April 29, 2022

பாபத்தைக் களையும் நமஸ்காரம் (Deivathin kural)

துரிதம் என்றால் பாபம். எந்தக் கர்மாவுக்கும் ஸங்கல்பம் செய்துகொள்ளும்போது “துரித – க்ஷய – த்வாரா பரமேச்வர ப்ரீத்யர்த்தம்” என்கிறோம். ஈச்வரனை ப்ரீதி செய்வதே நம்முடைய லக்ஷ்யம். நாம் பண்ணிய பாவம் ஈச்வரப்ரீதி கிடைக்கவொட்டாமல் தடுக்கிறது. பாபம் நசித்தாலே, துரிதம் க்ஷயமானாலே, அதன் வழியாக ஈச்வர ப்ரீதியை ஸம்பாதிக்க முடியும். 

ஆலயத் திருப்பணியை ‘ஜீர்ணோத்தாரணம்’ என்கிறோம். ‘ஜீர்ணம்’ என்றால் கிலமானது, இடிந்து போனது என்று அர்த்தம். கோவில் முழுதுமோ, அல்லது அதில் பல இடங்களோ இடிந்துபோன போது என்ன செய்யவேண்டியிருக்கிறது? உள்ளே ஆழமாகக் சொருகிக் கொண்டிருக்கும் கல், மரம், செடி முதலியவற்றை இழுத்துப் பிடுங்கித் தள்ளுவதுதான் ஜீர்ணோத்தாரணம். 

கலியிலும் அவதார புருஷர்கள் ஜகத்தை உத்தாரணம் செய்ய வருகிறார்களென்றால் என்ன அர்த்தம்? “ஜகதோத்தாரணா!” என்று தாஸர் ஏன் பாடுகிறார்? அதர்மச் சேற்றில் அழுந்திப் போயிருக்கும் ஜகத்தை அவர்கள் அடியில் கை கொடுத்துப் பிடுங்கி வெளியே இழுத்துக்கொண்டு வருவதால்தான். 

நம் மனஸுக்குள்ளே ஆழமாக முள் செடி மாதிரி வேரோடித் தைத்திருக்கும் பாபத்தை அப்படியே பிடுங்கி எடுத்துப் போடுவதுதான் “துரிதோத்தரணம்.” உள்ளே தப்பான ஸாமான் சொருகிக் கொண்டிருந்தால் எப்படி சரீரத்துக்கு ஆபத்தோ, அப்படி நம்முடைய பாபங்கள் உள்ளே போய் சொருகிக்கொண்டிருப்பது உயிருக்குப் பெரிய ஆபத்து. அதை நன்றாகக் கிள்ளி எறிவது ‘துரிதோத்தரணம்’. 

ஆகையினால், ஜன்ம ஜன்மாந்தரமாக நாம் பண்ணின பாபம் பெரிய முள்ளு மரமாக நமக்குள்ளே வேரோடியிருக்கிறதை பெரிய கடப்பாரை, அது, இதைப் போட்டு நெம்பிப் பிடுங்கி வெளியிலே இழுத்து அழித்துப் போடவேண்டும். நம்முடைய ஸகல பாபத்தையும் நிவ்ருத்தி செய்து வாழ்க்கைக்கு ஜீர்ணோத்தாரணம் செய்துவிட்டால் அப்புறம் ஒரே சுத்தந்தான்; அம்ருதத்தாலேயே கும்பாபிஷேகந்தான்! 

இதை நமஸ்காரமே ஸாதித்துக் கொடுத்து விடுகிறது என்று காட்டுகிறார். (ஆச்சார்யரின் கனகதாரா ஸ்தோத்திரம்) 

Chapter: ஒரு திருத்தம்: ‘துரித உத்தரணம்’

(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL) 

April 27, 2022

எது செல்வம்? (Deivathin Kural)




நமஸ்காரம் தான் நமக்கு மஹா பெரிய செல்வம். ஆசார்யாள் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்.

