November 07, 2020

நமிநந்தியடிகள் நாயனார்



ஏமப்பேறூரில் பிறந்த அந்தணர் குலத்தவர் நமிநந்தியடிகள். மகேஸ்வரனின் ஐந்தெழுத்தை அன்புடன் உணர்ந்து இடைவிடாது சிந்தித்திருப்பதும் பூஜிப்பதும் தொண்டுகள் செய்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தார். நாள்தோறும் திருவாரூர் பெருங்கோவிலில் குடிகொண்டுள்ள பெருமானை தரிசித்து வழிபடுவதை தமது தலையாய
திருப்பணியாகக் கொண்டிருந்தார்.
.
எழுந்த அன்பின் பெருக்கால், ஒரு மாலைப்பொழுதில் ஈசனுக்கு விளக்கேற்றி துதிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஏமப்பேறூர் வரை தமது இல்லம் சென்று எடுத்த வர தாமதமாகிவிடும் என்பதால் அங்கு குடியிருக்கும் வீடுகளில் வேண்டிப்பேற்றுக்  கொள்ள எண்ணி, அருகிலுள்ள ஒரு வீட்டை அணுகினார். அவர் சென்ற வீடு சமணர்கள் வாழ்ந்த வீடு. "விளக்கேற்ற நெய் தாருங்கள்" என்று விண்ணப்பித்தவரிடம், "அனலேந்தி நிற்கும் உங்கள் சிவனாருக்கு விளக்கு ஏற்ற வேண்டுமென்றால் நீரை ஊற்றி ஏற்றுங்கள்" என்று பரிகசித்தார்கள்.
.
மனம் பொறுக்க மாட்டாமல் இறைவனிடம் முறையிட்டழுத அடிகளை இறைவன் கருணை கொண்டு "அருகேயுள்ள குளத்தில் நீரெடுத்து வந்து ஏற்றும்" என்று ஆகாயமார்க்க அசரீரியாக அருளினார். தமது பாக்கியத்தை எண்ணி பேருவகை அடைந்து, குளத்தில் நீர் அள்ளி, ஐந்தெழுத்தோதி திருவிளக்கேற்றினார். சுடர்வீட்டு ஜோதியென ஒளிர்வது கண்டு ஆலய்ம் முழுவதும் ஊரெல்லாம் அதிசயிக்க விளக்கேற்றி இறைவனின் பெருமையை உலகறியச் செய்தார். சமணத்தவர்கள் வெட்கி தலைகுனிந்தனர்.
.
இந்நிகழ்வுக்குப் பிறகு தொடர்ந்த நாட்களிலும் நீரூற்றி ஆலயமெங்கும் விளக்கேற்றும் திருப்பணி செய்து, பின்னர் தமதூர் சென்று பூஜைகளில் ஈடுபடுவதை வழக்கமெனக் கொண்டிருந்தார். இப்பெருமை ஊரெங்கும் பரவ, சோழ மன்னன் பெருங்க்கொடையளித்து ஆகம விதிப்படி பூஜைகளும் நித்ய ஆராதனைகளும் பங்குனி உத்திர விழாவும் நடைபெறுவதற்கு வழி செய்து அதற்கு தலைமை ஏற்க நந்தியடிகளை நியமித்தார்.
.
ஒரு சமயம் பங்குனி உத்திரப் பெருவிழாவின் போது மணலி என்ற ஊரில் உலா எழுந்தார். அங்கு பலதரப்பட்ட மக்களும் பல்வேறு ஜாதி இனத்தவர்களும் சிவனாரை வணங்கிச் சென்றனர். அடிகள் இறைவனை மகிழ்ந்து பூஜித்த பின், தமது ஊரை அடைந்தார். வீட்டினுள் செல்லாமல் வெளித் திண்ணையில் தங்கிவிட்டார். மனைவியார் வீட்டினுள் வந்து அர்ச்சனை பூஜை செய்ய நினைவூட்டினார்கள். மணலியில் நான் இறைவனின் உலா கண்டு சேவித்திருந்தேன். அங்கு பல ஜாதியினர் வந்து வழிபட்டதாலும், தமக்கு தீட்டு உண்டாயிற்று அதனால் நீராட ஏற்பாடு செய்யப் பணித்தார்.
.
மனைவியார் அகன்றதும் மீண்டும் திண்ணையில் படுத்தவருக்கு எம்பெருமான் கனவில் காட்சிதந்தார். "திருவாரூரில் பிறந்த அனைவரும் கணங்கள். அதை நீ உணர்வாய்" என்று அறிவூட்டினார். உறக்கம் கலைந்தவர் தாம் செய்த பிழையால் வருந்தனார். உடன் சென்று பூஜைகள் தொடர்ந்தார். மறு நாள் பொழுது புலர்ந்ததும் திருவாரூர் சென்றார் அங்கு அத்தனை பக்தர்களும் சிவ ஸ்வரூபமாக தோன்றுவதைக் கண்டு, பிழை பொறுக்க இறைவனை இறைஞ்சி, ஜாதி வேறுபாடுகளை கடந்தார்.
.
நெடுங்காலம் இறைவனுக்கும் அடியவர்களுக்கும் திருத்தொண்டுகள் புரிந்து, சிறப்புற வாழ்ந்து இறைவன் திருவடி சேர்ந்தார்.
.
ஓம் நமச்சிவாய
.

