April 29, 2022

பாபத்தைக் களையும் நமஸ்காரம் (Deivathin kural)

துரிதம் என்றால் பாபம். எந்தக் கர்மாவுக்கும் ஸங்கல்பம் செய்துகொள்ளும்போது “துரித – க்ஷய – த்வாரா பரமேச்வர ப்ரீத்யர்த்தம்” என்கிறோம். ஈச்வரனை ப்ரீதி செய்வதே நம்முடைய லக்ஷ்யம். நாம் பண்ணிய பாவம் ஈச்வரப்ரீதி கிடைக்கவொட்டாமல் தடுக்கிறது. பாபம் நசித்தாலே, துரிதம் க்ஷயமானாலே, அதன் வழியாக ஈச்வர ப்ரீதியை ஸம்பாதிக்க முடியும். 

ஆலயத் திருப்பணியை ‘ஜீர்ணோத்தாரணம்’ என்கிறோம். ‘ஜீர்ணம்’ என்றால் கிலமானது, இடிந்து போனது என்று அர்த்தம். கோவில் முழுதுமோ, அல்லது அதில் பல இடங்களோ இடிந்துபோன போது என்ன செய்யவேண்டியிருக்கிறது? உள்ளே ஆழமாகக் சொருகிக் கொண்டிருக்கும் கல், மரம், செடி முதலியவற்றை இழுத்துப் பிடுங்கித் தள்ளுவதுதான் ஜீர்ணோத்தாரணம். 

கலியிலும் அவதார புருஷர்கள் ஜகத்தை உத்தாரணம் செய்ய வருகிறார்களென்றால் என்ன அர்த்தம்? “ஜகதோத்தாரணா!” என்று தாஸர் ஏன் பாடுகிறார்? அதர்மச் சேற்றில் அழுந்திப் போயிருக்கும் ஜகத்தை அவர்கள் அடியில் கை கொடுத்துப் பிடுங்கி வெளியே இழுத்துக்கொண்டு வருவதால்தான். 

நம் மனஸுக்குள்ளே ஆழமாக முள் செடி மாதிரி வேரோடித் தைத்திருக்கும் பாபத்தை அப்படியே பிடுங்கி எடுத்துப் போடுவதுதான் “துரிதோத்தரணம்.” உள்ளே தப்பான ஸாமான் சொருகிக் கொண்டிருந்தால் எப்படி சரீரத்துக்கு ஆபத்தோ, அப்படி நம்முடைய பாபங்கள் உள்ளே போய் சொருகிக்கொண்டிருப்பது உயிருக்குப் பெரிய ஆபத்து. அதை நன்றாகக் கிள்ளி எறிவது ‘துரிதோத்தரணம்’. 

ஆகையினால், ஜன்ம ஜன்மாந்தரமாக நாம் பண்ணின பாபம் பெரிய முள்ளு மரமாக நமக்குள்ளே வேரோடியிருக்கிறதை பெரிய கடப்பாரை, அது, இதைப் போட்டு நெம்பிப் பிடுங்கி வெளியிலே இழுத்து அழித்துப் போடவேண்டும். நம்முடைய ஸகல பாபத்தையும் நிவ்ருத்தி செய்து வாழ்க்கைக்கு ஜீர்ணோத்தாரணம் செய்துவிட்டால் அப்புறம் ஒரே சுத்தந்தான்; அம்ருதத்தாலேயே கும்பாபிஷேகந்தான்! 

இதை நமஸ்காரமே ஸாதித்துக் கொடுத்து விடுகிறது என்று காட்டுகிறார். (ஆச்சார்யரின் கனகதாரா ஸ்தோத்திரம்) 

Chapter: ஒரு திருத்தம்: ‘துரித உத்தரணம்’

(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL) 

No comments:

Post a Comment