகத்தின் முதல் வித்து அவன். பெரியவன். மூத்தோன். இப்பிரபஞ்சமும் அண்ட சராசரமும் அவனுடைய விழுது. படைப்பதும், காத்து நிற்பதும், சம்ஹரிப்பதும் மூப்பெரும் தொழில்கள். ஆற்றல் மிகுந்தவை. அவற்றை விடவும் ஆற்றல் மிகுந்த தொழில் ஏதேனும் உள்ளதா என்ன! ஒட்டுமொத்த ஆற்றல்சக்தியின் ஏக உருவம். உலகத்தின் ஒரே ஒளிச்சுடர்.
.
வலிமையிழந்த பகைவர்கள் உன் வாசலில் உன் பாதத்தில் விழுந்து பணிவது போல், பணிந்து நிற்கிறோம். உன்னை ஸ்துதி செய்கிறோமே, உன் பக்தர்களல்லவா நாங்கள். விளையாடுவதும் பக்தர்களை சோதிப்பதும் பரந்தாமனுக்கு அழகா! திருப்பள்ளி எழுந்துவிடு.
.
எழும் வரை விடமாட்டார்கள். பகைவர்களைப் பொல் வலிமையிழந்து இவர்கள் அழைக்கவில்லை. அன்பால் அழைக்கும் ஸ்தோத்திரம். எழாமல் இருக்க முடியாது. பாகதவப் பெண்களின் அன்புப் பிடியில் வசமாக மாட்டிக்கொண்ட பாண்டுரங்கன். ஏறக்குறைய அன்பால் மிரட்டுவது போல் 'அறிவுறாய்' என்று உரிமையோடு கருணை வேண்டுகிறார்கள்.
*****
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன்னடி பணியுமாப் போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
*****
Rangoli Credit : Suganthi Ravi


திருப்பாவை பாசுரம் 20 - பாசுரத்தில் தேடிய முத்து

 பக்தவத்ஸலனே துயிலெழுவாய்


Rangoli credit : Suganthi Ravi :: Photography Source: Internet






பக்தன் குரல் கேட்டு பறந்து வரும் எங்கள் பரந்தாமனே! தேவர்களோ நீ இட்டபணி செய்து, உன் பக்தர்கள் குறை தீர்க்கவே பார்த்திருக்க, ஏவல்கள் ஏற்கும் தேவதைளும் தங்கள் முறை வருமென்று, அடியவர் துயர் தீர்க்க ஓடோடி வருவதற்கே காத்திருக்க, ரக்ஷிக்கும் பணிகளை சீரிய முறையில் பிரித்தளித்த பின்னரும், பாகவதர்களின் அழைப்பிற்கு முந்திக்கொண்டு அருள்செய வரும் ஆதிமூலமே, துயில் எழுவாய்.
.
உன் தன்மை உணராதவர்க்கோ நீ காலனாகிறாய். உன் நினைவே பயத்தை வரவழைக்கிறது. நடுநடுங்கிப் வியர்வையில் நனைந்து போகிறார்கள். அப்பேர்ப்பட்ட பெருமையுடைய தூயவனே எழுந்திரு.
.
திருமகளின் அழகையொத்த நீளாதேவியே! எழில் குலையாத மென்மையான தனங்களை உடையவளும், மாதுளை போன்ற சிவந்த அதரங்களும், கொடி போன்ற இடையும் கொண்ட நங்கையே, எழுந்திருங்கள்.
.
உலகையாள்பவன் அவனுக்கு கண்ணாடி சேவை செய்தால், பிம்பமாகத் தெரிவதெல்லாம் பிரபஞ்சத்தின் பெருங்காட்சியாக இருக்கும். யசோதைக்கு கிட்டிய பெரும்பேறு கண்ணாடி சேவை செய்து நாமும் பெறலாம்ன்றோ!
.
நப்பின்னை மணாளனே, அலங்காரங்களை ஒத்தி வைத்து மையிட்டெழுதாமல், மலர்களை நாளைக்கென சேமித்து, உம்மையே நாடி, உமக்கு சேவை செய்ய வந்திருக்கிறோம். உபசாரங்கள் அனைத்தும் உமக்கே. சாமரம் விசிறி உமை குளிரச்செய்து, திருமேனியழகை தரிசிக்க கண்ணாடி காட்டி உபசாரங்கள் செய்யவே ஆவலாக நோன்பு நோற்றோம். இவற்றையெல்லாம் எமது தாயாரே, பிராட்டியே, நீங்களே கொடுத்தருள வேண்டுமல்லவா. திருப்பள்ளி எழுங்கள்.
.
****
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலை(ச்) செவ்வாய்(ச்) சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.
****
Like
Comment
Share