திருமூலர்

                                                     



.                  
பதினெண் சித்தர்களில் தலையாய சித்தராக அறியப்படுபவர். அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர் எனும் பேறு பெற்றவர் ஆகிறார்.
.
இவரது பிறப்பின் மூலத்தை அறிய முற்படுவோம். நந்தித்தேவரின் அருள் பெற்ற மாணவர்களுள் சுந்தரநாதர் என்ற சிவயோகி ஒருவரும் இருந்தார். இவர் அணிமா லகிமா முதலிய அஷ்டமா சித்திகளை கையாளும் அருள் பெற்றிருந்தார். அகத்திய மாமுனியின் நண்பராக இருந்தார். இவர் கைலாய பரம்பரையில் வருபவர். ( இவருடைய பதினாறு சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலை சித்தரும் வெகுவாக அறியபடுபவர்கள். காலங்கி சித்தரின் சீடரே பழனியில் நவபாஷாணத்தால் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்த போகர் ஆவார் )
.
சுமார் 8000 வருடங்களுக்கு முன்னர், அகத்திய மாமுனியை கண்டு அவருடன் சில காலம் இருந்து வர தென் திசையை நோக்கிப் புறப்பட்டார். தெற்கே காஞ்சி வந்து, தில்லையை தரிசித்து, பல தலங்களில் சிவனை நினைந்து அன்பொழுக பக்தி செய்து, காவிரியில் நீராடி, பின்னர் உமையவள் பசுவின் வடிவில் இறைவனை நோக்கி தவமியற்றி கோமுக்தீஸ்வரரால் ஆட்கொள்ளப்பட்ட திருவாடுதுறை வந்தடைந்தார்.
.
இறைவனை தரிசித்து விலக இயலாதவராய் சில காலம் தங்கினார். திரும்பச் செல்லும் காலத்தில் காவிரி கரையின் சோலையில் இரை மேய்திருந்த பசுக்கள் வருந்தி அழுவதைக் கண்டார். சாத்தனூரில் இடைக்குலத்தவனான மூலன் அப்பசுக்களை மேய்த்து ரக்ஷித்து வருபவன். அவன் தன் உடலை உகுத்து விண் புகுந்ததால், பசுக்கள் வருந்தி அழுவதை உணர்ந்தார்.
.
பசுக்களின் மேல் கருணைக் கொண்டதனால், மூலனின் உடலில் தம் உயிரை செலுத்தி, தம் உடலை பாதுகாப்பாக வேறிடத்தில் விட்டு, கூடு விட்டு கூடு பாய்ந்தார். பசுக்கள் வீடு சென்றடைய, நெடு நேரமாகி வீடு திரும்பாத கணவனை எண்ணி கவலையுற்றிருந்த மூலனின் மனைவி, திருமூலரை தன் பதியென்றெண்ணி மகிழ்ந்து அழைத்தாள். தமை தீண்ட அனுமதி மறுத்த மூலர் தாம் திருமூலர் என்பதை ஆட்டின் உடலில் புகுந்து நிரூபித்தார். மூலனின் மனைவியை ஊரார் தேற்ற, திருமூலர் தமது மேனியில் புகுதற்கு தாம் பாதுகாப்பாக விட்டுச்சென்ற உடலைத் தேடினார். அது அங்கில்லாமல் மறைந்திருக்கவே அதன் காரணத்தை யோகத்தின் மூலம் அறிந்து, அதுவே இறைவன் சித்தமென தெளிந்தார்.
.
சாத்தூரிலிருந்து மீண்டும் திருவாடுதுறை அடைந்து பல காலம் அங்கு தங்கி தவமியற்றினார். கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் அரச மரத்தடியில் தவமியற்றியவர் ஆண்டுக்கொரு முறை கண்விழித்து பாடல் இயற்றி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். இவ்வாறு மூவாயிரம் வருடங்கள் தவமியற்றினார். இவர் தொகுத்த பாடல்கள் "தமிழ் மூவாயிரம்" என்று வழங்கப்பட்டது. பின்னர் வந்த சான்றோர் இதனை திருமூலர் அருளிய திருமந்திரம் என வகை செய்தனர்.
.
இவ்வாறு திருமந்திரம் அருளியவர் அதனை வெளியிடாமல் ஆலயத்தின் கொடிமரத்தின் அடியில் புதைத்து, அங்கிருந்து சிதம்பரம் சென்று தமது குரு நந்தீசரைப் ( நந்தி பகவான்) பணிந்து, தில்லையம்பதியுடன் கலந்தார்.
.
பல்லாயிரம் வருடங்கள் பின்னால் தோன்றிய சம்பந்தர், பெருமான் அருளால் இங்கு தமிழ் மந்திரங்கள் உளதென்று உணர்ந்து, அதனை உலகிற்கு வெளியிடச் செய்தார்.
.
இவரின் பெயர், பிறப்பு முந்தைய நிலை எதுவும் பெரியபுராணம் தொகுத்த சேக்கிழாராலோ, திருத்தொண்டர் திருவந்தாதி இயம்பிய நம்பியாண்டார் நம்பியாலோ குறிப்பிடப்படவில்லை. எனினும், இவரே நாயன்மார்களில் மூத்தவர் பல காலத்திற்கு முன்னவர், சைவத்திற்கு முதல் நூலைத் தந்தவர் என்று கூறலாம். இவர் எழுதிய நூலை திருமந்திரம் எனும் பத்தாம் திருமுறையாக நம்பியாண்டார் நம்பி தொகுத்தார்.
.
இவர் நந்தியின் சீடர் என்பது அவர் எழுதிய
"நந்தியருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர்
என்றிவ ரென்னோ டெண்மரு மாமே” (திருமந்திரம்-67)

