Showing posts with label teacher. Show all posts
Showing posts with label teacher. Show all posts

September 26, 2010

சில நேரங்களில், சில ஆசிரியர்கள்! ( பகுதி 3 - ஆசிரியர்கள்)

பள்ளிக்குச் சற்றே தள்ளி, அடுத்த தெருவில் இரண்டு கார் ஷெட் உண்டு. அங்கு தான் எங்களுக்கு இரண்டாம் வகுப்பு. (இரண்டாம் வகுப்பு ஏ செக்ஷன், மற்றும் பி செக்ஷன்). அதை அடுத்து உடனேயே மணல் நிரப்பிய விளையாட்டுத் திடல். முக்கால்வாசி நேரம், ரன்னிங் அண்ட் காட்சிங், இல்லாவிட்டால் லாக் அண்ட் கீ விளையாடுவோம். பொட்டல் கிரௌண்டின் பக்கத்தில் வகுப்பு என்பதால் வெயிலாய் இருக்கும். எங்களுக்கு வகுப்பெடுத்த மிஸ்ஸின் பெயர் 'சாரதா' மிஸ். வகுப்பில் நான் வழக்கம் போல் கடைசி பென்ச்சில் தான் உட்கார்ந்திருப்பேன். பாதி நேரம், க்ரவுண்டை வேடிக்கை பார்ப்பதும் பிடித்த விஷயம். சாப்பாடு கொண்டு வரும் ஆயாக்கள், பிள்ளைகளுக்கு உணவூட்ட வரும் அம்மா, என்று பலரும் பன்னிரெண்டு மணி அளவில் கிரவுண்டில் குழுமி விடுவார்கள்.

ஆங்கில வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார் சாரதா மிஸ்.


"Can I marry u mary" asked john

"No john, you can marry me when I am 20 and you are 25"


இதற்கு அழகாய் தமிழில் விளக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். இரண்டாம் வகுப்பிற்கு சாரதா மிஸ் தான் வகுப்பாசிரியை. முக்கால் வாசி ஆசிரியைகள், ஆங்கிலம், தமிழ், கணக்கு என பல வகுப்பும் எடுப்பார்கள். விளக்கம் கொடுக்கும் பொழுது, பக்கத்து செக்ஷன் மிஸ் வந்து விட்டதால், சற்றே பாடத்தை நிறுத்தி, தங்களுக்குள் ஏதோ பாடம் எடுக்கும் அந்த வாக்கியத்தைப் பற்றி தமிழில் கூறி சிரித்துக் கொண்டனர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும், marry என்ற வார்த்தை மட்டும், ஏதோ கெட்ட வார்த்தை என்று புரிந்தது போல் இருந்ததால், ஒருவரை ஒருவர் பார்த்து, ரகசியமாய் புன்னகைத்துக் கொண்டோம்.

என் அம்மா அப்பொழுதெல்லாம் தனி வித சிகையலங்காரம் செய்து விடுவார்கள். அதன் பொருட்டு 'லண்டன் லேடி' என்று என்னை பல ஆசிரியைகள் கூப்பிடக் காரணமாய் இருந்தது சாரதா மிஸ் தான். சாராதா மிஸ்ஸுக்கு என் மேல் தனி பிரியமா இல்லையா என்றெல்லாம் நினைவில்லை. ஆனால் என்னைத் திட்டியதில்லை. 'என்ன லண்டன் லேடி எதுக்கு சிரிக்கற' என்று கேள்வி எழுப்ப, எக்குத் தப்பாய் மாட்டிக் கொண்டு நான் முழித்தேன்.

'இல்லை மிஸ் சும்மா தான்.. சாரி'

அன்று நல்ல மனநிலையில் ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தார்.

'சரி இதனால எல்லாருக்கும் என்ன தெரியுது? யாரானும் கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தா 20 பொண்ணுக்கும் 25 ஆணுக்கும் இருந்தால் தான் செஞ்சுக்க முடியும்' என்று சொல்லி சிரித்தார். (ஏன் சிரித்தார் என்று அப்பொழுது விளங்க வில்லை!)

குறைந்தது பத்து அல்லது பன்னிரெண்டு வயது வரை, ஐந்து வருட இடைவெளி இருக்கும் ஆணை மட்டுமே ஒரு பெண் திருமணம் செய்ய வேண்டும் என்று தீவிரமாய் நம்பிக்கொண்டிருந்தேன்!