அவர் பால ப்ரம்மசாரியாக இருந்த காலத்தில் ஒரு ஏழை ப்ராம்மண ஸ்த்ரீக்கு இரங்கி லக்ஷ்மியிடம் ப்ரார்த்தித்துக் கொண்டு ‘கனகதாரா ஸ்தவம்’ பாடின கதை தெரிந்திருக்கலாம்.



அவர் ப்ரார்த்தித்துக்கொண்டவுடன் லக்ஷ்மி வந்து கனக வர்ஷமாகப் பொழிந்துவிட்டாள்.  அவர் கேட்டுக்கொண்டாரே என்று வேறே யாருக்கோ வாரி வழங்கிவிட்டு, இதனை அழகான ஸ்துதி பண்ணின அவதாரக் குழந்தைக்கு எதுவும் கொடுக்காமல் போவதற்கு?


‘வேறே யாருக்கோ தான் உன் அநுக்ரஹம் தேவைப்பட்டது; அதற்காக ப்ரார்த்தித்துக் கொண்டேன்; எனக்கு உன்னிடமிருந்து ஒன்றும் தேவையில்லை என்கிற மாதிரி இருந்துவிட்டால் அது மரியாதைக் குறைச்சல். அதனாலே நாம் சின்னவன் மாதிரி இருந்து மஹாலக்ஷ்மியிடம் நமக்காகவும் ஏதாவது கேட்டுக் கொள்ளவேண்டும்’ என்று தோன்றிற்று. ஆனால் அவருக்கு எந்த ஆசையும், எந்தத் தேவையும் வாஸ்தவத்தில் இல்லாததால் என்ன கேட்பது என்று தெரியவில்லை. 


அவளையே நமஸ்காரம் பண்ணி  “அவளிடம் வேறென்ன செல்வத்தைக் கேட்கவேண்டும்? இப்படி நாம் சின்னவராக நின்றுகொண்டு ஒருத்தரிடம் ப்ரியத்தோடு, அடக்கத்தோடு, நன்றியோடு நமஸ்காரம் செய்யும்போது மனஸுக்கு எவ்வளவு நிறைவாக இருக்கிறது? அதனால் இந்த நமஸ்காரமேதான் பெரிய செல்வம். ‘இந்த நமஸ்காரச் செல்வத்தை எனக்குக் கொடு’ என்றே ப்ரார்த்தித்துக் கேட்டு வாங்கிக்கொள்வோம்” என்று தோன்றிற்று. அதையே ச்லோகமாகப் பாடிவிட்டார்.


‘எப்போது பார்த்தாலும் உன்னை வணங்கிக் கொண்டிருக்கும்படியான இந்த நமஸ்கார ஸ்ரீயைத் தவிர வேறு எதுவும் நான் உன்னிடம் ப்ரார்த்திக்கவில்லை’.


“செல்வத்துட் செல்வம் அருட்செல்வம்* ” என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். அருள் ஆண்டவன் செய்வது. ஆசார்யாள் சொல்லும் நமஸ்காரமோ நாம் செய்வது. நம்மைப் போன்றவர்கள் அவனுடைய அருட்செல்வத்தை வேண்டி நமஸ்காரம் செய்கிறோம். 


எப்போதும், இடையறாமல் – நமஸ்கார லக்ஷ்மி தன்னிடம் தங்கியிருக்கட்டுமென்கிறார்.


Chapter: நமஸ்காரமே செல்வம்: ஆசார்யாள் உணர்த்துவது : 


(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)


December 16, 2021

Dear Diary

திருமணத்திற்கு முன்பு வரை நாட்குறிப்பு (diary) எழுதும் பழக்கம் இருந்தது. அது தொடர்பாக சில நிகழ்வுகளும் நிகழ்ந்தது. மறக்க முடியாதவையும் கூட. டைரி பக்கங்கள் சொல்ல மறந்த கதை நிறைய. சொல்ல முடியாத கதைகளும். என் வாழ்க்கையை மாற்றி அமைத்த முக்கியப் பங்கு டைரிக்கு உண்டு. இப்போதெல்லாம் என் டைரி... வெள்ளைக் காகிதங்களாகவே பல இனிய நினைவுகளை சுமந்திருக்கிறது.