January 03, 2021

திருப்பாவை பாசுரம் 19 - பாசுரத்தில் தேடிய முத்து

திவ்ய தம்பதியர்

Photography Source: Internet ;; Rangoli Credit : Suganthi Ravi





குத்துவிளக்கின் ரம்யமான ஒளி எங்கும் பரவியிருக்கிறது. பிரட்டியும் பெருமானும் இருக்குமிடத்தில் குத்துவிளக்கின் குளிர்தீபமாக அவர்களது பேரன்பே ஜோதியாக ஒளிவீசுகிறது. இங்கே இவர்களுக்கோ தரிசனம் கிட்டும் வரை இதயம் மலராமல் இருள் சூழ்ந்திருக்கிறது.
.
யானையின் தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட கால்களையுடைய கட்டில். ஒருவேளை அவன் வலிமையை உணர்த்திய குவலயாபீட யானையின் தந்தமாகக் கூட இருக்கலாம். அவன் திருக்கரங்களால் வதம் செய்யப்பட்ட ஜீவனெல்லாம் இறைவனையே அலங்கரிக்கும்.
.
கட்டிலில் சுகமாக சயனித்திருக்கும் இருவரின் கருணையை வேண்டி நிற்கிறார்கள். நப்பின்னை பிராட்டியே நீங்கள் சுகமாக சயனித்திருக்கிறீர்கள், எங்கள் நிலைமை அப்படியா! தரிசனம் வேண்டி நிற்கும் எம் மேல் கரிசனம் காட்ட மாட்டீர்களா!
.
கிருஷ்ணனின் அருட்பார்வை கிடைக்கும் நேரத்தில் நப்பின்னை தன் மையிட்ட விசாலமான தாமரைக் கண்களால் பகவானை மயக்கி, எழுந்து போகவிடாமல் தடுக்கிறாள்.
.
இது நியாயமா பிராட்டியே! அவன் பிரிவை க்ஷணநேரம் தாங்கமாட்டாமல் உன் மணவாளனை எம்மிடம் அனுப்ப மறுக்கிறாயே! தாயே, இது உன்னுடைய ஸ்வரூபமல்லவே. நீயே தயாபரி! எமைத் தடுத்தாட்கொண்டு பெருமாளிடம் நீயே பரிந்துரைத்து, எமது குற்றங்களை பொறுத்து ரக்ஷிக்கத் தூண்டுபவள். நீ இப்படி செய்யலாமா!
.
நாம் சூடும் பூக்களெல்லாம் மலராத நமது ஞானத்தைப் போல் சட்டென்று வாடிவிடுகிறது. ஆனால் அதிகாலையில் மஞ்சத்திலிருந்து எழும் பொதும் நப்பின்னையின் கூந்தலிலுள்ள பூக்கள் மலர்ந்து நறுமணம் பரப்பியிருக்கிறதாம். கமலக்கண்ணனின் மனையவளாயிற்றே! அவளது கருங்கூதலில் எழிலாக ஏறியிருக்கும் பூக்கள் நித்தம் மலர்ந்த வண்ணமே இருப்பதில் ஆச்சரியம் என்ன!
.
பஞ்சுமெத்தையின் மேல், நறுமலர்ந்த பூக்களை சூடியிருக்கும் நப்பின்னையின் நெஞ்சத்தையே மஞ்சமாக்கி, கண் உறங்கும் கமலநாதனே, பிராட்டியின் நெஞ்சத்தில் உனைத் தவிர யாரே குடியிருக்க வல்லார்! அதை நினைந்து காதலின் பெருக்கில் மலர்ந்த மார்பினனாகப் சயனித்திருப்பவனே, நாங்களும் உன் பிரிவைத் தாங்காமல் வாடி நிற்கிறோம். உன் திருவாய் மலர்ந்து எமக்கும் நல்வார்த்தை கூறு.
****
குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்
****