திருமூலர் வாய்மொழியாலேயே நன்கு தெளியப்படும்.
.
ஓம் நமச்சிவாய

திருநீலநக்க நாயனார்



.
சோழமண்டல சாத்தமங்கை எனும் ஊரில் அந்தணராக பிறந்தார் திருநீலக்கர். அந்தணராகப் பிறந்தவர் வேதத்தின் உட்பொருளான சிவனை பூஜித்தல், அர்ச்சிதல், தொழுதல், அவனடியார்களை சிறபித்தல் அமுதளித்தல் முதலியனவையே உய்யும் வழி என்றுணர்ந்து தினமும் வேதாகம முறைப்படி சிவனை பூசித்து பல இறைத்தொண்டு ஆற்றி வந்தார்.
.
ஒரு சமயம், அவர் பிறந்த திருவூரான சாத்தமங்கையிலிருக்கும் அவயந்தி என்ற கோவிலில் அருளிச் சிறப்பிக்கும் பரமேஸ்வரனை பூஜிக்க விரும்பி, பூசனைக்குறிய பொருட்களுடன் தம் மனைவியாருடன் ஆலயம் சென்று மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்தார். அச்சமயம் சிலந்தி ஒன்று சர்வேஸ்வரனின் லிங்கத் திருமேனியில் விழுந்தது. பூஜைக்கு அழுக்கு நேருமோ என்றேண்ணிய மனைவி, அதனை தமது வாயினால் ஊதி போக்கினார்.
.
இதனைக் கண்டு வெகுண்ட நாயனார், எங்கனம் கீழ்மையான இச்செயலை செய்யத்துணிந்தார். வேறொரு வகையில் நீக்காமல் எச்சில் கொண்டு ஊதி நீக்குவது பெரும்பாவச் செயல். அச்செயல் புரிந்த உம்முடன் இனி நான் வாழுதற்கில்லை, உமைத் துறந்தேன் என்று உரைத்துச் சென்றார். அது கேட்ட மனைவியும் வருந்தி அஞ்சி ஒதுங்கி ஆலயத்தில் தங்கி விட்டார்.
.
அந்த இரவு துயில் கொண்ட பின் கனவில் இறைவன் எழுந்தருளி தம் திருமேனியை காட்டினார். உமது மனைவி ஊதிய இடம் நீங்கலாக மற்ற இடமெங்கும் சிலந்தியினால் ஏற்பட்ட கொப்புளம் என்று கூறியருளினார். விழித்த நீலநக்கர் இறைவனின் கருணையை வள்ளல்தன்மையை மனதில் கொண்டவராக ஆடிப்பாடி கூத்தாடி, ஆலயம் சென்று மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
.
சம்பந்தரைப் பற்றி கேட்டுணர்ந்து, அவரை தரிசிக்கவும் திருப்பாதம் தோழவும் ஆவல் மேலிட்டவரானார். அப்பொழுது சம்பந்தர் பல்வேறு ஸ்தலங்களுக்குச் சென்று இறைவனை பாடி, சாத்தமங்கையை வந்தடைந்தார் என்று அறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டவராக, தமது சுற்றம் சூழ அவரை அழைத்து, விருந்தோம்பல் செய்து திருவமுதளித்து மகிழ்ந்தார். அவருடன் வந்த திருநீலகண்ட யாழ்பாணருக்கும் அவரது துணைவி மதங்கசூளாமணியாருக்கும் நடு வீட்டில் தாம் வேள்வி செய்யும் வேதிகை அருகே இடம் கொடுத்து உயர்ந்த மரியாதையை செய்தார். இவரது செயலால் அகமகிழ்ந்த சம்பந்தர் மறு நாள் பெருமானை பாடிய பதிகத்தில் இவரையும் சிறப்பித்து பாடினார்.
.
ஞானசம்பந்தரிடம் பெரும் பக்தி பூண்டு அவருடன் தாமும் புறப்பட முயன்றார் எனினும் சம்பந்தர் அவரை அவயந்தி பெருமானை பூஜித்து அத்திருத்தலத்தில் இருக்கும்படி பணித்தமையால் அதனை மீறாமல் அவரது ஊரிலேயே தங்கி விட்டார். சம்பந்தரிடம் பெரும் பக்தி கொண்டதால் அவரை தினம் அன்புடன் தினமும் நினைந்தார். திருஞானசம்பந்தரின் திருக்கல்யாணத்திற்கு வேதியராக புரோகிதம் செய்தவர் அப்பெருஞ்சோதியில் தாமும் கலந்து இறைவனுடன் உறைந்தார்.
.
ஓம் நமச்சிவாய