சாரதா மிஸ்ஸுக்கு ஒரு (கெட்ட?!) பழக்கம் உண்டு. எந்த மாணவனோ மாணவியோ 'தெரிலை மிஸ்' என்று சொன்னால், வெகு நக்கலாய் அவர்களை மட்டம் தட்டிப் பேசுவார்கள். மிச்ச மாணவ மாணவியரின் முன் அவமானப்படுத்தவும் செய்வார்கள்.இதனால்யே சாரதா மிஸ் என்றால் ஏனோ எனக்கு அவரால் விளைந்த ஒரு கசப்பான அனுபவம் தான் நினைவில் வரும்.

எங்கள் வகுப்பில் விஷால் என்று ஒரு மாணவன் இருந்தான். படிப்பில் சற்றே சுமாரான மாணவன். இதைத் தவிர அவனிடம் தவிர்க்க முடியாத விஷயம் இன்னொன்று இருந்தது. அப்பாவியாய், அசமஞ்சமாய் முகம் வைத்திருக்கும் இவன் தன் அரை டிராயரிலேயே மலம் கழித்து விடுவான். சில நாட்களில் அல்லது பல நாட்களிலும் சாரதா மிஸ் ரொம்ப அமைதியாய் அதை அணுகியிருக்கலாம். அணுகியிருப்பார்கள். நினைவில்லை.

ஒரு மதிய வேளை விஷால் மலம் கழித்திருந்தான். அவனது கை, கால்கள், சட்டை, ட்ரவுசர், பெஞ்ச் என எல்லாவற்றிலும் கறையாகி ஆகி விட, ரொம்ப எரிச்சலடைந்தார். சொல்லி களைத்துவிட்டதாலோ என்னவோ அல்லது வேறேதோ எரிச்சலின் பிரதிபலிப்பாக இருக்கலாம், அன்றைக்கு அவனை அத்தனை மாணவர்களின் முன்னிலையில் வெகுவாய் அவமானப்படுத்திவிட்டார். வகுப்பில் துர்நாற்றம் மிகுந்திருந்தாலும், சக மாணவன் என்ற முறையில், டீச்சரிடம் திட்டு வாங்குகிறானே என்ற பரிதாபத்தில் யாருமே அவனை கிண்டல் செய்யவில்லை. நாங்கள் அப்படி இருக்க, அவர் வெகுவாக கிண்டல் செய்து, மிகவும் அவமானப் படுத்திவிட்டார்.

பெயர் பெயராய் எங்களை அழைத்து, ' நீ உள்ளாடையில் மலம் கழிப்பாயா' என்று கேட்க, பலரும் அமைதியாய் இருந்தோம். ஆனாலும் வற்புறுத்தி எங்களை 'இல்லை மிஸ்' என்று கூறவைத்தார். அவன் முகம் வெகுவாய் சிறுத்துப் போனது.

சிரித்த முகத்துடன், நளினமாய் இருக்கும் சாரதா மிஸ் ஏன் அன்று அவ்வாறு அவனை சிறுமைப் படுத்தினார் என்று இன்னும் விளங்கவில்லை. பல வருடங்கள் பள்ளியில் இருந்த பொழுதும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி, சாரதா மிஸ்ஸை எப்பொழுதேனும் தெருவில் பார்க்க நேரிடும். அவர்களை பார்க்கும் பொழுதெல்லாம் விஷாலின் சிறுத்துப்போன அழுத முகமே நினைவிலாடும்.

அதன் பின் அவர்களின் அன்புக்குறிய மாணவியாக ஆக இருக்க எனக்கு மனம் வரவில்லை.

சில நேரங்களில், சில ஆசிரியர்கள்!

(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது)

September 07, 2010

ஆசிரியர்கள் - 1 நினைவலைகள் (பழைய பதிவு)

நம் வாழ்வில் ஒவ்வொரு கணத்திலும் நாம் கற்றுக்கொண்டே இருக்கிறோம். பலர் நமக்கு பாடம் படிப்பிக்கின்றனர். ஒவ்வொரு சூழ்நிலையும் ஒரு பாடம் சொல்லிச் செல்கிறது. சில பாடங்கள் சுவையானவை. சிலது நம்மை செம்மைப் படுத்தக் கூடியவை.