பொக்கிஷமான சில நினைவுகளை நமக்காக சிலர் சுமக்கலாம்...அல்லது சுமை என விலக்கலாம். எவரும் நம் உள்ளாடும் உணர்வுகளை செவி மடுக்க்காவிட்டாலும்....Diary செவி மடுப்பாள். உற்ற தோழியவள்.

kOra kagaz tha

என்ற பாடல் கேட்கக் கிடைக்கும் போது diary பற்றிய நினைவுகளும் கோர்வையாக பல நிகழ்வுகளும் வந்து போகும். உடனிருந்த சில மனிதர்களும்.


பின் குறிப்பு: இப்பொழுதெல்லாம் டைரியில் "ஸ்ரீராமஜயம்" மட்டுமே எழுதுகிறேன். என்னைப் போலவே என் டைரியும் மாறிவிட்டாள்.

September 10, 2021

விநாயகர் ஸ்துதி


முழுமுதற் கடவுளே மூத்தோனே!
மோதகப்ரியனே குறை தீர்ப்போனே!
உயர் மறைகள் ஓதி; ஓங்கு புகழ் பாடி,
மாந்தர்கள் தொழுதிடும் மங்களரூபனே.
.
பிரணவத்தின் வடிவான தூயனே,
வேழ முகத்தோடு பேழை வயிறதிர
ஞாலம் வலம்வந்த தீரனே,
ஞானப்பழம் உண்ட சிவபாலனே!
.
பெருந்துயர்களை தினம் செவிமடுத்து
வருவினைகளை சடுதியில் களைந்து
தும்பிக்கையாலே தலைகோதி-நல்
நம்பிக்கையூட்டும் கணநாதனே!
.
தெருகூடும் முச்சந்தி முனைகளிலும் - சிறு
உருதாங்கி அரசாளும் உமைமைந்தனே!
அரசமரமே நீயமரும் அரியாசனம் -அப்பம்
பொரிபோதுமே உந்தன் பசி தீர்க்குமே!
.
மூஷிகத்தின் தேரேறி புலன் ஆண்டவன்-எங்கள்
சித்திக்கும் புத்திக்கும் பிரியமானவன்
எத்திக்கும் புகழ்பாடும் இறையானவன்-ஔவை
தித்திக்கும் பாவிற்கு தமிழ்தந்தவன்.
.
அருகம்புல் மாலையும் அணிசேர்க்குமே-எருக்கம்
பூவும் உன் தோள்சேர மணம்வீசுமே
ஏழைக்கும் வரமருளும் எழில்ரூபமே -சூழும்
பிறவிப் பிணிபோக்கி இருள் நீக்குவாய்!
🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹

September 04, 2021

வணக்கத்துக்குரிய ....




என்னுடைய ஆசிரியர்களில் முதலில் நினைவுக்கு வருபவர், எனக்குப் பாட்டு சொல்லிக் கொடுத்த சுந்தரி அம்மாள். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். தியாகராஜர் கிருதியாகட்டும், பஞ்சரத்ன கீர்த்தனைகளாகட்டும் முதலில் அதன் பொருளைக் கூறிவிட்டு, அதிலிருக்கும் பக்தியின் சாரத்தை மனதில் பதித்த பின்னரே  பாட்டு வகுப்பைத் துவங்குவார்.  பாடலோடு ஊடே பக்தியையும் ஊட்டியவர் என்ற தனிமரியாதையும் பாசமும் அவரிடம் உண்டு.

.

