Showing posts with label திருவந்தாதி. Show all posts
Showing posts with label திருவந்தாதி. Show all posts

August 10, 2015

ஆழ்வார்கள் - பகுதி 4 (பூதத்தாழ்வார்)






முதல் மூன்று ஆழ்வார்களுள் இரண்டாம் ஆழ்வாராக போற்றப்படுபவர் பூதத்தாழ்வார். இவரும் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மஹான். மூன்று ஆழ்வார்களும் ஒரே காலத்தவர். ஒருவரை ஒருவர் பாராமலே, திருக்கோவிலூரில் ஒன்றாகப் இறைவனின் வடிவழகைக் கண்டு பாடல்கள் பாடி, முறையே திருவந்தாதிகளாக அருளிச் சென்றனர். 
.

அவிட்ட நட்சட்திரத்தில், பல்லவ ராஜ்ஜியத்திலன் பகுதியான மாமல்லபுரத்தில் பிறந்த பூதத்தாழ்வார், கௌமோதகி என்னும் கதையின் பிறப்பம்சமாக வணங்கப்படுகிறார். ஸ்தலசயனப் பெருமாள் கோவிலின் அருகில் குருக்கத்தி என்னும் மாதவி மலரில் அவதரித்தாக சான்றுகள் கூறுகின்றன. கடல்மல்லை என்று குறிப்பிடப்படும் தொண்டைநாட்டு நகரம் இவரது அவதாரப் பெருமையை சுமந்துரைக்கிறது. 
.

பூதத்தாழ்வார் அருளியது இரண்டாம் திருவந்தாதி ஏறக்குறைய நூறு பாடல்கள் நிரம்பப்பெற்றது. திருக்கோவிலூரில் எம்பெருமான் அழகில் மயங்கி பக்திப் பெருக்கில் வெளிப்படுகிறது. பொய்கை ஆழ்வாரைத் தொடர்ந்து, இவரது பாசுரம். 
.
அன்பே தகளிய ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானச் தமிழ் புரிந்த நான் 
.
எனப் பாடிப் போற்றுகிறார்.
.
.அன்பையே விளக்காக்கினும் போதவில்லை போலும். அன்பை அகழியாக்கிவிடுகிறார். பெரும் அன்பை அகழியில் வழியவிட்டு இறைவன் பால் உள்ள ஆர்வத்தையே நெய்யாய் உருக்கி, அவர்பால் இன்புற்று உருகும் அறிவை-சிந்தையை, திரியாக்கி, ஞானம் எனும் சுடர் விளக்கை நாரணனுக்கு ஞானத் தமிழின் துணை கொண்டு ஏற்றுகிறார்.
.
.
(மேலும் பார்ப்போம்)
.

August 02, 2015

ஆழ்வார்கள் - பகுதி 3

பொய்கை ஆழ்வார் அந்தாதி வடிவில் பாடிய 100 பாசுரங்களில் திருவரங்கத்து பெருமானைக் குறித்தும் பாடியுள்ளார்.

அரங்கனுக்கும் ஆழ்வாருக்கும் உள்ள தொடர்பு இன்று நேற்றல்ல. கர்ப்ப காலம் தொட்டே இருந்திருக்கிறது. அதற்கு முன்பும் இருந்திருக்கிறது. தாயின் கர்ப்பத்தில் தோன்றிய சான்றுகள் இல்லாத பொய்கையில் பிறந்தவருக்கு ஏது கர்ப்ப காலம்?!

கர்ப்ப காலம் என்பது காலத்தின் முன்னோடியாக படைத்தலுக்கு முன் இருந்த ஒடுக்க காலத்தையும் குறிப்பிட்டிருக்கிறார் போலும்.

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர்வண்ணனைநான்
இன்றுமறப்பனோ ஏழைகாள் -அன்று
கருவரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கணடேன்
திருவரங்கமேயான் திசை 

என்பது ஆழ்வாரின் பாசுரம்.


ஒன்றுமே மறக்கவில்லை. எப்பொழுதும் அவர் மறக்கவில்லை என்ற உறுதிகூறுகிறார். கர்ப்பகாலம் தொட்டே இருந்த சம்பந்தம். காலத்தின் சக்கர சுழற்சிக்கும் அப்பாற்பட்டு நிற்கும் உறவு.






என்னால் இந்த அழகனை எப்படி மறக்க முடியும்! எப்படிப் பட்ட அழகனை? ஓத நீர்வண்ணன்- ஆழியில் வெள்ளப்பெருக்கெடுக்க ஏற்படும் குளிர்வண்ணம் கொண்டவனை ஒரு போதும் மறந்து அறியேன். கர்ப்பத்தில் இருக்கும் காலத்தேயே மறந்தறியாதவன், இன்று மறப்பேனோ! 

அன்று தொட்டே கைதொழுதேன், கண்டேன். திருவரங்கத்து உறை கொண்டிருக்கும் அவனை நோக்கி கை கூப்பித் தொழுதேன்.