ஜாதிவெறி வெறியைத் தாண்டிய வெறி எது தெரியுமா? பொருளாதார நிலையினால் ஒருவரை மட்டம் தட்டுவது. என்னுடைய அறியாப் பருவத்தில் தெரியாமல் செய்த பிழைகள் நிறைய.

இந்த வெறிகளுக்கெல்லாம் என்ன பெயரிட்டு அழைப்பது என்பது விளங்கியதில்லை. கருப்பாய், நன்றாக உடை உடுத்தாமல், நாகரிகமாய் பழகத் தெரியாமல், ஆங்கிலம் நவநாகரிகமாய் பேசத் தெரியாமல், அழுக்காய், இப்படியெல்லாம் யாராவது இருந்தால், அல்லது இதில் ஒரு குணமாவது இருந்தால், அப்படிப்பட்டவர்களுடன் நான் பழகமாட்டேன். மரியாதைக்கு புன்னகைத்து விட்டு நகர்ந்து விடுவேன். அதற்காக அவர்களை கிண்டல் செய்வேன் என்பது கிடையாது. எனக்கும் அவர்களுக்கும் சரிப்படாது என்ற எண்ணம் மேலிட விலகிவிடுவேன்.

ஒரு சுபயோக சுபதினத்தில்தான் என்னை உலுக்கவைத்த அந்த நிகழ்ச்சி நடந்தது. ரொம்பப் பெரிய சம்பவமெல்லாம் இல்லை. ஆனால் என்னிடம் சுடு சொற்கள் கூட வீசாத அப்பாவிடம் நான் அடிவாங்கிய நாள்.

அப்பா என்றாலே ரொம்ப செல்லம்தான் எனக்கு. அம்மா போல் கடிந்து கொள்ளாமல், கேட்டதை வாங்கித் தருவார். எப்பவும் என் கட்சி பேசுவார். ஒரு முறை பெங்களூருக்கு அலுவலக நிமித்தமாய் சென்று வந்த பொழுது, எனக்காக தோடு ஒன்று வாங்கி வந்தார். சிறு வயது முதல் எனக்கு விதவிதமான காதணிகள் மிகவும் பிடித்தமானவை. குட்டி சிவப்பு கல் வைத்த தொங்கும் காதணி. அப்பா வாங்கி வந்ததாலேயே அதிக நாளைக்கு அதையே போட்டுக்கொள்வேன். எனக்கும் என் தோழிக்கும் சண்டை வந்தால் கூட அப்பா தான் சமாதானப்படுத்துவார்.

"உன் க்ளாஸ்ல யாரு உனக்குப் பக்கத்துல உக்காந்துப்பா"

"ஒ, என் க்ளாஸில் எனக்கு நெக்ஸ்ட் சாண்ரா நொரோனா தான் இருப்பா. ரொம்ப ஸ்டைலா இருப்பா தெரியுமா. ஷீ இஸ் மை பெஸ்ட் ·ப்ரெண்ட்"

"அப்ப நான் பெஸ்ட் ஃப்ரெண்ட் இல்லையா?"

"நீயா... உனக்கு சாண்ட்ரா நொரோனா என்பதை சரியா சொல்லத் தெரியுமா"

"ஏன் தெரியாம.... சா¡ண்டிரா.. நோர்ர்ர்ரோனா"

"சரி நீ வீட்டுக்குப் போ, சாண்ட்ரா என்ற பெயரைக் கூட சரியா சொல்லத் தெரியாத உன்னோட நான் பேச மாட்டேன்"

அவளை நன்றாகக் கிள்ளிவிட்டேன். அழுது கொண்டே வீடு சென்றவள் அடுத்த பத்து நாளைக்கு வரவே இல்லை. பொதுவாய், இரண்டு நாள்களில் அவளே வந்து நிற்பாள். நான் போய் சகஜமாய் பேசவெல்லாம் மாட்டேன். என் கௌரவம் என்ன ஆவது!! அவளே வரட்டும் என்ற வரட்டு ஜம்பம் நிறைய உண்டு. என்னை விட்டால் அவளுக்கு வேறு கதி உண்டா என்ன!

