Showing posts with label கண்ணன். Show all posts
Showing posts with label கண்ணன். Show all posts

January 02, 2012

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

கண்ணனும் ஆண்டாளும்


இன்னிக்கு எப்படியானும் அவனை புடிச்சே ஆகணும். மனதில் கருவிக்கொண்டாள் ஆண்டாள்.  தினம் தினம் தோழிகளை வேறு எழுப்பி, அலைக்கழித்து, பாட்டு பாடி, ஆட்டம் ஆடி, ஆனாலும் கண்ணுக்கு சிக்காமல் ஓடி ஒளிந்து கொண்டே இருக்கிறானே.. என்ற வருதம் மேலிடுகிறது.

ஆண்டாள்:  இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு  பாத்துடுவோம் வாங்க ஃப்ரெண்ட்ஸ்.

(ஆயர்பாடியில் யசோதா வீட்டில் கண்ணன்- நப்பின்னை ருக்மிணியுடன்)

கண்ணன்:  அம்மா, நாளை காலையில் அவள் வந்தால் நான் தூங்குவதாக சொல்லிவிடுங்கள். (கண்ணன் புன்னகைக்கிறான்)

யசோதா:  யாரைச் சொல்கிறாய்?

க: வேறு யார்!  ஊருக்கு முன் எழுந்து, என்னையும் எழுப்பி பாடாய் படுத்தும் ஆண்டாள் தான்.

ய: நீ தினம் வெண்ணையை சாப்பிட்டுவிட்டு உண்ட மயக்கத்தில் இப்படி  தூங்கினால் என்ன செய்வதாம்?

க: அவள் தரும் ப்ரேமையின் தகிப்பை தாங்க முடியாமல் தானே, நான் பாலும் தயிரும் வெண்ணையுமாக குடிக்கிறேன்... அவள்  பூமாதேவியின் வார்ப்பாம் எனக்காகவே பிறந்ததாகச் சொல்கிறாள்..யாராக இருந்தால் என்ன! ... எனக்கு எல்லாரும் ஒன்று தானே...

ருக்மிணி சாந்தமாக இருந்தாலும் நப்பின்னை கோபத்துடன்: இன்னும் எத்தனை பேருண்டு இப்படி...

க: பல பேர்...உண்டு!  எங்கெல்லாம் என் மேல பரிபூரண அன்பு உண்டொ அத்தனை பேரும் எனக்கு ப்ரியமானவர்கள்.

ந: அவர்களையெல்லாம் பக்தர்களாக மட்டுமே பார்த்தால் போதுமே, உடனே  ப்ரேம  சம்பந்தம்  வரவேண்டுமா..உங்க அண்ணா ராமிடமிருந்து கற்றுக் கொள்ளக் கூடாதா

க: பக்தியில் பல வகை. பிரேம பக்தியும் ஒருவகை. எத்தனை பேர் இருந்தாலும் நான் நித்ய ப்ரம்மச்சாரி என்று உனக்கு தெரியாதா நப்பின்னை? ராம் அண்ணா வேறு நான் வேறு...ஆனாலும் ரெண்டு பேரும் ஒன்று...

ந:  போதும் போதும் நிறுத்துங்கள்.

க: பேசிக்கொண்டே இருந்தால், ஆண்டாள் வரும் நேரம் ஆகிடும். நான் யோக நித்திரையில மூழ்க வேண்டும்.


ஆண்டாள் பாடிய படி வருகிறாள்:

உந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன்,
    நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்!
    வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
    பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
    வந்து திறவாய், மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

(பாடலுக்கு நன்றி மின்னல்வரிகள் கணேஷ்)

பாடி பாடி எழுப்புகிறாள்...

கண்ணனின் புகழும், பராக்கிரமும், கேட்க கேட்க யசோதை நப்பின்னை, ருக்குமணி, ஏனையோரும் மெய் மறக்கின்றனர்.

ருக்மிணி: "ஆஹா...எல்லோருக்கும் தெரிந்த பராக்கிரமங்களை  நீ இசைக்கும் பொழுது  இன்னமும் இனிமையாகிப் போகிறதே...ஆண்டாள்! எங்கள் கண்ணனையே  ஆளும்  உன்னை ஆண்டாள் என்று சரியாகச் சொன்னார்கள்! இப்பொழுது எங்களையும் உன் இசையால ஆண்டுவிட்டாயடி"

ஆ: ருக்மணி அக்கா, நப்பின்னை அக்கா, யசோதா ஆண்டி...நாலு பஸ் மாறி, விடியக்காலைல உங்க பையனோட ஹிஸ்ட்ரி எல்லாம் மனப்பாடம் பண்ணி, அதை மெனகெட்டு கவிதையாக்கி,  புகழ்ந்து ஐஸ் வெச்சா கூட என்னை கண்டுக்க மாட்டேங்கறானே...


ய: நானே இம்மாத இறுதிக்கு பிறகு பெரியாழ்வரிடம் வந்து உன்னை பெண் கேட்கிறேன்...மார்கழி இறுதி வரை நீ பாடும் பாடலை கேட்க ஆவல் மேலிடுகிறது. அதன் பின்னே தான் திருமணம்.