திருநீலகண்ட யாழ்ப்பாணர்





யாழ் இசைத்தல் பாணர் குலத்தின் சிறப்புக் கலை. யாழ் இசைத்த பாணர் என்பதால் யாழ்ப்பாணர் எனப்படுகிறார். திருஎருக்கத்தம்புலியூர் எனும் தலத்தில் பாணர் குலத்தில் பிறந்து சிவனாரின் அரும்புகழை யாழ் மீட்டி, பண் இசைத்து, தொண்டாற்றினார். திருத்தலங்கள் தோறும் யாத்திரை செய்து இவர் யாழ் இசைக்க, இவரது மனைவியார் மதங்கசூளாமணி, திருப்பாடல்கள் பாடி இருவரும் இறைவனுக்கு இசைமாலை சூட்டி வழிபட்டனர். அக்கால வழக்கப்படி பாணர்கள் கோவிலினுள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனால் ஆலயத்தின் புறத்தே நின்றே இறைவனை துதித்து வந்தனர்.
.
சோழ நாடெங்கும் தலயாத்திரை செய்தவர்கள், பாண்டி நாட்டின் மதுரையை அடைந்து திருவாலவாய் கோவிலில் இறைவனுக்கு பண் இசைத்தனர். இறைவன் தொண்டர்கள் கனவில் தோன்று அவர்களை தம் முன் அழைத்து வரும்படி ஆணையிட்டார். பாணரும் இறைவன் விருப்பப்படி திருவாலவாய் கோவிலில் இறைவன் புகழை இசைக்க, தரையிலமர்ந்து  பண் இசைத்தால் சீதம் தாக்கி, யாழ் நரம்பு தளர்ந்துவிடுமென்று பலகை கொண்ரும்படி அசரீரி ஒலித்தது. அவ்வாக்கை சிரமேற்கொண்டு நிறைவேற்றிய தொண்டர்கள் பலகையில் பாணரை அமரச்செய்ய, பாணரின் இன்னிசை ஆலயமெங்கும் முழங்கியது.
.
பின்னர் திருவாரூரை அடைந்த பாணர் தம்பதியர் தமது மரபுப்படியே புறத்தே நின்று வழிபட்டனர். இன்னிசைக்கு இரங்கிய இறையனார், வடத்திசையில் வேறு வாயில் அருளி நாயனாரும் மனைவியும் அதனுள் சென்று யாழ்ப்பண் இசைத்து மகிழ்ந்தனர்.
.
யாழ்பாண நாயனார் திருஞானசம்பந்தரின் மேலான சிறப்பை உணர்ந்து அவரைக் காணும் ஆவல் கொண்டார். அவர் இயற்றும் பதிகத்திற்கு யாழ் இசைக்கும் விருப்பமும் கொண்டவராகி, சம்பந்தர் சென்ற இடமெல்லாம் உடன் சென்று இன்னிசை தொண்டாற்றினார்.
.
யாழ்பாணர் இசையினால் தான் சம்பந்தர் பாடல்கள் திறம்பட அமைகிறது என்ற சுற்றத்தினரின் பேச்சினால் மனம் ஒடிந்தவர், தம்மால் வாசிக்க முடியாதபடி பதிகம் இயற்ற சம்பந்தரை வேண்டினார். அவ்வாறே சம்பந்தர் "மாதர் மடப்பிடியும்” என்ற பாடல் பாட, அதன் நுணுக்கங்களை யாழில் இசைக்க முடியாமல் யாழை முறிக்க முயன்ற நாயன்மாரை தடுத்து தேறுதல் சொன்னதாகக் குறிப்பு. இவ்வகைப் பண்ணை யாழ்முறிப்பண் என்று கூறிவந்தனர். அதனையே இப்பொழுது நீலாம்பரி என்று சிலரும் அடாணா என்று சிலராலும் வழங்கப்படுகிறது என்ற கருத்து நிலவுகிறது.
.
திருநீலநக்க நாயனார், சம்பந்தர் சொல்லுக்கிணங்கி தமது வீட்டின் நடுவில் வேள்வி செய்யும் நித்தியாக்கினி வேதிகை அருகே யாழ்பாணருக்கும் அவர் மனைவியாருக்கும் இடம் அமைக்க, வெள்வித்தீ மேலும் சுடர் விட்டெரிந்து இவர்களை பெருமைப்படுத்தியது.
.
இவ்வாறு ஈடில்லா இசைத்தொண்டாற்றியவர் தமது துணைவியார் மதங்கசூளாமணியுடன் சம்பந்தர் திருமணத்தில் கலந்து பெருஞ்ஜோதியில் கலந்து ஈஸ்வரன் திருவடியில் இணையிலா பெருவாழ்வு பெற்றார்.
.
ஓம் நமச்சிவாய