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், இன்னொரு தொழியுடனும் நெருங்கிய தோழமை உண்டு। அவள் பளிங்குக் கலரில் வெள்ளைத் தும்பைப் பூவைப் போல் ஜொலிப்பாள்। இதனாலேயே எனக்கு அவளைப் பிடிக்கும்। குழந்தைகள் யாரேனும் அழகாய் இருந்தாலோ, வெள்ளையாய் இருந்தாலோ, அவர்களின் கன்னத்தைக் கடித்து விடுவேன்। (செல்லமாய்த் தான்)। அப்படி ஒரு என்னையும் மீறிய ஆசையில், ஆவலில்(!!!!) ஒரு நாள் அந்த வெள்ளைப் பெண்ணின் கன்னத்தைக் கடித்து விட்டேன்। வெள்ளைக் கன்னம் சிவந்து போனது. அழுதபடி வீட்டிற்குச் சென்றவள் அதன் பிறகு வரவே இல்லை.

இவர்கள் இருவரும் செட் சேர்ந்து கொண்டார்கள். நான் விளையாட ஆளின்றி, ஆனால் தவறை ஒப்புக்கொள்ள மனமின்றி வீம்புக்கு திரிந்துக் கொண்டிருந்தேன். பத்து நாளைக்குள் அந்த தோழியின் வீட்டிற்கு போனால் போலீஸ் பிடித்துப் போய்விடும் என்று அம்மா பயமுறுத்தியிருந்தார்கள். கன்னத்தை கடித்துவிட்டேன் அல்லவா. எப்படியானும் இப்பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காய் அம்மா செய்த சதி! செய்யக்கூடாத குற்றம் செய்து விட்டது புரிந்தது. 'அப்படி என்ன ஆசை! கட்டுப்படுத்தத் தெரிய வேண்டாமோ! கன்னம் என்றால் கொழுக் மொழுக்கென்று இருக்கத்தான் செய்யும். அது வெள்ளையாய் வேறு இருந்து தொலைத்தால் அதற்கு நான் என்ன செய்ய? சின்னப் பெண் எப்படி ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டிருப்பாள்!' இப்படியெல்லாம் வாதிட்டேன். மனதிற்குள்தான். ஆனாலும் அவள் வீட்டிற்கு சென்றால் எங்கே போலிஸ் பிடித்துக்கொண்டு போய்விடுமோ என்ற பயத்தில் போகவே இல்லை.

சோகமாய் உட்கார்ந்திருந்த என் மேல் அப்பாவின் கருணைக் கண்கள் தீண்ட, இரு தோழியரையும் அழைத்து சமாதானப்படுத்தி, ஆளுக்கு ஒரு பேனா பரிசு கொடுத்தார். அவர்கள் சென்ற பிறகு, அப்பாவிடம், "கன்னத்தை கிள்ளினதும் கடிச்சதும் வேணா தப்பு, பட், அந்த தட் அதர் கேர்ல் இஸ் சோ டம்ப் அப்பா, அவளுக்கு சாண்ட்ரான்னு சொல்லக் கூட தெரில. ஹௌ கேன் ஷீ பீ மை ·ப்ரெண்ட்!" என்றேன்.

"இது தேராத கேஸ்!" என்ற ரீதியில் ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்ந்தார் அப்பா.

அப்பொழுது தான் அவர் வந்தார். வாசலில் கேட்டில், உள்ளே வரத் தயங்கியபடி நின்றிருந்தார். முப்பது வயதிருக்கும். கறுப்பாய், அழுக்குத் துணி அணிந்து, எளிமையும் ஏழ்மையும் முகமெங்கும் அப்பியிருக்க, வெள்ளைப்பற்கள் தெரிய புன்னகைத்துக்கொண்டு,

"அப்பாரு இருக்காரா பாப்பா" என்றார். அவரது பேச்சில் கூட class இல்லாததாய் எனக்குத் தோன்றியது.

"அப்பா உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்கா"

"யாருன்னு கேளு" உள்ளிருந்தே அப்பா கூவினார்.

"தெரிலப்பா, யாரோ கறுப்பா பிச்சைக்காரன் மாதிரி இருக்கான்" என்றேன்.

அப்பா வெளியே வந்து பார்த்தவுட்ன் முகம் இருண்டு போனது.

"இங்க வா!!" அப்படி ஒரு உறுமலுடன் என்னை அழைத்தார். அப்படி ஒரு கோபத்தையும் குரலையும் அதற்கு முன்பும் கேட்டதில்லை. அதற்குப் பின்பும் கேட்டதில்லை.

