October 13, 2024

வாணி களிநடம் புரிவாய் நீ

 


ஆயக்கலைகளெலாம்,
அம்மா உன் சரணமதில்
தூய மலராகி தூமணம் வீசுதடி.
தேவாதி தேவர்கள்
ஆற்றும் வினைகளெலாம்,
மையப் பொருளான
மதியுனையே பேசுதடி.
.
காயத்தால் தரித்து;
சாயத்தால் திரிக்கும்,
மாயக்கலைகளின்
மனங்கவர் வடிவழகி!
ஆயர்குலத்தழகன்,
நேயக்குழலிசையின் ;
ரீங்காரமாகி நிற்கும்
ஓங்கார உறைபொருளே!
.
இயலிசை காவியத்தை
ஓட்யாண நகையாக்கி,
ஒய்யாரமாகவே
இடைபுனைந்த இனியவளே!
ஞானமெனும் ஊற்றே!
பேறிவின் பெருநிதியே!
பையப்பையவே
பாரெலாம் நிறைந்தவளே!
.
நான்முகன் நாயகியே!
நானுனைப் பாடிடவே,
பாமகளே என்
நாவினில் பூத்துவிடு.
வீணைமீட்டியே
விதவிதமாய்க் கவியெழுது.
திமிதிமியெனவே
என்னுள் நர்த்தனம் ஆடிவிடு.
.
சூக்குமமெல்லாம் குறையறவே
சூதனமாய் ஊட்டி விடு.
நாவடக்கம் வேண்டுமென
நிச்சயமாய் சொல்லிவிடு.
வெண்தாமரை தண்டதனை
தேனில் குழைத்தெடுத்து,
ஊனில் கலந்தே
உதிரத்தில் நிறைத்துவிடு.
- ShakthiPrabha

October 09, 2024

அலைமகளே வருக

 


அலைமகளே! மாலவன் மார்பில்
சீரென விளங்கும் மலர்மகளே!
வளர் சௌபாக்கியம் தரும் அலர்மகளே!
நாராயணன் நாடும் நித்ய சுந்தரியே!
சுகபோகங்கள் சேர்க்கும் சௌந்தரியே!
.
தன-தானியம் தரணியெலாம் நிறைந்திட,
மாங்கல்யம் நிலைத்திட - பொங்கு
மங்கலங்கள் தழைத்திட,
பயம் விலகி பகை அகன்றிட,
ஜயம் கூடி தடை விலகிட - உன்
கரம் பற்றுகிறோம் நலம் நல்கிடம்மா!
.
செருக்குவாரா செல்வம் குவிந்திட;
தரக்குறைவிலாது தழைத்தே ஓங்கிட - எம்
சந்ததியே உனை தினம் துதித்திட;
தளிர் தாமரையில் ஒளிர் திருமகளே,
இணை ஈடில்லா துணை நீயெனவே - பொற்
கழல் போற்றுகிறோம் வரம் தாருமம்மா!

-ShakthiPrabha

October 04, 2024

ஜயஜய துர்கா

 ஆயிரம் நாமங்கள் தாளமிட வரும்

அர்ச்சனைப் பொருளே அம்பிகே!
துக்கங்கள் தூளாக தித்தித்தி ஆடிடும்
தாயவளே ஜயதுர்கையே!
.
முக்காலம் உணர்ந்த ஞானியரும் ஏத்தும்
தூயவளே மூகாம்பிகே !
காரணி உனையே கவியிற் புனைந்தோம்
பூரணியே அபிராமியே!
.
அனந்தம் நீயென அடைக்கலம் கண்டோம்
ஆனந்த பைரவியே!
தோரணங்கள் நாட்டி பாயிரமும் சூட்டி
பாடுகின்றோம் பவானியே!
.
கதிநீயேனவே தினம் போற்றியுந்தன்-சரண்
நாடுகிறோம் சிவகாமியே!
பாரெங்கிலும் மங்கலம் தங்கவே- கண்
பாரடியே மீனாட்சியே!
ShakthiPrabha

நவக்கிரகங்கள்

 #சொல்லத்தான்_நினைக்கிறேன்

கட்டங்களின் கூட்டணியென கிசுகிசுத்தனர்.
கடந்து சென்றேன்..
தசாபுக்தியின் குதியாட்டமே என்றனர்.
புரியவில்லையென புறந்தள்ளினேன்..
மஹாதசையின் பிடியில் தான்
மானுடன் விதியென சத்தியம் செய்தனர்.
மாய்மாலம் எனச் சிரித்தேன்.
எதையுமே செவிமடுக்கவில்லை:
விண்ணையே அளந்த கைகள்
மண்ணில் தவழ,
நிமிர்ந்த நற்பார்வை
நாணி நிலம் நோக்க
ஓங்கியிருந்த செல்வாக்கு
தரதரவென இழுக்கப்பட்டு
தரையில் தள்ளபடும் வரை.