November 04, 2020

திருநீலகண்ட நாயனார்



தில்லையம்பதி தமிழுக்கும் பக்திக்கும் ஈன்றுள்ள நாயன்மார்களுள் ஒருவர் நீலகண்ட நாயனார். குயவர் தொழில் புரிந்த இவரின் இயற்பெயர் அற்றுப்போகும் அளவிற்கு அவர் தில்லை நடராஜனிடம் பக்தி பூண்டிருந்தார். ஈசனின் நாமங்கள் பலவற்றுள் "திருநீலகண்டன்" எனும் திருப்பெயரையே மந்திரமாக உச்சரித்து "திரு நீலகண்டம்" என்று கூறுவாராதலால், திருநீலகண்ட குயவர் என்றே வழங்கப்பட்டார்.
.
குயவனாகிய இவர் தாம் படைத்த உயர்ந்த ஓடுகளை இறைவனின் அடியவர்களுக்கு அமுது படைக்க அளித்து தொண்டாற்றி வந்தார். இடையறாது சிவ சிந்தனையில் ஆழ்ந்து "திரு நீலகண்டம்" என்ற மந்திரச் சொல்லையே உரைத்தும் வாழ்ந்திருந்தார். இவரின் உயர்குணத்திற்கு ஈடு கொடுக்கும் நல்லாளாக இல்லாள் அமைந்திருந்தாள்.
.
இப்படி வாழும் காலத்தே விதி வசத்தால் சிற்றின்பத்தில் மனம் மிக நாடுபவரானார். பரத்தையரில் ஒருவளிடம் தன் இளமையை பங்கிட்டு இன்புற்றார். இதனையறிந்த மனைவி மிகவும் மனம் வருந்தியவளாக, கணவன் தமை நெருங்கும் வேளையில் "எமை தீண்டாதீர் திருநீலகண்டம்" என்று இறைவன் மேல் ஆணையிடுகிறாள். எமை என்று கூறியதால் இனி எந்தவொரு மாதையும் மனதாலும் தீண்டேன் என்று சபதம் மேற்கொண்டு வாழலானார். இல்லறத்திலும் துறவறம் மேற்கொண்டு இறைச் சிந்தனையன்றி இன்னொன்று இல்லாது இருவரும் வாழ்ந்து முதுமை எய்தினர்.
.
பக்தர்களின் பெருமையை உலகிற்கு உணரத்த எண்ணிய இறைவன் திருவிளையாடல் புரிந்தான். அடியவராக நாயன்மாரை அண்டினார். அடியவரை வரவேற்று அமுதளித்து தம்பதியினர் இனிது உபசரித்தனர். யாத்திரிகனான தம்மிடம் ஒரு அபூர்வ திருவோடு உள்ளதென்றும் அது கல்ப தருவைப் போன்று பெருமை வாய்ந்தது, அத்திருவோட்டை இவர்களிடம் பாதுகாப்பாக விட்டுச் செல்வதாக கூறி, தாம் வந்து திருவோட்டை மீட்டுக் கொள்வதாக கூறிச் சென்றார்.
.
சில நாட்களுக்குப் பிறகு அவர் மனையடைந்து திருவோட்டை திரும்பத் தருமாறு கேட்டார். பாதுகாப்பாக வைத்த திருவோடு இறைவன் லீலையால் மாயமாக மறைந்திருக்க, தம்பதியினர் திகைத்தனர். அடியவராக வந்திருந்த சிவனார், நாயன்மார் பொய்யுரைப்பதாக பெருங்கோபம் கொண்டு, அவர் பொய்யுரைக்கவில்லை என்றால் தமது மகனின் மீது ஆணையிடச் சொல்கிறார். தனக்கு பிள்ளைகள் ஏதுமில்லை என்ற நாயன்மாரிடம், மனைவி மீது ஆணையிடும்படி கூற அதற்கும் தயங்கியவர் தாம் மனைவியை தீண்டுவதில்லை எனச் சொல்ல, பொய் மேல் பொய்யுரைக்கும் உன்னை அந்தணர் முன் அழைத்து வழக்காடப் போகிறேன் என்று சினம் மிகுந்து வெகுண்டார்.
.
தில்லை அந்தணர் சபையில் தமது அந்தரங்கம் வெளிப்படும் வகையில் உண்மை கூறி தாம் மனைவியை தீண்ட முடியாது என்றுரைத்து மூங்கில் கழியின் ஒருபக்கத்தை நாயனாரும் மறுபக்கத்தை மனைவியும் பிடித்து குளத்தில் மூழ்கி சபதம் செய்தனர்.
.
மூழ்கி எழுந்தவர்கள் முதுமை நீங்கி இளமைப் பொலிவோடு எழுந்தனர். எதிரே சினம் மிகுந்த அடியவருக்கு பதில் சங்கரியுடன் சங்கரனார் ரிஷப வாகனனாக புலனின்பம் வென்ற தம்பதியரை வாழ்த்தி, நீளாயுள் அருளி மறைந்தார். இருவரும் நீண்ட நாட்கள் இறைப்பணிகள் செய்து, பின்னர் சிவலோகம் சென்று நீங்கா இன்பம் பெற்றனர்.
.
ஓம் நமச்சிவாய