அடுத்து என் ஆங்கில ஆசிரியை. Ms.Louward . Shakespeareல் துவங்கி, அவர் பாடம் எடுக்கும் ஒவ்வொரு  கதையிலும் கவிதையிலும் இலக்கிய ரசனையை மாணவர்களுக்கு ஊட்டினார்.  எங்களை பாவத்துடன் நடித்தும் பேசியும் பழகச் செய்தார். ஆங்கில கவிதைகள் கதைகளின் பால் பெருந்தாக்கம் இந்த ஆசிரியையால் உருவானது.  ஆங்கில வகுப்பு என்றாலே எங்களுக்கெல்லாம் அவ்வளவு சந்தொஷமாக இருக்கும்.

ஆசிரியர்களில்  சிலர் என் மனதிலும் ஆன்மாவிலும் கலந்து நீங்கா இடம் பெற்றவர்கள். 

என்னுடைய அப்பாவும் அம்மாவும் கூடவே இருந்து வாழ்ந்து காட்டிய (காட்டும்) ஆசிரியர்கள். Contentment, Simplicity, Humility, Humanity, அத்தனைப் பேருக்காகவும் சந்தோஷப்படும் குணம்,  இன்னும் பலப்பல  நற்குணங்களை போதித்தும், அதன்படி வாழ்ந்தும் என் மனதில் பதியவைத்தவர்கள். September ஐந்து என் பெற்றோர் திருமண தினம். 

இவர்கள் மட்டுமா!!  நம்மைசுற்றி எத்தனை ஆசிரியர்கள்! தத்தாத்ரேயர்   ஏற்கனவே வழிகாட்டியதைப்  போல,   பாரில் உள்ள  ஒவ்வொன்றும் பாடம் கற்றுத் தரும்.  பறவைகளும், விலங்கும், புலன்களும், பஞ்ச பூதங்களும், பிரபஞ்சமும்,  பேரண்டமும்,.. இன்னும் எத்தனை எத்தனை ஆசிரியர்கள்! பட்டியலிட்டு முடியுமா!

எனக்கு தெய்வமும், குருவும், ஆச்சார்யருமான மஹாபெரியவா  "உபாத்யாயர்" என்ற ஸ்தானத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதால் இந்தப் பதிவில் அவரை  சேர்க்கவில்லை.

August 19, 2021





 பாலருந்தி பளிங்குத்தரையில் தவழும்போது
உனையே இறுகப் பற்றியிருந்தேன்.
தாவணி அணித்துவங்கும் முன்பே
உன்னைத்தான் கண்டெடுத்தேன்
பாடும் பாடல்களில் உனையே இசைத்தேன்
மனமேடையில் உனக்கெனவே நடமாடினேன்.
பற்றேதுமின்றியே உனைப் பற்றியிருந்தேன்
.
நாற்பது பேரும் மேலும் - தரதரவென
நாற்திசையும் பற்றியிழுக்க
சிதறிப் போனேன்.
உடைந்த துகளிலும்
உன் தங்கமுகமே தேடுகிறேன் ..
...
பாசமென்னும் புழுதி மறைக்கிறது
அகந்தையெனும் அழுக்கு அடைத்திருக்கிறது
ஆசையெனும் பூதம் சற்றும் உனை
அண்டவிடாமல் அப்புறம் தள்ளுகிறது
நீயின்றியே தேம்புகிறேன்
.
எங்கிருந்தாலும் வந்துவிடு
எனைக் கண்டெடுத்து உன்
பூங்குழலில் பதுக்கிவிடு
மயிற்சிறகால் மறைத்துவிடு
பிரபஞ்சப் பார்வையிலிருந்து அகற்றிவிடு
பிறவாமல் செய்துவிடு
பற்றிய திருக்கரத்தை உதறாமல்
முற்றிய பக்தியை எனக்களித்து - என்றும்
பிரியாமல் இருந்துவிடு
மற்றே என் காமங்களை
மிச்சமேதுமின்றி மாற்றிவிடு
.
©ShakthiPrabha

August 15, 2021

Short - nilaa kaaigiradhu (song)







Nila kaaygirathu (short version) Thanks to co-singer Sumesh for the invite