திருவரங்கத்தில் சயனத் திருக்கோலத்தில் ஆழிமேல் பள்ளி கொண்ட பெருமானை, கருவரங்கத்து உள்ளே ஏறக்குறைய அதே போல் சயனித்த நிலையில் கைகூப்பி நின்று பக்தன், குழந்தையாய் தன்னை பாவித்து பாடுவது பாசுரத்தின் அழகு.


(இனி பூதத்தாழ்வாரைப் பற்றி சிறுகுறிப்புகள் பகிர்வோம்)


July 20, 2015

ஆழ்வார்கள் - பகுதி 1 (பொய்கை ஆழ்வார்)



பெருமாளை பக்தியின் பால் துதி செய்து, வைணவத் தூண்களாய்த் திகழுபவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். ஆழ்வார் பெருமக்கள் நித்யசூரிகளின் அவதாரங்களாகக் கருதப்படுகின்றனர்.

எம்பெருமான் நினைந்து கண்ணீர் உகுத்து காதல் மேலிட்டு பக்தியின் பால் உருகும் பலர் இருப்பினும் தமிழகத்தில் இப்பன்னிரு ஆழ்வார்களும் அவர்களின் திவ்யப்ரபந்தமும் என்றும் பக்திக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவன. அவற்றை நமக்கு வழங்கி அருளிய நாதமுனிகளையும் நினைவு கூறி நன்றி செலுத்த கடமைப் பட்டிருக்கிறோம்.

ஆழ்வார்கள் என்றால் ஆன்மவிசாரத்தில், இறைவனின் ஈடுபாட்டில், பரம்பிரம்மத்தில் திளைத்து ஆழ்ந்திருப்பவர்கள் என்று பொருள் கொள்ளலாம். 

முதல் மூன்று ஆழ்வார்களுள் ஒருவரான பொய்கையாழ்வார், 'அயோநிஜர்' என்று விளிக்கபடுகிறார். அஃதாவது, இவரின்  பிறப்பின் ரகசியம் தெரிந்திருக்கவில்லை. இவர் கண்டெடுக்க பட்டிருக்கிறார். முதல் மூன்று ஆழ்வார்களும் த்வாபர யுகத்தவர்கள் (குறைந்தது 5000 வருடங்களுக்கு முன்)  என தகவல்கள் கூறுகின்றன,

பொய்கையாரின் பிறப்பு ஏழாம் நூற்றாண்டு நிகழ்ந்துள்ளது. பன்னிருவரில் முதன்மையானவராக அடையாளாம் காட்டப்படுகிறார். காஞ்சியிலுள்ள திருவெக்காவில் பொய்கையில் அவதரித்ததால் பொய்கை என்றே அழைக்கபட்டார். பெருமானின் பாஞ்சஜன்யத்தின் அம்சமாக கருதப்படுகிறார். 

நூறு பாடல்கள் கொண்ட 'முதல் திருவந்தாதி' எனும் தொகுப்பு அந்தாதியாக பாடப்பட்ட தனிச்சிறப்பை பெற்றது 

பொய்கைஆழ்வார் இறையை புலன்கள்கொண்டு துதிக்கிறார். தம் காது என்றும் பெருமானின் புகழை கேட்க பிரியப்படுகின்றன. கண்கள் அவனையே மட்டுமே காண விழைகின்றன, நாசி அவனுக்கு இட்ட துளசியை மட்டும் நுகர துடிக்கின்றன, கால்கள் அவன் கோவில் கொண்டுள்ள இடத்திற்க்கே செல்ல விருப்பம் கொள்கிறது, நாவானது இறையின் பெயரை மட்டுமே பாடி மகிழ வேண்டுவன, எனப் புலன்கள் அனைத்தும் இறைச்சேவைக்கே உள்ளதென துதிக்கிறார்

ஐம்பூதங்களின் வடிவாகவும், மெய்ஞானமாகவும், அறமாகவும் ஞானத்தின் வேள்வியாகவும் பரம்பொருளை உணர்நது போற்றுகிறார். 


"புத்தியால் சிந்தியாது ஓதி உருவெண்ணும் 
அந்தியால் - ஆம்பயன் அங்கென்?"

என்று வலியுறுத்துகிறார். 

அதாவது சிந்தனையாலும், ஆழ்நோக்குடன் உள்முகமாய் பெருமாளை துதி செய்து உருவேற்றுவதை விடுத்து,  மந்திரத்தால் உருவேற்றி சந்தியாவந்தனம் முதலிய சடங்குகளைச் செய்வதால் என்ன பயன்?! என்று சடங்கு சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை வழங்க மறுத்து, மனத்தால் இறைவனை நினைக்கும் குணத்தை முன்னிறுத்துகிறார்.

(இன்னும் பார்ப்போம்)