October 22, 2020

நந்தனார் (திருநாளைப் போவார் நாயனார்)





நினைவு தெரிந்த நாள் முதல் சிவ சிந்தனையில் தவமியற்றியவரின் சரித்திரமே நந்தனார் சரித்திரம். ஆதனூர் எனும் ஊரில் புலையர் என்றழைக்கப்படும் பிற்படுத்த வகுப்பினராக அந்நாட்களில் வரையறுக்கப்பட்ட குலத்தில் பிறந்தார். அக்குலத்திற்கென கோட்பாடுகள் அக்கால வழக்கப்படி கடைபிடித்து வந்தார். அது தொட்டு ஆலயத்துள் சென்று வழிபாடு செய்யாவிட்டாலும், வெளியிலிருந்து வழிபட்டு ஆடிப் பாடி மகிழ்வார். பக்திப் பெருக்கினால், கோவில் பேரிகைகளுக்கு விசிவார், போர்வைத்தோல் முதலியனவும், அர்ச்சனைக்கு கோரோசனையும் வழங்கி வந்தார். .
.
திருப்புன்கூருக்கு சென்று இறைவனை தரிசிக்க எண்ணினார். தம்மால் உள் நுழைய முடியவில்லை என்றாலும் நேரில் இறைவனை தரிசிக்க ஆசை கொண்டார். இதனை அறிந்த பெருமானார், நந்தியை விலகச் செய்து நேரே தரிசனம் அளித்து அருளினார். இன்பம் கரைபுரண்டு ஆடிப்பாடி மகிழ்ந்த நாயன்மார் அங்கு குளம் தோண்டி தொண்டு செய்தார். பல ஊர்களிலும் இவ்வாறு சிரு தொண்டுகளும் பெருந்தோண்டுகளும் செய்து வந்தார்.
.
இப்படியிருக்குங்கால் தில்லை அம்பலவாணனை தரிசிக்கும் ஆவல் மிகுந்தது. தில்லையின் பெருமையை நினைத்தும் தம் குலப்பிறப்பை நினைத்தும் மறுகி தயங்கி பின் போகாமல் நின்று விடுவார். மீண்டும் ஆவல் எழும் போதெல்லாம் "நாளைப் போவேன்" என்று சமாதானப்படுத்திக் கொள்வார். (இக்காரணத்தால் பின்னாட்களில் "திருநாளைப் போவார்" என்ற திருப்பெயரால் அன்போடு பேசப்பட்டார்) . துணியாது தயங்கியபடியே நாட்களை கடத்தியவர், அன்பு மேலிட ஒரு நாள் தில்லையின் எல்லைவரை சென்று விட்டார். எல்லையில் தங்கி அங்கு எழும் ஹோமப் புகைகள், யாக மண்டபங்களைக் கண்டார். வேத மொழிகளை இனிது கேட்டார். உள்ளே செல்லுதற்கு அஞ்சி எல்லையில் நின்று விட்டார். கை தொழுதும் தில்லையம்பதியை வலம் வந்து ஆடிப் பாடி நின்றவர் உள்ளே செல்லுதற்கு மிகுந்த அச்சம் கொண்டவராக வருத்தம் மேலிட துயில் கொண்டிருக்கையில் இறைவன் இவர் வருத்தம் போக்க திருவுள்ளம் கொண்டார்.
.
நந்தனாரின் கனவில் தோன்றிய ஈசன், "இப்பிறப்பின் கருமம் கழிய வேள்வித் தீயில் புகுந்தெழுந்து முப்புரி நூலணிந்து திகழ்வாய்" என்று திருவாய் மலர்ந்தார். அதே சமயத்தில் அங்குள்ள அந்தணர்கள் கனவில் தோன்றி வெள்வித்தீ மூட்ட ஆணையிட்டு மறைந்தார்.
.
விழித்தெழுந்து அந்தணர்கள் நந்தனாரை தேடியடைந்து, ஆலயம் முன் வேள்வித்தீ அமைத்து தந்தோம் என்றுரைத்து அழைத்துச் சென்றனர். இறைவன் திருவடியல்லாது வேறொன்றை நினையாது எரியை துதித்து வலம் வந்து அதனுள் புகுந்தார். புகுந்தவர் மறையோதும் அந்தணர்களும் முனிவர்களும் வாழ்ந்த, ஒளிவீசும் பிரம்மதேவனைப் போல் எழுந்தார். வானவர் வாழ்த்தி மலர் பொழிய, வேத மந்திரங்கள் ஒலிக்க, ஐந்தெழுத்து மந்திரம் ஓதி ஆடிப்பாடி இறைவனை தரிசிக்க உள் சென்றார். ஆடும் தில்லையம்பதியை காணச் சென்றவர் தில்லை வாழ் அந்தணர்கள் அதிசயயிக்க பின் ஐய்யனின் திருவடியில் கலந்து மறைந்தார். நந்தனார் இறைவனுடன் இன்புற்ற பேரின்ப வாழ்வு பெற்றார்.
.
ஓம் நமச்சிவாய