ஆ: அதுக்கு அப்புறம் அவன் என்னை கல்யாணம் பண்ணிக்கணும்...யசோதா ஆண்டி நீங்க தான் சாட்சி...இன்னும் இந்தக் கண்ணன் எழுந்துக்காம என்ன பண்ணிட்டு இருக்கான்..எழுப்புங்க அவனை..ஆண்டாள் கண்ணனின் அருகமர்ந்து அவனை எழுப்ப முயற்சிக்கிறாள்....

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
    எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே!
    எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
    உம்பர் கோமானே! உறங்காதெழுந்திராய்;
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
    உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்!


(பாடலுக்கு நன்றி மின்னல்வரிகள் கணேஷ்)

 ருக்மிணி,   குடிக்க ஜில் என்று ஜூஸ் கொண்டுவருகிறார்கள். மார்கழி குளிரில் பாடின வாய்க்கு சூடான பால் போதும் என்று பால் மட்டும் அருந்துகிறாள் ஆண்டாள். உலுக்கி உலுக்கி எழுப்பினாலும்...ம்ஹ்ம்... கண்ணன் எழக் காணோம்.

பாடிக்கொண்டிருக்கும் பொழுதே  அவன் அழகில் மயக்கம் ஏற்பட...வந்த நோக்கம் மறந்து கண்ணனின் யோக அழகில் மூழ்கிப்போகிறாள். எத்தனை நேரம் மூழ்கியிருக்கிறாள் என்ற  நினைப்பும் அற்றுப் போகிறது. அதன் பின் விழிப்பு வந்தவளாய் பார்வையை செலுத்துகிறாள்.

தூரத்தே கண்ணன் காளிங்க நர்த்தனம் புரிகிறான்...இன்னும் சற்றுத் தொலைவில் மஹாபாரதக்களத்தில் கீதோபதேசம், இடப்பக்கம் குட்டிச் சிறுமியை ரக்ஷிக்கும் ரோபோவாகிப் போகிறான். வலப்பக்கம், மேற்பக்கம் எங்கு திரும்பினும் கண்ணன். ஆகாயமாய் அளந்து நிற்கும் கண்ணன், துரும்பிலும் ஒளியும் கண்ணன், சின்ன சிறுவனாய் குதூகலிக்கும் கண்ணன், அரக்கனை அழிக்கும் ஆக்ரோஷக் கண்ணன், விஞ்ஞான வளர்ச்சியின் தேடலாய்க் கண்ணன், தினமும் வழங்கும் வாழ்த்தொலியில் கண்ணன், ரூபமாய் அரூபமாய், இருப்பவனாய் இல்லாதவனாய் எங்கும் கண்ணன்....காணக் காண முடிவற்றவனாய்... ஒரு கணம் தடுமாறி திரும்பிப்பார்க்கிறாள்...

பட்டுமெத்தை விரிப்பில் களித்தபடி கண்ணன். இவன் தூங்குகிறான் என்று தானே நினைத்தோம்.  ஆண்டாளுக்கு தான் கண்டதெல்லாம் கனவா என்ற குழப்பம்.

ய: இப்படித் தான்.....அன்றொருநாள் எனக்கு உலகத்தை காட்டி.....ஹ்ம்ம் மாயக்காரன்.

(கண்ணன் விழிக்கிறான், அல்லது விழிப்பது போல் நடிக்கிறான்.)

ஆ: நீ தூங்கினியா இல்ல தூங்கினது போல நடிச்சியா? உன்னை எங்கெல்லாமும் பார்த்தேனே...... இதோ இப்போ கூட, இங்கையும் அங்கையும், எங்கையுமா...

க: நான் தூங்கினால் இயக்கம் என்னாவது .. கண்ணன் சிரித்தான்... அவன் குரல் வந்த திக்கை கண்டுணர முடியவில்லை. திக்கெட்டும் ஒலித்த அந்த குரல், இருந்தது போலும், இல்லாது போலும் எங்கும் நிறைகிறது.

க: நீ போய் மார்கழி முடிந்து வா...நான் உன்னை, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத திருமணம் செய்கிறேன். 

சொன்னபடியே கண்ணனை வாரணம் ஆயிரம் சூழவலம் வந்து கைப்பிடிக்கிறாள்.

~~~~~

"அவன் போக நிலை கூட
ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ" ...

என்ற பாடல் சிடியில் ஒலித்த வண்ணாமிருக்கிறது. தூரத்தில் பெரியாழ்வார் பூப்பறித்துக்கொண்டிருக்கிறார்.

மெல்ல எழுகிறாள் ஆண்டாள்...அத்தனையும் கனவா?!   அடுத்த பாடலாய் உதிக்கிறது.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்

அவள் தூங்கிய கனவிலும் அவனே வந்தான். ஆனால் அவனோ தூங்கவே இல்லை.  கண்ணனுக்கேது தூக்கம்!!! அடுத்த பிறப்பில் பாட்டை சிறிதே மாற்றியமைக்க வேண்டும் என்று முடிவு செய்தாள் ஆண்டாள்.

August 17, 2010

குட்டிக் குட்டி கிறுக்கல்கள் (1)

கண்ணன் என் காதலன்

சொத்து சுகமெல்லாம் போன பின்பும்
சொந்தமென்று எதை கொண்டு செல்வேன்?- நல்
வித்து விளைத்திடும் சிந்தனையும்
பரந்தாமன் மேல் நான் கொண்ட காதலுமே!

- ஷக்திப்ரபா