இரு தினங்களுக்கு முன் பொதிகைத் தொலைகாட்சியில் வரும் "கண்ணபிரான் கதையமுதம்" நிகழ்ச்சியில் மிகவும் எளிமையான தத்துவம் ஒன்றை விளக்கினார் வேளுக்குடி க்ருஷ்ணன் அவர்கள்.
கீதையில் கண்ணன்
"என்னை நினைத்திரு...
மரண காலத்திலும் என்னை நினைத்திரு..
அப்படி நினைப்பவன் என்னையே வந்தடைகிறான்" என்கிறார்.
மரண காலத்திலும் என்னை நினைத்திரு..
அப்படி நினைப்பவன் என்னையே வந்தடைகிறான்" என்கிறார்.
மரணத்தின் வாயிலில் நமக்கு பெருமானை நினைக்கும் பாக்கியம் கிட்டுமா என்றே தெரியவில்லை. முன்னமே இக்கருத்தினையொட்டி ஒரு பதிவு எழுதியிருந்தேன். மரணம் என்பது எப்படி எங்கு எந்த சூழ்நிலையில் நம்மை வந்தடையும் என்பதே புதிர். அத்தருணத்தில் நாம் சிந்தனையற்று இருக்கலாம். கேளிக்கையில் திளைத்திருக்கலாம். கைகால் விழுந்து கோமாவில் இருக்கலாம். மரணபயத்தில் பீடித்து இருக்கலாம். உற்றார் உறவினரின் நினைவில் நெகிழ்ந்திருக்கலாம். பாசத்தில் கட்டுண்டு இனி இவர்களை எங்கு காண்பேன் என்று கலங்கி இருக்கலாம்.
எத்தனையோ எண்ணற்ற நினைவுகளும் பயங்களும் வந்து போகும் நேரத்தில் இறைவனை நினைக்கும் பக்குவம் சிறந்த பக்தனுக்கே வருவது குறைவு. சாமான்யனுக்கு சொல்லவும் வேண்டுமா? சதா சர்வ காலம், இறைத் தியானத்தில் இல்லாத ஒருவன் இறுதி நேரத்தில் எவ்வாறு நினைக்க முடியும். இப்படி எல்லாம் சந்தேகம் எழுகிறது. போதாத குறைக்கு, இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற சர்சையில் வாழ்வின் பாதி காலம் கழிந்து விடுகிறது.
நம்மை போன்றவர்களுக்காகவே ராமானுஜர், திருகச்சி நம்பிகளிடம், வரதராஜ பெருமானாக விளங்கும் ஸ்ரீமன்நாராயணனுக்கு கேள்வி அனுப்பினர். திருக்கச்சி நம்பிகளிடம் இறைவன் தினமும் பேசி உபதேசம் அளிப்பார். ராமானுஜர் அனுப்பிய ஆறு கேள்வியில் ஒன்று தான் "மரணத் தருவாயில் இறைவனை நினைப்பது அவசியமா?"
அதற்கு இறைவன்,. "உடல் நன்றாக இருக்கும் பொழுது நினைத்தாலே போதுமானது. என்னைச் சரணம் என்று பற்றியவனை அவனது இறக்கும் தருவாயில், நான் நினைத்து என்னிடம் சேர்த்துக்கொள்வென்" என்றாராம். அதாவது அவனை சரணம் என்று அடைந்துவிட்டால் நமக்காக அவனே நம்மை நினைத்து தன்னிடம் சேர்த்துக்கொள்கிறேன். என்னே கருணை!
"எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே."
என்றார் பெரியாழ்வார்.
மரணத்தருவாயில் நினைக்க மாட்டேனோ என்னவோ, இப்போதே உன்னிடம் சொல்லிவைத்தேன்.
அப்படியெனில் மானின் மேல் இறுதிநாட்களில் மட்டுமே ஆசை வைத்த ஒரே செயலுக்கு ஏன் இறைவன் ஜடபரதரை மானாய் பிறக்கச் செய்தார்? இதற்குத் தான் வேளுக்குடி அவர்கள் சொன்ன விளக்கம் என்னை பெரிதும் நெகிழச்செய்தது.
பரதர் பக்தியோகம் கொண்டு பக்திபூண்டார். தம் முயற்சியினூடே பக்தியில் திளைத்திருந்தார். பக்தியோகத்தைத் தாண்டி எவன் ஒருவன் சரணாகதி என சரணம் கொள்கிறானோ, அதாவது, என்னை இட்டுச் செல்வதும் நீயே, உன்னையே சரணம் அடைந்தேன், என்று முழுவதுமாய் சரண் அடைந்தவனை இறைவன் இறுதிகாலத்திலும் உடல் நலிந்தோ, ஆசை மேலிட்டோ அவன் நினைக்காது போயினும் கூட தாமே நினைத்துச் சேர்த்துக்கொள்கிறார்.
பக்தி பூணுவோம். அதனையும் தாண்டி அந்த பக்தியைத் நமக்கு அருளவும் அவனையே சரணமும் அடைவோம்.