October 15, 2020

திருநாவுக்கரசர் (அப்பர்)




கடலூர் மாவட்டத்தில் மருள்-நீக்கி என்ற இயற்பெயருடன் விளங்கிய நாவுக்கரசர் , முதலில் சமண மதத்தை தழுவியிருந்தார். அதுமட்டுமின்றி சமண மதத் தலைவராகவும் இருந்து தருமசேனர் என்று அழைக்கப்பட்டார். பௌத்தர்களை வாதத்தில் வென்று சமண மதப் பெருமைகளை நிலை நாட்டினார்.
.
இவரது தமக்கையார் இறைவனிடம் இறைஞ்சி சைவத்தின் பெருமையை தம்பியாருக்கு விளங்கவைக்குமாறு வேண்ட, சூலை நோயால் அவதியுற்றார். சமண மடங்களிலும் அதன் தலைவர்களாலும் கொடுக்கபப்ட்ட சிகிச்சைகள் பலனின்றி போனதால், சிவனை வழிபடுவதால் நோய் தீரும் என்ற தமக்கையின் வாக்கை ஏற்று பாடலைப் பாட, நோய் தீர்க்கப்பெற்றார். இன்னிசையால் பதிகம் பாடி இறைவனை தொழுதமைக்கு நாவுக்கரசர் என்று ஈசன் அசரீரியாக திருநாமம் சூட்டினார்.
.
சமண மதத்தை துறந்த தருமசேனர் என்ற நாவுக்கரசரை கொடும் தண்டனைக்கு ஆளாக்க சமண குருமார்களும் அவர்களது அரசரும் முனைந்தனர். அவர்களுடன் செல்ல மறுத்து "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்று பாடி உடன் செல்ல மறுத்தார்
.
வற்புறுத்தி அழைத்துச் சென்ற சமணர்கள், நாவுக்கரசருக்கு தண்டனை வழங்க பல்லவ அரசனுக்கு பரிந்துரைத்தனர். ஏழு நாட்கள் சுண்ணாம்பு காளவாயில் அடைத்து வைக்கப் பட்டார். இறைவன் அருளால் அது குளிர்ந்து வசந்தம் வீச,
"மாசில் வீணையும் மாலை மதியமும்,
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே"
என்று பாடியபடி மகிழ்ந்திருந்தார்.
.
தண்டனை பலிக்காமல் போனதால் ஆத்திரம் அடைந்த சமணர்கள், கொடிய நஞ்சினை புகட்டி நாவுக்கரசரை வீழ்த்த எண்ணினர். அதனின்றும் பட்டோளி வீசி தீது அண்டாமல் உயிர்த்தார். அதன் பின்பு யானையை இடறச் செய்த போதும், யானை அவரை தலை வணங்கிச் சென்றது. மேலும் கொடுஞ் செயல் புரியத் துணிந்து, கல்லில் அவரைப் பிணைத்து நடுக் கடலில் எறிய,
"கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமசிவாயவே"
என்று பாட, பிணைத்த கல்லின் மேல் மிதந்தபடி கரை சேர்ந்தார். மகேந்திர பல்லவ மன்னனும் பெருங்குற்றம் புரிந்ததை உணர்ந்து நாவுக்கரசரை பணிந்து சைவம் தழுவி பின்னாளில் சமணப் பள்ளிகளை ஒழித்து கோவில்கள் கட்டியதாக வரலாறு.
.
சமண மதத்தை போற்றியிருந்த உடலுடன் உயிர் வாழ விருப்பமில்லை, உயிர் தரிக்க வேண்டுமென்றால் சிவ அடையாளங்கள் தம் உடம்பில் பொறிக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்க, அவரது தோள்களில் சூலமும், ரிஷபமும் பூதகணங்கள் பொறித்தனர். விண்ணவர் மலர் மாரிப் பொழிந்தனர். சைவ சமயத்தின் பெருமையை பற்பல திருத்தலங்கள் தரிசித்து பதிகம் பாடிப் போற்றினார்.
.
நால்வருள் ஒருவரான சம்பந்தரின் சமகாலத்தவர். இவர் பேரில் அன்பு கொண்ட சம்பந்தர் இவரை அப்பர் (மரியாதை) என்று அழைத்து பெருமை படுத்தினார். இருவரும் அரும்பல க்ஷேத்திரங்கள் தரிசித்து பாடல்கள் பாடி வழிபட்டனர். சம்பந்தருடன் சேர்ந்து இறைவனிடம் படிக்காசு பெற்று பக்தர்களுக்கு உணவளித்ததும், திருக்கதவு திறக்க பாடியதும், இரு பெரும் தொண்டர்களும் இணைந்து செய்த அற்புத நிகழ்வுகள்.
.
ஒரு சமயம் சமணர்கள் கோவில் விமானத்தை தங்களுடையது என்று பொய்யுரைத்து சிவலிங்கத்தை மறைத்து தமதாக்கிக் கொண்டிருந்தனர். அக்கோவிலை தொழாது அமுதுண்ணோம்என்று பட்டினி கிடந்தார் அப்பர். உடன் இறைவன் சோழ மன்னன் கனவில் தோன்றி அப்பருக்கு உதவ ஆணையிட்டதனால் மறைத்து வைக்கபட்டிருந்த சிவலிங்கம் வெளிப்பட்டது, சமணர்களை விரட்டி அங்கு திருக்கோவிலை மீண்டும் புதுப்பித்தான் சோழ மன்னன்.
.
இத்தனை உயர்ந்த பக்தருக்கு ஒரு தொண்டர் இருந்தார். அவர் தான் அப்பூதி அடிகள் (இவர் வரலாற்றை நாம் ஏற்கனவே பார்த்தோம்). நாவுக்கரசர் பெயரில் நலத்திட்டங்கள் ஏற்பாடு செய்து தொண்டாற்றி வந்தார். திங்களூருக்கு தலயாத்திரை சென்ற அப்பர் தமது பெயரில் தருமம் செய்து வரும் அப்பூதி அடிகளைப் பற்றி கேள்வியுற்றார். அவரது வீட்டை அடைந்தவருக்கு அப்பூதி அடிகள் பெரும் மரியாதையுடன் வரவேற்பு அளித்து அமுதுண்ண விண்ணப்பம் செய்தார்.