January 01, 2021

திருப்பாவை பாசுரம் 18 - பாசுரத்தில் தேடிய முத்து

நப்பின்னையின் நாயகன்



Rangoli Credit : Suganthi Ravi



நீலக்கடலின் மடியில் தவழும் அலைகள், தெளிந்த வானத்தில் நிலவொளியின் எழில், கஜமுக கணபதியை நினைவுறுத்தும் கம்பீரமான யானைகள், இவையெல்லாம் என்றும் புதியவை, இனியவை ரசிக்கப் படுபவை. தன் வயமிழந்து மதம் பிடிக்காத வரை, யானைகள் மிகவும் அழகானவை, நட்பானவை. . மதம்பிடித்த யானைகளோ ஆபத்தானவை.
.
யானைகளும் மனிதர்களைப் போலவே. அரக்க குணம் கொண்ட ஜீவனையே மேய்க்கும் கோபாலனவன். யானைகள் எம்மாத்திரம்! மதம் கொண்ட யானையை தன் கட்டுக்குள் வைத்திருப்பவன். பிரபஞ்சத்தையே தனது தோளில் தாங்குபவனல்லவா! வலிய தோள் உடையோன்.
.
அவ்வளவு பெருமை வாய்ந்தவனின் மனையவள் எவ்வளவு பெருமை வாய்ந்தவளாக இருக்க வேண்டும்! நப்பின்னை என்பவள் கண்ணனின் அஷ்ட பத்தினிகளுள் ஒருத்தி. சத்யா எனும் நாக்னஜிதியையே தெற்கே நமது ஆண்டாள் நப்பின்னை என்றழைக்கிறாள். ஸ்ரீ விஷ்ணுவின் முப்பெரும் தேவியராம், பூதேவி, ஸ்ரீதேவி, நீளாதேவியரில் நீளா தேவியின் அம்சமாக நப்பின்னை அவதரித்தாள்.
.
நீளாதேவிக்கு நிறைய பெருமையுண்டு. பெருமானின் அன்பை வென்றவள். மிகுந்த பொறுமைசாலி. தாயாரை நாடிய பிறகே பெருமாளை தரிசிக்க வேண்டுமென்று உணர்ந்த ஆண்டாள், இப்பாசுரம் முழுவதும் தாயாரின் பெருமையை எடுத்துரைத்து யசோதையின் இளஞ்சிங்கத்தை எழுப்ப எத்தனிக்கிறாள்.
.
நப்பின்னை பிரட்டியின் கூந்தலில் சூடிய மலர்களின் வாசம் மூடிய கதவின் வழியே நாசியைத் துளைக்கிறது. கோழி கூவுவதையும், மாதவிப் பூக்களைத் தாங்கியிருக்கும் பந்தலில் அமர்ந்து குயில்கள் கானம் இசைப்பதையும் நீ அறிந்திருப்பாயே! பிரட்டியே, பூப்பந்தை கையிலேந்தி பெருமானுடனும் விளையாடிய விளையாட்டில் வெற்றிக் களித்திருப்பவளே! உன் மைத்துனன் புகழ்பாட நாங்கள் காத்து நிற்கிறோம். உன் மென்மையான தாமரைக் கைகளின் அழகிய வளைகள் ஒலிக்க கதவைத் திறந்து எமக்கு தரிசனம் தாராய்.
.
// குறிப்பு: மைத்துனன் எனும் சொல்லை பழந்தமிழ் பாசுரத்தில் கணவன் என்ற பொருளில் பயன்படுத்தியிருப்பது புரிகிறது//
***
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்
***

திருப்பாவை பாசுரம் 17 - பாசுரத்தில் தேடிய முத்து

கண்ணா, கண் பாராய்!