October 01, 2024

அடையாளம்




அடையாளத்தைத் தொலைத்து
அபின்னமாக அடங்கி
அத்வைதமென ஒடுங்காது;
அணிய-அணிய ஆர்பரித்து
அனுக்ஷணமும் ஆடியாடி - புதுப்புது
அடையாளங்களை தேடித்தேடி
அணியும் ஆசைக்கிடங்கு.
-ShakthiPrabha

September 30, 2024

பிள்ளை பெற்ற பெறு - இசைஞானியார் - சடையனார் (நாயன்மார்கள்)

 Raising good children, is in itself is a biggest virtue. Needless to talk about the greatness of parents of Sundaramoorthi nayanmar , who was a gem amongst nayanmars. The cause was so noble, that bestowed greatest boon of mukthi to his parents. They are seated in the pedestal of great Shiva bakthas and honoured and worshipped as saiva-Nayanmars. Watch the link below 👇created to tribute them.




#நாயன்மார்கள், #நாயன்மார், #சுந்தரமூர்த்தி #இசைஞானியார் #இசைஞானி #சடையனார், #Bhakthi, #hinduism, #பிள்ளைகள், #parents, #children, #வள்ளுவர், #சிவனார், #செலவ்ம், #sanatana, #சனாதனம், #Nayanmar, #NayanmargaL, #isaignaaniyar #Sadaiyanar #ஆத்சைவர், #Lord, #Siva, #Kailash, #BoleNath, #நால்வர்

August 21, 2024

பாசக்கூண்டு

அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கடைவீதிக்கு சென்ற நினைவுகள் இனியவை. பெரிய பெரிய வாகனங்கள் அவ்வப்போது விரைவதைக் கண்டு மிரண்டு, அம்மாவின் புடவைத் தலைப்பில் பாதுகாப்பு நாடிய நாட்கள். அம்மா விரைவாக நடப்பாள். அவள் பின்னே கால் நிலத்தில் பாவாமல் ஓடியிருக்கிறேன்.

.
விற்பனைக்கு வந்திருக்கும் நவீனப் பொருட்களைப் பற்றிய features அவளுக்கு அத்துப்படி. Electronic, electrical items முதல், தங்கம் வெள்ளி வரை வரை அத்தனைப் பொருட்களைப் பற்றிய அறிவும் விரல் நுனியில். அவளுக்கு தெரியாதது எதுவுமே இல்லை என்று பெருமைப் பட்டிருக்கிறேன்.
..
அம்மா உனக்குத் தான் எல்லாம் தெரியும். நீயும் வாம்மா. இன்று அவளையும் கூட்டிப்போகிறோம்.
அம்மா காரிலிருந்து வெகு நிதானமாக இறங்குகிறாள். கதவைத் திறக்க சிரமப்படுகிறாள்.
அம்மா இரும்மா என கதவைத் திறக்க விரைகிறேன். மிக ஜாக்கிரதையாக இறங்குகிறாள். கடைவீதிகளில் என் கைபிடித்து அல்லது என் மகளின் கைபிடித்து தேர் போல் அசைந்து அழகாக வருகிறாள். தேடித் தேடி சில பாரம்பரிய பொருட்களை எங்களுக்காக வாங்கி பையில் திணிக்கிறாள்.
.
ஒவ்வொரு கடையும் சின்ன mall போல பிரம்மாண்டம் என்பதால், சற்று நேரத்திலெல்லாம் அயர்ச்சி அடைந்து விட்டாள்.
பாக்கிய நீங்களே வாங்கிண்டு வாங்கோ. நான் இங்கயே wait பண்றேன்.
கடையை விட்டிறங்கி விரைந்து வரும் வண்டிகளை பார்த்து மிரண்டு என் கையை இறுக்கிப் பிடிக்கிறாள்.
.
உடலெனும் பையை சுமக்கும் ஜீவன் நாம். பிறந்து வளர்ந்து க்ஷீணிக்கும் உடலுக்கு வலு குறையத் துவங்குகிறது.
பிறவிகளின் பாடங்கள் கற்றபின் அவரவர் பாதையில் பறந்துவிடும் நிலையற்ற பயணம்.
உறவுகளின் பெயர்களும் வடிவங்களும் தொடர்வது இல்லை.
..
பிறவிகள் தோறும் கணக்கற்ற அம்மாக்கள், அப்பாக்கள், வாழ்க்கைத் துணைகள், மகன்கள் மகள்கள் காதலர்கள், காதலிகள், அத்தைகள் மாமன்கள்... ... எவரும் அதே கூடுகளில் தங்களை அடைத்துக் கொண்டு நமைத் தொடர்வதில்லை. அவர்கள் தாங்கும், தாங்கப்போகும் வடிவங்களிலும் அதன் தரமும் நிரந்தரம் இல்லை.
.
இத்தனை தெரிந்தும் பந்தமும் பாசமும் குறைவதே இல்லையே!!!
.
அன்புக்குரியவர்களிடம்....நான் மீண்டும் மீண்டும் மீண்டும் தோற்றுவிடுகிறேன். அவர்களின் அன்புப் பிடியில் வகையாக சிக்கிக் கொண்டு விடுகிறேன். ஆத்மஞானத்துக்கான ஆன்மீகத்தேடலெல்லாம் சும்மா நடிப்பு,
மனதில் ஓரத்தில் ஏதேதோ நினைவுகள் ஈரமாக கசிந்து கண்களை நனைக்கிறது.
ShakthiPrabha