வாழையிலை பறித்து வரச் சென்ற அப்பூதி அடிகள் மகனை அரவு தீண்டி மரணம் தழுவிய நிலையில், இறைவனை நோக்கி பதிகம் பாடி அவனருளால் நஞ்சினை அகற்றி உயிர்பித்தார்.
.
அய்யனைக் காண திருக்கையிலாயம் செல்லும் திட்டம் கொண்டு புறப்பட்ட அப்பருக்கு உடல் வருந்தியதால் கால்கள் துவண்டு இடம் கொடுக்க மறுத்தன. கைகளால் தோள்களால் உந்திச் சென்றார். அதுவும் வலுவிழக்கவே மார்பால் முன்னே முனைந்தார். உடல் முழுக்க புண்ணாகின. இறைவன் அசரீரியாக அருளி, உடலின் வருத்தம் நீக்கி, அங்கு தடாகத்தை உண்டு பண்ணினார். அத்தடாகத்தில் மூழ்கி, திருவையாற்றிலுள்ள தடாகத்தில் எழுமாறு அருளினார். உலகெலாம் வியக்க காசியருகே மூழ்கி திருவையாற்றில் எழுந்து அங்கு ஞானக்கண் கொண்டு திருக்கையிலாய தரிசனம் பெற்றார். பற்பல ஆண்டுகள் தொடருந்து பாமாலைகளால் இறைவனைப் பாடி, உழவாரப் பணிகள் செய்து (திருவாலயங்களை தூய்மை படுத்தும் தொண்டு) வந்தமையால் 'உழவாரத் தொண்டர்' என்று அன்போடு அழைக்கப் பெற்றார்.
.
அப்பரின் பற்றற்ற பெருமை உலகம் உணர, உழவாரப் பணி செய்யும் இடங்களில் பொன்னும் மணியும் இறைவன் கிடைக்கப் பெறச் செய்தான். அப்பரோ தூய்மை செய்து ஏனைய கற்களுடன் அவற்றையும் எறிந்தார். அழகிய ரம்பைகளின் அழகிலும் அவர்கள் ஆடல்களின் மயக்கத்திற்கும் ஆட்படாமல், உம்மால் எனக்கு ஆகப்பெறுவது ஒன்றுமில்லை" என்ற கருத்துணர்த்தி "பொய்மாயப் பெருங்கடலில்" என்ற பாடல் பாட அவர்களும் அப்பரை வணங்கிச் சென்றனர்.
.
நிறை வாழ்வு வாழ்ந்த அப்பர், இறைபக்தியில் திளைத்து பின்னர் அவனடி சேர்ந்து இன்புற்றார். கைலாயத்தில் தவமியற்றியிருந்த வாகீச-முனிவர் நந்திதேவனால் சபிக்கப்பட்டதால் திருநாவுக்கரசராக புவிமீது பிறந்தருளினார் என்று குறிப்பு.
.
ஓம் நமச்சிவாய