Photo Source: Internet: Rangoli Credit : Suganthi Ravi





இறைவனை ஆயர்குலத்து விளக்காக உருவகப்படுத்தி, கோகுலத்து கண்ணனின் வீட்டில் நுழைந்து அவனை எழுப்பும் விதமாக பாசுரங்கள் பாடுகிறார்கள்.
.
நமது உறக்கம் அஞ்ஞான நிலை. விழிப்பற்ற உறக்கம். இறைவனின் உறக்கம் யோக-நித்திரை. பூர்ண விழிப்புடன் கூடிய கால-நேர நிமித்தங்களை, கட்டுப்பாடுகளை கடந்த பரிபூரண உணர்வு நிலை. அவன் அனந்த சயனன். பரிபூரணன். அனைத்தும் அறிந்தவன். அவனே பூவுலகில் அவதரித்து நமைப் போல் உண்பதும் உறங்குவதுமாக நடிக்கிறான்.
.
நந்தகோபர் எப்பேர்பட்ட வள்ளல் என்பதை பாடிப்புகழ்ந்து துயிலெழுப்புகிறார்கள். ஆயர் குலத்துக்கெல்லாம் தேவையை வழங்குபவரே, நந்தகோபரே, எழுந்திருங்கள். எங்கள் தேவையெல்லாம் கண்ணன் தான். அவனை எழுப்புங்கள்.
.
மெல்லிய முல்லைக்கொடியின் தளிர் போன்ற மென்மையான உள்ளம் கொண்ட ஆயர்குலத்து விளக்கே, வழிகாட்ட வந்த யசோதைத் தாயே, எங்கள் நிலையுணர்ந்து எழுந்திருங்கள்.
.
யசோதையும், நந்தகோபரையும் இறைவனை எழுப்ப வேண்டும் என்று விண்ணப்பிக்கும் ஆண்டாள், தரிசனம் தரும் போது பலராமருடன் தரவேண்டும் என்கிறாள். பலராமரே ஆதிசேஷனின் அம்சம். ஸ்ரீமன்நாராயணன் ஆதிசேஷனின் மீதே அனந்த சயனம் செய்பவன், அதிசேஷன் துணையில்லாது பூவுலகிலும் விசேஷ அவதாரங்கள் நிகழ்வதில்லை. ஆதிசேஷனுடன் கூடிய எம்பெருமானின் தரிசனம் வேண்டி நிற்கின்றனர். சிறந்த பொன்னாலான சிலம்பையணிந்த பலராமரே நீங்களும் உங்கள் தம்பியும் எழுந்து எமக்கு தரிசனம் தர வேண்டும்.
.
மூவுலகம் அளந்தவன். விண்ணைப் பிளந்து தேவலோகத்தில் திருவடி பதித்த தேவர்கள் தலைவன் எங்கள் மன்னனாம் மாதவனே நீங்கள் யோக நித்திரையிலிருந்து விழித்து பலராமருடன் எங்களுக்கு தரிசனம் தாருங்கள்.
.
இறைவனை அணுகிவிட்டோம். அவன் நித்திரையிலிருந்து விழித்து, அவனது கடைக்கண் பார்வை, நம்மீது படவேண்டும் என்று துதிக்க வேண்டும்.
.
மாதவனே, மனம் திறவாய், முரளீதரனே, கண்பாராய்.
****
அம்பரமே, தண்ணீரே, சோறே, அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா, எழுந்திராய்!
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்!
செம்பொற் கழலடி செல்வா! பலதேவா!
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்!
****