"எங்க ஆ·பிஸ்லேருந்து எலெக்ரீஷியனை நான் தான் கூப்பிட்டிருந்தேன். யாருன்னு தெரிலையன்னா தெரியலைன்னு சொல்லணம். இப்படி கன்னாபின்னான்னு மண்டை கர்வம் புடிச்சு பேசக்கூடாது"

"இனிமே இப்படி செய்வியா?" கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் தொடர்ந்து, படீர் படீர் என முதுகில், முகத்தில், கன்னத்தில், முட்டியில், சரமாரியாய் அறை. அம்மா பதற, வந்திருந்த மனிதரோ "போனா போகுது சார் பாப்பா தானே, விடுங்க சார்" என்று கெஞ்ச...

அப்பா அடியை நிறுத்தவே இல்லை.

முகம் முழுவதும், வெளறிய அடையாளங்களுடன், அவமானத்துடன், அந்த இடத்தை விட்டு அழுதபடி சென்று விட்டேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அப்பாவுடன் பேசவே இல்லை.

இரவு அப்பாவும் அம்மாவும் என்னுடன் பேச வந்தனர். நான் முகத்தை திருப்பிக்கொண்டேன். அப்பா என்னை மறுபடி தொட்டபோது கூட கையைத் தட்டி விட்டேன். தொடர்ந்து அறிவுரை. எதுவும் முதலில் புரியவில்லை. பிடிக்கவில்லை.

"நான் கூட கறுப்புதான், என்னை ஒதுக்கிடுவியா" என்றார் அப்பா

ஆடிப்போய்விட்டேன்.

"நானும் அம்மாவும் கூட, ஏழ்மைநிலையிலிருந்து வந்தவா தான். இன்னும் ரொம்ப வசதியெல்லாம் நமக்கு இல்லை. உன்னை கான்வெண்டில் படிக்க வெக்கணம்கறது எங்களுடைய சின்ன ஆசை. அதற்கு எவ்வளவோ தியாகம் செய்துதான் படிக்க வெக்கறோம். நீ ஒண்ணும் பணக்கார சீமாட்டி இல்லை, அதைப் புரிஞ்சுக்கோ. இங்க்லிஷ் தெரிலைன்னோ, கறுப்பா இருக்கான்னோ ஒருத்தரை அவமானப் படுத்தலாமா?"

"சரி அதையெல்லாம் விடுங்கோ, இவ என்ன பெரிய உசத்தின்னு மத்தவாளை மட்டம் தட்டறா?" என்று அம்மா எரிச்சலூட்டினாள்.

அம்மா சொன்னது உண்மை என்றாலும் எனக்குப் பிடிக்கவில்லை. அப்பா சொன்னது உண்மை என்பதாலேயே என்னை யோசிக்க வைத்தது.

அன்று வந்தவர் அதன் பின் சில முறை வீட்டிற்கு வந்தது, எனக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது, என் திருமணத்தின் பொழுது, அவர் தன் குடும்பத்துடன் வந்தது, என்னை வாழ்த்தியது, அவரை பார்த்து நான் நெகிழ்ந்தது, எல்லாம் ஒன்றொன்றாய் பிறகு நடந்தது.

எல்லாமே மெதுவாய் புரிந்தது.

என் தோழிக்கு சாண்ட்ரா பெயர் தெரியவில்லை என்றால் என்ன? சாண்ட்ராவுக்கும் கூடத்தான் என் தொழியின் தமிழ்ப் பெயரை சரியாய் உச்சரிப்பதில்லை என்று தெளிந்தேன். ஆங்கிலம் அதிகம் பேசாத அந்த தமிழ்ச்சிறுமி நேருங்கிய தோழியிலிருந்து, பதவி உயர்வு பெற்று உற்ற தோழியானாள்.

நிற, இன, மொழி வெறிகள் என்னிடம் நிரம்பக் குறைய காரணமாய் இருந்தவர் அப்பா. பவ்யமாய் வலம்வர வேண்டும் என்ற எண்ணம் விதைத்தவர் என் அப்பா.

என் ஆசிரியர்களிலேயே முதன்மையானவரும், என்றும் உயர்ந்து நிற்பவரும் என் அப்பாதான்.

(இன்னும் வரும்)